Multiple Page/Post

சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று ஆரம்பம்

sarath_fonseka-02.jpgமுன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை இன்று 16ம் திகதி ஆரம்பமாகிறது. முதலாவது இராணுவ நீதிமன்றின் முதலாவது அமர்வு இன்று கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய முதல் அமர்வின்போது மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை, 2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை ஆகிய இரண்டு பிரதான வகையிலான விசாரணைகளை முன்னெடுக்கவே இரு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டும், 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றைய அமர்வின்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின்போது நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த இரு இராணுவ நீதிமன்றங்களின் தலைவராக மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவும், அதன் உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல். ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ. பி. ஜயலதிக்க ஆகியோரும், நீதிபதி அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னான்டோவும் செயற்பட வுள்ளனர்.

பொன்சேகாவின் கைது அரசியலமைப்புக்கு முரண், நாட்டில் ஜனநாயகம் இல்லை; முன்னாள் பிரதம நீதியரசர்

sarath_silva.jpg“கருத்து பேதத்துக்கு இடமில்லாவிடின் ஜனநாயகம் இல்லை என்பதே எனது கருத்து” என்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதம நீதியரசர், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்றும் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக சரத் என் சில்வா மேலும் தெரிவித்ததாவது;

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அதிகாரமுள்ள நீதிமன்றத்தில் இன்னும் ஆஜர்படுத்தப்படாமல் இராணுவத்தின் தடுப்புக் காவலில் வைத்திருந்து தற்போது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இது சட்டபூர்வமானதா இல்லையா என்பதே இங்கு அடிப்படை பிரச்சினையாகவுள்ளது.

எமது நாட்டில் அரசியலமைப்பே உயரிய சட்டமாக இருக்கிறது. இதில் அடிப்படை உரிமைகள் என்பது பல வழிகளிலும் பாதுகாக்கப்படுகிறது. இதில் பிரதான அடிப்படை உரிமையாக தனிநபர் சுதந்திரம் இருக்கிறது. அப்படி அதை மட்டுப்படுத்தி யாதுமொரு நபரை கைது செய்யவோ அல்லது சிறைவைக்கவோ வேண்டுமெனில் அரசியலமைப்பின் 13(1) சரத்தின் பிரகாரமே அதைச் செய்ய வேண்டும். அந்த சரத்தில் தனிநபர் சுதந்திரம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது யாதுமொரு நபரை தனிநபர் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி கைது செய்யவோ அல்லது சிறை வைக்கவோ வேண்டுமெனில் நாட்டின் சட்டத்திற்கு அமையவே அதை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அப்படிக் கைது செய்யப்பட்ட நபரொருவர் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குள் உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமென அரசியலமைப்பின் 13(2) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்குகளை செயற்படுத்தும் ஏனைய சட்டங்கள் தொடர்பாக அரசியலமைப்பின் 13(3), 13(4), 13(5) ஆகிய சரத்துகளில் விபரிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் யாதேனுமொரு நபருக்கு தண்டனை வழங்கப்படும் முன்னர் சாதாரண நீதிமன்றத்தில் திறந்த விசாரணை நடத்தி சட்டத்தரணிகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்து சட்டத்தின் மூலமான ஏற்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும்.

எனினும் இங்கு அது தலைகீழாக நடந்துள்ளது. குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய முறைகள் பற்றி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கக் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. யாதுமொரு குற்றம் பற்றி தகவல் கிடைத்தால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து, அது பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி சந்தேக நபரை கைது செய்ய செயற்பட வேண்டும் என அச் சட்டத்தின் 109 ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் யாதுமொருவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணம் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டுமென குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 32 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்தச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும் அதிகாரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர இராணுவ அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.

அது மட்டுமல்லாது இச் சட்டத்தின் 37 ஆவது சரத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்துக்குள் உரிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும். இதில் எதிலும் சரத் பொன்சேகாவின் உரிமை பாதுகாக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 13(1), 13(2) சரத்துகள் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 109, 32, 37 சரத்துகள் என்பன இங்கு பாதுகாக்கப்படவில்லை.

