Multiple Page/Post

பலாலியை மூடுங்கள் வன்னியில் திறவுங்கள் – சர்வதேச விமான நிலையத்திற்கு வன்னியே பொருத்தமான இடம் ! எம் பி கஜேந்திரகுமார்

பலாலியை மூடுங்கள் வன்னியில் திறவுங்கள் – சர்வதேச விமான நிலையத்திற்கு வன்னியே பொருத்தமான இடம் ! எம் பி கஜேந்திரகுமார்

தற்போது இருக்கின்ற பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த திட்டத்தை என்பிபி நிறைவேற்ற முனைகின்றது. சர்வதேச விமான நிலையமும் சர்வதேச கிரிக்கெட்ட மைதானத்தையும் யாழ்ப்பாணத்தில் கட்டித்தருவதாக கங்கனம் கட்டிக் என்பிபி அரசாங்கம் நிற்கின்றது. இது வாக்குகளுக்காக யாழ்ப்பாண மையவாதத்தை குளிர்விக்கும் செயற்பாடோ எனவும் சந்தேகம் எழுகின்றது. அபிவிருத்தியை யாழ்ப்பாணத்திற்குள் மட்டும் குவிப்பது பொருத்தமானதல்ல. இதனை தேசம்நெற்றும் யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த விடயத்தில் ஏனைய தமிழ்த்தேசிய கட்ச்சித் தலைவர்கள் போல அல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிடமிருந்து எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் வரவேற்கத்தக்கது. யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பலாலியை தெரிந்தெடுத்தமை பொருத்தமற்றது என்று கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்குப் பதிலாக ஏன் வன்னியிலோ, வவுனியாவிலோ, அநுராதபுரத்திலோ அல்லது கிழக்கிலோ ஒரு இடத்தை தெரிவு செய்யக் கூடாது என கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மிக நெருக்கமான மற்றும் குறுகலான நிலப்பகுதியாகும். பலாலி சர்வதேச விமான நிலையத்திற்காக 1,000 ஏக்கர் விவசாய மற்றும் தோட்ட தனியார் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது மரக்கறி மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தியிலும் கால்நடை வளர்ப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காணிகளை இழந்து தமது வாழ்வாதாரத் தொழில்களை செய்ய முடியாது நிலங்களுக்குச் சொந்தக்காரான மக்கள் வறுமையை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

தனியே வாக்கரசியலுக்காக யாழ்ப்பாண மையவாதிகளை திருப்திப்படுத்துவதை விட நிலைபேறான அபிவிருத்தியை நோக்கியே அரசாங்கங்களின் செயல்த்திட்டங்கள் இருக்க வேண்டும்.

வன்னி மாவட்டமே ஈழப்போரில் கோரமான அழிவுகளைச் சந்தித்த மாவட்டம், அபிவிருத்தியில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. யுத்ததின் வடுக்களை சுமந்து நிற்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை 1995 இல் நடந்த சூரியகதிர் இராணுவ நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2009 அல் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் வரையும்மே யாழில் நேரடி யுத்தம் ஒன்று இடம்பெறவில்லை. 1995 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த யாழ் மாவட்ட மக்களில் வன்னியிலேயே நிரந்தரமாக தங்கியவர்களைத் தவிர ஏனைய யாழ்ப்பாண மக்கள் நீண்ட காலம் யுத்ததின் கொடிய அழிவுகளிலிருந்து தப்பிக் கொண்டனர்.

1995 க்கு பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வீக மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெளியேறி விட்டனர். பலர் புலம்பெயர்ந்து சென்றவர்களை விட ஏனையோர் தென்னிலங்கையில் கொழும்பில் குடியேறிவிட்டார்கள்.

வன்னி மாவட்டம் கிளிநொச்சியைப் பொறுத்தவரை ஏ 9 நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்வதும் வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணிக்கலாம். வடக்கு கிழக்கை இணைக்கும் இடத்தில் வன்னி மாவட்டம் உள்ளது. மேலும் வன்னி மாவட்டத்தில் பெருமளவான அரசாங்க காணிகள் உள்ளன. தனியார் காணிகளை சுவீகரித்து பணம் கொடுக்கத் தேவையில்லை. மேலும் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசமாக வன்னி உள்ளது. அந்த வகையில் சர்வதேச விமான நிலையத்துக்கான பொருத்தமான இடம் வன்னியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமாரின் கோரிக்கை மிகப் பொருத்தமானதே.

