ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் இன்று(15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.
தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார்.
அதன்படி, பலர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
அதேவேளை, குறித்த தாக்குதலினால் யாருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவசர சேவைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த தாக்குதல் சம்பவமானது, தேவாலயத்தின் சமூக ஊடகங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தி குத்தியதில் 6 பேர் வரை உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து எவ்வாறான பதில் நடவடிக்கையை எடுப்பது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பபை இஸ்ரேலிய போர் அமைச்சரவையிடம் இஸ்ரேலிய அமைச்சரவை கையளித்துள்ள அதேவேளை மத்திய கிழக்கில் பாரிய யுத்தமொன்றிற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன.
நள்ளிரவில் கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை இஸ்ரேலிய பிரதமர் உட்பட மூவர் அடங்கிய போர் அமைச்சரவையிடம் ஒப்படைத்துள்ளது.
மூவரும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ள நிலையில் பிராந்தியத்தின் தலைவிதி அவர்களின் கரங்களில் தற்போது தங்கியுள்ளது.
யுத்த அமைச்சரவையின் கூட்டத்திற்கு முன்னரான பதற்றமான நிமிடங்களில் அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலிய பிரதமரும் 25 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த உரையாடலில் இஸ்ரேல் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என பைடன் வலியுறுத்தினார் என இஸ்ரேலிய ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.
இந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பைடன் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் என்ன தெரிவித்தார் என்பதை தெரிவிக்கவில்லை எனினும் ஈரான் செலுத்திய ஏவுகணைகள் ஆளில்லாவிமானங்கள் அனைத்தும் அமெரிக்காவின் உதவியுடன் வீழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மிகச்சிறந்த தற்பாதுகாப்பு திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்ற தெளிவான செய்தி எதிரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் தாக்குதல் காரணமாக பத்துவயது சிறுவன் ஒருவன் மாத்திரமே காயமடைந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் பாலைவனத்தில் அந்த நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பெடோனியஸ் சமூகத்தை சேர்ந்த சிறுவன் காயமடைந்துள்ளான்.
தென்பகுதி இராணுவதளமொன்றும் சிறிய சேதங்களை சந்தித்துள்ளது.
இந்த தாக்குதலிற்கு முன்பாக ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அதன் ஏவுகணைகளால் இஸ்ரேலை நெருங்க முடியாது அவை பாலைவனத்தில் விழுந்து வெடிக்கலாம் உயிரிழப்பு ஏற்படாது என அமெரிக்க அதிகாரிகள்சரியாக கணித்திருந்தனர்.
அவ்வாறான சூழ்நிலையில் இஸ்ரேல் கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் இறங்ககூடாது என அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என ஊகங்கள் வெளியாகியிருந்தன.
ஈரான் கடுமையான பதிலடியை எதிர்பார்க்கவில்லை என்பது அது வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் புலனாகியுள்ளது-தனது பதில் தாக்குதலை தொடர்ந்து இந்த விடயம் முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுவதாக ஈரான் ஐநாவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேலிய பிரதமர் ஈரானின் அணுஉலைகளை அழிக்க விரும்புவார் என்பது ஈரானிற்கும் அமெரிக்காவுக்கும் நன்கு தெரிந்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் தனது நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தல் என அதனை பல காலமாக கருதிவருகின்றார்.
எனினும் அமெரிக்காவின் உதவியின்றி அவற்றை அழிப்பது மிகவும் கடினம்.
எனினும் இந்த தருணத்தை பயன்படுத்தி அவரும் போர்க்குணம் மிக்க சகாக்களும் ஈரானின் அணுஉலைகளை தாக்க முயலக்கூடும்.
எதிர்விளைவுகள் குறித்து சிந்திக்காமல் ஈரானின் தாக்குதலிற்கு இஸ்ரேல் பதில்நடவடிக்கை எடுக்கலாம் என ஜோ பைடனின் அதிகாரிகள் கரிசனை கொண்டுள்ளனர் என என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் முன்னொருபோதும் இல்லாத பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதல்களிற்கு ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது போன்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவரும் ஈரானிய மக்கள் ஈரான் பாலஸ்தீன கொடிகளுடன் காணப்படுகின்றனர்.
