2024

2024

காசாவில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல் – 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் பலி !

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து காசா சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று(21) கூறியதாவது, காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா்.

அதையடுத்து, அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29,313ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதலில் இதுவரை 69,333க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

யூலியன் அசான்ஜ் – மக்ஸின் குஸ்ஸிநோவ்: ஒருவருக்கு கதாநாயகன் மற்றவருக்கு துரோகி – தொடரும் சர்வதேச படுகொலைகள்!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.

அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.

அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.

மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.

அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து உடலில் தீ வைத்த கொடுமை – இந்தியாவில் சம்பவம் !

இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துஇ அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணின் வீட்டுக்கு சமரசம் பேசுவதற்காக சென்றிருக்கிறார்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்த மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்ட மூன்று ஆண்களும் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண் மீது எரிபொருளை ஊற்றி எரித்துள்ளனர். மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சந்த்கா புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது தொடர்பான வீடியோ ஒன்றை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் !

தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

 

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 5 ஏகே 47 துப்பாக்கிகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ கொச்சி அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். . இதையடுத்து இலங்கைத் தமிழர்கள் உள்பட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்து கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ‘இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்ததும் இந்திய பெருங்கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

மேலும்  விசாரணையில் இந்த வழக்கில் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் வேலை பார்த்த முன்னாள் உதவியாளரான சென்னையை சேர்ந்த ஆதிலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பதுதெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது

குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலம் கிடைத்த பணத்தை குணசேகரன் தலைவராகவும் ஆதிலிங்கம் துணை தலைவராகவும் இருக்கும் வகையில் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சியை தமிழ்நாட்டில் ஆரம்பித்து நிதி பரிமாற்றம் செய்தது தெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது.

இதையடுத்து 14வது நபராக ஆதிலிங்கத்தை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆதிலிங்கம் மீது பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த வழக்கில் 14வது நபராக ஆதிலிங்கம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றிக் கொடுக்கும் வேலையை இவர் செய்துள்ளார்.

போதைப் பொருட்கள் விற்பனை மூலம் பெற்ற பணத்தை ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜென்டாகவும் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார். இந்த பணம் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத்துறையில் பைனான்சியராக பணிபுரிந்த போது இலங்கையை சேர்ந்த குணசேகரன் அவரது மகன் திலீபன் உட்பட விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார். என என்ஐஏ தெரிவித்துள்ளது

2023 இல் உலகநாடுகளில் கொலை செய்யப்பட்ட 99 பத்திரிகையாளர்களில் 72 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனியர்கள் !

2023 இல் 99 பத்திரிகையாளர்கள் உலகநாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு இவர்களில் 72 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனியர்கள் என தெரிவித்துள்ளது.

காசாவில் இவ்வளவு பெருந்தொகையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் கடந்த வருடம் உலகில் கொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை முன்னைய வருடங்களை விட குறைவாக காணப்பட்டிருக்கும் என  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசா- இஸ்ரேல் யுத்தத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒருநாடொன்றில் ஒருவருடத்தில் கொல்லப்பட்டதை விட அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசாவில் கொல்லப்பட்ட 77 பத்திரிகையாளர்களில் 72 பேர் பாலஸ்தீனியர்கள் மூவர் லெபனானை சேர்ந்தவர்கள் இருவர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என சிபிஜே தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களிற்கான அச்சுறுத்தல் என்ற விடயத்தை பொறுத்தவரை காசா யுத்தம் முன்னொருபோதும் இல்லாத அச்றுத்தலாக காணப்படுகின்றது என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஜோடி கின்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தை பொறுத்தவரை காசா பத்திரிகையாளர்களால் மாத்திரமே காசாவிற்குள் என்ன நடைபெறுகின்றது என்ற செய்தியை வெளியுலகிற்கு தெரிவிக்கமுடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள சிபிஜேயின் தலைவர் சர்வதேச பத்திரிiயாளர்களிற்கு காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தினர் அழைத்துச்சென்றால் மாத்திரமே சர்வதேச பத்திரிகையாளர்களால் அங்கு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாங்கள் செய்திகளை வெளிக்கொணர்வதற்காக  தங்கள் உயிர்களை பணயம்வைக்கும்  பாலஸ்தீன பத்திரிகையாளர்களையே நம்பியிருக்கின்றோம் எனவும் ஜோடி கின்ஸ்பேர்க்தெரிவித்துள்ளார்.