நீண்ட கால நோக்கில் சனத்தொகை அடர்த்தி மிக்க யாழ்ப்பாணத்திலிருந்து சனத்தொகை அடர்த்தி குறைந்த வன்னிக்குக் கொண்டு செல்வதன் மூலமே அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்த முடியும். எதிர்கால விஸ்தரிப்புக்கும் இதுவே பொருத்தமானது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்குக் கொண்டு சென்ற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடு பாராட்டுக்குரியது.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டுடனான தொப்புள் கொடி உறவை பேண வலுப்படுத்த தற்போது கப்பல் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன் துறை இறங்குதுறைக்கு நாகப்பட்டினத்திலிருந்து கப்பல் போக்குவரத்து கிரமமாக இடம்பெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 90 நிமிடங்களில் வந்து விடலாம். கிளிநொச்சி துரிதமாக வளர்ந்து வரும் நகரமாகும். யாழ் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை, மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை மற்றும் ஒடுங்கிய சன நெருக்கடி அதிகமான பலாலி வீதி என எப்படி பார்த்தாலும் சர்வதேச விமானநிலையம் வன்னி மாவட்டத்தில் அமைவதே பொருத்தமானதாகவிருக்கும். யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு குளத் தண்ணீரை குடிக்க கொடுக்க மறுக்கும் சிறிதரன், கிளிநொச்சிக்கு சர்வதேச விமான நிலையம் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை என்பது தான் இராஜதந்திரமாகும். சிறிதரனுக்கு யாழ்ப்பாண வாக்கும் வேண்டும் கிளிநொச்சி வாக்கும் வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தீவகத்திற்குள் கொண்டு வருவது கூட பொருத்தமானதாக அமையலாம். பெரும்பாலன தீவுகள் மக்கள் இல்லாது வெறிச்சேடிக் கிடக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட சர்வதேச ரீதியாக கிரிக்கெட் ரசிகர்கள் வரும் போது தீவகத்தில் உல்லாச பயணத்துறையையும் அபிவிருத்தி செய்யலாம். தீவகத்தில் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

வடக்கு – கிழக்கில் பெண்களின் வேலை வாய்ப்புக்கு அச்சுறுத்தல் – ஜிஎஸ்பி வரிச்சலுகைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், டிரிஎன்ஏ தங்கள் நிலைப்பாடட்டைச் சொல்லவும் !

வடக்கு – கிழக்கில் பெண்களின் வேலை வாய்ப்புக்கு அச்சுறுத்தல் – ஜிஎஸ்பி வரிச்சலுகைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், டிரிஎன்ஏ தங்கள் நிலைப்பாடட்டைச் சொல்லவும் !

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் அதனை இலங்கைக்கு மறுக்க வேண்டும் என்ற தொனியிலேயே தமிழ் தேசியக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளன. ஆனால் அவர்கள் அதனை முழுமையாக மக்கள் முன் தெரிவிப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டில் உள்ள அவர்களின் எஜமானர்கள் இலங்கை அரசைப் பழிவாங்கும் எண்ணத்தில் மனித உரிமைகளின் அடிப்படையில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கக்கூடாது என வாதிடுகின்றனர்.

ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவது குறித்து மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய குழு இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் மே 7ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருந்து அவர்கள் தங்களுடைய மதிப்பீட்டை மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரசஅதிகாரி கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், சிவில் சமூகம், வணிக சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என பல தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படக் கூடாது என புலம்பெயர்ந்து வாழ்கின்ற சில தமிழ் அமைப்புகள் கோரிவருகின்றனர். பிரித்தானிய தொழிற்கட்சியின் முக்கிய பிரமுகர் சென் கந்தையா தாங்கள் இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கவிடாமல் தடுப்போம் என தேசம்நெற் இல் சூழுரைத்து இருந்தார். மனித உரிமைகள் விடயத்தில் வன்னி யுத்தத்திற்கு சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு மறுப்பதால் அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தாங்கள் இந்த அழுத்தத்தை வழங்குவதாக சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.

 

இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கட்சிகள் கொண்டிருந்த போதும் அவர்கள் இதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஊடகங்களும் அவர்களுடைய கருத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவை தமிழ் கட்சிகள் சந்திக்க உள்ளனவா? அவர்கள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என்று கோருவார்களா, வழங்க வேண்டாம் என்று குறுவார்களா? இது தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்களுடைய கருத்துக்களை மிக வெளிப்படையாக வைக்க வேண்டும். ஜிஎஸ்பி வரிச்சலுகை மறுக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படும். அதனால் இது தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.

