May

May

மாணவர்களை பெற்றோர், பாதுகாவலர்கள் மட்டுமே பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்

sri-lankan-schools.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை பெற்றோர்களும், பாதுகாவலர்களுமே அழைத்து வரவேண்டும். இதைத்தவிர மூன்றாம் நபர்கள் அழைத்து வரக்கூடாதென மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி தினூக்ஷிகா கடத்திப் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலய அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுடனான உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு பட்டிருப்பு தேசிய பாடசாலை மண்டபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்றது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமந்த டி சில்வா, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி. டி. த. சில்வா, பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். 122 பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் பங்குகொண்டனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒவ்வொரு பாடசாலையிலும் பாதுகாப்புக் குழுக்கள் அமைத்தல் இக்குழுக்களில் கிராமசேவை அதிகாரிகள், அதிபர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பொலிஸார் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் போரதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, அம்பலாந்துறை, செட்டிப்பாளையம் ஆகிய பொலிஸ் நிலைய, உப பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்

sri-lanka-upcountry.jpgமலையக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை தொழிலாளர்கள் புகட்ட வேண்டுமென சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் பசறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்; வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிலாளர்களிடமிருந்து அறவீடு செய்யும் ஒருமாத சந்தாப் பணத்தை அனுப்புவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளப்படுகிறது. ஒருநாள் வேதனத்தை அனுப்ப வேண்டிய தேவை கிடையாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரத் துறையில் மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். ஒருசில மலையக அரசியல்வாதிகள் தெரிவிப்பது போன்று ஒருநாள் வேதனத்தை வழங்கக் கூடிய நிலையில் தொழிலாளர்கள் தற்போது இல்லை. மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே தொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களுடைய வேதனத்திலிருந்து ஒருநாள் சம்பளத்தை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கு அனுப்ப வேண்டுமென ஒரு சில மலையக அரசியல்வாதிகள் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மலையக தலைமையென தம்பட்டம் அடிப்போர் இன்னும் தொழிலாளர்களை சுரண்டிப் பிழைக்கும் வேலையிலிருந்து விடுபடவில்லை. இவ்வாறான வேலையில் ஈடுபடும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவே எமது சங்கத்தின் தொழிலாளர்களின் வேதனத்திலிருந்து அறவீடு செய்யும் ஒருமாதச் சந்தாப் பணத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டோம். தொழிலாளர்களிடமிருந்து ஒருநாள் சம்பளத்தை அறவீடு செய்வதை பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று பௌத்த அமைப்பு. முஸ்லிம் அமைப்பு அதேபோல் தமிழ்மக்களும் உதவி வருகின்றனர். அரசாங்கமும் முடிந்தளவு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குகிறது. அதற்குமேலாக வெளிநாட்டு சமூக அமைப்புகளும் உதவிவருகின்றன. இம்மக்களுக்கு மலையக மக்களுடைய பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதாலே மலையக மக்கள் சார்பாக அவர்களுடைய சந்தாப்பணத்தை அனுப்பிவைக்கிறோம்.

மே, இரண்டாவது ஞாயிறு -அன்னையர் தினம் – புன்னியாமீன்

mothers-day.jpgஅம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும்,தொணிகளும்  ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் அம்மாக்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் Mother’s Day ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.

ஒரு பெண்ணானவள் மகளாக,  சகோதரியாக,  தாயாக, தாரமாக,  தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது;  தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப்  போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக உலகில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

“அன்னையர் தினம் ” Mother’s Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.  அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் – கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வ‌ண‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகின்றது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.

ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது. ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளு‌க்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ந் தேதி மூன்று நாள் விழா நட‌த்‌தின‌ர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மா‌றியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் 20ஆம்   நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது. 

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற இடத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான ரீவிஸ் என்பவரின் மகள்தான் “அன்னா மரியா”. அன்னா என்று அழைக்கப்பட்ட அவர் 1852 – ஆம் ஆண்டு ‘கிரான்வில்லி ஜார்விஸ்’ என்பவரை திருமணம் செய்து கொண்டு மேற்கு விர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் என்னும் இடத்திற்கு குடியேறினார். அன்னாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தைக்கு பார்வை கிடையாது.