டெஹ்ரானின் பாலஸதீன சதுக்கத்தில் காணப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலிற்கு மரணம் அமெரிக்காவிற்கு மரணம் என கோசம் எழுப்புகின்றனர்.
அடுத்த அடி மிகமோசமானதாக காணப்படும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகையொன்றை டெஹ்ரான் பாலஸ்தீன சதுக்கத்தில் காணமுடிகின்றது.
ஈரான் தலைநகரில் உள்ள பிரிட்டிஸ் தூதரகத்தின் முன்னாலும் அமெரிக்காவின் தாக்குதல் உயிரிழந்த ஈரானின் இராணுவதளபதி காசிம் சுலைமானியின் கல்லறைக்கு முன்னாலும் பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஆயுதப் படைகள் ஹோர்முஸ் கடற்பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக கருதப்படும் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றியுள்ளன.
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கப்பலை கைப்பற்றியதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
போர்ச்சுகல் கொடியுடன் கூடிய எம்எஸ்சி ஏரீஸ் (MSC Aries) என்ற கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகத்தில் இருந்து இந்தியா செல்லும் வழியில் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இது இஸ்ரேலிய பில்லியனர் இயல் ஒபர் (Eyal Ofer) மற்றும் அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் சோடியாக் குழுவின் ஒரு பகுதியான லண்டனை தளமாகக் கொண்ட சோடியாக் மரைடைமுடன் தொடர்புடையது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைராவிலிருந்து வடகிழக்கே 50 கடல் மைல் (92 கிமீ) தொலைவில் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான நீர்வழிப்பாதையில் “பிராந்திய அதிகாரிகளால்” ஒரு கப்பல் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கூறியது.
நவம்பர் பிற்பகுதியில் இந்தியப் பெருங்கடலில் மற்றொரு இஸ்ரேலிய கொள்கலன் கப்பல் ஆளில்லா விமான தாக்குதலில் தாக்கி சேதப்படுத்தப்பட்டது, இந்த தாக்குதலை ஈரான்நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் அறிவிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது, ஈரானுக்கான விமான சேவை ரத்து தொடரும் என்று லுஃப்தான்சா அறிவித்துள்ளது.
ஈரானில் இருந்தும் ஈரானுக்குள்ளும் சனிக்கிழமை வரையில் விமான சேவைகளை முன்னெடுப்பதில்லை என்றே லுஃப்தான்சா அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13ம் திகதி சனிக்கிழமை வரையில் ஈரானுக்கு அல்லது ஈரானில் இருந்து எந்த முன்னெடுக்கப்படாது எனவும், விரிவான ஆய்வுக்கு பின்னரே இந்த முடிவெடுத்துள்ளதாகவும் லுஃப்தான்சா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்கா உளவுத்துறை அந்த நாட்டை எச்சரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஈரான் பதிலடி அளிக்கும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அது நேரடியாகவோ ஹவுதிகள் அல்லது ஹிஸ்புல்லா அமைப்புகளாலோ ஈரான் முன்னெடுக்கலாம் என்றே அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் 63 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 33,545 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 76,094 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் ஒக்டோபர் 7 முதல் தெற்கு இஸ்ரேலிய எல்லை மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாரிஸில் இலக்கியச் சந்திப்பு மார்ச் 30 மற்றும் 31 தினங்களில் நடைபெற்றது. வழமை போன்று விமர்சனங்களுக்கு எவ்வித குறையும் இருக்கவில்லை. இலக்கியச் சந்திப்பு அதன் ஆரம்பம் முதலே ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும், சாதியத்துக்கு எதிரானதாகவும் மாற்றுக் கருத்துக்களுக்கான குரலாகவும் நீண்டகாலமாக ஒலித்து வருகின்றது. அதே சமயம் முரண்பாடுகளுக்கு எவ்வித பஞ்சமும் இலக்கியச் சந்திப்புக்களில் இருக்கவில்லை. இந்த இலக்கியச் சந்திப்பிலும் கூட.
“இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர்” என்ற தலைப்பில் எழுத்தாளர் சேனன் தேசம்நெற் இல் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். இலக்கியச் சந்திப்பினைத் தொடர்ந்து எழுத்தாளர் மௌரூப் பௌசர், இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளரான உமா ஷானிகாவை நோக்கி சில பாரதூரமான குற்றம்சாட்டும் கேள்விகளை எழுப்பி உள்ளார். 01. இலக்கிய சந்திப்பில், உங்களுடன் சேர்ந்தியங்கும் நபர்கள் மீதும், அவர்களின் தோழமைகள் மீதும் பாலியல் குற்றாச்சாட்டுக்கள் உள்ளனவே?
02. இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் யாரால்? எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
03. இலக்கிய சந்திப்பினை வழி நடாத்தும் ஒரு பிரிவினர் பல கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் காரணமாக இருந்த கோதா கொலைக்குழுவின் பகுதியினராக உள்ளார்களே?
என்று இலக்கியச் சந்திப்புக்களில் நீண்டகாலம் தொடர்ந்து செயற்பட்ட எழுத்தாளர் பௌசர் கனதியான பல கேள்விகளை எழுப்பி உள்ளார். இலக்கியச் சந்திப்பு நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், கொலைகள் ஆட்கடத்தல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் மிகப் பாரதூரமானவை.
இக்குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் என்று அறியப்பட்ட இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தான் மீதான அரசியல் குற்றச்சாட்டுக்களின் வெளிப்பாடாகவே வைக்கப்படுகின்றது என்பதிலும் எவ்வித இரகசியமும் இல்லை. இக்குற்றச்சாட்டுகனை பௌசர் எழுப்பக் காரணம் இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஸ்ராலின் ஞானம் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் ஆலோசகராக ஆரம்பம் முதலே கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகின்றார். சந்தரகாந்தனின் இரு நூல்களுக்கும் பின்னணயில் இவரும் இருந்துள்ளார் என்றும் நம்பப்படுகின்றது. இவை எதனையுமே ஸ்ராலின் ஞானம் இரகசியமாகச் செய்யவில்லை. மிக வெளிப்படையாகவே சந்திரகாந்தனின் ஆலோசகராக செயற்படுகின்றார்.
இந்த இலக்கியச் சந்திப்பில் நிர்மலா ராஜசிங்கம் மற்றும் சின்னத்துரை ராஜேஸ்குமார் ஆகியோரும் மிக முக்கிய செயற்பாட்டாளர்களாக உள்ளனர். பௌசருடைய சேனனுடைய குற்றச்சாட்டுகள் இவர்களை நோக்கியும் விரிந்துள்ளது. அதற்குள் செல்வதற்கு முன்,
31ம் நாள் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு சாதியப் பிரச்சினை தொடர்பான உரையாடல் களமாக அமைந்தது. தலித்மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் தலைமையில் இடம்பெற்றது. சாதியப் பிரச்சினையின் வரலாற்றுப் பின்னனியையும் பல சம்பவங்களையும் தொகுத்து வழங்கினார் அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தேவதாசன்.
தேவதாசனின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் உரையாற்றிய சுவிஸிலிருந்து வந்து கலந்துகொண்ட பொதிகை ஜெயா “தன்னுடைய பெண் பிள்ளைகளுக்கு திருமணம் பேசிய போது 14 சம்பந்தங்கள் ‘உங்களுடைய சாதிக்குள் தாங்கள் திருமணம் செய்யத் தயாரில்லை’ என்று சொல்லி மறுத்ததைச் சுட்டிக்காட்டினார். “அப்படியானால் நீங்கள் உங்கள் சாதிய படிநிலையில் கீழுள்ள சமூகத்திற்குள் மணம் முடிப்பீர்களா?” என்று சபையிலிருந்து ஒரு கேள்வி எழும்பிய போது “நிச்சயமாக அதற்கு எந்தத் தடையும் இல்லை எனப் பொதிகை ஜெயா தெரிவித்தார்.
