Multiple Page/Post

எதிரணியினர் பொய் வதந்திகளைப் பரப்புகின்றனர் – அநுரபிரிய தர்ஷன யாப்பா

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பினால் ஒன்றும் செய்ய முடியா நிலை ஏற்பட்டதனால்,  மக்கள் விடுதலை முன்னணி உட்பட சகல எதிரணிக் கட்சிகளும் தேர்தல் முடிவுகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொய் வதந்திகளைப் பரப்பிவருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்ää

ஜனாதிபதித் தேர்தல் முறையாகää அமைதியாக நடைபெற்றதாக எதிக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார். தேர்தல் முடிவுகளில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என தேர்தல் ஆiணாயளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் தேர்தல் சமயத்தில் எதிரணியினர் எமது அரசியல் கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டனர். எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லை. பழிவாங்கும் அரசியல் கொள்கையுடையவராகவே அவர் காணப்பட்டார் என்றும் அமைச்சர் கூறினார்

பிரிட்டனின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்கு

mp_composite.jpgபிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்குபேர் தங்களின் செலவினங்களுக்காக அரசிடமிருந்து பெற்ற தொகையில் தவறு செய்ததாக கூறப்பட்டு, இதற்காக அவர்கள்மீது குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தங்களின் செலவினங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதாக வெளியான செய்திகளை தொடர்ந்து பிரிட்டிஷ் பொதுமக்கள் மத்தியில் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவுக்கு கோபம் உருவானது.

இது தொடர்பில் ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், பிரதான எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் அரசு தரப்பு வழக்குகளுக்கான இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.  ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற நடைமுறைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்க முடியாது என்கிற நாடாளுமன்ற உரிமைகள் தொடர்பான விதியின் கீழ் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை இருந்துவரும் பாதுகாப்பு நடைமுறையும், இந்த நான்குபேர் மீதான வழக்குகளின் போது நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
BBC

அவசரகாலச்சட்டம் 87 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

parliament.jpgநாட்டில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசர காலத்தை நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று 87 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐ.தே.க., தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் மனோகணேஷனும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார். பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட சமயம் மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.

சந்திரசேகரனின் வெற்றிடத்துக்கு அருள்சாமி!

arulsami.jpgமத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க்கல்வியமைச்சரும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.அருள்சாமி  நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் சபாநாயக்கர் எம்.லொக்குபண்டார முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே எஸ். அருள்சாமியை தேர்தல் ஆணையாளர் நியமித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப்போட்டியிட்ட போது காலஞ்சென்ற  பெ.சந்திரசேகரனுக்கு அடுத்தப்படியாக எஸ்.அருள்சாமி 19711 வாக்குகளைப் பெற்றிருந்தார்.  இதன் பின்பு இடம்பெற்ற மத்திய மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட்ட இவர் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் அதன் பின்பு மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சராகவும் செயற்பட்டதோடு மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகி தொழிலாளர் விடுதலை முன்னணி என்ற அமைப்பையும் ஏற்படுத்திக்கொண்டார்.

தப்பிச் சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று குறித்த கால எல்லைக்குள் சரணடையாத இராணுவத்தினரை தேடி கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் சுதந்திரத் தினத்தன்று சரணடையும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இராணுவம் விசேட அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் விடுத்திருந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட விசேட காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையிலேயே சரணடையாதவர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

பிளவுபட்ட அரசியலுக்கு இனிமேல் இடம் இல்லை தேசிய நல்லிணக்கமே அடுத்த இலக்கு – கண்டி சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி உரை

ind-day-kandy.jpgதண்டனை,  இம்சை, இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள், ஊழல் மோசடியற்ற சேவை மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமது அரசியல் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எச்சந்தர்ப்பத்திலும் எத்த கைய தீர்மானத்தையும் மேற்கொண்ட தில்லையென தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது காட்டிக்கொடுக்கப்போவ தில்லையெனவும் தெரிவித்தார்.

