2024

2024

ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி !

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவிற்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர் இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது,தோல்வியi தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிகார சமநிலையை பேண எம்.ஏ.சுமந்திரன் அவசியம் – அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம்!

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் நேர்காணல்.

அறிவிக்கப்பட்டது தேசிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் !

பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

01. பிமல் ரத்நாயக்க

02. பேராசிரியர் வசந்த சுபசிங்க

03. கலாநிதி அனுர கருணாதிலக்க

04. பேராசிரியர் உபாலி பனிலகே

05. எரங்க உதேஷ் வீரரத்ன

06. அருணா ஜெயசேகர

07. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

08. ஜனித ருவன் கொடிதுக்கு

09. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி

10. ராமலிங்கம் சந்திரசேகர்

11. கலாநிதி நஜித் இந்திக்க

12. சுகத் திலகரத்ன

13. வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர

14. சுனில் குமார் கமகே

15. காமினி ரத்நாயக்க

16. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க

17. சுகத் வசந்த டி சில்வா

18. கீர்த்தி வெலிசரகே

19. சமிலா குமுது பிரிஸ்

20. அப்துல் ஃபதா முகமது இக்ராம்

21. ரஞ்சன் ஜெயலால் பெரேரா

22. மொஹமட் முகமது நசீர் இக்ராம்

23. க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்

24. ரொமேஷ் மோகன் டி மெல்

25. பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர​ெ

26. புபுது நுவன் சமரவீர

27. சரத் லால் பெரேரா

28. அனுர ஹெட்டிகொட கமகே

29. ஹேமதிலக கமகே

யாழ்ப்பாணத்தில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார் அங்கஜன் இராமநாதன்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றையதினம் (11.10.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளார்.

கடந்த காலங்களில் அங்கஜன் இராமநாதன் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் களமிறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள காரணத்தினால் அந்த கட்சியின் பெயரையே அல்லது சின்னத்தையோ பயன்படுத்தி போட்டியிட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாகவே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றிருந்தார்.

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய 349 சுயேட்சை குழுக்கள் – வடக்கில் 8 லட்சம் ஓட்டுக்களுக்காக 70 சுயேட்சை குழுக்கள்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 349 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

 

அதன்படி, பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 23 வேட்பாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 16 வேட்பாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 16 வேட்பாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 06 வேட்பாளரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 34 வேட்பாளர்களும், வன்னி மாவட்டத்திலிருந்து 33 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

 

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 33 வேட்பாளர்களும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 50 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 24 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 09 வேட்பாளர்களும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 22 வேட்பாளர்களும் , அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 09 வேட்பாளர்களும் , பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும் , பதுளை மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் , மொனராகலை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 07 வேட்பாளர்களும் , கேகாலை மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தமிழரசுக்கட்சியில் இருந்து விலகிய ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தலைமையில் புதிய கட்சி உதயம் !

யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது

 

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது.

 

இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

 

இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளருக்கு !

இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார்.

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

 

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

 

அந்தவகையில் நடப்பாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக கடந்த 7ம் திகதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து 8ம் திகதி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

 

அதேபோல் நேற்று 9ம் திகதி வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் திகதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இடையே சந்திப்பு!

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அட்மிரல் கோஹ்லர், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டினார்.

கடற்படைப் பிரிவின் மனிதவள பயிற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் விஜயமானது வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை !

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

 

அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, ​​யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் கஜேந்திரகுமார் கட்சியில் போட்டியிடுவதாக அறிவித்த வேட்பாளர் இன்று தமிழரசுக்கட்சி வேட்பாளராக மனுத்தாக்கல்- வெளியானது தமிழரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் விபரம்!

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (10) மாலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

வன்னி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக வவுனியாவில், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே.சிவானந்தராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கலைதேவன் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து.ரவிகரன், விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.கமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மன்னார் மாவட்டத்தில் சட்டத்தரணி செ.டினேசன் மற்றும் சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன், மட்டு மாநகரசபை முன்னாள் முதல்வர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்னபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட எட்டு பேர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.

அத்தோடு, யாழ். மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன்  தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பு மனுக்களை கையளித்திருந்தது.

இதேவேளை கடந்த வாரம் தமிழ் மக்கள் முன்னணியின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என பெயர் குறிப்பிடப்பட்டு பதாகைகள் வெளியிடப்பட்டிருந்த சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா என்பவர் இன்று தமிழரசுக்கட்சி சார்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. தமிழரசுக்கட்சி சார்பாக பல ஆண்டுகளாக சமூக மட்டத்தில் இயங்கி வரும் பலருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படாமல் வேறு கட்சியில் இருந்து திடீரென தமிழரசுக் கட்சுக்குள் வந்தவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.