இந்தக் காலத்தில், இந்த நேரத்தில் இந்தக் கள ஆய்வு எதற்கு? என்ற உப்புச்சப்பற்ற கேள்வியை முன் வைத்த நெய்தல் நாடான், சாதியம் என்பது புரையோடிப் போயிருந்தாலும் இன்று பிரதான பிரச்சினையாக இருப்பது இன ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் தன் கருத்தை முன்வைத்தார். சாதியமில்லை என்று அல்லது சாதியம் தணிந்து கொண்டிருக்கின்றது என்பதெல்லாம் ஒரு சாதிமான் அரசியல் அல்லது தங்களையும் உயர்சாதியினராக மேலுயர்த்தும் அரசியல் போக்கின் வெளிப்பாடே. இந்த உப்புச்சப்பற்ற கேள்விக்கே பதிலளித்து அவர்களை மௌனிக்க வைக்காமல் அவர்களை ஒரு பெரிய எதிரிகளாக கட்டமைக்கும் வகையில் சந்திப்பு திசை திரும்பியது.
இந்த இலக்கியச் சந்திப்பில் அங்கிள்ஸ் அன் அன்ரிகள் மதிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை அரசியல் குருவாக ஏற்ற யோகு அருணகிரி தலைமையில் தான் இந்த நெய்தல் நாடான், கார்வண்ணன் மற்றுமொரு நண்பர் என நால்வரும் அங்கு வந்திருந்தனர். இவர்களது கேள்வி ஆரம்பம் முதல் இறுதிவரை இலக்கியச் சந்திப்பில் இலக்கியம் பற்றி கதைக்காமல் ஏன் சாதியம் பற்றி மட்டும் கதைக்கிறீர்கள்? என்பது ஒன்றே.”நீங்கள் சாதிய அரசியல் செய்கிறீர்கள்” என்ற பதிலையும் அவர்கள் வைத்திருந்தனர். கேள்வியையும் கேட்டு உங்களை கஸ்டப்படுத்தக் கூடாது என்று அவர்களே பதிலும் சொல்லி விட்டார்கள். அதற்கு ஏன் இலக்கியச் சந்திப்பு அவ்வளவு குழப்பம் அடைந்தது என்பது தெரியவில்லை.
“சாதியம் புரையோடிப் போய் இருக்கிறது. அதனால் சாதிய அரசியலை முன்னெடுக்கிறோம். தமிழ் தேசியம் சாத்தியமாக வேண்டும் என்றால் சாதியம் இல்லாத பிரதேசவாதம் இல்லாத தமிழ் சமூகம் உருவாக்கப்பட வேண்டும்” தோழர்களே!!! என்று ஒரு ஸ்ரேற்றமன்றை விட்டுட்டு போக வேண்டியது தானே. அதைவிட்டு விட்டு தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசனுக்கு கூட்டம் எப்பிடி நடத்துவது என்று உயர்சாதி வெள்ளாள மேட்டுக்குடி ஆங்கிலீஸ் தெரிந்த நிர்மலாவும் ராகவுனும் கிளாஸ் எடுக்க வேண்டிய தேவையே இல்லையே. புலிகள் மிகப் பலமாக இருந்த காலத்திலேயே பல கூட்டங்களை நடத்திய தேவதாஸனுக்கு கூட்டம் நடத்த தெரியாதா? கூட்டத்தை நிர்மலா ராஜசிங்கம் குழப்பிய அளவுக்கு வேறு யாரும் குழப்பியதாகத் தெரியவில்லை. இலக்கியச் சந்திப்பில் கேள்வி கேட்பது எப்படி ஒரு பாரிய குற்றமானது?
அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அரசியல் விமர்சகர் கார்வண்ணா “அச்சுவேலி தன்னுடைய ஊர் என்றும் அங்கு இராணுவத்தைக் கூட்டி வந்து தேர் இழுக்க வைத்தது சாதியப் பிரச்சினையால் அல்ல” என்று சடைந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களிடையே உள்ள முரண்பாட்டால் லண்டனில் இருந்து நாடு திரும்பிய சகோதரர் அரசோடு தனக்குள்ள உறவை நிரூபிக்கவே ஜேபிசி இயந்திரத்தை கொண்டு வந்து தேர் இழுத்ததாகத் தெரிவித்தார். மேலும் ஆலயத்தின் பின்பக்கமாக உள்ள வெள்ளாளர் யுத்தகாதலத்தில் பள்ளர் சமூகத்தை அழைத்து அவர்களுக்கான உதவிகளை வழங்கியதாகவும் கார்வண்ணன் சுட்டிக்காட்டினார்.