இதேநேரம், இங்கு இலங்கைச் சட்டம் மட்டும் முக்கியமல்ல. எமது அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டரீதியான சட்டம் இருக்கிறது. எமது அடிப்படை உரிமைகளானது சர்வதேச ரீதியில் மனிதஉரிமைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. 1948 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட ஐ.நா.வின் மனிதஉரிமைகள் சர்வதேச பிரகடனத்தை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் 3 ஆம் மற்றும் 9 ஆம் சரத்துகளில் நாம் முன்பு கூறிய உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது தனிநபர் சுதந்திர உரிமை மற்றும் தன்னிச்சையான கைதிலிருந்து நபரொருவர் பெற்றிருக்கும் சுதந்திரம் என்பன இதில் அடங்கும். ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்திலும் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த இந்த சாசனத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை பங்காளியானது. அதன் பின்னர் இலங்கைக்கு ஒரு அரசு என்ற வகையில் நாட்டிலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளது. எனவே தான் இந்தக் கைதானது அரசியலமைப்புக்கு மட்டுமல்லாது ஐ.நா.வின் மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்திற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனத்தின் 9 ஆவது சரத்துக்கும் முரணானது.

இதேநேரம் இந்தக் கைதானது இராணுவச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார்கள். இலங்கை இராணுவச் சட்டமானது இராணுவத்தின் ஸ்தாபிப்புக்காகவும் நடப்புக்காகவும் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இராணுவச் சட்டத்தின் பிரகாரமான பல குற்றங்கள் இருக்கின்றன. எனினும் அவை அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே பொருந்தும். எனவே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்கள் யார் என்பது அந்தச் சட்டத்தின் 34 ஆவது சரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது சாதாரண இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள், தொண்டர்படை அதிகாரிகள் அதன் சிப்பாய்கள் ஆகியோர் மட்டுமே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனினும் இராணுவத் தளபதியை அதிகாரியாக கருவதே இங்கு சிக்கலாகியுள்ளது. எனினும் அப்படியொன்று நடக்க இந்தச் சட்டத்தில் இடமில்லை.

இராணுவச் சட்டத்தின் 162 ஆவது சரத்தில் “அதிகாரி எனும் சொல் வரைவிலக்கணப் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது இராணுவத்தில் அதிகாரமளிக்கப்பட்டவர் மட்டுமே அதிகாரியாக வரைவிலக்கணப் படுத்தப்படுகிறார். எனவே அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்படும் சிப்பாய்களும் மட்டுமே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி என்பவர் பற்றி இராணுவ சட்டத்தின் 2 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். அவர்களது பதவியுயர்வு, பதவி நீக்கம் என்பன சட்டத்தின் 12 ஆவது சரத்தின் பிரகாரம் மேற்கொள்ள முடியும். அத்துடன் சிப்பாய்கள் ஆட்சேர்ப்பு பற்றி இராணுவச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் குறிப்பிடப்படுகிறது.

இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது

unp-logo.jpgபொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வெளியிடப்படவிருக்கின்றது. இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் வைபவத்தின் போது இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் தேர்தல் விஞ்ஞாபனம் இரு பிரிவுகளாக வெளியிடப்படவிருக்கின்றது. இன்று பிரதான விஞ்ஞாபனம் வெளியாகும். அதேசமயம் பெண்களுக்கான ஒரு இணைப்பு விஞ்ஞாபனம் நாளை மறுதினம் வியாழக்கிழமை வெளியிடப்படவிருப்பதாக ஐ.தே.க.செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்நகரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்க வடகிழக்கு தமிழ் மக்களுக்கான தனது வேண்டுகோள் எனும் தலைப்பிலான பிரசுரமொன்றும் வழங்கப்பட விருக்கின்றது.

ஐ.தே.முன்னணியின் விஞ்ஞாபனம்ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கின்றது. மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள விருக்கின்றனர்.

இன்று காலை 10 மணிக்கு இடம் பெறும் இவ்வைபவத்தில் ஜே.வி.பி தலைவர் சோமவன்ஸ அமரசிங்க,செயலாளர் ரில்வின் சில்வா, விஜித ஹேரத், அநுரகுமார திசாநாயக்க ஆகியோருடன் ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவும் ஜனநாயக தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வர்.

இன, மத, பேதங்களைத் தூண்டும் சக்திகளை தோற்கடிக்க மக்கள் அணி திரள வேண்டும் – ஜனாதிபதி

president.jpgகுறுகிய அரசியல் இலாபங்களைக் கருத்திற்கொண்டு தேர்தல் என்ற போர்வையில் மீண்டும் நாட்டில் இன, மத, குல பேதங்களைத் தூண்டிவிட சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அந்நோக்கங்களைத் தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் ஒன்று திரள வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். விருப்பு வாக்கு மோதல்களைத் தவிர்த்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து செயற்படக் கூடிய காலம் உருவாகியுள்ளதென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சாகல ரஜமஹா விகாரையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் மேலும் உரை யாற்றிய ஜனாதிபதி: நாட்டின் அபி விருத்தியை வெற்றிகரமாக முன் னெடுத்துச் செல்வதற்கு நாட்டு மக்களின் உள ரீதியான அபிவிருத்தி மிக முக்கியமானது.

