Multiple Page/Post

பல்கலைக்கழக மாணவர்களுக்கு லப்டொப் வழங்கப்படும்,

unp-logo.jpgவாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியைத் தற்காலிகமாக ஒருவருடத்திற்குள் நீக்கப்போவதாகவும் ஐ.தே.மு. வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய், காஸ், மின்சாரக் கட்டணம், நீர்க்கட்டணம் குறைக்கப்படுமெனவும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அதன் தலைவர் ரணில் விக்கிரம சிங்க வெளியிட்டார். உங்களுக்கு நிவாரணம்நாட்டிற்கு அபிவிருத்தி என்ற தலைப்பில் கட்சியின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் ஐ.தே.மு.வின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சகல அரச ஊழியருக்கும் 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமெனவும் முதலில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 3500 ரூபா வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகுதி 6500 ரூபாவைத் தவணை முறையில் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பள நிர்ணய சபை ஊடாக தனியார் துறைக்கும் கட்டாயமாக சம்பள உயர்வு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க சட்டமொன்று கொண்டுவரப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஐ.தே.மு.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

வட்டி வீதம் குறைக்கப்படும், ஜி.எஸ்.பி. சலுகை மீண்டும் பெறப்படும், தொழிலை இழந்தால் இழப்புக் காப்பீடு வழங்கப்படும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்துறையை மேம்படுத்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், விவசாயிகளுக்கு அறுவடை வைப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படும், ஆகக் கூடிய விலைக்கு அறுவடைப் பொருட்களை விற்பனை செய்ய உத்தரவாதம் அளிக்கப்படும், சம்பா நெல்லுக்கு 40 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும், விவசாயிகளுக்கு கடன் வசதி, சிறு தேயிலைச் செய்கையாளர்கள், சிறு றப்பர் செய்கையாளர்கள், சிறு தெங்குச் செய்கையாளர்கள், மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக உரிய வசதிகள் மேற்கொள்ளப்படும்.

மலையகத் தொழிலாளர்களுக்கு 2 இலட்சம் புதிய வீடுகள் ஆறு வருடகாலத்திற்குள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும், சமுர்த்திக் கொடுப்பனவு 500 ரூபாவால் அதிகரிக்கப்படும், வெளிநாட்டில் தொழில்புரிவோருக்கு விசேட நிவாரணங்கள் வழங்கப்படும், ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 2 ஆயிரம் ரூபாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், அனைவருக்கும் வீடு கடன் திட்டம் ஆரம்பிக்கப்படும், திறமை அடிப்படையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும், ஆரோக்கியமான சுகாதார சேவையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், நகரத்திலுள்ளவர்களுக்கும் கிராமப்புறத்தவர்களுக்கும் வேறுபாடுகளின்றி சமமான கல்வி வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும், பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெறாவண்ணம் சுயாதீன பரீட்சை அதிகாரசபை உருவாக்கப்படும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு லப்டொப் வழங்கப்படும், பட்டதாரிகளுக்கு வருடாந்தம் 100 புலமைப் பரிசில்கள் வழங்கப்படும், தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வருடாந்தம் 1000 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும், அனைத்துப் பாடசாலைகளிலும் கணினிக் கல்வி ஏற்படுத்தப்படும், பிள்ளைகளுக்கு இலவசப் பாலுணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்துக் கிராமங்களிலுள்ள இளைஞர் அமைப்புகளுக்கு 1 இலட்சம் ரூபா வழங்கி கிராமப்புற அபிவிருத்திக்கு வழிசமைக்கப்படும், சிரேஷ்ட பிரஜைகளுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு வழங்கப்படும், சகல தேர்தல் தொகுதிகளிலுமுள்ள சிரேஷ்ட பிரஜைகளைப் பராமரிக்க சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படும், அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், குழாய் நீர் வசதி, அதி சிறந்த போக்குவரத்து சேவை வழங்கப்படும்.

ஜெனரல் பொன்சேகாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், சிறந்த நிர்வாகம், சட்டம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படும், காப்பீடு மேற்கொள்ளப்படும், அரசியலுக்குள் தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும், அரசியலமைப்பு சபையூடாக சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவி அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படும்.