இலக்கியச் சந்திப்பு என்பது ஜனநாயக மறுப்பு, சாதிய மறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஒரு செயல் வடிவம் எனத் தெரிவித்தார் எழுத்தாளர் சரவணன். இலங்கையில் சாதியம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சாதியப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமைப்படுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார் சரவணன்.
பாஸ்கரன் “சாதிப்பிரச்சினை மெருகூட்டப்பட்டு வருகின்றது. சாதிப் பிரச்சினையை அழிக்க வேண்டும் என்றால் மதத்தை அழிக்க வேண்டும். மதத்தை அழிக்க நான் தாயர். நீங்கள் தயாரா?” என்றவர் சாதிய பிரச்சினை என்பது அரசியலுக்காகத் தூண்டப்படுவதாகத் தெரிவித்தார்.
விஜி கருத்துத் தெரிவிக்கையில் சாதியம் இருக்கு ஆனா இல்லை. இருக்கு ஆனா குறைய. இருக்கு ஆனா … புகலிடத்தில சாதியில்லை. நீங்க பதினொரு மாப்பிளையா பார்த்தீங்கள்? என்று நளினமாக தன் கருத்தை முன் வைத்தார்.
நீங்கள் என்ன சாதிய உணர்வை வைத்திருக்கின்றீர்கள் என்பது உங்கள் உரையாடல்களிலேயே வருகின்றது. எந்த சாதிக்கு எந்த சாதி உதவுகின்றது என்பதையெல்லாம் மிகத் தெளிவாகவே சொல்கின்றீர்கள் என்று சுட்டிக்காட்டினார் தலித் மேம்பாட்டு முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர் அசுரா.
ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்கள் பொதுவாக தங்களுடைய சாதியை தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்வதில்லை. ஆனால் ஒடுக்குகின்ற சமூகம் தங்களுடைய பிள்ளைகளுக்கு தங்களுடைய சாதியைத் தெளிவாக ஊட்டி வளர்த்துள்ளனர் என உமா ஷானிகா தெரிவித்தாரர். அவர் மேலும் கூறுகையில் போராட்ட காலத்தில் சாதி இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த உமா தென்னியானின் ‘ஏதனங்கள்’ அதனை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த சமூகத்திலிருந்து அனுப்பப்படுகின்ற பணம் சாதியத்தை இன்னமும் வளர்க்கவே பயன்படுகின்றது. வட மராட்சியில் இன்னமும் பல ஆலயங்கள் அனைவருக்குமமாக திறந்துவிடப்படவில்லை. ஆலயங்கள் கட்டப்படுகின்றதேயல்லாமல் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதில்லை என்றார் இளங்கோவன்.
வடமராட்சியில் உள்ள பொலிகண்டிச் சுடலையில் மூன்று சாதிக்கும் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஒருவர் அதனை சுவிஸ் வந்த பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அதற்கு அப்பாராளுமன்ற உறுப்பினர் அதுவொரு பாத்தி தான் போட்டு இருக்கின்றது என்று கூறியதை அங்கு சுட்டிக்காட்டினார்.
நிர்மலா ராஜசிங்கம் சாதியம் இன்னமும் ஆக்ரோசமாக இருக்கின்றது என்பதை வலுப்படுத்தும் வகையில் சுண்ணாகம் சூறாவத்தை, புத்தூர், அச்சுவேலிச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி பாஸ்கரனுக்கு பதிலளித்தார். ஆனால் பாஸ்கரனை நோக்கிப் பதிலளித்த நிர்மலா, பாஸ்கரன் பதிலளிக்க முன்வந்ததை சபைநாகரீகம் தெரியவில்லை என்று நையாண்டி பண்ணிணார். அதற்கு மீளவும் பதிலளித்த பாஸ்கரன் நீங்கள் அரசியல் நோக்கத்திற்காகவே சாதியத்தை முன்வைப்பதாக மீண்டும் குற்றம்சாட்டினார்.
