2024

2024

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பலி – உறுதிப்படுத்தியது ஹிஸ்புல்லா !

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பெய்ரூட்டில் நேற்றிரவு நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

தமது தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்புஉறுதிப்படுத்தியுள்ளது. அவர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இறந்துவிட்டார் என்று குழு உறுதிப்படுத்தியது, “தெற்கு புறநகர்ப் பகுதியில் துரோகத்தனமான சியோனிசத் தாக்குதலைத் தொடர்ந்து” அவரது மரணம் நிகழ்ந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஸ்ரல்லாவை ஒரு தியாகி என்று விபரித்த ஹிஸ்புல்லா,இஸ்ரேலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலும் போலித்தமிழ்தேசியவாதிகளின் நிர்வாணமும் !

அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்.

தலைப்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலும் போலித்தமிழ்தேசியவாதிகளின் நிர்வாணமும் !

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்பொதுத்தேர்தலை அணுகவிருக்கும் விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

 

அதனைப் புரிந்துகொண்டு இம்முறை பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க முதிய முகங்களைக் களமிறக்கவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எமது கட்சி உறுப்பினர்கள் பலரும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவே இதுகுறித்துத் தீர்மானிக்கும். இருப்பினும் அந்தத் தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கூட்டமைப்பு – வீட்டுச்சின்னத்தில் இணைய புளோட், ரெலோவுக்கு கால அவகாசம்!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.

மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் வீட்டுச் சின்னத்தில் கூட்டமைப்பாக போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கூட்டமைப்பிலிருந்து  கட்சியில் இருந்து விலகிய  ரெலோ புளொட்டுக்கு கட்சியில் இணைய மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.

இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன், கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் மாயம் – ஆரம்பித்தது விசாரணை!

சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

 

இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

 

காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

 

மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சி.வி.விக்கினேஸ்வரன் !

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம் திகதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என அறிய முடிகிறது.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவான விக்னேஸ்வரன், 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் !

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கான உர மானியம்15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிப்பு !

விவசாயிகளுக்கான உர மானியத்தை15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அதற்கிணங்க இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதோடு, இந்த மானியம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் குறித்த நிதியானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு, பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படவுள்ளது.

 

இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.

மீன்பிடித் தொழிலை, நிலைபேறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யவும், தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வரும் கடல் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்காக களத்தில் இறங்கி பணி செய்ய எண்ணுகிறேன் – மனோ அணியிலிருந்து விலகினார் கே.டி. குருசுவாமி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து தான் உடன் பதவி விலகுவதாக கே.டி. குருசுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், குறித்த கட்சிகளின் தலைவர் மனோகணேசனுக்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றிலேயே அறிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர்,

 

“நாட்டில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளையும், அதன் பின் நடக்கின்ற நிகழ்வுகளையும் உற்று நோக்கும் பொழுது, மக்களின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தையும், அவர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்திருப்பதையும் காண்கின்றோம்.

 

இந்நிலையில், மக்களோடு நேரடியாக களத்தில் பணிசெய்ய விரும்புவதால், கட்சியோடு இதுவரையில் வகித்து வந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து, இன்றோடு உடனடியாக விலகிக்கொள்கின்றேன்.

 

தங்களோடும், கட்சியோடும் பயணித்த 13 ஆண்டு கால அரசியல் பாதையில் என்னை வழி நடத்தியதற்கும் நெறிப்படுத்தியதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு கட்சியின் சக உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றத்துக்காக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில், நீதிபதி ஜுட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியர் அர்ச்சுனா தான், சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை போன்ற காரணத்தினால் வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டது.

அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.