தேசிய, பிரதேச, உள்ளூராட்சி தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கும் ஆட்சிக் காலத்தை 5 வருடங்களுக்கு மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளை அந்தந்த மாகாணங்களின் அபிவிருத்தி, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவற்றுக்கான பொறுப்பு வழங்கப்படும்.

பிரதமரின் பரிந்துரைக்கு அமைய மாத்திரமே அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள், பாராளுமன்றம் கலைக்கப்படுவது பிரதமர் அல்லது பெரும்பான்மை எம்.பி.க்களின் வாக்குகளின் மூலமே மேற்கொள்ளப்படும், 6 மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றித் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் அவசர காலச்சட்டத்தை நிறைவேற்றவும் ஆறு மாதங்களின் பின்னர் 2/3 பெரும்பான்மை பலத்துடன் அவற்றை நிறைவேற்றவும் ஏற்றவாறு நடவடிக்கையெடுக்கப்படும், சகல கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் பாராளுமன்றத்திற்குள் விருப்பு வாக்கற்ற விகிதாசார முறையுடன் கூடிய கூட்டுப்பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், 125 உறுப்பினர்கள் தொகுதிவாரியாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.

தன்னிச்சையான கைதுகளின் போது அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டிற்கான சட்டம் உருவாக்கப்படும், சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாடு, சித்திரவதைகளுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், முகாம்களில் வாழுகின்ற மக்களை மீளக்குடியமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், மீளக் குடியமர்த்தப்படுபவர்களுக்கு ரூபா 1 இலட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படும்.

நெல்சன் மண்டேலா புதிய தென்னாபிரிக்காவை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தை எடுத்துரைத்ததைப்போன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும்.

முல்லை – யாழ். – கிளிநொச்சி தனியார் பஸ் சேவையை ஆரம்பிக்க அனுமதி

devananda.jpgதேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் முல்லைத்தீவு – யாழ்ப்பாணத்திற்கென ஆறு தனியார் பஸ் சேவைகளும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 10 தனியார் பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவு பெற்றதன் பின்னர் பஸ் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். அத்துடன் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கென தனித்தனியான சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிமனையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பேரூந்துக் கழக உறுப்பினர்களது கலந்துரையாடல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

காலி – மாத்தறை ரயில் சேவை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தம்

sri-lanka-railway.jpgகொழும் பிலிருந்து மாத்தறைக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் தென்பகுதிக்கான ரயில் பாதையை நவீனமயப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. முதற்கட்டமாக காலியில் இருந்து மாத்தறை வரையான ரயில் பாதை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் மீளமைக்கப்பட உள்ளது.

இதனையொட்டி காலி – மாத்தறையிடையிலான ரயில் சேவைகள் மே மாதம் முதல் ஆறு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பு – மாத்தறையிடையிலான ரயில் பாதையை புனரமைப்பது தொடர்பாக இந்திய கம்பனியொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் கடனுதவி வழங்கியுள்ளது.

இரண்டாம் கட்டமாக காலி – அளுத்கமை, அளுத்கமை – கொழும்பு இடையிலான ரயில் பாதைகள் நவீனமயப் படுத்தப்படும்.

மூத்த பிரஜைகளுக்கான வட்டி கொடுப்பனவு நாளை ஆரம்பம

மூத்த பிரஜைகளுக் கான 20 சதவீத வட்டிக் கொடுப்பனவு வழங்கல் நாளை ஆரம்பமாகிறது. 2010 ஜனவரி மாதத்திற்கான கொடுப்பனவே நாளை வழங்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் பெயர்களில் பேணப்படும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகள் மீது 20 சதவீதமான மேலதிக வட்டி வழங்கப்படும். அவ்வாறு மூத்த பிரஜையொருவருக்கு வருடமொன்றிற்கு 120,000 ரூபாய் வரையறைக்குட்பட்டு 01.01.2010 இலிருந்து வழங்கப்படும்.

மூத்த பிரசைகளினுடைய ஏற்னவேயுள்ள அல்லது புதிய மற்றும் கூட்டு அல்லது தனி சேமிப்பு அல்லது நிலையான ரூபா வைப்புக்கள், மூத்த பிரசைகளும் அவர் தம் வாழ்க்கைத் துணையும் கூட்டாக பேணும் ஏற்கனவேயுள்ள அல்லது புதிய வைப்புக் கணக்கு/ கணக்குகள் மீது வட்டி வழங்கப்படும்.