சாதிப் பிரச்சினை என்பது குண்டியில் பச்சை மட்டை அடிபோட்டு தீர்க்கிற பிரச்சினையில்லை. இது ஒவ்வொருத்தருடைய மூளையில இருக்கிற பிரச்சினை என்றார் முத்துசிறி. இங்கு இருப்பது சாதிய சமூகங்கள். தங்களுக்குள் அகமணமுறையைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள். அங்கு போராட்டத் தேசியத்துக்குப் பதிலாக அங்கு இருப்பது சமரசத் தேசியம். அதற்கு சாதியம் அவசியமானது என்ற முத்து சிறி ஒடுக்குமுறை தீவிரமாகும் போது அணிசேர்தல்கள் இயற்கையாக நிகழும் என்று கூறிக்கொண்டு சாதிய அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டிய இளைஞர்களைப் பார்த்து ஏன் ரீ குடிக்கவில்லை என்று கேட்டு அமர்ந்தார்.
இது பற்றி அங்கு கருத்துத் தெரிவித்த இன்னுமொருவர், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது சுதந்திரத்துக்குப் பின் ஒரு எழுபது ஆண்டுப் போராட்டம். ஆனால் சாதியம் என்பது நான்காயிரம் வருடங்களாக அடக்கி ஒடுக்கி இன்னமும் அவன், இவன் என்று இன்னமும் பேசிக்கொண்டு வெட்கக் கேடன நிலையில் தான் நாங்கள் உள்ளோம். இன்றைக்கும் கொல்லன்கலட்டி, வண்ணார்பண்ணை, அம்பட்டன் பாலம் என்ற சாதியப் பெயர்களோடு தான் ஊர்கள் உள்ளது. முதலில் நாங்கள் இதனை உடைக்க வேண்டும் என்றார் அவர்.
இறுதியாக தனது கருத்தை வெளியிட்ட ஸ்ராலின் ஞானம் இந்த யாழ்ப்பாணத்தோட மட்டக்களப்பை இணைக்கச் சொல்லியா கேட்கின்றீர்கள் என்ற கேள்வியை எழுப்பி அரங்கை விட்டு வெளியேறினார்.
கூட்டத்தின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிர்மலா ராஜசிங்கம், சின்னத்துரை ராகவன் இருவருமே கூட்டத்தை தமது அதிகாரப் பிடிக்குள் வைத்திருப்பதற்கான அத்தனை செயற்பாடுகளையும் மேற்கொண்டதுடன் சின்னத்துரை ராஜேஸ்குமார், யோகு அருணகிரியுடனும் அவரின் நண்பர்களுடனும் சண்டைக்குத் தயாராய் விறுக்கென்று எழுந்ததும் ஷோபாசக்தி அவரைத் தடுப்பதும் வீடியோக்களிலும் பதிவாகியுள்ளது.
எப்போதும் கொள்கை அடிப்படையில் இல்லாமல் குழவாத மனப்பான்மையோடு செயற்படும் நிர்மலா ராஜசிங்கம் சின்னத்துரை ராஜேஸ்குமார், இருவரதும் அரசியல் பயணம் தனிநபர் வழிபாடு மற்றும் குழவாத மனப்பான்மையோடு தான் இருந்தது. தொண்ணுறுக்களின் பின் அரசியல் பற்றி அறிய விளைந்த யோகு அருணகிரி போன்றவர்களுக்கு இருந்த ஒரே அரசியல் தெரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் வேறெந்த அரசியல் இயக்கங்களும் இருக்கவில்லை.