காசா யுத்தத்தின் போது பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு போதிய ஆதரவின்மை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள யுத்தம் என்பதால் காசாவில் இலக்குவைக்கப்படுபவர்கள் கொல்லப்படுபவர்களுக்கான ஆதரவை வெளியிட  மேற்குலகம் தயங்குகின்றது எனவும் தெரிவித்துள்ள  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் இஸ்ரேல் இந்த  யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச ஊடகங்கள் பிளவுபட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்தவருடங்களுடன் ஒப்பிடும்போது உக்ரைனிலும் மெக்சிக்கோவிலும் கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 2023 இல் குறைவடைந்து காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக மெக்சிக்கோ பிலிப்பைன்ஸ் சோமாலியா காணப்படுவதாகவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் சிறைச்சாலையில் உயிரிழப்பு – புடினே காரணம் என்கிறார் பைடன் !

ரஸ்ய எதிர்கட்சி தலைவரும் விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்தவருமான  அலெக்சே நவல்னி சிறையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையில் அவர் உயிரிழந்துள்ளார் என ரஸ்ய சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை நவல்னி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டார் சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் என ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஸ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு தற்காலிக கடவுச்சீட்டு !

இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகரகத்தினால் குறித்த கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

32 வருடகால சிறை தண்டனைக்கு பின்னர், சாந்தன் நாடு திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரத்திற்கு அழுத்தம் – USAID

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து இலங்கை மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் காரணமாக சர்வதேச சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் !

காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும்  100 கோடி  விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும்  உணவுகளை தேடி  இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் ,

1979 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில்  44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22  சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும்.

இந்த தரவினை  1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ)  வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான  உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது.இதன் காரணமாக  இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது.

இதேவேளை , வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

“நினைவுகளே எங்கள் கேடயம்!” என் செல்வராஜாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

கல்வியின் மகுடுமாகச் சித்தரிக்கப்பட்டு விருகின்ற யாழ்ப்பாணத்தில் 2024இல் நொத்தேர்ன் யுனிவர்சிற்றி என்ற கல்வி நிறுவனத்தின் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட சினிமாக் கலைஞர்களின் நட்சத்திரக் கேளிக்கை நிகழ்ச்சி இளைஞர்களின் இச்சைகளைத் தூண்டும் கவர்ச்சி நடனத்திற்குள் கல்வியை கலப்படம் செய்தது. இதனை துரிதமாக பின்னோக்கிச் சுழற்றினால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1974; ஜனவரியில், பல கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட நட்சத்திர கேளிக்கை விழாவுக்கு முற்றிலும் முரணான தமிழ் மக்களின் அடுத்த 50 ஆண்டுகாலத்தை தீர்மானிக்கின்ற நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. தமிழர்களின் அடுத்த 50 ஆண்டு அரசியலுக்கு வித்திட்ட நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் மிக மிக முக்கியமானது. அந்நிகழ்வு தான் யாழ்ப்பாணத்தில் 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்சி மாநாடு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு பற்றியும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் ஆங்காங்கே சில பதிவுகள் வந்த போதும், ஓரளவுக்காவது அந்நிகழ்வை ஆராய்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பதிவு இதுவரை வெளிவந்திருக்கவில்லை.

