October

October

ம. உ. ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு மறுப்பு

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அதன் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு மனித உரிமைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லையென அதன் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அமைச்சர் கூறினார். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் அனைத்து நாடுகளுக்கும் சேவை செய்வதை விடுத்து எப்போதும் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது தவறு. ஏனைய அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோமெனவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதேவேளை வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 2 இலட்சத்து 88 ஆயிரம் பேருள் தற்போது ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 88 பேரே தங்கியிருப்பதாகவும் ஏனையோர் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். நிவாரணக் கிராமங்களில் 6, 896 பேரும் மன்னார் நிவாரணக் கிராமங்களில் 1,590 பேரும் திருகோணமலை நிவாரணக் கிராமங்களில் 6,405 பேரும், ஆறு வைத்தியசாலைகளில் 1,626 பேரும் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடியகற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக புதிதாக ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் 14 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரத்தினுள் மேலும் 10 இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இவற்றுள் 05 ஐ. நா நன்கொடையாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யசீகரனும், அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை

271009jasikaran.jpgஇலங் கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.

இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.

அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழு

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.

இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.

வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு 5 மாதிரி வினாத்தாள்கள் விநியோகம் : பி எம் புன்னியாமீன்

261009school_child_dp.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட நிவாரண உதவித்திட்டத்தின் முதற் கட்டமாக கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்குமான முதலாம் கட்ட மாதிரி வினாத்தாள்களை இவ்வாரம் வழங்கவுள்ளது.

தற்போது அகதி முகாம்களிலுள்ள மக்கள் பலவிதமான தேவைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும் கூட,  நீண்ட கால அடிப்படையைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற்உம் கல்விசார்ந்த நிவாரண நடவடிக்கைகளை முன்னேடுக்க திட்டமிட்டு சில செயற்பாடுகளை மேற்கொண்டது. முதற் கட்டமாக தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டும் பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை உயர்த்தும் முகமாக முதற் கட்டமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி உதவிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினோம்.

அதன் தொடர்ச்சியாகவே க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கும் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினை வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்தில் கொண்டோம்.

01. நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02. யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03. சாதாரண தர பரீட்சை தரம் 10, 11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே, பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாடஅலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04. நிவாரண கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ,  வசதிகளோ இல்லாதிருந்தமை.

05. புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட, யுத்த சூழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக் கூடிய நிவாரண கல்விச் செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக் கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம். எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட ஐந்து பாடங்களுக்கும் 30 மாதிரிவினாத்தாள்களையும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் ஐந்தையும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.  

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். இருப்பினும்,  எமது இத்திட்டத்துக்கு லண்டனிலிருந்து 2000 பவுண்களும், கனடாவிலிருந்து 1180.00. CDN மாத்திரமே கிடைத்தன. இதனால் நாம் திட்டமிட்ட மாதிரிவினாத்தாள்களில் முதலாம் கட்ட மாதிரிவினாத்தாள்கள் ஐந்தை மாத்திரமே எம்மால் வழங்க முடியுமாக இருந்தது.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களை ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

அதேநேரம், இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதத்தின் பிரதியொன்றை கீழே தங்கள் தெளிவுக்காக இணைத்துள்ளோம். அக்கடிதப் பிரதியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும் இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும், கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால்,  வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் சில முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்கள் வினாப்பத்திரங்கள் தயாரிப்பதில் எமக்கு ஒத்துழைப்பினை வழங்கினார்கள். அதே போல வத்தேகம கல்விப்பணிப்பாளர் திரு சிவநாதன் அவர்களும்,  எமக்கு ஆலோசணைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கினார்.  இவ்விடத்தில் இவர்களுக்கு எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு என்பதை எமது இம்முயற்சிக்கான அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே,  ஒரு உண்மையான இலக்கை நோக்கி திட்டம் தீட்டுவதும் அதை நடைமுறைப்படுத்த முனைவதும் அர்த்தமற்ற ஒரு விடயம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. எவ்வாறாயினும் கூட, தரம் 05 மாணவர்களுக்கு சுமார் 15ஆயிரம் பவுண் பெறுமதிமிக்க செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். ஆனால் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு சுமார் 2500 பவுண் பெறுமதியான உதவிகளை அதாவது ஒரு மாணவனுக்கு சுமார் 39 பென்ஸ்  பெறுமதியான உதவிகளை மாத்திரமே வழங்கக்கூடியதாக இருந்தது.

