January

January

அமெரிக்க தளத்தை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல் – ஈரான் சார்பு குழுவினர் மீது அமெரிக்கா சாடல் !

ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்க தளமொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். ஆசாட் விமானபடைதளம் மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.

ஏவுகணைகளையும் ரொக்கட்களையும் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிடபடாத எண்ணிக்கையிலான அமெரிக்க படையினர் மூளை காயங்களிற்கு உட்பட்டுள்ளனரா என்ற மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன. ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஈராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பே இந்த தாக்குதலை மேற்கொண்;டுள்ளது,2023 இல் உருவான இந்த குழு ஈராக்கில் உள்ள பல ஆயுதகுழுக்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

இந்த குழுவினரே ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களிற்கு உரிமை கோரிவருகின்றனர்.

அல்ஆசாட் தளம் தொடர்ச்சியாக தாக்குதலிற்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

சிறிதரனா ? சுமந்திரனா ? : நாளைய செய்தித் தலைப்பு: சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

 

நாளை ஜனவரி 21 தமிழரசக் கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படப் போகின்றார் என்பது பெரும்பாலும் தெரியவரும். இதற்கான தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களின் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நாளை திருகோணமலையில் இடம்பெற இருக்கின்றது. அதற்கு கட்சியின் அங்கந்தவர்கள் 325 பேர்வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கிழக்கில் உள்ள திருகோணமலைக்குச் செல்கின்றனர். வாக்கெடுப்பு எண்ணிக்கை நிறைவில் வெற்றி தோல்வி அறிவிக்கப்படும் போது அசம்பாவிதங்களும் ஏற்படும் அளவுக்கு நிலைமை பதட்டமானதாக இருப்பதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைமைத்துவத்துக்கு போட்டியிடும் இருவருமே தேர்தல் முடிவுகளை ஏற்று மற்றையவருடன் கட்சியின் நன்மைகருதி இணைந்து பயணிப்போம் எனத் தெரிவித்து இருந்த போதும் தமிழரசுக் கட்சியின் நாளைய தேர்தல் தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தும் என்று தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது.

இலங்கையில் உள்ள எந்தவொரு கட்சிக்காவது ஜனநாயகப் பாரம்பரியம் இருக்கின்றதா என்றால் எடுத்த எடுப்பிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். கட்சிக்குத் தலைவரானால் சாகும்வரை அவரே தலைவராக இருந்துவிடுவார். இதற்கு தமிழ் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல. தமிழரசுக்கட்சி வரலாற்றில் தேர்தல் மூலம் ஒருவரைத் தெரிவது இதுவே முதற்தடவை. ஏகமனதாக, ஏகோபித்த முடிவு, ஏக பிரதிநிதித்துவம் என்று இன்னொரு பக்கம் இருக்கின்றதை ஏற்றுக்கொள்ளாத சமூகமும் கட்சிகளுமாக நாம் எங்களை பன்மைத்துவத்தின் விரோதிகளாக பழக்கிக் கொண்டுவிட்டோம். அப்படிப் பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தல் ஜனநாயகத்தின் பார்வையில் மிகப்பெரும் பாச்சல் என்றே சொல்லலாம். ஆனால் என்ன இந்தத் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்பதே தற்போதுள்ள கேள்வி.

 

இலங்கைத் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழரசுக் கட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஒரு இம்மியளவு முன்னேற்றத்தை நோக்கியும் நகரவில்லை. எழுபதுக்களில் தங்களுடைய வீழ்ந்துபோன வாக்கு வங்கியைத் தக்க வைக்க வே பிரபாகரன் போன்ற இளைஞர்களை உசுப்பேத்தி தமிழீழக் கோரிகையை வைத்து, அந்த இளைஞர்களாலேயே மரணத்தையும் தழுவினர். அந்த இளைஞர்களும் ஆளுக்கு ஆள் சகோதரப்படுகொலை செய்து தங்களைத் தாங்களே அழித்தனர். அன்று தப்பித்த இரா சம்பந்தன் ஒருவாறு இறுதியில் வே பிரபாகரனை பொறியில் வீழ்த்தி மீண்டும் தமிழ் தேசியத்தின் ஒற்றைத் தலைவரானார். அன்று மரணத்தில் இருந்து தப்பிய இன்னும் சிலரும் குட்டிக் குட்டித் தலைவர்களாகினர். இப்போது ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதியான தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு ஒரு போட்டி வந்துவிட்டது.