அன்னா வாழ்ந்த காலகட்டங்கள் போர்களும், சண்டை, சச்சரவுகளும் அமெரிக்காவில் அதிகமிருந்தது. அதனால் சுகாதார வசதி குறைவுகளும், உணவு பற்றாக்குறைகளும், பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டும், தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இரக்க சுபாவமுள்ள அன்னா ஏதாவது செய்தாக வேண்டுமே என்று தோன்றியது. அந்த காலகட்டத்தில்தான் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக பெண்கள் நலச் சங்கங்களை தொடங்கினார். பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்டபோது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெண்களை அனுப்பி உதவி செய்தது. பல பொது சேவைகளையும் செய்தது. மேலும் பிலிப்பி, ப்ருண்ட்டிடவுன் பெட்டர்மேன், வெப்ஸ்டர் போன்ற நகரங்களிலும் சங்கங்கள் அன்னா உருவாக்கினார். அந்த காலக்கட்டத்தில்தான் அன்னாவின் இரண்டு குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. பார்வையற்ற பெண் குழந்தை மட்டுமே மிஞ்சினாள்.

மனம் தளராத அன்னா மேலும் சுகாதார கேடுகளை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்தார். சுகாதாரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சங்கம் அமைத்து வழி நடத்தினார். பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அன்னா தீவிரமாக களம் இறங்கினார். யுத்தத்தில் படுகாயம் அடைந்த வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டு வந்து வைத்து மருந்திட்டு, உணவு, உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார். யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் இறந்த போது, அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் போராடினார் அன்னா.

தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்த அன்னா 1904 ஆம் ஆண்டு இறந்தார். அப்போது அன்னாவின் வயது 72. பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதைக்கப்பட்டபோது அவருடைய 72 வது வயதைக் குறிக்கும் வகையில் “கிராப்டன் ஆன்ரூஸ்” சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது!

இவரின் மகள்  ஜார்விஸ் Jarvis  முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907 – ஆம் ஆண்டு மே மாதம் 10 – ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தினார். 1908 – ஆம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம், பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். 1909-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45 – மாநிலங்கள், போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து ஜார்விஸ் Jarvis  1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து,  நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் Anna Jarvis  திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் “அன்னையர் தினம்” கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இவரின் வேண்டுகோளையும்,  நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் Woodrow Wilson   1914ம் ஆண்டு  வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை  அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க  காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல  46 நாடுகள் இதே நாளில் “அன்னையர் தினம்” என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமன நிறைவடையவில்லை.  46 நாடுகளில் மட்டுமல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

உலகம் முழுக்க “அன்னையர் தினம்” அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அனா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.

அன்னையர் தினத்தில் எமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்களின் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  தற்போது அன்னையர் தினம் என்பது ஒரு வியாபார தினம்போல் மாறிவிட்டது கவலைக்குரியதே. அன்னையர் தினம் வருவதற்கு முன்பு அல்லது அன்னையர்களை கௌரவிக்கவும்,  மகிழ்விக்கவும் பல நூற்றுக்கணக்கான வியாபாரப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு அவற்றை விற்பனை செய்வதிலேயே முழு அளவில் கரிசனை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் இத்தினத்தை வியாபாரப் பொருளாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு “அன்னையர் தினம்” அன்று “அன்னா மரியா” படத்தினை கொடிகளில் பதித்தும், செயின் டாலர்களில் படத்தை பதித்தும் வியாபாரமாக்கியது. இதனையறிந்த ஜார்விஸ் வெகுண்டெழுந்தார். 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் “செண்டிமெண்ட்” நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் பணம் திரட்டும் நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதிட்டார். ஈற்றில் வெற்றி பெற்றார். எனவே,  அன்னையர் தினம் என்பதை உள்ளார்த்தமாக உணர்வுபூர்வமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜார்விஸ் எதிர்பாரத்தாரேயன்றி அது ஆடம்பரமாகவும், பணத்தை மையப்படுத்தியதாகவும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகின்றது.

எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை அனுஸ்டிப்போம்.