இலங்கையின் 62வது சுதந்திரதின தேசிய நிகழ்வு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

கடந்த 30 வருடங்களின் பின்னர் பயங்கரவாத அச்சுறுத்தலற்ற நாட்டில் கொண்டாடப்படும் முதலாவது சுதந்திர தினம் இதுவாகும். சுதந்திரமடைந்துள்ள நாட்டின் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி யடைகிறேன்.

1815ம் ஆண்டு எமது சுமங்கல தேரர் பிரித்தானிய கொடியை இறக்கிவிட்டு எமது தேசிய கொடியை ஏற்றியதை நினைவு கூரும் அதேவேளை சுதந்திரத்துக்காக அர்ப்பணித்த மதகுருமார்களுக்கும் எனது கெளரவத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்திரம் என்பது பொறுப்பைக் குறிக்கின்றது. ஜனவரி 26ம் திகதி இந்நாட்டு மக்கள் கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைவிட பெருமளவு வாக்குகளால் என்னை வெற்றிபெறச் செய்தனர். மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னிடம் மாபெரும் பொறுப்பினைக் கையளித்துள்ளனர்.

‘முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமான எனது முதன்மையான விருப்பு எமது தாய் நாடே’, இதனை நான் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளேன். நன்றிக்கடன் மிகுந்த நாட்டின் மக்களுடன் வாழக்கிடைத்ததிலும் இக்காலகட்டத்தில் இந்நாட்டின் தலைவராக பதவி வகிப்பதையும் நான் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.

தாய்நாட்டை ஒன்றிணைக்க எனக்கு உறுதுணை புரிந்த இந்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. தாய் நாட்டைப் பாதுகாத்து ஒன்றிணைத்த எனக்கு வழங்கப்பட்டுள்ள சகல இன மக்களினதும் மனங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பையும் நான் நிறைவேற்றுவேன்.

சகல இன மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தை ஏற்படுத்துவது உன்னதமான தொரு செயற்பாடாகும். அதனை நான் முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளேன். அன்று தேசபிதா டீ. எஸ். சேனநாயக்க சுதந்திரம் கிடைத்த பின்னர் கூறிய சுதந்திரமென்பது துன்பங்களைக் குறைத்து இன்பங்களைப் பெருக்குவதே என்ற கூற்றே இன்று மக்களினதும் பிரார்த்தனை யாகவுள்ளது.

1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்துக்கு மேலானதொரு சுதந்திரத்தை நாம் நமது தாய் நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்தவகையில் கடந்த நான்கு வருடங்களை நாம் அர்த்தமுள்ளதாக்க முடிந்துள்ளது. இக்காலமானது தாய்நாட்டை ஒன்றிணைத்து பிரதிபலன்களை பெற்றுக் கொள்ளும் யுகமாகும். யுத்தத்தை முடி வுக்குக் கொண்டு வந்ததில் யுத்தத்திற்கான செலவு மாத்திரம் மீதமானதாகக் கருதக் கூடாது.

இப்போது உலகில் சுற்றுலாவுக்கான சிறந்த நாடாகவும், முதலீடுகளுக்கான சிறந்த நாடாகவும் இலங்கை நிகழ்கிறது. அண்மைக்கால கணிப்பீடுகளின் பெறுபேறு இலை. அத்துடன் ஆசியாவில் சீனாவுக்குச் சமமானதாக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாகவும் இலங்கை பேசப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து எட்டு மாதங்களே கடந்துள்ள நிலையில் இத்தகைய வெற்றிகளை எம்மால் ஈட்ட முடிந்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்திலும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்தமையே இதற்கு வாய்ப்பாகியது.

நாட்டு மக்கள் யுத்தத்தின்போது இழந்த அனைத்தையும் மீளப்பெற்றுக் கொள் வதற்காகவே மீண்டும் என்னிடம் மகத்தான பொறுப்பை வழங்கியுள்ளனர். யுத்தத்தினால் பின்னடைவு கண்ட நாட்டை வேகமாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

சமாதானம் மட்டுமன்றி ஊழல், மோசடி களற்ற நாடொன்றைக் கட்டியெழுப்புவதும் எம் முன் உள்ள பொறுப்பாகிறது. ஏனைய நாடுகளின் முன்னேற்றத்தைச் சொல்லிக்கொண்டு எமது மக்களை குறைகூறுவது பிரயோசனமற்றது. அந்நாட்டவர்களை பின்தள்ளி முன்னேறிச் செல்ல முடியுமென்பதை பல வெற்றிகள் மூலம் நாம் நிரூபித்துள்ளோம்.

நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக அரசதுறை மட்டுமல்லாது தனியார் துறையின் பங்க ளிப்பும் அவசியம் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். யுத்தத்தினால் நலி வடைந்த தனியார்துறை தற்போது மீள புத்துயிர் பெற்று வருகிறது.

நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தும், மக்கள் சேவையாக நம்பிக்கை மிகுந்த அரச சேவையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வீரர்களை நான் பாதுகாப்பேன். கடந்த காலங்களில் அவர்கள் மீது நான் காட்டிய கரிசனையை மக்கள் அறிவர்.

பலமான கேந்திர நிலையமாக இலங் கையைக் கட்டியெழுப்புவோமென நாம் மஹிந்த சிந்தனைக் கொள்கையில் தெரி வித்திருந்தோம். எதிர்காலத்தில் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பொருளாதார, சமூக, அரசியல் பிரதிபலன்களை நாம் மக்களுக்குக் கிட்டச் செய்வோம்.

அழுகையும் துயரமுமான யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். மகிழ்ச்சியையும் கலாசாரப் பெறுமதிகளையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் இந்நாட்டுக் கலைஞர்களுக்கும் பொறுப்புகள் உள்ளன.

மரணபயம், வறுமை போன்ற காரணங் களினால் நாட்டைக் கைவிட்டுச் சென்றவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக இந்நாட்டுக்குத் திரும்பிவரும் நிலையில் தாய் நாட்டை நாம் கட்டியெழுப்பவேண்டும். அதற்காக நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

வீதித் தடைகள் மட்டுமல்ல, பொரு ளாதாரத்திற்குத் தடையாக நிலவும் நிர்வாகத் தடைகளையும் நாம் சரிசெய்வது முக்கியமாகும்.

எமது தாய்நாட்டையும் நாட்டு மக்களையும் குறுகிய சிந்தனையுடன் நோக்க வேண்டாமென நான் எப்போதும் தேசிய ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.

வடக்கு, கிழக்கை மீட்டு பாரிய அபிவிருத்தியை அப்பிரதேசங்களில் முன்னெடுத்துள்ளோம். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் திட்டங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலும் தற்போது பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகளை இழந்திருந்த வடக்கு மக்களுக்கு நாம் மீண்டும் ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதுவே எமது அண்மைக்கால பெருவெற்றி எனக் குறிப்பிட முடியும். அப்பிரதேச மக்கள் சுதந்திரமாக நடமாட தமது பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரஜைகளையும் வலிமைப்படுத்தக்கூடிய தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் பட்சத் தில் மக்கள் தாம் சொந்தக் காலில் நிற் கும் நிலை உருவாகும் என்பதே எனது நம்பிக்கை.

மஹிந்த சிந்தனை எதிர்கால தரிசனத் தினூடாக அப்பிரதேசத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அரசியல் தலைவர்கள் மக்களைத் தவறான வழியில் வழி நடத்தக்கூடாது. இந்நாட்டில் இனி மத, இன, பிரதேச நீதியான குறுகிய நோக்குடைய அரசியல் வேண்டாம். சகோதரத்துவம், சமாதானம், சகவாழ்வு, அபிவிருத்தி, சுபீட்சம் இதுவே எமது நோக்கம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்நாட்டைக் கட்டியெழுப்பு வோம்.

எமது வெளிநாட்டுக் கொள்கை சிறப்பாக உள்ளது. எமது அயல் நாடான இந்தியா, சீனாவுடனான நட்புறவைப் போலவே மேற்கத்தைய மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் எமக்கு நெருங்கிய நட்புறவுள்ளது. முதலில் நாம் எமது நாடு என்ற ரீதியில் சிந்திப்பது அவசியம்.