ஆனால் 1980க்களில் நிர்மலா ராஜசிங்கம், சின்னத்துரை ராஜேஸ்குமார் போன்றோர் விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட போது அவர்களுக்கு இடதுசாரி அமைப்புகளில் இணைந்து அவ்வமைப்புகளை வலுப்படுத்தவும் முற்போக்கான பாத்திரம் வகிக்கவும் வாய்ப்புகள் இருந்தது. ஆயினும் அவர்கள் பிரபாகரனை வைத்துக்கொண்டு தாங்கள் அரசியல் நடத்தாலாம் என்ற குறுக்குச் சிந்தனையில் பிரபாகரனோடு தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் தங்களை முன்நிறுத்துவதற்கு அப்பால், ஒரு போதும் இடதுசாரிச் சிந்தனையையோ முற்போக்கான பாத்திரத்தையோ கொண்டிருக்கவில்லை.
இன்றும் இவர்களது அடையாளம் என்பது இவர்கள் புலிகளில் இருந்ததும், அதில் இருந்து வெளியேறியதும் வெளியேற்றப்பட்டதும் இவருடைய சகோதரி ராஜினி திரணகம புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் தான். இவர்கள் அமைப்பு ரீதியாகவோ அல்லது கருத்தியல் ரீதியாகவோ இதுவரை எதனையும் சாதிக்கத் தவறிவிட்டனர். காலத்துக்குக் காலம் தங்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை. ரிபிசி வானொலி நிலையம் உடைப்பு, தேசம்நெற் யை மூடும்படி கோரி கையெழுத்துப் போராட்டம், குழவாத செயற்பாடுகள் மற்றும் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தூண்டிவிடுவது, முதலாளித்துவத்தின் சார்பில் மார்க்ஸிய விரோதக் கருத்துக்களைப் பரப்புவுது என இவர்களுடைய சமூக விரோதச் செயற்பாடுகள் நீண்டுகொண்டே செல்கின்றது. நடந்து முடிந்த இலக்கியச் சந்திப்பிலும் இவர்கள் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தத் தயங்கவில்லை.
சின்னத்துரை ராஜேஸ்குமார் அரங்கம் இணையத்துக்கு இலக்கியச் சந்திப்பு பற்றி எழுதிய கட்டுரையில்: “டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸ் நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்” என்று புகழாரம் சூட்டி எழுதியுள்ளார். காரணம் அவர் தாங்கள் வைத்துள்ள கருத்தை ஆதரிக்கும் வகையில் ஆய்வை மேற்கொண்டு விட்டார் என்பதற்காக. ஆனால் உலகமே 21ம் நூற்றாண்டின்படி மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று மதிப்பவர் பற்றி நிர்மலா ராஜசிங்கம் வருமாறு கூறுகின்றார்: “கார்ள் மாக்ஸ் வந்து ஒரு பச்சைப் படுமோசமான ஒரு ஆணாதிக்கவாதி. குடிச்சுப் போட்டு கானுக்குள் விழுந்து கிடந்து, வந்து வேலைகாரப் பெண்மணியை… !”.
டெலோன் மாதவன் அறிஞன் கார்ல் மார்க்ஸ் …? இவருக்கு ஷோபா சக்தி வக்காலத்து வேறு.
ஒரு முதலாளித்துவ ஊடகம் கூட செய்யத்துணியாத அளவுக்கு 21ம் நூற்றாண்டின் ஒரு சிந்தனையாளனை இவ்வளவுக்கு நடத்தைப் படுகொலை செய்யும் நீங்கள் சாதாரண எழுத்தாளர்களை மனிதர்களை இவ்வாறு தானே அவமதித்து வருகின்றீர்கள். உங்களுக்கு யாரையும் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள எந்தத் திராணியும் இல்லை. உடனடியாக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தத் தயங்குவதேயில்லை.
தற்போது மௌரூப் பௌசர் கேட்கின்றார், உங்கள் தோழமைகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது, கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று. கார்ள் மார்க்ஸ் (1818 – 1883) உடைய காலம் அவர் பிறந்து 200 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. அவர் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா? முதலாளித்துவ ஊடகங்களின் பரப்புரையா என்பதே விவாதத்திற்குரியது. இப்போது உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? கார்ள் மாக்ஸின் தனிநபர் ஒழுக்கம் பற்றி கேள்வி எழுப்பும் உங்களதும் உங்கள் இணையரதும் உங்கள் சார்ந்த தோழமைகளதும் தனிநபர் ஒழுக்கம் பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்? உங்கள் இணையரை கானிலிருந்து தூக்கிய பலர் ஐரோப்பாவில் குறிப்பாக லண்டனில் உள்ளனர்.