கடந்த காலங்களில் பிளவுபட்டு புலிகளுக்கு உரித்தாகியிருந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களை மீட்டு, ஒன்றிணைக்க எம்மால் முடிந்துள் ளது. மனிதாபிமான நடவடிக்கைகள் நடைபெற்ற காலங்களிலும் நாம் நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்தோம்.  கடந்த காலங்களில் பாதைகளை, வாய்க்கால்களை அமைப்பதற்கும் யுத்தத்தை காரணங் காட்டி வந்துள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களில் நாம் நாட்டை ஒன்றிணைத்ததோடு முழு நாட்டையும் அபிவிருத்திக்குள் ளாக்கும் செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.  கொங்கிரீட் பாதைகள், குடிநீர் வசதிகள் மட்டுமன்றி எதிர்கால த்திற்குத் தேவையான மின்சாரத் தைப் பெற்றுக்கொள்ளவென நுரைச்சோலை, மேல் கொத்மலை போன்ற பாரிய மின் உற்பத்தித் திட்டங்களையும் நடைமுறைப் படுத்தியுள்ளோம்.

ஒரே தடவையில் ஐந்து துறை முகங்களின் நிர்மாணப் பணிகள் நடைபெறுகின்றன. இத்துறைமுகங் கள் செயற்படத் தொடங்கியதும் நாட்டின் கைத்தொழிற்றுறைகளில் அபிவிருத்தி ஏற்படும். நாம் நாட்டின் சகல பிரதேசங் களிலுமுள்ள பிரதேச பாதைகளை அபிவிருத்தி செய்ததன் மூலம் இன்று எங்கும் சென்று வரக்கூடிய வழிபிறந்துள்ளது.

அதே போன்று அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் துறை முகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டு மைதானம் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமக்கு சிறந்த எதிர்கால சந்ததி அவசியம். அதனைக் கருத்திற் கொண்டே சகல நடவடிக்கைக ளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இந்த பயணத்திற்கு வலுவூட்டும் மக்களுக்கு நாம் நன்றி கூறக் கடமை ப்பட்டுள்ளோம். எமக்குப் பலமான பாராளுமன்றமொன்று அவசியம். வடக்கு கிழங்கை மீள இணைத்து தனி ராஜ்யமொன்றை ஏற்படுத்த வென புலிகளின் ஆதரவாளர்களாகச் செயற்படுபவர்களுக்கு இந்த நாட் டைக் காட்டிக்கொடுக்க முடியாது.  பலமான பாராளுமன்றத்தை அமைக்க நாம் அனைவரும் ஒன்றி ணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பலமான பாராளுமன்றம் அவசியம்; ஆனால் பாரிய அமைச்சரவை எமக்கு அவசியமில்லை.  இந்நாட்டைக் கட்டியெழுப்பும் சக்தி மிக்கோரே எமக்குத் தேவை. அதற்காக புதிய இளைஞர்கள் ஒன்றி ணைந்துள்ளனர்.  அவர்களையும் இணைத்துக் கொண்டு நாம் இப்பயணத்தைத் தொடர்வோம் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை வேட்பாளர்கள் சந்திக்கலாம்

dig.jpgபொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் தங்களது பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதன் மூலம் அந்தந்த பிரதேசத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள வசதியாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் இணக்கப்பாட்டுடன் செயற்பட முடிவதுடன், பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கவலை

இலங் கையில் மனித உரிமை பணியாளர்களும், ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் அறிக்கைகள் தொடர்பாகப் பீதியடைந்திருப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் குழு கூறியுள்ளது. மனித உரிமை பணியாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்படும் சாத்தியப்பாடு குறித்தும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் 35 மனித உரிமைகள் பணியாளர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உரிமைகள் பணியாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்று அரசு கூறி வருகிறது. பட்டியலில் இலங்கையின் முன்னணி மனித உரிமைகள் விவகாரத்துக்கான சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, உரிமைகள் பணியாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரால் பட்டியலில் முன்னணி இடத்திலிருப்பது புரிந்து கொள்ளப்பட்டதொன்று என்றும் அதிகாரிகளால் இலக்குவைக்கப்படவிருப்பவர்கள் எனவும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசை விமர்சித்த 35 பணியாளர்கள், சட்டத்தரணிகள்,  ஊடகவியலாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் பட்டியல் தொடர்பாக அரசு உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை. உடல் ரீதியான தாக்குதல்கள்,மரண அச்சுறுத்தல்கள் உட்பட பாரதூரமான தொந்தரவுகளுக்கு முன்னர் இலக்காகியிருந்த வெலியமுன்ன மற்றும் சரவணமுத்து ஆகியோரின் பாதுகாப்புத் தொடர்பாக ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