நான் நாட்டை முன்கொண்டதாகவே சகல தீர்மானங்களையும் எடுத்துள்ளேன். ஒருபோதும் அதிகாரத்தைத் தக்க வைப் பதற்காக நான் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லை. அதேபோன்று எமது சுயநலத்துக்காக நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது நான் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. அதிகாரத்தைப் பாது காப்பதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் பின்போடப்போவதுமில்லை.

அதே போன்று நாட்டை முன்னேற்றுவதற்காக எத்தகைய கஷ்டமான நிலையிலும் ஆயிரமாயிரம் தடைகளையும் தாண்டிச் செல்ல நாம் தயார். நான் நாட்டு மக்களிடம் கிரீடம் சூட்டுமாறு கேட்கவில்லை. எனினும் நாட்டு மக்களுக்கும் அவர்களது பிள்ளை களுக்கும் சுதந்திரம், செளபாக்கியம், வீரத்துவம் போன்ற கிரீடங்களை சூட்டியுள்ளேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு: 1576 கைதிகள் விடுதலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள 37 சிறைச்சாலைகளைச் சேர்ந்த 1576 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே 1576 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான கெனட் பெர்னாட்டோ தெரிவித்தார். இந்த பொது மன்னிப்பு பெற்றவர்களில் அதிகமானவர்கள் சிறு சிறு குற்றச்செயல்கள் காரணமாகவும், தண்டப் பணம் செலுத்த முடியாமல் இருந்தவர்களும் ஆவர்.

37 சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலிருந்தே அதிக கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்டவர்களில் பெண் கைதிகளும் அடங்குவதாக கெனட் பர்னான்டோ மேலும் தெரிவித்தார்.

போகம்பரை சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் 165 பேரும், பள்ளேகல திறந்த வெளி சிறைச்சாலையில் 18 பேரும் விடுதலை செய்யப்பட்டனரென திறந்தவெளி சிறைச்சாலை அத்தியட்சகர் திஸ்ஸ ஜயசிங்க தெரிவித்தார். அதேவேளை, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 25 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஒரு பெண் கைதி உட்பட 25 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விடுவிக்கப் பட்டனர். பதுளையில் 69 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.பதுளை பிரதான சிறைச்சாலையிலும், பதுளையை அண்மித்த தல்தெனை புனர்வாழ்வு முகாமிலும் வைபவ ரீதியாக இந்நிகழ்வு இடம்பெற்றன. பதுளை சிறைச்சாலையில் 35 சிறைக் கைதிகளும் தல்தெனை புனர்வாழ்வு தடுப்பு முகாமிலுள்ள 34 கைதிகளும் விடுதலையாகினர்.

வடக்கின் வசந்தம் திட்டங்களுக்கு 200 மில். ரூபா அனுப்பி வைப்பு

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் “வடக்கின் வசந்தம்” திட்டங்களுக்கென 2010 ஆம் ஆண்டுக்காக 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற் கமைய முதற்கட்டமாக இத்தொகை வவுனியாவுக்கு கிடைத்துள்ளதாக வவுனியா அரச அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வீதிகள் அபிவிருத்தி, குளங்கள் புனரமைப்பு, பாடசாலைகள் அபிவிரு த்தி, சுகாதாரத்துறை மேம்படுத்தல், சனசமூக அபிவிருத்தி, ஆலயங்கள் புனரமைப்பு, உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கென இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் கமநெகும, மகநெகும, போன்ற திட்டங்கள் முன்னெடுப்பதற்கான நிதியும் 2010 ஆம் ஆண்டுக்கென வழங்கப்படும். வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக் கென இதுவரை கடந்த ஆண்டு 6000 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன், 2010 ஆம் ஆண்டு வவுனியா நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் “வவுனியா நவீன நகர்” திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

parameswaran.jpgஎன் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் லண்டனில் கடந்த வருடம் மே மாதம் உண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறுதி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார்.

இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது “சன்” மற்றும் “மெயில்” பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் இவர்மேல் எழுந்துள்ள விமர்சனங்களால், இவர் சமூக வாழ்கை பாதிப்படைந்தது என்றும், உண்ணாவிரதத்தை நிறுத்த பிரித்தானியாவில் சிலர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இவருக்கு, பிரித்தானிய குடியுரிமையும் கிடைத்துவிட்டதாக தன் மீது வீண் பழிபோடுகிறார்கள் என பரமேஸ்வரன் தெரிவித்தார். குடியுரிமை கிடைக்கவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்த அவர் அவ்வாறு யாராவது நிரூபித்தால் தாம் தீக்குளிக்கக் கூடத் தயார் எனத் தெரிவித்துள்ளார். தனது தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும், தன்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வீண் பழிகளைப் பற்றி விளக்கியும் அவர் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் பொதுக் கல்விச்சபை உறுப்பினர் தெரிவு. களத்தில் வனிதா நாதன்

Vanitha_Nathanவனிதா நாதன், நீண்டகால மார்க்கம் நகரவாசியான இவர் ‘மாணவரை முதன்மைப் படுத்துவோம்” எனக்கூறி தனது தேர்தல் பரப்புரைக்காக பெற்றோரையும் மாணவரையும் நேரிற் சந்திக்கப் புறப்படுகிறார். சமூக சேவைப் பணியாளர், போதைப் பொருட்களுக்கு அடிமையான இளையோர் ஆலோசகர், பெற்றோருக்கான பயிற்றுனர், குடும்ப வன்முறைத் தீர்வு ஆலோசகர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகர் மற்றும் முதியோர் குழு ஒழுங்கமைப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்ட இவர் புறொக் பல்கலைக்கழக உளவியல் இளமானிப் பட்டதாரியாவார். வனிதா நாதன் தற்போது ‘யுத் லிங்க்” அமைப்பில் யோரக் பிரதேச சமூக சேவைகள் பிரிவிலும் யோர்க் பிரதேச குடும்ப சேவைகள் பிரிவிலும் பணியாற்றி வருகிறார். பெற்றோர், மாணவர் ஈடுபாட்டையும் புரிந்துணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் யோர்க் கல்விச் சபையின் 7 மற்றும் 8ஆம் பிரிவுப் பொதுக் கல்விச் சபையின் உறுப்பினரால் இப்பிரதேச மாணவரை பெரும் சாதனைகள் செய்யத் தூண்ட முடியும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

மார்க்கம் பொதுக்கல்விச் சபை 7, 8ஆம் தொகுதி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட
வேட்பாளர் பதிவை முதலாவது நாளியே மேற்கொண்ட வனிதா ‘இந்த தேர்தல் வெற்றியானது ஒவ்வொரு வீட்டிலும் தனிப்பட்ட முறையிலேயே அடையப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். ‘வீட்டுக்கு வீடு சென்று கல்விச் சேவைகள் தொடர்பாக பேசுவது என்பது கல்விச் சபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் என் ஈடுபாட்டையும் கடின உழைப்பையும் எடுத்துக் காட்டுவதாக அமையும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கல்விச் சபையின் கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமே ஒரு கல்விச் சபை உறுப்பினரின் கடமையாக அமைந்துவிட முடியாது என்பதை உறுதிப்படுத்தவும் பெற்றோரினதும் மாணவரதும் குரலாய் ஒலித்திடவுமே நான் இப் பதவிக்குப் போட்டியிடுகிறேன். இப்பதவி சமூகத்திற்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து அர்பணிப்போடு செயற்படுவேன்.

வனிதாவின் தேர்தற் பரப்புரையானது குடும்பங்களோடு கல்விச் சபைகளின் தொடர்பாடல் மிகவும் சிறப்பானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அத்தோடு சமூகத்தின் தேவைகளையும் கருத்துக்களையும் சரியான முறையிற் பிரதிபலிப்பது கல்விச் சபை உறுப்பினரின் முக்கிய கடமையாகும் என்பது இவரின் உறுதியான எண்ணம்.

பெற்றோர் மாணவருடனான தொடர்ச்சியான தொடர்பாடல்கள் மூலம் பொதுக் கல்வியை நாம் பலமாக்குவதுடன் அதைச் சிறப்பாகச் செயற்படவும் செய்யமுடியும். ஆனால் இந்நிலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.