அமெரிக்கா இறக்குமதிக்கான தீர்வை யை இலங்கைக்கு சடுதியாக அதிகரித்துள்ளதால் இலங்கை மிகுந்த பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. இதனால் மூன்று லட்சம் வரையான பெண்கள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. ஜிஎஸ்பி வரிச்சலுகையையும் இலங்கை இழந்தால் வேலையிழக்கும் பெண்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னணியில் இன்றைய தினம் கூடும் அமைச்சரவை, பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பன குறித்து முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளனர். இதன்படி, நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முழு மையாக நீக்கவும் புதிய சட்டம் ஒன்றை
நிறைவேற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்துகின்றது என்பதனை தேசம்நெற் சில தினங்களுக்கு முன் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையில் பயனடையும் குறைந்த அல்லது நடுத்தர வருமானமட கொண்ட 8 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மனித உரிமை கள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச மரபுகளை அங்கீகரித்த
பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளின் நலன் கருதி இந்த சலுகை வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெறும் நாடுகளை இரு வருடங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்து சலுகைக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்.

இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. கடந்த ஆண்டு
270 கோடி யூரோவை இலாபமாக இலங்கை ஈட்டியது. இந்த ஏற்றுமதிகளில் 85 சதவீதம் ஜி. எஸ். பி. பிளஸ்
வரிச் சலுகை மூலம் கிடைத்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. ஆனாலும் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகளுக்கே தன்னுடைய பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் இந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதனாலேயே அமெரிக்கா இறக்குமதித் தீர்வையை அதிகரித்ததும் இலங்கை மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது. ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் தற்போது அதிகரித்துள்ளது.

இலங்கைப் பொருளாதாரம் – தேசியவாதம் பற்றி சமூக அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் ரவி சுந்தரலிங்கம் குறிப்பிடுகையில் ஜேவிபி தேசியவாதத்தைக் விட்டுவிட்டதாகவும் தமிழ் கட்சிகளும் தேசியவாதத்தைக் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். புலத்திலிருந்து சென் கந்தையா போன்றவர்களும் தமிழ் தேசியக் கட்சிகளும் ஜிஎஸ்பி பிளஸ் யை நிராகரிக்கக் கோருவது முட்டாள்தனம் என்பதையும் அவர் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டினார்.

 

ஐந்து வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் !

ஐந்து வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் !

இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர். உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார தெரிவித்த்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலமைப்பரிசில் பரீட்சையை தடை செய்யாததால் வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.

எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார தெரிவித்துள்ளார்.

 

இணையவழி குற்ற விசாரணைப் பிரிவு யாழில் திறப்பு !

இணையவழி குற்ற விசாரணைப் பிரிவு யாழில் திறப்பு !

வட மாகாணத்தில் இணையவழி குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற காரணத்தினால்,
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் வரை வழங்கப்படும்!

உள்ளூராட்சி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் வரை வழங்கப்படும்!

மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களுக்குரிய அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தமது அடையாளத்தைச் சரி செய்து, பின்னர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்காளர் அட்டைகளைத் தவிர, வேறு வாக்காளர் அட்டைகளை தம்வசம் வைத்திருப்பது குற்றம் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கைப் பதிவு செய்யத் தவறியவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 6,48,490 பேர் தகுதி பெற்றனர். இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 கனடா வான்கூவரில் தெருவிழாவில் காரால் மோதித் தள்ளி 11 பேர் பலி !

 கனடா வான்கூவரில் தெருவிழாவில் காரால் மோதித் தள்ளி 11 பேர் பலி !

வன்கூவரில் நடந்த பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தை கொண்டாடும் “லாபு லாபு“ என்றழைக்கப்படும் தெரு விழா கூட்டத்திற்குள் கார் ஒன்றை செலுத்தி வந்த நபர், பாதசாரிகள் மீது மோதியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக வன்கூவர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 20:14 மணிக்கு நடந்ததுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கனேடிய பிரதமர் மார்க் கானி தெரிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதல் குறித்து கூறும் போது அவர் கனடாவின் இதயம் நொருங்கியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாகனத்தைச் செலுத்தி வந்த 30 வயதுடைய ஒரு ஆண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் வன்கூவர் காவல்துறை இந்த சம்பவம் பயங்கரவாத செயல் அல்ல என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கனேடிய உள்ளூர் நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று டைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் இச்சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