இதனையொரு தோல்வியாக நாம் கருதவில்லை. நாம் அகதி மாணவர்களுக்கு உதவ முழுமையாக முயற்சிகள் செய்தோம். எமது முயற்சியால் அம்மாணவர்களுக்கு 5 மாதிரிவினாத்தாள்கள் அனுப்புவதை இச்சந்தர்ப்பத்தில் பெருமையாகக் கொள்கின்றோம்.

மீண்டும் இவ்விடத்தில் நாம் ஞாபகமூட்ட விரும்புகின்றோம். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு எம்மால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிப் புத்தகங்கள், கணக்கறிக்கைகள் போன்ற விபரங்களை தேசம்நெற் வாசகர்கள் பெறவிரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுடன்  தொடர்புகொள்ளுமிடத்து பி.டி.எப். வடிவில் 126 பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையை அனுப்பி வைப்போம்.

த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com
ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com
இலங்கையில்:
பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com

._._._._._. 

வன்னி நிவாரண முகாம் மாணவர்களுக்கு நாம் வழங்கிய அதே மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையுமே சிந்தனை வட்டம்  அகில இலங்கை ரீதியிலும் விநியோகித்தது. அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் லோ. ஸ்ரீகர்சன் அவர்களும் சிந்தனை வட்ட மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் படித்தவரே. நிவாரணக் கிராம  மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. வெளிவந்ததும் அவற்றை பூரணமாக தங்களுக்குத் தருவோம்.

jafna-1.jpg

jafna.jpg

._._._._._. 

கடிதப்பிரதி- இணைப்பு

அதிபர் அவர்கட்கு,

வவுனியா நலன்புரிநிலையங்களில்
க.பொத. சாதாரண தரத்தில் கல்வி பயிலும்
6290 மாணவர்களின் கல்வி அபிவிருத்தி
நிவாரண நடவடிக்கைகளில்
தங்களையும் இணைத்துக் கொள்ளல்.

2009ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி சுமார் 28இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க 04 வழிகாட்டி நூல்களையும் 30 மாதிரிவினாத்தாள்களையும் தனித்தனியாக 4872 மாணவர்களுக்கு வழங்கி நலன்புரிநிலைய ஆசிரியர்கள் துணையுடன் அம்மாணவர்களை வழிகாட்டி சிறந்த முறையில் பரீட்சையை எதிர்நோக்க எமது சிந்தனைவட்டம் வழியமைத்துக் கொடுத்ததை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அதேபோல 2009 டிசம்பர் மாதத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வேண்டியும் சுமார் 56 இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தின் கீழ் கல்வி நிவாரண செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கிலுள்ள நலன்புரிநிலையங்களில் மொத்தம் 6290 மாணவர்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இம்மாணவர்கள் தற்போது கீழ்க்காணப்படும் நிவாரண முகாம்களில் பின்வரும் எண்ணிக்கையில் உள்ளனர்.