ஏப்ரல் 04ஆம் திகதி சர்வதேச ‘நிலக்கண்ணி வெடி’ விழிப்புணர்வு International Day for Landmine Awareness and Assistance -புன்னியாமீன்

nilakannikal.jpgநவீன உலகில் யுத்தப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்கவும், அங்கவீனர்களாக்கவும் காரணமாக இருந்துவரும் நிலக்கண்ணி வெடி’  பற்றி மக்கள் மத்தியில் அறிவுறுத்தல் வழங்கி  விழிப்புணர்வை ஏற்படுத்து முகமாகவும், அதன் பிரயோகத்தை தடுப்பது தொடர்பாகவும் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

பொதுவாக நிலக்கண்ணி வெடிவகைகளில்  M14, Valmara 69, and VS-50A  போன்றன இன்று அதிகளவில் பாவனையிலுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஒரு தனி நபரை அல்லது ஒரு சிறு குழுவினரை அல்லது ஒரு வாகனத்தை அல்லது மிருகங்களை இலக்கு வைத்து நிலக்கண்ணிவெடி’கள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவுள்ளன. பொதுவாக நிலத்தின் கீழும் நிலத்தின் மேலும் இக்கண்ணிவெடிகள் வைக்கப்படும். இக்கண்ணிவெடிகளை மிதிப்பதினூடாக வெடிக்கும் தன்மையும் அல்லது இக்கண்ணிவெடிகளை குறி வைத்து இயக்கி வெடிக்க வைக்கக்கூடிய தன்மையையும் இவை கொண்டவை.

நிலக்கண்ணிவெடி  வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும்போது கிறிஸ்துக்குப் பின் 03ஆம் நூற்றாண்டில் சீனாவின் பிரதமர் சூஞ்லியான் என்பவர் மூலம் ஹ{ருலு பள்ளத்தாக்கு யுத்தத்தின்போது ஸிமா – ஈ படைக்கெதிராக பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பிற்காலத்தில் சில பதிவுகளின்படி கூறப்பட்டாலும்கூட, பொதுவாக வெடி மருந்தின் கண்டுபிடிப்பு 10ஆம் நூற்றாண்டுகளில் இடம்பெற்றதினால் மேற்படி தகவலினை உறுதிப்படுத்துவது கடினமாகவுள்ளது. இருப்பினும், வெடி பொருள் கலக்கப்படாத முறையில் விசஊசிகள் அன்றேல் விசத்தைப் பாய்க்கக்கூடிய ஏனைய உலோகங்களை நிலத்தில் புதைத்து எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்த பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இதுவும் ஒரு நிலக்கண்ணியென்றே இங்கு கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. அதேநேரம், 14ஆம் நூற்றாண்டில் சீனச்சட்டி குண்டுகள் வெடி மருந்து நிரப்பப்பட்ட முறையில் மொங்கோலியாவுக்கு எதிரான யுத்தத்தில் சீனா பயன்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நிலக்கண்ணிப் பாவனை நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்பதை மேற்குறிப்பிட்ட தரவுகளிலிருந்து அறியமுடியும்.

பொதுவாக எல்லைப்புற யுத்தங்களின்போது; எல்லைப்புற பாதுகாப்பிற்கும், எதிரிகளை நகர விடாமல் பாதுகாப்பிற்கும் பெருமளவு நிலக்கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கண்ணிவெடி பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் மாபெரும் குறை யுத்தங்கள் முடிந்த பின்பு உரிய நிலக்கண்ணிகள் அகற்றப்படாமையினால் சாதாரண மக்கள் அவற்றில் சிக்குண்டு பாதிப்புக்கு உட்படுவதாகும். உதாரணமாக கம்போடியாவில் யுத்தம் முடிந்த பின்பு 35,000 பொது மக்கள் அங்கயீனர்களாகியுள்ளனர். இதிலிருந்து இதன் அபாயத்தன்மையை உணர்ந்துகொள்ள முடியும். சில ஆய்வுகளின்படி நிலக்கண்ணிவெடிகளை வைத்தவர்களுக்கு தான் எந்த இடத்தில் வைத்தோம் என்று கூற முடியாதளவுக்கு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நிலக்கண்ணியின் ஆபத்தையுணர்ந்து நிலக்கண்ணி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 1992ஆம் ஆண்டு கனடா அரசு தீவிரமாக முன்வைத்தது. கனடாவில் ஜோடி வில்லியம் Jody Williams இதன் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். இவரின் முயற்சிக்காக 1997ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு நிலக்கண்ணிப் பாவனைக்கு எதிராக ஒட்டாவாவில் 122 நாடுகள் கைச்சாத்திட்டன.  ஒட்டாவா Ottawa  ஒப்பந்தம் Ottawa Treaty 1999ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. ஒட்டாவா ஒப்பந்தப்படி நிலக்கண்ணி பாவனை, களஞ்சியப்படுத்தல், உற்பத்தி செய்தல், கொண்டு செல்லல், விற்பனை செய்தல்  என்பன தடைசெய்யப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் யுத்ததாங்கி அழிப்பதற்கான நிலக்கண்ணி, கொத்தணிக் குண்டுகள், கிளைமோர் குண்டுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தற்போது 155 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்று கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், 40 நாடுகள் கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது. கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் 64 நாடுகள் பயிற்றுவிப்புக்காகவும், தற்பாதுகாப்புக்காகவும் இதைப் பயன்படுத்துவோம் என்ற அடிப்படையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்துக்கு இதுவரை கைச்சாத்திடாத நாடுகளாக  சீனா,  இந்தியா, இஸ்ரேல்,  பாக்கிஸ்தான்,  ரஸ்யா, ஐக்கிய அமெரிக்கா போன்ற பிரதான நாடுகள் இருப்பதும் அவதானிக்கத்தக்கதாகும்.  