தயவு செய்து கருத்தியல் ரீதியாக மோதுங்கள். சுஜிகூலோடு இரவில் ரிக்ரொக்கில் சல்லாபித்துவிட்டு, மதியம் லாச்சப்பலில் அவரை தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டு அடித்தது போல் ரீல் விடுவதை ஒழுக்கசீலர்களான நிர்மலா – ராஜேஸ்குமார் நிறுத்த வேண்டும். புலம்பெயர் தேசத்தில் பா உ சுமந்திரனை துரோகி என்று தூசணங்களால் வசைபாடி தாக்க முற்பட்ட அதே புலிக்குட்டிகள் தான் சுஜிகூலையும் தாக்குகிறார்கள் என்ற அடிப்படையைப் புரிந்துகொள்ளாதவர்கள் தான் யோகு அருணகிரி போன்ற அடிப்பொடிகள். நீங்கள் பழம் தின்று கொட்டைபோட்ட அன்ரி அங்கிள்ஸ் தான் அவர்களுக்கு நிலாச்சோறு ஊட்டி கதையளக்க வேண்டும். இதெல்லாம் அவர்களுக்குப் புரிய முதல் அவர்களுக்கோ உங்களுக்கோ டெமென்சியா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கார்ள் மார்க்ஸ் மனித முரண்பாடுகளுக்கு பொருளாதாரப் பிரச்சினையே மிக முக்கியமானது என்ற கருதுகோலை முன்வைக்கின்றார். உபரியே அனைத்து அநியாயங்களுக்கும் அடிப்படை என்பதை மிகத் தெளிவாக அறுதியிட்டு கூறுகின்றார். இதனை அவர் முதலாளித்துவம் முழுமையடைய முன்னரேயே பல்தேசிய நிறுவனங்கள் என்ற கருத்தாக்கம் உருவாவதற்கு முன்னரே வரையறுத்துள்ளார். சாதியக் கட்டமைப்புகளை பொருளாதாரத்தால் மட்டும் தீர்த்துவிட முடியாது என்பது பின்நாட்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நிர்மலா ராஜசிங்கம் தனிமனித ஒழக்கம் பற்றி அண்ணாந்து படுத்துக்கொண்டு துப்பியதன் மூலம் தன்னையாரென்று மீண்டுமொருமுறை அம்பலப்படுத்தி உள்ளார்.
சாதிகள் இல்லாத தமிழ் தேசியத்தை கட்டமைத்துவிட்டோமென்று எந்த ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த கனவான்கள் ஓங்கிக் கத்தினாலும் கதறினாலும் அதற்கு எந்த ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் தாங்களும் தாளம் போட்டாலும் ஜால்ரா போட்டாலும் கனன்றுகொண்டிருக்கும் சாதியம் நிச்சயம் இவர்களைச் சுடும். ஆனால் நிர்மலா – ராகவன் போன்ற உயர்சாதி மேட்டுக்குடிகளை வைத்துக்கொண்டு ஜனநாயகத்துக்கான சாதியத்துகு எதிரான எதையும் சாதித்துவிட முடியாது.
காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் என தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அவர் தவறுசெய்கின்றார் என நான் கருதுகின்றேன் அவரது அணுகுமுறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.
காசாவிற்குள் மருந்துகள் உணவுப்பொருட்கள் முழுமையாக செல்வதற்கான அனுமதி அவசியம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலையில் மனிதாபிமான அமைப்புகளின் வாகனங்கள் தாக்கப்பட்டமை மூர்க்கத்தனமான விடயம் என பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியர்கள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் அடுத்த ஆறுமுதல் எட்டு மாதங்களிற்கு அனைத்து விதமான மனிதாபிமான பொருட்களையும் அனுமதிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பைடன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார் எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீனதேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெட்டன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேசசமூகம் தற்போது சிந்திக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கையிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது ஹமாசினை பலவீனப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.