சமூகத்துக்கு ஆபத்தான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமை கண்காணிப்பகம்,ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர்நெஷனல் ஸ்ரீலங்கா, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்பன அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் மனித உரிமைகள் பணியாளர்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அண்மையில் கவலை தெரிவித்திருந்தது.சர்வதேச அமைப்புகள் இது தொடர்பாக கவலையை வெளிப்படுத்துமாறு சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தை அணுகியதாக அந்த அமைப்பைச் சேர்ந்த அலெக்ஸ் வில்க்ஸ் பி.பி.சி. சிங்கள சேவைக்குக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனநாயகக் கோட்பாடுகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மற்றொரு உறுப்பினரான ஜயான் மென்டிஸ் கூறியுள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு 359 மில்லியன் ரூபா மேலதிக வருமானம் ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

sri-lanka-railway.jpgபுதிய ரயில் சேவைகளை ஆரம்பித்தமை உட்பட பல்வேறு திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தியதையடுத்து இலங்கை புகையிரதத் திணைக்களம் கடந்த வருடத்தில் 359 மில்லியன் ரூபாவினை மேலதிக வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கிணங்க இவ்வருடத்தில் 5000 மில்லியன் ரூபா வருமானம் கிட்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

2008ம் ஆண்டில் ரயில்வே திணைக்களம் 3671 மில்லியன் ரூபாவையும் 2009 ஆம் ஆண்டில் 4020 மில்லியன் ரூபாவையும் வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த வருடங்களை ஒப்பிடும் போது 359 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டில் மேலதிக வருமானமாகப் பெற முடிந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இவ்வாண்டில் 5000 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறும் வகையில் ரயில்வே திணைக்களம் புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்கிணங்க இதுவரை காலமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில்வே காணிகளைக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் விற்பனைக் கூடங்கள், கடைகள், சிறிய வியாபார நிலையங்களை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

பாவனைக்கு உதவாத இரும்பு மற்றும் உலோகப் பொருட்களை விற்பனை செய்தல் வர்த்தக விளம்பரப் பலகைகளுக்கான அனுமதி வழங்கல், புதிய ரயில் சேவைகளை ஆரம்பித்தல் உட்பட பல்வேறு வழிகளிலும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்தல் என்பன இத்திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.

இலங்கைக்கு தெற்கே கடலுக்கடியில் நிலநடுக்கம்

இலங்கையின் தெற்குக்கும், தென் கிழக்குக்கும் இடையிலான திசையில் கொழும்பிலிருந்து 1155 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடலுக்கடியில் நேற்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பூகற்பவியலாளர் நில்மினி தல்வெல தெரிவித்தார்.

கடலுக்கடியில் சுமார் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று அதிகாலை 2.03 மணியளவில் 6.00 ரிச்டர் அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் அவர் கூறினார். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எதுவிதமான பாதிப்புமே ஏற்படவில்லை.

அதனால் சுனாமி அச்சுறுத்தல் குறித்த முன்னெடுச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஜப்பானின் வடபகுதியில் 6.6 ரிச்டர் அலகிலும், கிழக்கு இந்தோனேசியத் தீவான ‘மலு க்கு’வுக்கு அருகில் 7.00 ரிச்டர் அலகிலும் நேற்று முன்தினம் நிலநடுக்கம் பதிவான தாகவும் பணியகம் அறிவித்திருந்தது.

நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு மக்கள் சக்தியுடன் கூடிய பாராளுமன்றம் தேவை – ஜனாதிபதி

president.jpgநாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் சக்தியினால் கட்டியெழுப்பப்பட்ட பாராளுமன்றம் அவசியமாகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். லுனுகம் வெஹேரயில் நேற்று (14) கடலோர கிராமமொன்றில் புதிய கலாசார நிலையமொன்றை திறந்து வைத்து பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது, கோபத்துடனும் குரோதத்துடனும் அரசியல் செய்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வருவோம். நாட்டைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவோம். சக்திமிக்க பாராளுமன்றை கட்டியெழுப்புவதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

