2024

2024

நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபா – 2025ஆம் ஆண்டில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று எடுத்துகொள்ளப்பட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த விசாரணை தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

வட்டுக்கோட்டையில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் – பொலிஸ் நிலையம் முன்பு குவிந்த மக்கள்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குறித்த தாக்குதல் தாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடியமையினால் நேற்று இரவு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.

 

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உள்ள வீட்டுக்கு நேற்று இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று, சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

 

ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பலால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண் ஒருவரும், 5 வயதான சிறுவன் ஒருவரும் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தினால் அங்கிருந்து மோட்டார் சைக்கிள், வீட்டு மதில் மற்றும் வீட்டு உபகரணப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.

 

இந்த நிலையில், இந்த தாக்குதல் தாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன், அயலவர்கள் இணைந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று இரவு ஒன்றுக் கூடியமையால், அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.

 

வன்முறைக் கும்பலின் அட்டகாசங்களால் தங்களால் நிம்மதியாக உறங்கக்கூட முடியாதுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களே இன்று தமிழ் பொது வேட்பாளருடன் இருக்கிறார்கள் – இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களே இன்று தமிழ் பொது வேட்பாளருக்கு பின்னால் இருக்கின்றனர். பொது வேட்பாளரை எதிர்ப்பதனால் எமக்கு அச்சறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து விட மாட்டோம், அடிபணிய மாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

1948ஆம் ஆண்டில் இருந்து தமிழ் தலைவர்களையும் , தமிழ் மக்களையும் சிங்கள அரசியல் தலைவர்கள் ஏமாற்றியதன் காரணமாகவே ஆயுத போராட்டம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் போராட்டத்திற்கான காரணம் சிங்களவர்களில் பெருமளவானோருக்கு தெரியாது. நாங்கள் பூர்விகமாக வாழ்ந்த மக்களே. எங்களுக்கான உரிமைகளை மறுத்த காரணத்தினாலேயே நாங்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழ முடியாது என்ற கோசங்கள் எழுந்தன.

 

ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிங்களத் தலைவர் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதியாவார். ஆனால் ஒரு சில தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளர் என்ற ஒருவரை களமிறக்கியுள்ளனர். இந்த மனநிலை அவர்களிடையே ஏற்பட சிங்களத் தலைவர்களே காரணம். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் பொது வேட்பாளர் என்ற கோஷம் தமிழ் மக்களிடையே வந்துள்ளது என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் பெரும்பான்மை சமூகத்தின் தலைவர்கள் ஏற்க வேண்டும்.

 

பொறுப்புள்ள அரசியல் கட்சியாக 75 வருடங்களாக தமிழ் மக்களை வழிநடத்திய கட்சியாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுத்துள்ளது. பொது வேட்பாளர் என்ற விடயத்தை தமிழரசுக் கட்சி ஏற்கவில்லை. நாங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டின் எதிர்காலத்திற்காக தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக பெரும்பான்மை சமூகத்திற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.

 

இந்த சந்தர்ப்பத்திலும் இந்த தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிப்பார்களாக இருந்தால் அதன்பின்னர் தமிழ் மக்கள் எந்தப் பாதையில் செல்வார்கள் என்பதனை எங்களால் கூற முடியாது. ஆனால் பொறுப்புள்ள கட்சியாக வெற்றிப்பெறக்கூடிய பிரதான வேட்பாளருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.பொதுவேட்பாளருக்கு பின்னால் இருக்கும் ஒருசில அரசியல்வாதிகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். ஆனால் இந்த பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிக்கும் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒரு சிலரையும், சிவில் மக்கள் பிரதிநிகளையும் விமர்சிப்பதில்லை.