இதேமாதிரியே ஜேர்மனியில் பொதுத்தேர்தல் சமயத்தில் அடுத்தடுத்து காரால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சியான ஏஎப்ஃடி ( AFD) இப்படியான தாக்குதலை தனது தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபட்டது. தேர்தல் பெறுபேறுகளில் கணிசமானளவு வெற்றியையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கனடாவின் வலதுசாரிக்கட்சியான பழமைவாத கட்சி – கென்சர்வேடிவ் கட்சிக்கு இச்சம்பவம் மேலதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு !

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு !

நாட்டில் இதுவரை 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கேனும் தற்போதைய சுகாதார அமைச்சர் தயாராக இல்லை என துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

என்பிபி மீது பழிபோட ஓடித்திரியும் போலித் தமிழ் தேசியம் – பேனைப் பெருச்சாளியாக்கும் முயற்சிகள் !

என்பிபி மீது பழிபோட ஓடித்திரியும் போலித் தமிழ் தேசியம் – பேனைப் பெருச்சாளியாக்கும் முயற்சிகள் !

கிரிபத்கொட பிரதேசத்தில் தனிநபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காணொளியொன்று சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பரப்பப்பட்டு வருகின்றன. அக்காணொளியில் ஆண் ஒருவர் பிரதான சாலையொன்றில் தூரத்திச் சென்று தாக்கப்படுகிறார். இந்தக் காணொளியை பகிரும் சில தமிழ் சமூகவலைத்தள பயனாளிகள் என்பிபியினரே வீதியில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக பொதுமகனை தாக்குவதாக குற்றம் சாட்டினர்.

உண்மையில் நடந்தது என்னவென்றால் கிரிபத்கொட பகுதியில் நடந்த பெண்ணொருவருடனான காதல் விவகாரத்தாலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக தேர்தல் காலத்தில் பல போலியான காணொளிகள் பரப்பட்டு வருவது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு பல பொய்ச் செய்திகளும் அரைகுறைத் தகவல்களும் எதிர்க் கட்சிகளால் பரப்பப்பட்டு வருகின்றது. தமிழ் கட்சிகள் உட்பட்ட எதிர்கட்சிகள் மக்கள் ஏன் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நியாயத்தை வைக்கவில்லை. உள்ளுராட்சி சபையை வென்றால் தாங்கள் என்ன செய்வோம் என்றும் அவர்கள் எதையும் முன் வைக்கவில்லை. உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்ததுமே கட்சிக் கொள்கைகள் இவ்வாமலேயே போட்டியிட்ட இவர்கள் மத்தியில் பதவிக்கான போட்டிகள் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை பற்றி நல்லூர் பிரதேச சபை பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மாநகரசபை வேட்பாளர் எஸ் கபிலன் “நாங்கள் பேசுவதை அப்படியே போடுங்கள் வெட்டிக் கொத்தி திரித்து போடுகின்றீர்கள். எல்லாத் தொழிலுக்கும் ஒரு தொழில் தர்மம் இருக்கின்றது. அப்படிச் செய்யாதவர்களை என்னவென்று அழைப்பது” என்றும் கேள்வி எழுப்பினார். “தேசிய மக்களுடைய ஆட்சியில் எங்களை விமர்சிப்பதற்கும், தூற்றுவதற்குமான சுதந்திரத்தை நாங்கள் தந்திருக்கின்றோம்” என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார் மாநகரசபை வேட்பாளர் எஸ் கபிலன். ‘இந்த உரை ஸ்ரிட்ஸ் ஒப் ஈழம்’ என்ற காணொலிக் குழுமத்திலிருந்து பெறப்பட்டது. ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் சேறுபூசல்களைப் பார்க்கின்ற போது மனவருத்தமாக இருப்பதாக தனது ஆதங்கத்தை தேசம்நெற் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

 

இராணுவ வசமுள்ள கிளிநொச்சி காணிகளும் விடுவிக்கப்படும் ஜனாதிபதி வாக்குறுதி !

இராணுவ வசமுள்ள கிளிநொச்சி காணிகளும் விடுவிக்கப்படும் ஜனாதிபதி வாக்குறுதி !