வலயம் 0 –     535 மாணவர்கள்
வலயம் 01 –   1261 மாணவர்கள்
வலயம் 02 –   1401 மாணவர்கள்
வலயம் 03 –     912 மாணவர்கள்
வலயம் 04 –     907 மாணவர்கள்
வலயம் 05 –       99 மாணவர்கள்
சுமதிபுரம் நிவாரண முகாம்    156 மாணவர்கள்
வீரபுரம் நிவாரண முகாம்    116 மாணவர்கள்
தர்மபுரம் நிவாரண முகாம்    136 மாணவர்கள்
IDP பாடசாலைகள்   583 மாணவர்கள்
புல்மோட்டை நலன்புரிநிலையம்  184 மாணவர்கள்
மொத்தம்    6290 மாணவர்கள்

பல்கலைக்கழக மட்டத்திலும் சில புத்திஜீகளுடன் இணைந்து நாம் தயாரித்த செயற்றிட்ட அறிக்கையின்படி மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு மாணவர்களுக்கும் 05 பிரதான பாடங்களை மையமாகவும் கொண்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் 06 மாதிரிவினாத்தாள்களையும்,  பாட அலகு ரீதியான 42 வழிகாட்டிக் கையேடுகளையும் வழங்க முடிவெடுத்துள்ளோம்.

பிரதானமாக புதிய பாடத்திட்டத்திற்கமைய கணிதம், விஞ்ஞானம்,  வரலாறு, தமிழ் மொழியும் இலக்கியமும்,  ஆங்கிலம் ஆகிய 05 பாடங்களுக்கும் இத்தகைய மாதிரிவினாத்தாள்களையும்,  கையேடுகளையும் வழங்க உத்தேசித்துள்ளோம்.

தங்கள் கல்லூரியில் அனுபவமிக்க ஆசிரியர்களின் துணையுடன் அவர்களால் தயாரிக்கப்பட்ட அல்லது புதிதாக தயாரித்துதர விருப்பமுள்ள மாதிரிவினாத்தாள்கள் –  குறிப்பிட்ட 05 பாடங்களுக்குமான கையேடுகள் அல்லது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான குறிப்புகள் காணப்படின் அவற்றின் புகைப்படப் பிரதிகள் ஆகியவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் எமது கல்வி அபிவிருத்தி சபையின் வழிகாட்டலுடன் அவற்றை வடிவமைத்து நலன்புரிநிலைய மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய முடியும்.

எனவே,  சுமார் 06 மாதங்களுக்கு மேல் பாடசாலை மண்ணையே மிதிக்காத நிலையில் சகலதையும் இழந்து, மிகவும் சிரமங்களின் மத்தியில் கல்வியைக் கற்றுவரும் அகதிமுகாம் மாணவர்களுக்கு இந்த சிறு உதவியை செய்யுமிடத்து அவர்களுக்கான மாபெரும் உதவியாக இருக்கலாம்.

எனவே,  இது விடயமாக கரிசனைக் காட்டி தங்கள் கல்லூரியில் திறமை வாய்ந்த,  அனுபவமிக்க ஆசிரியர்களினூடாக தயாரிக்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள்,  பாட அலகு ரீதியான கையேடுகள் இருப்பின் இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பீர்களாயின் பேருதவியாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் வினாத்தாள்களிலும், கையேடுகளிலும் உரிய ஆசிரியர் பெயர்,  பாடசாலை முகவரி ஆகியவற்றையும் பிரசரித்தே வழங்குவோம்.

சேவைநல நோக்கில் – பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்காக உதவும் இத்திட்டத்திற்கு மேற்குறித்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

மாதிரிவினாத்தாள்களையும், கையேடுகளையும் அனுப்ப வேண்டிய முகவரி:

KALAPOOSHANAM  P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA  MADIGE,
UDATALAWINNA – 20802

மிக்கநன்றி
தங்கள்

கையொப்பம் -கலாபூசணம் புன்னியாமீன்
(சிந்தனைவட்டம்)
02.09.2009

மேலதிக வாசிப்புக்கு
http://thesamnet.co.uk/?p=17063

ஐக்கிய இலங்கைக்காக முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே! களுத்துறையில் ஜனாதிபதி தெரிவிப்பு

290909mahinda.jpgநாட்டைப் பாதுகாத்து,  ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிவில் நிர்வாகத்தைச் சீர்குழைக்க பயங்கரவாதிகள் முனைந்த போது அதற்கெதிராகப் போராடிய தமிழ் பொலிஸ் அதிகாரியான திருநாவுக்கரசு போன்றவர்கள் பொலிஸ் வரலாற்றில் மறக்க முடியாதவர்கள். அவர்கள் நாட்டின் ஐக்கியத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பயிற்சியை முடித்துக் கொண்டு சேவைக்குத் திரும்பும் 370 புதிய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

பயங்கரவாதத்திற்கும் பாதாள உலகத்திற்கும் அரசாங்கங்கள் அடிபணிந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கை எம்மால் நிலைநாட்ட முடிந்துள்ளது.