ஒருசில அரசியல்வாதிகள் இன்னுமொரு வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய எடுத்த விடயத்தை தாங்கள் எடுத்த மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை மறைப்பதற்காகவும் சலுகைகளை பெற்றதை மறைப்பதற்கும் ஒருசிலர் தமிழ் மக்களை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். தனிப்பட்ட நன்மைக்காக எங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஒருசில வேட்பாளர்கள் அறிவிக்கும் போது அதனை மறுக்க முடியாமலே பொதுவேட்பாளரின் பின்னல் இருக்கின்றனர். திரைமறையில் அவர்கள் பிரதான வேட்பாளருடன் வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

 

ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதான வேட்பாளரை சந்தித்து எவ்வாறு மறைமுகமாக உங்களுடன் வேலைசெய்வது என்று கலந்துரையாடியுள்ளனர். ஆனால் நாங்கள் தமிழரசுக் கட்சி என்ற வகையில் அவ்வாறு மக்களுக்கு துரோகம் செய்யப் போவதில்லை. கடந்த விடுதலைப் போராட்டம் நடந்த போது இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் மீண்டுமொருமுறை பொதுவேட்பாளருக்கு பின்னால் இருந்துகொண்டு எமது தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். இதுவே உண்மை.

 

பொதுவேட்பாளரை எதிர்ப்பதனால் பல அச்சுறுத்தல்கள் எமக்கு விடுக்கப்படுகின்றன. தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் உங்கள் அரசியலை அழித்துவிடுவோம் என்றும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகாமல் பார்த்துக்கொள்வோம் என்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து தமிழ் மக்களுக்கு தேவையான விடயத்தை கூறாமல் இருக்கப் போவதில்லை.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவார். பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை எமக்குள்ளது என்றார்.

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – நசீரத்தில் ஐம்பது வரையானோர் பலி !

காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

 

இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது.

 

அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர்.

 

தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடவுச் சீட்டு பெறுவதில் உள்ள நெரிசலை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தாம் விரும்பிய அமைச்சரவையை நியமிக்காது, நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாகவும், இதற்காக மக்கள் தமக்கு விருப்பமானவர்களை புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள போது, ​​இந்நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“யாரும் எதிர்க்க முடியாத வெற்றிக்கான பயணத்தையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.” – ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர !

தம்மைத் தவிர மற்ற அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,

“யாரும் எதிர்க்க முடியாத வெற்றிக்கான பயணத்தையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். ஏனெனில் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் வரலாற்று ரீதியாக வளர்ந்த பாரம்பரிய அரசியலில் ஏற்பட்ட அனைத்து தவறுகளையும் சரி செய்யக்கூடிய ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். உலகின் பிற நாடுகள் இந்த சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொண்டன, அவர்கள் என்ன மூலோபாயங்களை பயன்படுத்தினார்கள், ஒரு தேசமாக நாம் எங்கு தவறு செய்தோம், இவை அனைத்தையும் பார்த்து இது அமைக்கப்பட்டுள்ளது”. என குறிப்பிட்டார்.

நல்லவர்கள் போல ஜே.வி.பி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க

ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டதாக நல்லவர்கள் போல ஜே.வி.பி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்துள்ளாா்.

பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”ஜனநாயக வழிக்கு வருவதாக அறிவித்த ஜே.வி.பி 1988 தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடுவது மரண தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது. தேர்தல் கடமை மேற்கொண்டால் அதற்கான தண்டனை, மரணம் என மாவட்ட செயலாளர்கள் எச்சரித்தது.

மற்றும் வாக்களிப்போருக்கு மரணம் பரிசளிக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

அன்று ஜே.வி.பியின் வன்முறைக்கு முகங்கொடுத்தவர் ரணில் விக்ரமசிங்க. சட்டம் ஒழுங்கை பேண முக்கிய பங்காற்றினார் ரணில் விக்ரமசிங்க. 1000 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

ஜே.வி.பிக்கு எதிராக பல்கலைக்கழக தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த மாணவர்கள் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டனர். இன்றும் அந்த நிலைமை காணப்படுகிறது. ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டதாக நல்லவர்கள் போல ஜேவிபி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தொிவித்தாா்.

பிரச்சார நடவடிக்கைகளுக்காக அதிகமாக செலவு செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்கள் – குடியுரிமை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்கிறது தேர்தல் ஆணையம் !

