2024

2024

34 கட்சிகள் கையெழுத்திட்டு புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டி !

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இயலும் சிறிலங்கா மாநாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டிருந்தன.

பாராளுமன்ற தேர்தலில் 25% பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்த வேண்டும் – பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்

தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்படமுன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ள பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் 25% பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர்.

நேற்றைய தினம் (02) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மிரேகா நாகேஷ்வரன் மற்றும் மட்டக்களப்பு சிவில் வலையமைப்பின் உறுப்பினர்களான குணரெட்னம் யுனிதா,பிரசாந்தன் பவித்திரா ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர்.

வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெற்றுக்கொண்டோம். ஆனால் ஒற்றுமையின்மை காரணமாக தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அரைவாசிக்கு மேல் குறைந்துள்ளது.ஒற்றுமையில்லாத நிலையே இதற்கு காரணமாகவுள்ளது.

 

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டும்.தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று கோருகின்றோம்.

 

அதேபோன்று பாராளுமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.கட்சிகள் பேச்சளவிலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்துபேசுகின்றனர். உளரீதியாக அவர்கள் பெண்களுக்கான பிரதிநித்துவத்தினை வழங்குவதை உறுதிப்படுத்துவதில்லை. வெறுமனே பேச்சளவிலேயே உறுதிகூறுகின்றனர்.

எனவே வடகிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியில் பெண்களின் அங்கத்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

எமது புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே அமைக்கும். அந்த அமைச்சரவையில் 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அந்த புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர், அந்தந்த துறைக்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் 25 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே தமது கட்சியில் உள்ளனர்.இதனால் தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரே இடம்பெறுகிறார்.இதனால், அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது உறுப்பினரான நிபுண ஆரச்சியை மற்றும் ஒரு அமைச்சராக நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சட்டப் பிரச்சினை காணப்பட்டதால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

அடுத்து அமைக்கப்படும் அரசாங்கத்தில் குறைந்தளவு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான நிறைவான சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை அனுர குமார திசாநாயக்க நிரூபிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிலும் வேறு பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை மறைத்துவைத்திருக்கின்றனர் என்ற தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நிதி களவாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக தெரிவித்துவருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீன அறிவிப்பு!

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

போர்க்காலத்தில் ஓடி மறைந்து திரிந்தவர்கள் தான் பாராளுமன்றத்தில் வாய்ப்பேச்சில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் – தமிழ்க்கவி அம்மா காட்டம் !

போர்க்காலத்தில் ஓடி மறைந்து திரிந்தவர்கள் தான் பாராளுமன்றத்தில் வாய்ப்பேச்சில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் – தமிழ்க்கவி அம்மா காட்டம் !

 

சமகால அரசியல்- பொருளாதார நிலமைகள் தொடர்பில் எழுத்தாளர் தமிழ்க்கவி அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசை அமைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாகவே அரசு அமைக்கப்படும்.

எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.

அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

புதிய அரசு ஆட்சி அமைத்தமையைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். – என்றார்.

இலங்கைக்கான கியூபா தூதுவருடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் தீர்மானங்களை மீறியோருக்கு கட்சியில் இடமில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களை மீறிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் நியமனங்கள் வழங்கப்படக் கூடாதெனவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்களில் நியமனங்கள் வழங்கப்படும் விதம் குறித்து தினகரனுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் இது பற்றி விளக்குகையில்,

தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்கள் இதற்கு முன்னரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகக் குறைந்தது அவர்களுக்கு என்றுமே தேர்தல் நியமனம் கொடுக்கப்பட்டதில்லை.

முன்னர் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் எங்களுடைய கட்சி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் எடுத்த சில நாட்களில், மன்னாரைச் சேர்ந்த சிவகரனும், அனந்தி சசிதரனும் அதற்கு மாறாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தியதன் காரணமாவே கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

அவ்வாறிருக்க இந்தத் தடவை கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி, பலர் செயற்பட்டிருக்கிறார்கள். ஒரு தீர்மானமல்ல பல தீர்மானங்ளை மீறியிருக்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென்பது இறுதியாக எடுத்த தீர்மானம். அதற்கு முன்பாகவே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் தெளிவாக நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல பொதுவேட்பாளரை போட்டியிலிருந்து விலகுமாறும் கூட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு பொது வேட்பாளரிடம் விளக்கமும் கோரப்பட்டது. பொதுவேட்பாளருக்கு ஆதாரவாக பிரசாரம் செய்வதற்கும் நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம். தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்களிடம் விளக்கமும் கோரியிருந்தோம்.

அவர்களுக்கு நியமனம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நியமனக் குழுவே இறுதி முடிவெடுக்கும். நான் தனியாக முடிவெடுக்க முடியாது ஆனால் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், கட்சியின் தீர்மானங்ளை மீறும் எல்லார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்து – மாணவர்கள் உட்பட 25 பேர் பலி !

தாய்லாந்தில் சுமார் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற பாடசாலை பேருந்து ஒன்று பாங்காக் புறநகர் பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பாடசாலை பயணத்திற்காக 44 பேரை ஏற்றிக்கொண்டு அயுத்தாயாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தலைநகரின் வடக்குப் புறநகர் பகுதியான பத்தும் தானி மாகாணத்தில் சென்று கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்தில் இருந்து 16 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். எனினும் பயணிகள் யாரும் உயிரிழந்தார்களா என்பதை போலீசார் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.