புதிய பாதுகாப்பு வலய பிரகடனம்: ஐ.சி.ஆர்.சியினருக்கு அறிவுறுத்தல்; பிரசுரங்களில் மக்களுக்கு விளக்கம்

new-safe-zone.jpgமீள வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். அதேநேரம், பொது மக்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். விமான மூலம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன், ஊடகங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயத்தை நேற்று முன்தினம் வெள்ளி மாலையிலிருந்து அரசாங்கம் மீள வரையறுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, வெள்ளமுள்ளி வாய்க்கால் – கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் நீளமும், ஒன்றரை கிலோ மீற்றர் அகலமும் கொண்டதாகப் புதிய பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்திற்கு அப்பால் புலிகளை இலக்குவைத்து நடவடிக்கை எடுக்கப்படுமென்பதால், பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் இருக்கக் கூடாதென பிரிகேடியர் தெரிவித்தார். மேற்குறித்த பகுதியிலேயே பொது மக்கள் அதிகம் தங்கியிருப்பதால், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகக் கூறிய பிரிகேடியர்,  இனி பொதுமக்களைப் புலிகளால் வைத்திருக்க முடியாதென்றும் கூறினார்.

இதேவேளை, தற்போது புலிகள் சிக்குண்டுள்ள பகுதிக்குள் படையினர் 800 மீற்றர் தூரம் வரை உட் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சுற்றி சுமார் இரண்டாயிரம் கரும்புலிகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனவே, மிகவும் சூட்சுமமான முறையில் படையினர் முன்னேறி வருவதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

new-safe-zone.jpg

முல்லைக் கடற்பரப்பில் சமர்: புலிகளின் வள்ளங்கள் நிர்மூலம்

boat.jpgமுல்லைத்தீவு, வெள்ளிமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி வள்ளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்படை வட்டாரங்கள் தகவல் தருகையில்,

இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில், கடற்படையினரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த வந்து கொண்டிருந்த நான்கு வள்ளங்கள் மீது கடற்படையினர் பலத்த தாக்குதலை மேற்கொண்டனர். இதன் காரணமாக இரு வள்ளங்கள் முற்றாக நிர்மூலமானதுடன் மேலும் இரு வள்ளங்களைக் கடற்படையினர் கைப்பற்றினர். 14 கடற்புலிகள் இந்ததச் சம்பவத்தில் கொல்லப்பட்டனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையாமுள்ளி வாய்க்கால் மண் அணை படையினர்வசம்

sl-army.jpgமுல்லைத்தீவு கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று (08.05.2009) புலிகளின் மண்அணை ஒன்று படையினரால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. பலமணிநேர மோதலை அடுத்தே இந்த மண் அணையை படையினர் மீட்டுள்ளனர். இங்கு இடம்பெற்ற தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுலின் போது புலிகளின் 35 சடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

vavuniyatents.jpgதமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் செயலாளர் தி. சிறிதரன் ஆகிய மூவரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசியசந்தர்ப்பத்தில் அவரிடம் விடுத்த வேண்டுகோள்

05.05.2009

மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

01. நீர்

தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம் இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு.

