May

May

இலங்கை நாட்டை முடமாக்கிக்கொண்டிருப்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல – அரச அதிகாரிகளும் தான் !

இலங்கை அண்மையில் எதிர்கொண்டிருந்த மிகப் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிக்கும் – இலங்கையில் இன்னமும் மில்லியன் கணக்கிலான  மக்கள் ஏழைகளாகவே இருப்பதற்கும் இலங்கையின் அரசு நிறுவனங்கள் முறையாக இயங்காமையே முக்கியமான காரணமாகும். இதனை அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்ட இரண்டு விடயங்களின் ஊடாக தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

01. மக்களின் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி.

02. பாவிக்க கூடிய நிலையிலும் யாருக்கும் கையளிக்கப்படாத நிலையில் கிளிநொச்சியில் தேங்கி கிடக்கும் உழவு இயந்திரங்கள்.

அரிசி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசாங்கத்தின் உதவியோடு இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டிருந்தது.  எனினும் பல இடங்களில் இவை மக்களுக்கு விநியோகிக்கப்படாது பதுக்கப்பட்ட தன்மையினை காண முடிந்தது. அவ்வாறு பதுக்கப்பட்ட அரிசி புழு மொய்த்தும் வண்டுகள் நிறைந்ததாகவும் காணப்பட்ட நிலையில் பல இடங்களில் பாவனைக்கு உதவாது குப்பையில் கொட்டப்பட்டிருந்தன. இவற்றை முறையாக கண்காணித்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் கொடுக்காதுவிட்டமையே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்திருந்தது. வவுனியாவின் ஆசி குளம் கிராம உத்தியோகத்த பிரிவில் உள்ள அரச கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழ்நாடு அரசினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1272 கிலோ அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இதனைப் போலவே அரசு அதிகாரிகளின் அசமந்த போக்கினால் மக்களுக்கு சென்று சேர வேண்டிய அன்பளிப்புகள் முறையாக மக்களின் கைகளுக்கு போய் சேராத ஒரு நிலை இன்று வரை இலங்கையின் சாபக்கேடாக தொடர்கிறது.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் சமநிலை சேவைகள் நிலையம் ஒன்றில் இயங்க முடியாத நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட உழவு இயந்திரங்கள்  இயங்க முடியாத நிலையில் கமநல சேவைகள் அறையினுள் போட்டு மூடப்பட்டிருப்பதான புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டிருந்தன.

(குறித்த சமூக வலைத்தள பதிவை காண)

https://www.facebook.com/100001431522803/posts/6435197643204556/?mibextid=QyDEvNoB73lyOOK6

குறித்த சமூக வலைதள பதிவுகளை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சியில் உள்ள குறித்த கமநல சேவைகள் நிலையத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மிக விரைவில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். அதுமட்டுமன்றி ஜனாதிபதி செயலகத்திலிருந்து குறித்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது இருந்தமைக்கான மேலதிக விளக்கங்கள் கோரப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

இதனை போலவே வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து சுமார் 12 ஏக்கர் காட்டை அழிக்க துணை போன வவுனியா கட்டையர்குள பகுதி கிராம உத்தியோகத்தர் தொடர்பான விவகாரம், வடக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மண் அகழ்வை கண்டும் காணாது இருக்கும் அரசு உத்தியோகத்தர்கள் , கம்பளையில் பிரதேச அரச வைத்தியசாலையில் ஏற்கனவே எழுதப்பட்ட மருந்துச்சிட்டையினை மீள பயன்படுத்தியதால் 7 வயது குழந்தை பலியான சம்பவம் என அரச அதிகாரிகளின் அசமந்த போக்கை தினசரி இலங்கையர்கள் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக சேவையாற்றும் சில அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் வாங்கும் சம்பளத்துக்காக சரி உண்மையாக வேலை செய்வதில்லை. காலை எட்டு மணிக்கு வேலை ஆரமப்மாகும். மக்கள் காத்திருப்பது கணக்கேயில்லாமல் சரியாக 10-11 மணிக்கிடையில் தேநீர் இடை்வேளை, சரியாக 1 மணிக்கு மதிய உணவு மதியம் 3,  4 மணிக்கு அலுவலகம் மூடப்படும். பின்பு சனி,ஞாயிறு முழுமையான விடுமுறை . இதறகிடையில் சம்பளம் போதாது – சம்பள உயர்வு வேண்டும் என போராட்டங்கள் வேறு.

மக்களுக்காக வழங்கப்படுகின்ற இந்த இலவசமான உதவி திட்டங்களை கூட மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்கின்ற அளவிற்கு இந்த அரச அதிகாரிகள் நிலை இருக்கின்றது. அலுவலகங்களில் கூட இலங்கையின் அரசு அதிகாரிகள் பெரிதாக வேலை செய்வது கிடையாது. இன்னமும் பழமையான ஆவணப்படுத்தல் முறைமைகளை கையில் வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்றுவதனை பெரிய ஒரு தொழிலாக அடையாளப்படுத்தி மக்களின் உழைப்பை இந்த அரசு அதிகாரிகள் சுரண்டி கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுக்காக இவர்கள் எதனையும் ஆக்கபூர்வமாக செய்தது கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆகச் சிலரை தவிர அரசு உத்தியோகத்தினை மக்களுக்கான சேவையாக வழங்குகின்ற திணைக்களங்களின் எண்ணிக்கை கூட இலங்கையில் குறைந்துவிட்டது. சாதாரணமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழாக தகவலை கோருகின்ற மனுக்களுக்கு கூட சரியான பதில் கிடைப்பது இல்லை. சரியான பதிலை வழங்கி விட்டால் தங்களுடைய உண்மையான நிலை தெரிந்து விடுமோ என்ற அச்சம் தான் இதற்கான உண்மையான காரணம்.

அரசாங்கங்களும் – அரசியல்வாதிகளும் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக் கொண்டிருக்க போகிறார்கள். அவர்களை நொந்து எந்தப் பயனுமே இல்லை. இந்த இலங்கை நாட்டை முடமாக்கியதில் ஆகப்பெரிய பங்களிப்பு வாழ்நாள் முழுவதும் அரசு அதிகாரிகள் என்ற பெயரில் கதிரைகளை தேய்த்துக் கொண்டிருக்கும் இந்த அரசு அதிகாரிகளுடையது. நாம் அதிக கேள்வி கேட்க வேண்டியது இந்த அரசு அதிகாரிகளை தான்.

அரச அதிகாரிகள் முறையாக செயற்படாத வரையில் இலங்கை மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்த 5 நாள் போர் நிறுத்தம் !

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காசாமுனை பகுதியில் உள்ள போராளி குழுவின் தலைவர் ஒருவர் கூறும்போது, “5 நாட்கள் கடுமையாக நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்“ என்றார்.

பிரான்சின் சிறந்த பாண் உற்பத்தியாளராக தெரிவான இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள பாரிய அதிஷ்டம்!

பிரான்ஸில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையை சேர்ந்த தர்ஷன் செல்வராஜா வென்றிருக்கிறார்.

La meilleure baguette de Paris என்பது இப் போட்டியின் பெயர் ஆகும் . தமிழில் ‘பரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.

30 வது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இம்முறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம்மிக்க baguette பாணை தயாரித்து போட்டிக்கு அனுப்பியிருந்தனர்.

இதில் 30 வயதான தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதல் பரிசை வென்றிருக்கிறது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியுள்ளது.

இந்நிலையில் போட்டியில் வெற்றபெற்றதோடு மட்டுமல்லாது பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மாளிகைக்கான பாண் தாயாரிக்கும் சந்தர்ப்பத்தையும் பெற்ற ஈழத்தமிழருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

யூடியூப் பார்வைகளை அதிகப்படுத்த பிரபல யூடியூபர் செய்த செயலுக்காக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை !

யூடியூப் பார்வைகளை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் விமானத்தை இயக்கும் உரிமத்தை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.   டிசம்பர் 2021 ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரெஸ் காட்டுப்பகுதியில் இவர் சிறிய என்ஜின் கொண்ட விமானத்தை வேண்டுமென்றே வெடிக்க செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ‘நான் எனது விமானத்தை வெடிக்கச் செய்தேன்’ எனும் தலைப்பில் யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தார் டிரெவர் ஜேக்கப். அந்த வீடியோவில் விமானம் விபத்தில் சிக்கும் காட்சிகள் மற்றும் அதில் இருந்து பாராஷூட் அணிந்தபடி டிரெவர் தப்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் டிரெவர் ஜேக்கப் தன்பக்க விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருக்கிறார். வரும் வாரங்களில் வழக்கு விசாரணை நிறைவு பெற்று விடும். அதன்பின் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பெண்கள் மீதான வன்முறையை தடுப்போம் என்ற கலந்துரையாடலில் பேச பல பெண்களை துஷ்பிரயோகம் செய்த குடுமி ஜெயாவின் சகபாடி உமா சந்திரா பிரகாஷ்க்கு அழைப்பு !

பெண்கள் சந்திப்பினூடாக Zoom இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று “மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் உரத்துப்பேசுவோம்.” என்ற தொனிப் பொருளில் 13.05.2023 அன்று  சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இன்றைய திகதிக்கு கட்டாயமாக பேசப்பட வேண்டிய ஒரு தலைப்பாக இது காணப்படுகின்றது.  அதே நேரம் இது தொடர்பில் இருக்கக்கூடிய முரணான தன்மையையும் எடுத்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

“பெண்கள் மீதான வன்முறையை நிகழ்த்துபவர்களை காட்டிலும் அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற சூழலை உருவாக்குபவர்களும் குற்றவாளிகளே”

மேற்குறித்த Zoom மூலமான கலந்துரையாடலுக்கும் – இந்த மேற்கோள் வசனத்துக்குமிடையிலான தொடர்பு பற்றி நாம் அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது. காரணம் குறித்த Zoom கலந்துரையாடலில் பெண்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான உமா சந்திரபிரகாஷ் அழைக்கப்பட்டுள்ளமையாகும்.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள ஜெயசந்திரன் எனும் குடுமி ஜெயா தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பதுடன் – சாதிய மனோநிலையில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பாக அச்சமுதாயத்தின் பெண்களை தன்னுடைய இச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற ஒரு அராஜகப் போக்கில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார். பொதுவெளியில் கூட பெண்களை மிக இழிவாக தரக்குறைவாக கதைக்கக்கூடிய மனோநிலையில் உள்ள குறித்த ஜெயச்சந்திரன் என்பவரை ஆதரிக்கின்ற –  அவருடைய சக பாடிகளுள் ஒருவரே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான  உமாசந்திரா பிரகாஷ் ஆவார்.

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் பெண்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் – பெண்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படுகின்ற Zoom மூலமான கலந்துரையாடலில் உமாசந்திரபிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீதான வன்முறைகளை தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய குடுமி ஜெயா எனப்படும் ஜெயச்சந்திரன் போன்ற பல அரசியல் தலைவர்கள் என்ற போர்வையிலும் சமூகத் தலைவர்கள் என்ற போர்வையில் நம் மத்தியில் உலவி கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காட்டிலும் ஆபத்தானவர்கள் அவர்கள் செய்கின்ற வன்முறைகளை பெண்கள் மீதான அடக்குமுறைகளையும் தம் சார்ந்த கட்சி அரசியலுக்காகவும் தங்களுடைய சுயநலன்களுக்காகவும் சகித்துக் கொண்டு செல்லக்கூடிய உமாசந்திரா பிரகாஷ் போன்றவர்கள். பொதுவெளியில் தங்களை பெண்ணியவாதிகளாக காட்டிக் கொள்ளும் இவர்கள் திரை மறை பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போகின்றார்கள் என்பதே பொருள்.

தேசம் நெட் இது தொடர்பில் பல தடவைகள் செய்திகளை பிரசுரம் செய்தும் இது பற்றிய பதில்களை ஐக்கிய மக்கள் சக்தியோ – அல்லது உமாசந்திரா பிரகாஷ் அவர்களோ பொதுவெளியில் வழங்கியிருக்கவில்லை.

இதே நேரம் குறித்த இணையவழி கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. கட்சி சார்ந்த அழுத்தங்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில் குறித்த Zoom மூலமான கலந்துரையாடலில் உமாசந்திரா பிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் – குடுமி ஜெயா தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படும் என்ற அச்சம் காணப்படுவதால் உமாசந்திரா அவர்கள் மேற்குறித்த இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவருகிறது.

எது எவ்வாறான போதும் ஊடகங்களும் – சமூக சிந்தனையோடு இயங்குகின்ற தன்னார்வலர்களும் இப்படிப்பட்ட பெண் அடக்குமுறைக்கு துணை போக கூடிய உமாசந்திரா பிரகாஷ் போன்றவர்களை தேர்தல் காலங்களில் மக்கள் ஓரங்கட்ட முன்வர வேண்டும். அதுவே இவர்கள் போன்ற நபர்களுக்கு ஒட்டுமொத்த சமூகமாக நாம் கொடுக்கக்கூடிய பதிலடியாக இருக்கும்.

தொழில்நுட்பமும் – மனிதனுடைய சிந்தனை திறனும் மென்மேலும் உச்சநிலையை அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் உலகம் முழுதும் அடக்கு முறையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படை பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளும் பாலியல் ரீதியான கொடுமைகளும் அவர்களை மரணத்தை நோக்கி இன்னும் வேகமாக தள்ளி விடுகின்றன. இந்த நிலையில் தேசம் நெட் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் சார்ந்த செய்திகள் தொடர்பில்  தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

 

மேற்குறித்த பிரச்சனை தொடர்பில் தேசம் நெட் ஏற்கனவே பதிவு செய்திருந்த செய்தியைக் காண காண கீழே உள்ள Link ஐ Click செய்யவும்.

அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்: பாரிஸில் சிவன் கோவில் வருமானத்தில், நல்லூரில் ‘காம’ விடுதி, யாழ் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் – பின்னுகிறார் சாதிமான் குடுமி ஜெயா!

 

இம்ரான்கானை விடுதலை செய்தது உயர் நீதிமன்றம் !

நீதிமன்றத்தில் வைத்து இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ஊழல் வழக்கில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ´ரேஞ்சர்ஸ்´ எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை, 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இம்ரான் கான் கைது சட்ட விரோதம், நீதிமன்றத்தில் யாரையும் கைது செய்யக்கூடாது. அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி அவர் மீதான வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார்.

 

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் – விசாரணைகளை ஆரம்பித்த ஐ.சி.சி !

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளதா..? என்பதை ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா உள்ளிட்ட இரு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

குழுவின் ஏனைய உறுப்பினராக பங்களாதேஷ் துடுப்பாட்ட சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் உள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.சி.சி. அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தகவல்கள் கண்டறிவார்.

அரசியல் தலையீடுகள் குறித்து சிறிலங்கா கிரிக்கெட் தரப்பில் இருந்து பலமுறை முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்திருந்தது.

இதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஐ.சி.சி தலைவர் கிரே பார்க்லேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி சந்திப்பொன்றை மேற்கொள்ள சந்தர்ப்பமொன்றை கோரினார்.

இந்நிலையிலேயே இந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2022ல் அரசியல் தலையீடு இலங்கை கிரிக்கெட்டில் நிரூபிக்கப்படுமாயின் ஐசிசி உறுப்புரிமை ரத்து செய்யப்படலாம்.

ஐ.சி.சி.யின் விதிகளின்படி, விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்துடன் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்பி பிளஸ்  வரிச்சலுகைக்காக விண்ணப்பிக்கும் இலங்கை !

2024 -34 காலப்பகுதிக்கான ஜிஎஸ்பி பிளஸ்  வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ்  வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்

“அதிகரிக்கும் கனடா – சீனா இடையான முரண்பாடு.” – தூதுவரை வெளியேற உத்தரவிட்ட சீனா !

கனடா மற்றும் சீனா இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. சீனாவின் ஹூவாவெய் பகுதியை சேர்ந்த முக்கிய நபரை கனடா கைது செய்தது. இதற்கு பதிலடியாக சீனாவும், கனடா நாட்டை சேர்ந்த 2 பேரை தனது நாட்டில் வைத்து கைது செய்தது. அவர்கள் 3 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் கொள்கையை கனடா பின்பற்றுகிறது என கூறி தொடர்ந்து அந்நாடு மீது சீனா குமுறலை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் இனப்படுகொலை நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை ஆதரித்ததற்காக கனடாவின் எம்.பி.யான மைக்கேல் சோங் மற்றும் அவரது உறவினர்களை ஹாங்காங்கில் வைத்து சீன உளவு அமைப்புகள் கைது செய்ய திட்டமிட்டன. இதுபற்றி அறிந்ததும் கனடா அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில், கனடா வெளியுறவு மந்திரி மெலானி ஜோலி கூறும்போது, இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக சீன தூதர் ஜாவோ வெய், கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என கூறினார். எங்களது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை எந்த வடிவிலும் நாங்கள் சகிக்கமாட்டோம் என அவர் கூறினார். கனடாவில் உள்ள மற்ற வெளிநாட்டு தூதர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கையை கனடா விடுத்துள்ளது. இந்த நிலையில், இதற்கு பதிலடியாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், வருகிற மே 13-ந்திகதி சீனாவில் இருந்து வெளியேறும்படி, கனடா தூதர் ஜெனிபர் லின் லாலண்டுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என அறிவித்தது. இதுபோன்ற காரணமற்ற முறையிலான ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்தும்படி கனடாவை சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் வலியுறுத்தி உள்ளார்.

“உக்ரைன் போருக்கு மேற்கு நாடுகளின் ஆணவமே காரணம்.” – புடின் காட்டம் !

கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் நாசி படைகளை வீழ்த்தி வெற்றி பெற்ற தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக ரஷ்ய அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்டத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மேற்குலக நாடுகள் உண்மையான நாசிக்களின் வழிமுறைகளை உருவாக்கி வருவதாக புடின் குற்றம்சாட்டினார்.

ரஷியாவை தாக்குவதற்காக திட்டமிடும் மேற்கு நாடுகள், 2-ம் உலகப்போரின் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்வதாகவும், தற்போது நாகரீகத்தின் முக்கியமான திருப்புனையில் நாம் இருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் உக்ரைன் பிரச்சினைக்கு மேற்கு நாடுகளின் கட்டுப்பாடற்ற இலக்குகளும், ஆணவமும் தான் காரணம் என்று தெரிவித்த அவர், நமது தாய்நாட்டின் மீது உண்மையான போர் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.