அபிவிருத்தி இன்று கிராமத்துக்கு வந்துள்ளது. பாதைகள், பாலங்கள் மட்டுமன்றி எமது சிறுவர்களின் மனநிலையும் குணநலன்களும் கூட வளர்ச்சியடைந்துள்ளன. எந்த ஒருவரும் எம்மை விமர்சிக்க முடியும். ஆனால், நாட்டின் எதிர்காலத்தையோ அல்லது எமது சிறுவர்களின் எதிர்காலத்தையோ காட்டிக் கொடுக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. நாம் இன்று இந்த கிராமத்தை அபிவிருத்தி செய்துள்ளோம். அது இந்த சிறுவர்களுக்காக அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக. இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த அபிவிருத்தி இன்று நாடு முழுவதற்கும் வியாபித்துள்ளது.

பாரிய துறைமுகங்கள் நிர்மாணிக் கப்படுகின்றன. விமான நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு துறைமுகங்கள் அமைந்துள்ள ஒரே பிரதேசம் திஸ்ஸ மகாராம பிரதேசமாகும். இந்த அபிவிருத்தியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று எமது கல்வி முறையாகட்டும், தொழில் பயிற்சி துறையாகட்டும் உயர்ந்த மட்டத்தில் உள்ளன. இன்று எமக்கு பாரிய தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இன்று இப்பிரதேசம் உல்லாசப் பயணிகளின் வருகையை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் அபிவிருத்தியை இதனுடன் நிறுத்திவிடப் போவதில்லை. இது மொனராகலை, பிபில, மஹியங்கனை வரை கொண்டு செல்லப்படும். இன்று சிறந்த வீதிக் கட்டமைப்பு எமக்கு இருக்கிறது. இன்றைய நிலையை எதிர்பார்த்து இவற்றை நாம் செய்ய வில்லை. நாளைய நிலையை நினைத்த நாம் அவற்றை மேற்கொண்டோம். நீண்ட எதிர்காலத்தை எதிர்பார்த்து நாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

இன்று இந்த நாட்டை கட்டியெழுப்ப புதிய இளைய சமுதாயமொன்று முன்வந்துள்ளது.

அவர்களது கரங்களை பலப்படுத்தி எதிர்கால உலகத்தை வெற்றிக் கொள்ளக் கூடிய சிறுவர் பரம்பரையை கட்டியெழுப்புவதன் மூலம் அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

நிபுணர்குழுவை அமைக்கும் யோசனையை பான் கீ மூன் மீள்பரிசீலனை செய்வார்

un-secretary-general.jpgஅணிசேரா அமையமானது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதையடுத்து இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை கூறுவதற்கு விசேட நிபுணர்குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீள்பரிசீலனை செய்யக்கூடும் என்று ஐ.நா. வட்டாரங்கள் கூறியுள்ளன.

அணிசேரா அமையத்தின் எதிர்ப்பால் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் “ஆடிப் போயிருப்பதாக தம்மை அடையாளம் காட்ட விரும்பாத ஐ.நா. வட்டாரங்கள் டெய்லிமிரர் இணையத்தளத்துக்குக் கூறியுள்ளன. செயலாளர் நாயகத்தின் அலுவலகமானது அணிசேரா அமையத்தின் எதிர்ப்பால் நிலைகுலைந்து போயிருப்பதை அறியக்கூடியதாகவிருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆதலால், இந்த விடயம் தொடர்பாக பான் கீ மூன் மீளச்சிந்திக்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாடுடைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை தெரிவிப்பதற்கு விசேட நிபுணர் குழுவை அமைக்கப் போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அறிவித்ததையிட்டு கடந்தவாரம் அணிசேரா அமையம் விசனத்தைத் தெரிவித்திருந்தது.

இலங்கையின் உள்நாட்டு நிலைவரம் பற்றிக் கவனத்திற்கு எடுக்காமலும் இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாராயாமலும் விசேட நிபுணர்குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் நியமிக்கவுள்ளமை குறித்து பான் கீ மூனுக்கு அணிசேரா அமையத்தின் நியூயோர்க்கிலுள்ள ஒருங்கிணைப்புப் பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது.

அத்துடன், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தீர்மானமானது இலங்கை அரசின் விருப்பங்களைக் கவனத்திற்கு எடுக்காமலும் உரிய முறையிலான கலந்தாலோசனை மேற்கொள்ளாமலும் எடுக்கப்ப்டடது என்று கடந்த வாரம் அணிசேரா அமையத்துக்கு ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித ஹோகண கூறியிருந்தார்.