 

இத்தேர்தல் முடிவுகளில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதோ இல்லையோ புலம்பெயர் தமிழ் – புலித் தேசியவாதிகளின் அரசியல் நலன்கள் பேணப்பட வேண்டும், இலங்கை அரசியலில் தங்களுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் புலம்பெயர் சக்திகள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர். புலம்பெயர் புலித் தேசியவாதிகளைப் பொறுத்தவரை ஏ சுமந்திரன் தீண்டத்தகாத ஒரு மனிதர். அதற்கு சுமந்திரனுடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல சுமந்திரனுடைய அறிவும் ஆளுமையும் அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசிய அரசியலில் புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளின் குரல்களுக்கு இடமிருக்காது. மிகத் தீவிர புலித்தேசியத்தின் குரல்களுக்கு தமிழரசுக் கட்சியில் இடமிருக்காது.

 

அதனால் என்ன விதப்பட்டும் எஸ் சிறீதரனை வெல்ல வைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்கு தலைவரானால் புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அவருக்கு அரசியல் வகுப்பும் ஆங்கில வகுப்பும் எடுப்பார்கள். தன்னுடைய வங்கிக் கணக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி எஸ் சிறிதரன் கேட்பார் என்ற நம்பிக்கை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் நிறையவே உள்ளது. அவ்வாறு லண்டனுக்கு மகனையும் அனுப்பி வைத்துள்ளார் எஸ் சிறிதரன்.

 

ஏ சுமந்திரனும் எஸ் சிறிதரனும் 2010இல் ஒரே காலகட்டத்தில் அரசியலுக்குச் சென்றவர்கள். இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, கேள்வி ஞானம், அரசியல் அறிவு, உள்ளுர் சர்வதேச தொடர்புகள் என்று பார்க்கின்ற போது ஏ சுமந்திரன் பலமானவராக உள்ளார். மக்கள் மட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் எஸ் சிறிதரன் பலமாக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்களில் யாரும் இதுவரை அவர்களுக்காக எதனையும் குறிப்பாக சாதித்துவிடவில்லை. ஏ சுமந்திரன் சில அரசியல் கைதிகளை தனது தொழில் ரீதியில் விடுதலைபெறக் காரணமாக இருந்ததைத் தவிர.

 

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு எஸ் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயற்பட ஏ சுமந்திரன் அனுமதிக்கப்பட மாட்டார். அதனை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் அனுமதிக்காது. மேலும் ஆளுமையுள்ள சுமந்திரன் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது எஸ் சிறிதரனின் தலைமைத்துவத்தை எப்போதும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். அடுத்த ஆண்டு நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற போது விரும்பு வாக்குகளுக்காக இருவரும் கடுமையாக மோத வேண்டிவரும். அது ஏ சுமந்திரனுக்கு மிக நெருக்கடியாக அமையும். அதனால் ஏ சுமந்திரன் தமிழரசுக்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் பிரிந்துசெல்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

 

மாறாக, எஸ் சிறிதரன் தோற்கடிக்கப்பட்டால் அவர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் இருப்பாரா அல்லது பிரிந்து செல்வாரா அல்லது கட்சி தாவுவாரா என்பது அவருக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையிலும் புலம்பெயர் புலித் தேசியவாதிகளின் நிலைப்பாட்டிலும் தங்கியுள்ளது. சிறிதரன் தேர்தலில் தோற்றுப் போனாலும் தமிழரசுக்கட்சியில் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கிளிநொச்சியில் உள்ள பலமான அந்த வாக்கு வங்கியை அவர் இழப்பதற்கு துணிய வாய்புகள் குறைவு. ஏற்கனவே எம் சந்திரகுமாருடைய சமத்துவக் கட்சி அவருடைய வாக்கு வங்கியை உடைத்து வளர்ந்து வருகின்ற நிலையில் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியை உடைத்து வெளியேறினால் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவது கடினமானதாக அமையும்.

 

தேசம்நெற்க்கு கிடைக்கின்ற தகவல்களின்படி புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் தங்களை உயர்சாதியினராகக் கருதுபவர்கள் மத்தியில்; எஸ் சிறிதரனுக்கு செல்வாக்கு உள்ள போதிலும் ஒடுக்கப்பட்ட வன்னியில் வாழும் மலையக மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அதைவிடவும் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 325 வரையான கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகின்றது. எஸ் சிறிதரன் செல்வாக்கு ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் அப்பால் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே.

 

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும்.

நாளைய செய்தித் தலைப்பு:

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !”

சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

ஊழல் குற்றச்சாட்டு – தனது பதவியை ராஜினாமா செய்தார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் !

சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.

Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.

 

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் !

பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

 

ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயற்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) பயங்கரவாத அமைப்பின் இரண்டு நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

 

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்ததுடன், சிறுமிகள் மூவர் காயமடைந்தனா்.

 

இந்த நிலையில், தென்மேற்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் இன்று (18) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 7 பேர் பலியானதாக மாகாணத்தின் துணை ஆளுநர் அலிரேசா தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாகிஸ்தான் – ஈரான் இடையிலான மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் !

செங்கடலில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தமது கப்பலை தாக்கியதாகவும் ஆனால் கப்பல் பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

 

ஹவுதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளுக்கு பின்னர் அமெரிக்க கப்பல் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

 

கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் கப்பலும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார்.

காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இலக்குகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுதது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத்  தூதரகம் அருகே இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் நாட்டின் புரட்சி காவற்படை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை இத்தாக்குதல்களில் அமெரிக்கப்படைவீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஈரான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

 

இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் பலி – அதிகரிக்கும் பதற்றம் !

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) செவ்வாயன்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஹே சப்ஸ் பகுதியில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும் என்று அரசு நடத்தும் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதேவேளை ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டனத்தில்

“பாகிஸ்தானின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதுடன் மூன்று சிறுமிகளை காயப்படுத்தியதை கடுமையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

“ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறியுள்ளது. இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகளின் உறவுகளுக்கு எதிரான செயற்பாடாகும்.அத்துடன் இருதரப்பு நம்பிக்கையையும் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் !

ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக  ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஈராக்கின் அரைசுயாட்சி குர்திஸ் பிரதேசத்தின் தலைநகரான எர்பிலில் பல வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு நிலையங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஈரான் எதிர்ப்பாளர்கள் கூடும் பகுதிகளை இலக்குவைத்து ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது என அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

சியோனிஸ்ட் அரசாங்கத்தின் சமீபத்தைய அநீதிகளுக்கு பதிலடியாக ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள மொசாட்டின் புலனாய்வு அலுவலகம் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் இராணுவம் தியாகிகளின் இரத்தத்தின் கடைசி துளிகளிற்கு பதில் வாங்கும் வரை தாக்குதல் தொடரும் என தேசத்திற்கு உறுதியளிப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றது பயங்கரவாத தாக்குதல் என  எர்பில் ஆளுநர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஒரு  ஏவுகணைவீடொன்றிற்குள் விழுந்து வெடித்ததில் குர்திஸ்தானை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும் குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின்  இந்த தாக்குதலை அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கை  என வர்ணித்துள்ளது.

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப்ப் போர் முழக்கம்! மக்கள் பொருளாதார நெருக்கடியில் சுகாதார நெருக்கடியில் திண்டாட்டம்!!!

“ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்” என காலனித்துவ மிடுக்குடன் பிரித்தானியா யேமன் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்தி நடத்தப்பட்ட பாராளுமன்ற விவாதத்திலேயே பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் இன்று ஜனவரி 15, போர் முழக்கமிட்டுள்ளார்.

We're running out of patience': Defence Sec Grant Shapps warns Iran to stop  Houthi... - LBC

ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் கட்சியும் எதிர்க் கட்சியான தொழிற்கட்சியும் யேமர் மீதான தாக்குதலை ஆதரித்த நிலையில், அடுத்த வருடம் தேர்தலை எதிர் நோக்கும் இரு கட்சிகளும் கொள்கை வேறுபாடு இன்றி போர் முழக்கம் செய்து, போர்களை உற்பத்தி செய்யவும் ஊக்குவிக்கவும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க – பிரித்தானிய ஆளும் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரிகின்ற போது ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்து யுத்தத்திற்குச் செல்வது இது முதற்தடவையல்ல. ஈரானிய சார்புடைய யேமன் குர்த்திஸ் போராளிகளையும் மக்களையும் அழிக்க சவுதி அரேபியா மேற்கொண்ட யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஆயுதங்களை வாரி இறைத்தனர். அந்த நாட்டை இவர்கள் ஏற்கனவே சீரழித்த அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியாவின் பட்டியலில் சேர்த்தனர்.

Yemen | History, Map, Flag, Population, Capital, & Facts | Britannica

இப்போது யேமன் அடுத்த அழித்தலுக்கு உரிய இலக்காக மாறியுள்ளது. யாசீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலமிழக்கச் செய்ய இஸ்ரேல் மோசாட்டினால் வளர்த்து விடப்பட்ட ஹமாஸ் தற்போது வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் இஸ்ரேல் மீது பாய ஆரம்பித்து ஒக்ரோபர் 7இல் இஸ்ரேலை கதிகலங்க வைத்தது. 1200 குடியேற்றவாசிகள் நிராயுத பாணிகளான மக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகின்றது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் பெரும்பாலும் சிறார்கள் பெண்கள் என கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கை 30,000த்தை எட்டுவதாக பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தில் முன்னாள் தொழிற்கட்சித் தலைவரான ஜெரிமி கோபின் இன்று ஜனவரி 16 தெரிவித்தார்.

யேமனின் குத்திஸ் இராணுவம் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை யுத்தத்தை நிறுத்தாவிடில் செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் அல்லது இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்களைத் தாக்குவோம் என்று எச்சரித்ததுடன், சில பல தாக்குதல்களையும் நடத்தி இருந்தனர். இதனால் செங்கடலூடாக சரக்குக் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கப்பல்கள் ஆபிரிக்க கண்டத்தைச் சுற்றி பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. உலக வர்த்தகத்தில் 12 வீதமான சரக்குக் கப்பல்கள் செங்கடல் வழியாகவே பயணிக்கின்றன. தற்போது ஒரு கொள்ளளவுப் பெட்டியின் பயணச் செலவீனம் 750 பவுண்களில் இருந்து 3250 பவுண்களாக அதிகரித்துள்ளது. மேலும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொருட்கள் விலையேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா கூட்டுத் தாக்குதலால் அதிரும் ஏமன்! - கனடாமிரர்

அமெரிக்க – பிரித்தானிய யுத்த ஆர்வம் மத்திய கிழக்கில் அமைதியின்மையை மேலும் அதிகரித்துள்ளது. யேமனின் குத்திஸ் படைகள் அமெரிக்க – பிரித்தானிய – இஸ்ரேலிய படைபலத்தோடு ஒப்பிடுகையில் மிகப்பலவீனமான படைகள். ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அத்தோடு உக்ரைனில் யுத்தம் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் பிரித்தானியாவும் – அமெரிக்காவும் மிகத் தீவிரமாக உள்ளனர். பல பில்லியன் டாலர்களை இறைத்து உக்ரைன் மக்களையும் இளைஞர்களையும் பலிகொடுத்து ரஸ்யாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் தேர்தலில் தங்கள் ஆளும் குழுமம் வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். அதற்காக கூலிப்படைகளும் உக்ரைனில் இறக்கப்பட்டுள்ளனர்.

 

இதுவரை யுத்தத்தில் இறங்காத சீனாவை நோக்கியும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் போர் முழக்கமிட்டுள்ளார். பிரித்தானிய ஊடகங்களும் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் போர் முழக்கத்துக்கு ஒத்து ஊதி வருகின்றனர். அமெரிக்க, பிரித்தானிய மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பண உதவியும் இராணுவ உதவியும் வழங்க மற்றைய உலக நாடுகள் இந்தியா நீங்கலாக அனைத்தும் காசா படுகொலைகளை மிக வன்மையாகக் கண்டித்து வருகின்றன. வெள்ளையினத் துவேசத்தால் போராடி மீண்ட தென் ஆபிரிக்கா ஒருபடி மேலே சென்று சர்வதேச நீதி மன்றத்திடம் காசாவின் படுகொலையை நிறுத்தும்படி கோரி உலகின் கவனத்தையும் தலைமைத்துவத்தையும் நிரூபித்துள்ளது.

 

உலகின் பல பாகங்களிலும் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக தலையீடு செய்து அந்நாடுகளை அரசியல் பொருளாதார ரீதியாகச் சீரழித்த அமெரிக்க – பிரித்தானியக் கூட்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கோரி வருபவர்களை இனவாதத்துடன் நடத்துவதுடன் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவும் மறுக்கின்றனர். அந்தந்த நாடுகளில் அமெரிக்கா – பிரித்தானியா தலையீடு செய்யாமல் இருந்திருந்தால் அம்மக்கள் இங்கு அகதியாக வருவதற்கு எந்தத் தேவையும் இருந்திருக்காது. மேலும் கரீபியன் நாடுகளில் இருந்து தங்கள் தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களை அவர்களது இறுதிக் காலத்தில் – வின்ரஸ் ஜெனரேசன் – திருப்பி அனுப்பவும் அடம்பிடிக்கின்றனர். அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளையும் கொடுக்க மறுக்கின்றது இனவாத கட்டமைப்புடைய பிரித்தானிய உள்துறை அமைச்சு.

பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? ஆதரவை குவிக்கும் ரிஷி சுனக், போரிஸ்  ஜோன்சன்: முந்துவது யார்? - லங்காசிறி நியூஸ்

குடித்து வெறித்து யுத்தத்திற்கு வாரி வழங்கிய முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தற்போதைய பிரதமர் ரிஸி சுனாக் கோவிட்டில் தங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதே 20 பில்லியன் டொலரை லஞ்சத்தில் காணாமல் ஆக்கியவர்கள். பில்லியன் கணக்கில் பெரி சேவை நடத்தாத நிறுவனங்களுக்கு அதை நடத்துவதற்கே எண்ணியிராத நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்து மாட்டிக்கொண்டனர். இப்போது யுத்தங்களை வரவழைத்து கொள்ளை லாப மீட்டும் நிறுவனங்களுக்கு துணைபோகின்றனர் என்ற அச்சமே பிரித்தானிய மக்களிடம் உள்ளது.

 

பிரித்தானிய சுகாதார சேவைகள் வரலாறு காணாது கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள், ஆசிரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். சம்பள உயர்வுப் போராட்டங்கள் அதிகரித்துள்ளது. நடுத்தர குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் பட்டினியோடு பாடசாலை வருகின்றனர். உள்ளுராட்சி மன்றங்கள் வழங்கும் அடிப்படைச் சேவைகள் ஒன்றன் பின் ஒன்றாக குறைக்கப்படுகின்றது அல்லது நிறுத்தப்படுகின்றது. தபாலக பொறுப்பாளர்கள் அப்பாவிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு 20 வருடங்களாகியும் அவர்களுக்கு நியாயம் வழங்க பிரித்தானியா தயாராகவில்லை. பொய்க் குற்றச்சாட்டுக்களால் தண்டணை பெற்ற பலர் குற்றவாளிகளாகவே இறக்கின்றனர். இவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை. பிரித்தானியா யுத்தத்தைத் தூண்டுவதிலும் ஏனைய நாடுகளில் மக்களைக் கொல்வதிலும் காட்டும் ஆர்வத்தை தன்னுடைய மக்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை சீரமைப்பதில் காட்டவில்லை.  அதிகார வெறியும் யுத்த வேட்கையும் தான் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் உள்ளது. அவர்களிடம் எவ்வித மனிதத்துவப் பண்புகளும் கிடையாது. அமெரிக்க – பிரித்தானிய கூட்டு உலகத்தின் அமைதியின்மைக்கான முக்கிய காரணிகளாக மாறியுள்ளனர். அப்பாவிப் பிரித்தானிய மக்களின் பெயரில் இந்தக் குடிகாரக் கும்பல் சதிராடுகின்றது.

டொனால்ட் ட்ரம்ப் 400,000 அமெ­ரிக்க டொலர்­களை வழக்குச்  செலவுத் தொகை­யாக வழங்க வேண்டும் – நீதி­மன்­ற­ம் உத்தரவு !

நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கைக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கும் அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சுமார் 400,000 அமெ­ரிக்க டொலர்­களை வழக்குச்  செலவுத் தொகை­யாக வழங்க வேண்டும் என அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று உத்­த­ர­விட்­டுள்­ளது.

டொனால்ட் ட்ரம்பின் சொத்து விப­ரங்கள், வரி ஏய்ப்பு முயற்­சிகள் தொடர்­பாக, 2018 ஆம் ஆண்டு நியூ­யோர்க் ரைம்ஸில் வெளி­யி­டப்­பட்ட புல­னாய்வுக் கட்­டு­ரைக்கு புலிட்ஸர் விருது வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அக்­கட்­டு­ரைக்­காக தனது வரி விப­ரங்கள் அடங்­கிய ஆவ­ணங்­களை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பெற்­றுக்­கொண்­ட­தாக மேற்­படி பத்­தி­ரிகை மீதும், 3 ஊட­வி­ய­லா­ளர்கள் மீதும் குற்றம் சுமத்­திய டொனால்ட் ட்ரம்ப் 100 மில்­லியன் டொலர் இழப்­பீடு கோரி 2021 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார்.

ட்ரம்பின் உற­வி­ன­ராக மேரி ட்ரம்ப்பும்,  டொனால்ட் ட்ரம்­பினால் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­களில் ஒருவர்.

இவ்­வ­ழக்கை நியூயோர்க் மாநில உயர் நீதி­மன்றம் கடந்த மே மாதம் தள்­ளு­படி செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், மேற்­படி வழக்­குக்­கான செலவுத் தொகை­­யாக நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரிகை மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மூவ­ருக்கு 392, 638 அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 12.5 கோடி இலங்கை ரூபா) டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டும் என நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12)  உத்தரவிட்டுள்ளது.