22

22

அநுராதபுரம் வடக்கு: 60 குளங்களை புனரமைக்க ஜனாதிபதி ரூ.10 கோடி ஒதுக்கீடு

அநுராதபுர மாவட்டத்தின் வடக்குப் பகுதி எல்லையில் அமைந்துள்ள அறுபது குளங்களைப் புனரமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்துக்கோடி ரூபாவை வட மத்திய மாகாண சபைக்கு ஒதுக்கித் தந்துள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த முப்பது வருட காலமாக புனர¨க்கப்படாமலிருந்த இக் குளங்கள் தூர்ந்த நிலையிலிருப்பதை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே ஜனாதிபதி இந் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

முதற் கட்டமாக பட்டிகல, ருவன்மடுவ, மிகஸ்வெவ, கலபிட்டவெவ, கம்பிலியாவ, கிவுள்வெவ ஆகிய குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆறு குளங்களும் புனரமைக்கப்பட்டதும் இப் பகுதியிலுள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் என வட மத்திய மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பீ. எஸ். லியனகே தெரிவித்தார்.

ரூபவாஹினி நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா

karu.jpgதேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருணாரத்ன பரனவிதான தமது பதவிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் பெட்பர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவராவார். இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே கருணாரத்ன பரனவிதான இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.

முள்ளிக்குளம் பகுதியில் சி 4 ரக வெடிமருந்து மீட்பு

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் கஜபா ரொஜிமெண்ட் பிரிவு படை வீரர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின் போது சி-4 ரக வெடி மருந்து 387 கிலோ கிராம் மீட்டெடுத்திருப்பதாக இராணுவ பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த வெடிமருந்து 37 மூடைகளில் பொதியிடப்பட்டு பிளாஸ்ரிக் நீர்த் தாங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே படை வீரர்கள் மீட்டெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். அண்மைக்காலத்தில் பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்த அதிக நிறைகொண்ட வெடிபொருள் இது வாகும் என்றும் குறிப்பிட்டார்.