சனிக்கிழமையான ஏப்பிரல் 26 இல் கிளிநொச்சியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். கிளிநொச்சியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும். இது தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் மூடப்பட்ட வீதிகள் திறந்து விடப்பட்டது போன்று கிளிநொச்சியிலும் பொதுமக்கள் பாவணைக்கு தடை விதிக்கப்பட்ட வீதிகள் திறக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். அதேபோன்று போரில் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்ட முடியாதுள்ளனர். அம்மக்களுக்கு வீடுகளை கட்டிக்க ஆவன செய்யவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

பாரம்பரியமாக பயிரிட்டு வந்த மக்களின் நிலங்கள் கூகுள் வரைபடத் துணையுடன் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்துட்டுள்ள விவசாய நிலங்களும் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கிளிநொச்சி மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளூராட்ச்சித் தேர்தலில் வாக்குச் சேகரித்தார்.

கிளிநொச்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புதுக்குடியிருப்பில் தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கைக்கு கடுகளவு சீர்குலைக்க மாட்டோம் என்றும் உணர்ச்சிவசப்பட்டார்.

புதுக்குடியிருப்பில் உரையாற்றிய ஜனாதிபதி இனவாத அரசியல் இனியும் வேண்டாம். எங்களுடைய முதலாவது ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் மீண்டுமொரு தடவை நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தில் பங்குபெறுமாறு புலம்பெயர் தமிழர்களிற்கும் அழைப்பு விடுத்தார்.

 

 

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வீடொன்றில் வைத்து 15 வயதான சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். தாயின் பராமரிப்பில் வாழும் அச்சிறுமிக்கு இக்கொடுமை 13 வயதிலிருந்து ஆரம்பித்துள்ளது.

இனிப்பு பண்டங்களை கொடுத்து அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒரு கூட்டம், தங்களிடம் சிறுமியின் அந்தரங்க காணொளி இருப்பதாக பயமுறுத்தி தொடர்ந்து பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து வந்திருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த மோசமான செயலில் இரு பெண்கள் பிரதான குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதிலொரு பெண் ரிக்ரொக்கில் பிரபலமானவர் எனவும் கூறப்படுகிறது. குறித்த பெண்ணின் வீட்டிலேயே சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியான இச்சிறுமியை தாயாருக்கு தெரியாமலேயே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் பெற்று வந்துள்ளனர்.

யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் மாணவி கொடுத்த வாக்கு மூலத்தின்படி மூன்றுபேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதானவர்களில் இரு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகிறது. கைதான 45 வயதான ஆண், சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த வருட இறுதியில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் கூட பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் பாலியல் கல்வியின் அவசியத்தை இவ்வாறான துயர அனுபவங்கள் உணர்த்துகின்றன. பிள்ளைகள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை பாடசாலையிலேயே செலவிடுகின்றனர். மேற்கு நாடுகளில் ஆசிரியர்கள் வகுப்பறையில் அட்டவணைப் பாடங்களை மட்டுமே கற்பிப்பதில்லை. வகுப்பாசிரியரின் கடமை மாணவர்களின் உள, உடல் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இலங்கையில் இன்னமுமே பாலியல் கல்வி மற்றும் பாலியல் சுகாதாரம் தொடர்பில் போதிய விழிப்புணர்வும் அறிவும் பற்றாக்குறையாகவுள்ளது. கிளிநொச்சியில் கனிஸ்ட மகா வித்தியாலயத்தில் 16 ஆண் சிறுவர்கள் அப்பாடசாலை கிரிக்கெட் பயிற்றிவிப்பாளர் அலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான போது கூட பாடசாலை நிர்வாகம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தது.

இந்த விடயம் ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்த போது எம்பி சிவஞானம் சிறிதரனின் அரசியல் செல்வாக்கால் மூடி மறைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரின் முயற்சியால் அலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பிடோபைஃல் (PEDOPHILE) தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வட்டுக்கோட்டையில் கைதான 45 வயது ஆண் கூட பிடோபைஃல் ஆக இருக்க சந்தர்ப்பம் உண்டு. எனவே வட்டுக்கோட்டை பகுதியில் வேறு சிறுவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்களாக என பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். வட்டுக்கோட்டைச் சம்பவத்தில் கைதான பெண்கள் வேறு சிறுமிகளையும் இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு விற்றுள்ளார்களாக என போலீசார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறுமியை தமது பராமரிப்பில் எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறுமியின் எதிர்காலக் கல்வி மற்றும் சிகிச்சை தொடர்பில் வேண்டிய உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது சமூகம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.