வடக்கு,  கிழக்கில் பொலிஸார் பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து செயற்பட்டதுடன், தெற்கில் பொலிஸார் பாதாள உலகக் குழுக்களுக்கு அடிபணிந்து செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. எமது அரசாங்கம் அந்நிலையை மாற்றியுள்ளது.

பொலிஸ் சேவை இன்று சிறப்பானதாக உள்ளது. இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பிருந்தது போலன்றி அத்துறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளிலும் மக்கள் சேவையிலும் பொலிஸார் திருப்தியுறாத பிரச்சினைகள் நிறைந்த காலங்கள் இருந்துள்ளன. சகல பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு,  பதவி உயர்வு உட்பட சகல சலுகைகளும் பொலிஸாருக்கு உரிமை யாகியுள்ளன.

30 வருடங்களுக்கு முன் பொலிஸ் துறை சிறப்பாக இயங்கியது. வடக்கு, கிழக்கிலும், தெற்கிலும் சகல இன, மத பொலிஸாரும் இணைந்து சேவை செய்தனர். இந்த ஐக்கியத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பயங்கரவாதிகள் முதலில் பொலிஸாரின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டனர்.

புலிகள் முதலில் யாழ்ப்பாணத்தைத் தாக்கினர். அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலுமுள்ள 16 பொலிஸ் நிலையங்களைத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்கள் பொலிஸார் அதிகாரம் அடக்கப்பட்டவர்களாகவே இயங்கினர்.
மீண்டும் இப்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பொலிஸார் அதிகாரத்துடனும் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவைக்காக இணைக்கப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்கள் ஐக்கிய இலங்கையைப் பாதுகாக்கும் பொலிஸாராகத் திகழ்வர்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான தொடர்புகள் குறித்த சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய யுகம் தற்போது உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் வரி வசுலிக்கும் பணியிலேயே பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் மக்களுக்காக பொலிஸ் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடளாவிய பயங்கரவாத வலையமைப்பை எமது பொலிஸாரால் ஒழிக்க முடிந்தது. அதனால்தான் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களை எம்மால் பாதுகாக்க முடிந்தது.

இதற்கு பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தவறுக்கு தண்டனை அழிப்பதைவிட தவறுக்கான வாய்ப்புகளை இல்லாமற் செய்வதே பொலிஸாரின் பணியாக வேண்டும். தாய் நாட்டை நேசிப்போராக பொலிஸார் திகழ வேண்டும். மக்கள் பாதுகாப்பு மட்டுமன்றி நாட்டின் முக்கிய தலைவர்கள், பிரபுக்களின் பாதுகாப்பும் பொலிஸாரின் கைகளிலேயே உள்ளது.

சில பொலிஸ் அதிகாரிகளினால் பொலிஸ் துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் புதிய பொலிஸார் பாடுபட வேண்டும்.

இதுவரை நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் நாட்டின் நல்லொழுக்கத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. அதனால் பயங்கரவாதம்,  பாதாள உலகம் என மக்கள் பெரும் துன்பங்களையே அனுபவிக்க நேர்ந்தது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் உழைத்தது போல் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொலிஸார் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் மக்கள் கௌரவம் எனும் வெற்றியை பொலிஸார் பெற முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க,  ரோஹித அபேகுணவர்தன,  நிர்மல கொத்தலாவல, நந்தன குணதிலக்க உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ்துறை உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மடு பாசாலைகளில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள்!