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடும் தொகையை விட அதிகமாகச் செலவு செய்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெளிவான தகவல் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் குடியுரிமை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

வரலாற்றில் இவ்வாறு குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் வகைப்பாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு விபரங்கள் தேர்தலின் பின்னர் பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செலவின விவரங்கள் முரண்பாடாகவோ அல்லது தவறான தகவல் தரப்பட்டிருந்தாலோ, காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கும், எந்நேரத்திலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கும் சட்டத்தின் மூலம் மக்களுக்கு அனுமதி உண்டு என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் முப்பத்தொரு நாட்களுக்குள் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர்களின் செலவு விவரங்களை 21 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் !

கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக வாக்கெண்ணும் பணிக்காக பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் 8 நிலையங்களில் நடைபெறவிருக்கின்றது.

நாளை முதல் நடைபெறவிருக்கின்ற தபால் மூல வாக்களிப்பிற்காக 3656 அரச உத்தியோகத்தர்கள் கடமையாற்றவுள்ளார்கள்.

அவர்களுக்காக 96 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நாளை 4ம் திகதியும், பொலிசார் 4ம் மற்றும் 6ம் திகதியும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்காக 5ம், 6ம் திகதியும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் அவசர வேலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்களிப்பை தவறவிடுகின்ற உத்தியோகத்தர்கள். 11 , 12ம் திகதிகளில் பழைய மாவட்டச் செயலகத்தில் தமது வாக்கை செலுத்த முடியும்.

“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெறமுடியாது” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெறமுடியாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இயலும் ஸ்ரீலங்கா வெற்றிபேரணி பெல்மடுல்லை நகரில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அரச சேவையாளர்களின் கொடுப்பனவை அதிகரித்தோம். நான் வாக்குறுதிகளை வழங்கி செல்பவர் அல்ல. நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்.

 

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதாக வாக்குறுதி வழங்கினேன் இன்று அதனை நான் நிறைவேற்றியுள்ளேன்.எனவே அநுரவும் சஜித்தும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து அரச பணியாளர்களின் சம்பள விவகாரத்தினை நீக்கிக்கொள்ள வேண்டும்.

 

நான் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது கட்டம் கட்டமாகவே என்னுடன் பலர் இணைந்தனர்.வாழ்க்கை சுமை அதிகரிப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

 

பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து நாடு முழு வங்குரோத்து அடைந்தது. இன்று நாம் அந்த நிலையை மாற்றி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பியுள்ளோம்.அரச சேவையாளர்களின் கொடுப்பனவு மற்றும் சம்பளத்தினையும் இன்று நாம் அதிகரித்துள்ளோம்.

 

தேசிய உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த முடியும். உரிய பொருளாதார திட்டம் ஒன்றின் அடிப்படையில் பயணிக்கும் போது நாடு முன்னேறும்

நான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 5 முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளேன்.

 

வாழ்க்கை செலவினை குறைத்தல் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் சம்பளத்தினை அதிகரித்தல் வரிச்சுமையைக் குறைத்தல் மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தினை ஊக்குவித்தல் ஆகியனவாகும்.

 

நாம் பணம் அச்சிடவில்லை.ரூபாவின் பெறுமதியை அதிகரித்ததனாலேயே வாழ்க்கையை சுமையை இந்தளவேனும் குறைக்க முடிந்தது. இது வெறும் ஆரம்பம் மாத்திரமே. நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல திட்டங்களை வகுத்துள்ளோம்.

 

வரியினை குறைத்து செலவினை அதிகரித்தமையினாலேயே அன்று கோட்டாபய ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சஜித்தும் அநுரவும் வரியினை குறைப்பதாகவே கூறுகின்றனர்.

 

இதனூடாகவே மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் நான் போலி வாக்குறுதிகளை வழங்கி இந்த நாட்டை பொறுப்பேற்க விரும்பவில்லை. அடுத்த வருடம் நாம் ஒரு லட்சம் வேலைவாய்பபுக்களை உருவாக்குவோம். நாட்டிற்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் 10 ஆண்டுகளில் இந்த நாடு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடையும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.