02. உணவு

அதிகமான முகாம்களில் உணவுப் பிரச்சினை இல்லாத போதும் சில முகாம்களில் சில வேளைகளில் உணவு வழங்கப்படுவதில்லை. முறையான திட்டமின்மையே இதற்குக் காரணமாகும்.

03 முதியோர்களை விடுவித்தல்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இத் தீர்மானத்தை மாற்றி 60 இற்கும் 60 இற்கு அண்மித்துள்ள வயதுடையோரின் மனைவிமாரை அல்லது கணவன்மாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. நோயாளிகள்

பல நோயாளிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால் தம் செலவிலேயே நல்ல வைத்திய சேவையை பெற்றிருக்க முடியும். இதற்குக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதுமே ஆகும்

05. வெளிநாட்டில் வைத்தியம் பெறுதல்

வெளிநாட்டில் வைத்தியம் பெற வசதியுடையோர் விரும்பிக் கேட்பின் அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

06. அரச ஊழியர்கள்

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் அவரவர் குடும்பத்துடன் விடுவிக்கப்பட்டு அவர்களி;ன் சேவை முகாம்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.

07. அரசாங்க அதிபர்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை பொறுப்பெடுத்து வவுனியாவில் கச்சேரி அமைத்து செயற்படுவதோடு படிப்படியாக அப் பணிகளை தம் மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கலாம். இம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை கவனிக்க பணிக்கப்பட வேண்டும்.

08. குடும்பத்தினரை மீள ஒன்றிணைத்தல்

பல்வேறு முகாம்களில் சிதறுண்டு இருக்கும் ஓரே குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பணியில் அனைவரும் ஒரு முகாமுக்கு மாற்றப்பட வேண்டும்.

09. தொலைபேசி இணைப்புக்கள்

தற்போது வழங்கப்படுகின்ற தொலைபேசி இணைப்புக்கள் போதாமையால் மேலும் சில இணைப்புக்கள் ஒவ்வொரு முகாமுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

10. உறவினர்களின் சந்திப்பு

முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒருவரேனும் வந்து பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

11. கர்ப்பிணி பெண்கள் பற்றியது.

கர்ப்பிணிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மடு தேவாலய முகாமில் அனுமதிக்கப்பட வேண்டும்.

12. ஊனமுற்றோர், அனாதை குழந்தைகள், முதியோர், சித்த சுயாதீனமற்றோர்.

ஓர் விசேட குழு அமைக்கப்பட்டு மேற் கூறப்பட்டவர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய வகையில் வதி விடங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.

13. விதவைகள்

விதவைகள் அனேகர் உருவாக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவர்களை பொறுப்பேற்பதற்கும் புதிய ஆலோசனை வழங்குவதற்கும் மகளிர் நலன்புரி அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

14. பிரேத அறை

முறையான ஒரு பிரேத அறை இன்மையால் நாம் மதிப்பு மரியாதையோடு எமது கலாச்சாரத்துக்கு அமைய அடக்கம் செய்ய முடியாமல் அழுகிய நிலையில் அண்மையில் உள்ள நோயாளிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியதோடு அப் பிரேத அறையிலிருந்து எழும் துர்நாற்றம் சுமார் 200 மீற்றர் விட்ட பிரதேசத்துக்கு பரவுகிறது. பிரேதங்கள் உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையளிக்கப்படும் வரை பாதுகாத்து வைக்கக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்

புதுமாத்தளனில் வாரத்திற்கு 478 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுகிறது. எம்மால் கூறப்படுகின்ற ஆலோசனைகளை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ  

த.சித்தார்த்தன்
புளொட்         

தி.சிறிதரன்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

பிரித்தானியாவில் 8 ஆவது நாளாக மாணவர்களின் போராட்டம்

uk-stu.jpgபிரித்தானிய அரசாங்கமே தமிழீழ தாயகத்தில் அல்லலுறும் மக்களை காப்பாற்று என கடந்த 33 நாட்களாக மாணவர்களும் மக்களும் நடுவீதியில் நின்று தங்கள் கோரிக்கையை கோசங்களாக எழுப்புவதுடன், 8வது (08.05.09) நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் எங்கள் மக்களுக்காக உயிரையும் விடுவோமென உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

சர்வகட்சிக் குழு கருத்தொருமைப்பாட்டுடன் யோசனையை முன்வைக்கும் சாத்தியம் இல்லை -முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பு

SLMC Gen Sec M T Hasan Aliயுத்தம் முடிவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதமற்ற சூழ்நிலை ஏற்பட்டதும் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனை வரைபு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஏகோபித்த கருத்தொருமைப்பாட்டுக்கான சாத்தியம் இல்லை என்பதை அக்குழுவிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருப்பதுடன், அவ்வாறு ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டாலும் அது ஆளும் கட்சியின் நிலைப்பாட்டை அடியொற்றியதாகவே இருக்கும் என்றும் அதனால் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள், அபிலாசைகள் நிறைவேறுமென எதிர்பார்க்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன்அலி, உண்மையில் தீர்வொன்றை முன்வைக்க அரசு விரும்பியிருந்தால் யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அதனை செய்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தற்போது ஆளும்தரப்பிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளைத் தவிர வெளியேயுள்ள கட்சிகளா முஸ்லிம் காங்கிரஸும் ஜனநாயக மக்கள் முன்னணியுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் எவ்வேளையிலும் முஸ்லிம் காங்கிரஸ் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து வெளியேறிவிடும் என்று எச்சரித்திருப்பதாகவும் கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இப்போது இல்லை, ஜே.வி.பி. யும் இல்லை. ஏனைய பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கும் குறைவான அதிகாரப் பகிர்வையே வலியுறுத்தி வருகின்றன. சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 13 ஆவது திருத்தத்திற்கும் அதிகமானவற்றை வலியுறுத்துகின்றன. எண்கணிதப்படி பார்த்தால் +13 (13)=0 ஆகும். நடைமுறையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஏனையகட்சிகளை தனது நிலைப்பாட்டுக்கு இழுத்துவிடும் நிலைமையே காணப்படுகிறது. அதனால் சிறுபான்மையினர்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வுகாணும் யோசனை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்று ஹசன் அலி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்ட யோசனை 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லுமென அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவினதும் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாகவே இதனை அரசு தெரிவிக்கின்றது. உண்மையில் பெரும்பான்மையினர் 13 ஆவது திருத்தத்துக்கு குறைவானதையே வழங்க விரும்புகின்றனர்.

அரசாங்கம் இது தொடர்பில் நம்பகத்தன்மையுடன் செயற்படவில்லையென்பதை நாம் அவதானிப்போம். இதையடுத்து இந்த குழுவிலிருந்து நாம் எந்நேரத்திலும் வெளியேறுவோம் எனத் தெரிவித்துள்ளோம். இன்றைய அரசு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் அமைக்கப்பட்டதாகும். அக்கட்சி அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்த தமது யோசனையில் அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லையெனத் தெரிவித்துள்ளது. மற்றைய கட்சிகளின் கருத்தினைப்பெற்று இதனைக் கேட்டு பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கும் யோசனையில் அரசு இல்லை. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு 100 க்கு மேற்பட்ட தடவை கூடியுள்ளபோதும் யோசனையை முன்வைக்கவில்லை.

அவ்வாறான யோசனை இருந்தால் யுத்தத்தை நடத்திக்கொண்டே அரசியல் தீர்வினை அரசு முன்வைத்திருக்கும். வெற்றியின் பின்னர் குறைந்தளவிலான உரிமைகளையே முன்வைக்கப் பார்க்கின்றது. இந்த அரசு ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமயவுடன் தலதாமாளிகையில் செய்யப்பட்ட உடன்படிக்கையின் படி சரியான தீர்வினை முன்வைக்கமுடியாது. இந்நிலையில், அரசாங்கம் சரியான தீர்வுத் திட்டத்துக்கு கையை விரிக்கப்போகின்றதெனத் தெரிந்தும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்கி பலப்படுத்துகின்றன. இதற்கு அவர்கள் பதில் கூற வேண்டியவர்களாகவுள்ளார்கள்.

சிறுபான்மை சமூகத்துக்கு பாதகமான உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தை தடுப்பதற்கு நாம் நீதிமன்றம் சென்றோம். இவ்வாறு அரசு சிறுபான்மையினருக்கு பாதகமான செயற்பாட்டில் ஈடுபடும்போது அதற்கு ஆதரவளிக்கும் சிறுபான்மை கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.