இவ்வாறான வரலாற்று ஆவணங்களை பெரும் ஆய்வுகளுக்கூடாக வெளிக்கொணர வேண்டியது அப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணி. ஒரு கல்விச் சமூகத்தின் மகுடமாக விளங்கும் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை நோக்கிச் ஆய்வுகளை மேற்கொண்டு பட்டதாரி மாணவர்களை அம்மாற்றத்திற்கு முன்னோடிகளாக உருவாக்கி அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். இன்று தமிழ் சமூகம் 30 ஆண்டுகள் போராட்டம், யுத்தம் என்பனவற்றிலிருந்து விடுபட்டு யுதமில்லாத சூழ்நிலைக்குள் வாழ ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் வடக்கில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் தன்னுடைய சமூகம் சார்ந்து என்ன செய்துள்ளது? குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தமிழ் மக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, மரபுகள் பற்றி எத்தனை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்? இவை தொடர்பில் எத்தனை நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்துள்ளன? வடக்கில் மதுபானம், போதைவஸ்துக்கு அடிமையாதல் மிக அதிகமாக உள்ளது. வீதி விபத்துக்கள் அதிகமாக உள்ளது. சமூகப் பிறழ்வுகள் அதிகரித்துள்ளது. இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துள்ளது. கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. தமிழ் மக்களுடைய வரலாறுகள் மறைந்துகொண்டிருக்கின்றது. இவைகள் பற்றி என்ன ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது? இவற்றைத் தடுக்கும் விழிமுறைகள் பற்றி எத்தனை ஆய்வுகள் செய்யப்பட்டது? அவை பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்றதா? இவற்றினைப் பற்றி தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதா?

இவை தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் குறிப்பாக கலைப்பீடத்தின் பீடாதிபதி என்ன செய்கின்றார்? பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என்ன செய்கின்றனர்? எத்தனை ஆய்வறிக்கைகள், புத்தகங்களை இவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் வெளியிட்டுள்ளனர்? தங்கள் பேராசிரியர் பதவி உயர்விற்காக இந்திய பல்கலைக்கழகங்களில் பணம்கொடுத்து எழுதி அங்கேயே பணம் கொடுத்து ஆய்வுகளை வெளியிடும் போலிச் சஞ்சிகைகளில் வெளியிட்டதைத் தவிர இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்? இப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு, பேராசிரியர்களுக்கு, பீடாதிபதிகளுக்கு இதனைச் செய்வதற்காகவே இலங்கைப் பல்கலைக்கழக மானியத்துறை, கோடிக்கணக்கான நிதியைச் செலவிடுகின்றது. இதற்காகவே விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல லட்சம் ஊதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ் கல்விச் சமூகத்தின் மகுடமான பல்கலைக்கழகம் இதை எதையுமே செய்யவில்லை. யாழ் பல்கலைக்கழகம் பள்ளிக்கூடம் தான் நடத்துகின்றது.

1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டது, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றுமொரு நிகழ்வு. ஆனால் அந்நூலகம் எரிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளில் அந்நூலகம் எப்போது எரிக்கப்பட்டது, அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தலைமகளின் செயற்பாடுகள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீண்டும் ஆதாரங்களுடன் தேடிப் பதிவிட்டு அந்நூலகம் எரிக்கப்பட்டதற்குப் பின்னாளிருந்த அரசியல் தலைவர்களை ஆதாரமான பதிவுகளோடு நிறுத்தி இரு ஆவணங்கள் வெளியானது. “யாழ்ப்பாணப் பொதுநூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு” என்ற நூலிலும் அதனைத் தொடர்ந்து “Raising from the ashes“ என்ற தேசம் வெளியீடாக வந்த நூலிலும் இப்பதிவுகள் இடம்பெற்றது.

இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளையும், நூல்களையும் வெளியிட்டதுடன் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் தன் சேகரிப்பில் வைத்துள்ளவர் தேசம் சஞ்சிகையால் ‘நூலகவியலாளர்’ என்று கௌரவிக்கப்பட்ட என் செல்வராஜா. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்த கௌரவத்துக்கு உரியவர் இவர் மட்டுமே. வேறுயாராவது அவ்வாறு அதனைப் பயன்படுத்துவார்களானால் அது அவர்களுடைய அறியாமையே. தன்னுடைய பதின்ம வயது முதல் நூல்களும் நூலகமுமாக வாழ்ந்தவர் என் செல்வராஜா என்றால் அது மிகையல்ல. எமது இதயங்கள் ‘லப்’, ‘டப்’, ‘லப்’, ‘டப்’ என்று அடித்தால் நூலகவியலாளர் செல்வராஜாவின் இதயம் மட்டும் ‘வா’, ‘சி’, ‘வா’, ‘சி’ என்று தான் அடிக்கும். இதனை அவர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள ஆங்கிலேய நூலகங்கள் கூட அறிந்து கௌரவித்துள்ளன. அவருக்கு கிடைத்துள்ள கௌரவங்களை பட்டியல் இடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஈழத் தமிழ் சமூகத்தின் மனநிலையை சற்றுத் தட்டி எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை நூலகவியலாளர் என் செல்வராஜாவை தெரியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதல்ல.

நூலகவியலாளர் என் செலவராஜாவுக்கும் எனக்குமான உறவு எனது எழுத்துக்களுக்கும் எனக்குமான உறவுவரை நீண்டது. தந்தையும் தனயனுமாக, நல்ல நண்பர்களாக, நல்ல எதிரிகளாக நட்பும் பகையும் கொண்டது. நாங்கள் இருவருமே எதிரும் புதிருமான சமூக அரசியல் முகாம்களைச் சேர்;ந்தவர்கள். முரண்படுவோம் என்பதில் உடன்பாடுடையவர்கள். தமிழ் சமூகத்தில் மிகத் தட்டுப்பாடான கிடைத்தற்கரிய ஒரு உறவுமுறை. முரண்படுவதற்காக உடன்பாடு.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு கடைந்தெடுத்த நல்லதொரு தமிழ் தேசியவாதி. அதனை முழுமையாக நம்பியவர். நம்புகிறவர். அதனையே நம்புபவர். ஆனால் தமிழ் தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்ற அரசியல்வாதிகள், வியாபாரிகள், கோயில் வியாபாரிகள், கல்வியியலாளர்கள் போன்று இவர் தன்னுடைய தேவைகளுக்காக தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டவரல்ல. அதனால் இவருடைய முதுகெலும்பிலும் சற்று கூடுதலான தமிழ் தேசியம் உள்ளது. அதனால் வளைந்துகொடுக்க அது இடம்கொடுப்பதில்லை. இதனால் போலித் தமிழ் தேசியவாதிகளும் இவருக்கு முன் புன்சிரிப்பைத் தவழவிட்டாலும் இவருடன் நீண்டதூரம், நீண்ட காலம் பயணிப்பதில்லை. நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழ் நூல்கள் பற்றியும் நூலகம் பற்றியும் ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுவார்கள். ஆக மிஞ்சிப் போனால் கூட்டத்திற்குக் கூப்பிட்டு ஐந்து பவுணுக்கு பொன்னாடை போர்த்தி ஒரு படம் எடுத்துவிட்டு அனுப்பி விடுவார்கள்.

1963இல் அமெரிக்க சிவில் உரிமைப் போராளி மார்டின் லூர்தர் கிங்க்கின் ‘எனக்கு ஒரு கனவு உண்டு…’ என்ற உரை ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்களைத் தட்டி எழச் செய்தது. அவ்வாறே நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு ஒரு கனவு இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம்’ தான் என் செல்வராஜாவுடைய கனவு. இந்தக் கனவுக்காக அவர் சில பத்து ஆண்டுகளாக அயராது உழைக்கின்றார். ஆனால் இதுவரை அவருடைய கனவு மெய்ப்படுவதற்கான எவ்வித சமிக்ஞைகளும் தெரியவில்லை. வர்த்தகர்கள், கோயில்காரர்கள், முதலீட்டாளர்கள், சாதாரணர்கள் எனப் பலரோடும் பேசியும் அவருடைய கனவு ஒரு கையேட்டிற்குள்ளேயே குறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் கொஞ்சக்காலம் போனால் நூலகவியலாளர் என் செல்வராஜா லைப்ரொபிரினியா (librophrenia) வால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.

யாழில் பெப்பரவரி 9 நடைபெற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு பல கோடிகள் செவிடப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தையைக் கலக்கிய தமிழர் சில செக்கன்களில் பலநூறு கோடிகளை இழந்தது பற்றி விதந்துரைக்கின்றார், தென்னிந்திய சினிமாவின் ஈழத் தயாரிப்பாளர் படங்களுக்கு பல நூறு கோடிகளை கொட்டுகின்றார், ஹொட்டலியர்கள் பல பத்துக் கோடிகளை அள்ளி வீசுகின்றனர், இவர்கள் வரிசையில் இன்னும் பல பல கோடிகளை விசுக்க இன்னும் பலர் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கோயில் கடைக்காரர்கள் பல கோடிகளை வாரி இறைக்கின்றனர். இவர்களெல்லோருமே தங்களின் பரம்பரையே செலவழிப்தற்கு தேவையான சொத்திலும் அதிகமான சொத்துக்கள் தங்களிடம் உள்ளது என்றும் தாயகத்தை வைத்து தாங்கள் உழைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையாகவா?

அப்படியானால் நீங்கள் ஏன் நீண்ட காலப் போக்கில் ‘ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை என்றென்றைக்கும் காக்கும் ஒரு ஆவணக் காப்பகத்தை புலம்பெயர் தேசமொன்றில் உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது? யாழ் நூலகம் அழிக்கப்பட்டு எமது வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டது போன்ற நிலை எதிர்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே புலம்பெயர் தேசமொன்றில் ‘தமிழ் ஆவணக்காப்பகம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் நூலகவியலாளர் என் செல்வராஜா. அவருடைய நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொகுப்புக்கு “நினைவுகளே எங்கள் கேடயம்” என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தலைப்புக்கு பின்னுள்ள ஆழமான கருத்தாக்கத்தை ஈழத்தமிழர்கள் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனித ஆளுமையின் உருவாக்கத்தில் அவனுடைய வரலாறு மிக முக்கியமானது. வுரலாற்று ஆவணங்கள் மட்டுமே எங்கள் நினைவுகளை பாதுகாக்கும் கேடயங்கள். அவற்றை இத்தலைமுறையில் பாதுகாக்கத் தவறினால் ஈழத்தமிழர்களின் கடந்த 50 வருடகால போராட்ட வரலாறு தனிமனிதர்களின் இறுதித் தீயோடு அதுவும் சங்கமமாகி விடும்.

நூலகவியலாளர் என் லெ;வராஜாவினை போலித் தேசியவாதிகள் கருத்தில் கொள்ளாததை விட்டுவிடலாம் ஆனால் தேசியத்தை உண்மையில் நம்புகின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரும் கூட நூலகவியலாளர் என் செல்வராஜாவை திட்டமிட்டு புறக்கணிப்பது தமிழ் தேசியத்தின் மிகமோசமன குழறுபடி. அப்படிப்பட்ட தமிழ் தேசியவாதிகள் யார்? தமிழ் தேசியம் என்றால் என்ன? அந்த தமிழ் தேசியத்தை யார் முன்நிறுத்துகின்றனர் என்ற விவாதம் எப்போதும் இருக்கத்தான் போகின்றது. அதற்குள் இக்கட்டுரையை நான் நுழைய அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல கடந்த 50 ஆண்டுகளில் நூல்களுக்கும் நூலகங்களுக்கும் உள்வாழ்ந்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. ஈழத்தமிழ் நூல்கள் அல்லது நூலகம் பற்றி பேசுகின்ற ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் என் செல்வராஜாவை கண்டுகொண்டிருக்காவிட்டால் அது அவர்களுடைய ஆய்வின் எழுத்தின் மிகப்பெரிய பலவீனம். பல்கலைக்கழக துறைசார் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் வழிகாட்டிகள் அத்துறைசார் ஆளுமைகளின் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் என்பதனை பலகலைக்கழகம் சென்ற அல்லது துறைசார் ஆய்வுகளை மேற்கொண்ட எவரும் அறிந்திருப்பர்.

தற்போது மிகப்பெரு முயற்சியில் ஒரு மெய்நிகர் (ஒன்லை லைப்ரரி) உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிக முக்கிய பணி;. ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் மிகவும் போற்றப்பட வேண்டிய ஒரு செயற்பாடு. அதிலுள்ள ஒவ்வொருவருடைய பணியும் உழைப்பும் மிகப்பயனுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பானது நீண்டகாலத்தில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் அது தொடர்ந்தும் அறிவியல் சார்ந்தவர்களை இணைத்துக்கொண்டு அவர்களையும் உள்வாங்கி பயணிக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் போல் திறமையானவர்கள் உள்ளே நுழைவிடாது அந்நிறுவனத்தை குட்டிச் சுவராக்குவது அழகல்ல.

ஆம் ‘நூலகம் பவுண்டேசன்’ என்ற இந்த மெய்நிகர் நூலகம் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஐம்பது ஆண்டுகள் விதைத்த கருத்துக்களின் மேல் கட்டப்பட்டிருந்த போதும் அந்நூலகத்தில் அவர் உள்வாங்கப்படாதது, நூலகம் பவுண்டேசனின் மிகப்பெரும் பலவீனம். வடக்கிலும் கிழக்கிலும் மெய்யான இரு நூலகங்களின் உருவாக்கத்தில் அதன் வளர்ச்சியில் ஒரு தூணாக நின்றவரை இந்த மெய்நிகர் நூலகம் உள்வாங்காதது ஏன்? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

இது தான் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கூக்குரல்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கேட்டுக்கொண்டே உள்ளது. இந்த வெற்றுக் கூக்குரல்களை நான் ஒரு போதும் பொருட்டிலும் எடுப்பதில்லை. இந்தக் கூக்குரல்கள் அர்த்தமற்றவை. ஏனெனில் ஒரு சமூகம் முன்னோக்கி நகர்வதற்கு முரண்பாடுகள் அவசியம். அவை பகைமுரண்பாடுகள் இல்லாமல் மக்களின் பொதுநன்மை கருதி சமூகத்தை முன்தள்ளிச் செல்லும்வரை அந்த முரண்பாடுகள் ஆரோக்கியமானவையே. ஆனால் நூலகவியலாளர் என் செல்வராஜா ஏன் மெய்நிகர் நூலகம் பவுண்டேசனுக்குள் உள்வாங்ககப்படவில்லை என்பது மிகவும் சின்னத்தனமானது.

மெய்நிகர் நூலகம் பவுண்டேசன் உருவாக்கத்திற்கு தமிழ் தேசியம் ஒரு கணிசமான தொகையினை பத்மநாப ஐயரிடம் வழங்கி இருந்தது. இந்த நூலகத்திட்டத்திற்கு சசீவன், கோபி உட்பட கணணித்துறையில் தீவிர ஈடுபாடுடைய சில இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் இந்த முயற்சியே மெய்நிகர் நூலகத்தின் வளர்ச்சி. இன்று இந்நூலகத்தில் சில பத்துப்பேர் பணியாற்றுகின்றனர். நினைத்தற்கரிய காரியங்களை இவர்கள் சாதித்துள்ளனர். ஆனால் இந்நூலகத்தினை ஆளுமை செய்வதில் இன்றும் பத்மநாப ஐயரின் செல்வாக்கு கணிசமானது. அதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான நிதியை அவரே பல வகையிலும் கொண்டுவந்து சேர்க்கின்றார். என் செல்வராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈவிலிங்ரத்தினம் இன்ஸ்ரிரியூற்றின் நூல்களைக் கணணிப்படுத்துவதற்கான செலவீனத்தை லிற்றில் எய்ட்டே பொறுப்பெடுத்தது. அதற்கான கோரிக்கையை பத்மநாப ஐயரே என்னிடம் கேட்டிருந்தார்.

பத்மநாப ஐயர் பல்வேறு முரண்பாடுகளோடும் நீண்டகாலமாக பகையாகவும் நட்பாகவும் உள்ள கண்ணியமான மனிதர். தனக்காக என்றொரு வாழ்க்கை இல்லாமல் புத்தகங்களோடு வாழ்பவர். அவர் வீட்டில் தடக்கி வீழ்ந்தால், நிச்சயமாக புத்தகத்தில் தான் தடக்கி விழ வேண்டும். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ள அவரின் பின் அவருடைய புத்தகங்களுக்கு என்ன ஆகும் என்பது அவருக்கும் தெரியுமா தெரியாது. ஆனால் பத்மநாப ஐயர் கேள்விஞானி மட்டுமே. அவர் ஒரு புத்தகத்தையாவது முழுமையாக வாசித்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால் அவர் எழுத்தாளர்களையும் வாசகனையும் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களுடன் இணைத்துவிடுவதில் மிகச் சிறந்த மனிதர். அவர் என் செல்வராஜா போன்று தன்னை ஈழத்துடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாதவர். அதனால் அவருக்கு தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் பதிப்பாளர்களுடனும் நெருங்கிய தொடர்பு உண்டும். அந்த வகையில் பத்மநாப ஐயர் எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன் புத்தகங்களை இணைத்து விடுகின்ற ஒரு சிறந்த நூல்முகவர்.

இந்த இரு ஆளுமைகளுமே தமிழ் தேசியவாதிகள் தான். இந்த இரு ஆளுமைகளுமே ஒரே இலக்கை நோக்கியே நீண்ட தூரம் பயணித்துள்ளனர். தற்போது இருவருமே வாழ்க்கையின் கடைப்பக்கதில் பயணிக்கின்றனர். இவர்கள் இருவருடைய உழைப்பும் தமிழ் மக்களின் ஆவணங்களை பாதுகாக்கின்ற பணிக்கு மிக அவசியமானது. இவர்களிடையே சில தனிமனித முரண்பாடுகள் இருந்தாலும், இவ்விரு ஆளுமைகளிடையேயும் பொது உடன்பாடுகளே அதிகம். தனிமனித முரண்பாடுகளைக் களைந்து தமிழ் தேசியத்தின் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை பேணிப்பாதுகாக்கின்ற மெய்நிகரான நூலகம் பவுண்டேசனில் இணைந்து செயற்பட வேண்டும். துறைசார் திறமையும் ஆளுமையும் உடையவர்கள் தமிழ் மக்களின் படைப்புகளையும் ஆவணங்களையும் பேணிப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதன் மூலம் சினெர்ஜியை – மேல்கூட்டுத்திறனை உருவாக்க வேண்டும்.

வரும் ஞாயிறு பெப்ரவரி 18 இல் திரள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள என் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்!” என்ற யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாரய்ச்சிமன்ற நிகழ்வுகளில் நடைபெற்றது என்ன என்ற ஆவணங்களின் தொகுப்பு நூல் வெளியீடு லண்டனில் நோர்த்ஹோலில் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களுடைய வரலாறு அழிந்து போய்விடாமல் தூசி தட்டி எடுத்து ஆவணமாக்கும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம் வேண்டும் என்ற கனவை நாம் ஒவ்வொருவரும் காணும்போது மட்டுமே ஈழத்தமிழர்களுடைய வரலாறுகள் அதன் உண்மைத்தன்மையின் அடிப்படையில் பாதுகாப்பதற்கான காலம் கனியும்.