04

04

தோட்ட தொழிலாளர் மேலதிக வேலை செய்ய தேவையில்லை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்

விடுமுறை தினங்களில் ஒன்றரைநாள் சம்பளம் வழங்குவதால் அதற்காக தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தோட்ட நிர்வாகம் நிர்பந்திக்குமானால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென இ.தொ.கா. தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்ட வழிவகை செய்யுமெனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

போயா ஞாயிறு தினங்கள் உட்பட விடுமுறை தினங்களில் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வார்களேயானால் அவர்களுக்கு ஒன்றரைச் சம்பளம் வழங்க வேண்டுமென்ற நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது. அத்துடன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளத்துடனான கூட்டு ஒப்பந்தத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் இதனை கவனத்திற்கொண்டு செயற்படுவது முக்கியம்.

எவ்வாறாயினும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை, தாம் கூடிய சம்பளம் வழங்குவதால் மேலதிக வேலை செய்ய வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் நிர்பந்தித்து வருகின்றன. இதன் மூலம் சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை ஏமாற்றியும் வருகின்றன.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்ட போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே. வேலாயுதம் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அது தொடர்பில் முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும். அதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் பேச் சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.