இரு வருட காலமாக மூடப்பட்டிருந்த  மன்னார் மடு கல்வி வலயத்திலுள்ள 11 பாசாலைகளில் இன்று முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மடு கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் கடந்த 22ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்பட்பதையடுத்தே மேற்படி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றப்பட்ட மக்களிடையே உள்ள மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் ஆகியோர் அடையாளங் காணப்பட்டு முதற்கட்டமாக 59 ஆசிரியர்களின் பங்களிப்புடன் 11 பாசாலைகளிலும்; கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகிறது. மோதல் காரணமாக மடு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் 2007 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வசிம் அக்ரமின் மனைவி காலமானார்.

இதயம் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசிம் அக்ரமின் மனைவி ஹ_மா அக்ரம் (42), சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.30 மணியளவில் காலமானார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவி ஹ_மா அக்ரம். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஹ_மா அக்ரமிற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 20 ம் தேதி ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் ஹ_மா அக்ரம், வாசிம் அக்ரம் மற்றும் குடும்பத்தினர் சிங்கப்பூர் புறப்பட்டனர்.

இவர்கள் வந்த விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது, ஹ_மா அக்ரமிற்கு உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் ஆபத்து என்ற நிலையில், விமானத்தின் பைலட், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, சிகிச்சைக்காக அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

அனுமதி கிடைக்கவே, வாசிம் அக்ரம் மற்றும் ஹ_மா அக்ரமிற்கு தற்காலிக, “விசா’ வழங்கப்பட்டு, அவர்கள் பயணம் செய்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அவர்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, “வென்டிலேட்டர்’ கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் அபாய கட்டத்தை தாண்ட 72 மணி நேர கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்;. 

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை

261009serje.jpgரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ இன்று (26) திங்கட்கிழமை இலங்கை வருகிறார். குறுகிய கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே சட்டவிரோத ஆட்கடத்தல் போதைவஸ்து துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு அமைச்சர்களான போகொல்லாகம, லெவ்ரோ ஆகியோரிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை இயற்கை அனர்த்தத்திலிருந்து பாதுகாத்தல், அவ்வாறான சூழ்நிலையின்போது அதனை ஆற்றுப்படுத்தல் என்பன தொடர்பாக இரு நாடுகளுக்கு மிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பெற்றோலிய ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நேற்று தீர்மானித்தது. எரிபொருள் விநியோகத்தை சீரமைப் பதற்காகவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளை, சம்பள உயர்வு வழங்குமாறு கோரி பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியம் முன்னெடுத்த சட்டப்படி வேலைப் போராட்டம் நேற்றுடன் கைவிடப்பட்டுள்ளது. பெற்றோலிய ஊழியர்கள் இன்று முதல் வழமைபோல கடமைக்குத் திரும்புவர் என மேற்படி தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஓரிரு பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற் சங்கங்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளபோதும் நாடு பூராவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக பெற்றோல் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ. எச். எம். பெளசி நேற்று தெரிவித்தார்.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அடங்கலாக சகல துறைகளையும் சார்ந்த தொழிற் சங்கங்களையும் ஜனாதிபதி இன்று சந்திக்க உள்ளதாகவும் இதன்போது பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆராயப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஏனைய அரச ஊழியர்களை விட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்.

அவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு தடவை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் யுத்தம் முடிவடைந்து ஒரு சில மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறு சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவது அநீதி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நாடுபூராவும் உள்ள 32 பிராந்திய எண்ணெய்க் களஞ்சி யங்களினூடாகவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த சனியன்று மாத்திம் 10 இலட்சம் லீட்டர் எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி பிரச்சினை – கல்வியமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் அமைச்சில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கலாநிதி ஏ. ஜி. ஹ¤சைன் இஸ்மாயில், எஸ். எச். எம். ஜமீல், தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் ஆகிய கல்வியியலாளர்களைக் கொண்ட குழுவை கல்வி அமைச்சு நியமித்திருந்தது.

இதன் செயலாளராக கலாநிதி ஹஜர் ஜான் மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார். 2007ம் ஆண்டு இக்குழு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது