08

08

கூகுளின் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழக இளைஞன் – பரிசு வழங்கி பாராட்டிய கூகுள் நிறுவனம் !

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது.

அந்தவகையில் கூகுள் செயலி ஒன்றில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு அந்நிறுவனம் பரிசு தொகை வழங்கியுள்ளது.

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். பொறியியல் பட்டதாரியான இவர், கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் தயாரிப்பதற்கான செயலியில், வாடிக்கையாளரின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் திருடப்படுகிறது என்ற பிழையை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார். அவரின் இந்த சேவையை அங்கீகரித்துள்ள கூகுள் நிறுவனம், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவரின் பெயரை கூகுளின் Hall of Fameல் இணைத்து மரியாதை அளித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீராம்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.75 கோடி !

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.75 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.47 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32.83 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.86 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.