01.01.2010 இற்கு முன்னர் தொழிற்படுகின்ற, (வாழ்க்கைத்துணை தவிர்ந்த) அறுபது (ஆண்டுகள்) வயதிற்குட்பட்ட தனிநபர், தனிநபர்களுடன் இணைந்து மூத்த பிரசைகள் பேணும் கூட்டு வைப்புக் கணக்குகள், இவ் வகையான புதிய கூட்டுக் கணக்குகள் இத்திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டாது.

ஏற்புடைய வைப்பாளர்களுக்கான 2010 ஜனவரி மாதத்திற்குரிய வட்டிக் கொடுப்பனவுகளை 18.03.2010 இலிருந்து பின்வரும் வங்கிகள் வழங்க ஆரம்பிக்கும். இலங்கை வங்கி, சிற்றி பாங்க் என்ஏ, டொயிஸ் பாங்க் ஏஜி, அட்டன் நசனல் பாங்க் பிஎல்சி, இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி, ஐசிஐசிஐ பாங்க் லிமிடெட், எம்பிஎஸ்எல் சேவிங்ஸ் பாங்க் லிமிடெட், நேசன்ஸ் ரஸ்ட் பாங்க் பிஎல்சி, பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி, மக்கள் வங்கி, ரஜரட்ட அபிவிருத்தி வங்கி, சம்பத் பாங்க பிஎல்சி, த கொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்பிரேசன் லிமிடெட், யூனியன் பாங்க் ஒவ் கொழும்பு லிமிடெட், சப்ரகமுவா அபிவிருத்தி வங்கி, சனச அபிவிருத்தி வங்கி லிமிடெட், வயம்ப அபிவிருத்தி வங்கி என்பனவாகும்.

ஏனைய உரிமம் பெற்ற வங்கிகளின் வைப்பாளர்களுக்கான மேலதிக வட்டிக் கொடுப்பனவு, அவ் வங்கிகளினால் அவசியமான தகவல்கள் வழங்கப்பட்டவுடன் 2010 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குரிய கொடுப்பனவுகள் ஒன்றாக வழங்கப்படும். கொடுப்பனவுகளை இலகுபடுத்தும் முகமாக மூத்த பிரஜை ஒருவருக்கான மேலதிக வட்டியின் சிறிய தொகைகள் ரூ. 100 அல்லது அதனிலும் மேலான தொகைக்கு ஒன்று சேர்க்கப்பட்டு வழங்கப்படும்.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டது.

anma.jpgஜனநாயக தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று வெளியிட்டது. மனிதாபிமான போரட்டம் என்ற தொனிபொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. அனோமா பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதி சமய தலைவர்களிடம் கையளிக்கப்பட்டது. .

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தமது முதல் நோக்கம் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தமது கொள்கை பிரகடனத்தின் ஊடாக தெரிவித்துள்ளது. நியாயமான தேர்தல் ஒன்றை நடத்தல் மற்றும் பாராளுமன்றத்தை உறுதிப்படுத்தல் என்பன இதில் குறிப்பிடப்பட்டுள்ளது 

யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் கும்பல் – எச்சரிக்கையுடன் இருக்கக் கோருகிறது ஈ.பி.டி.பி.

அரசியல் கட்சிகளின் பெயராலும் ஒருசில நிறுவனங்களின் பெயராலும் யாழ் குடாநாட்டில் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எனவே யாழ். குடாநாட்டு மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டுமென ஈ.பி.டி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் கேட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ் மாநகர சபைத் தேர்தல் காலத்திலும் நலன்புரி நிலையங்களில் இருப்போரை விடுவித்துத் தருவதாகக் கூறி சில சக்திகள் இதேபோன்று பொது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் குள்ளமான மனிதர் நேற்று திடீர் மரணம்!

shortman.jpgஉலகில் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிங் பிங் நேற்று தமது 21 ஆவது வயதில் மரணமானார் என பிரிட்டனின் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்துள்ளது.  2 அடி 5 அங்குலம் உயரம்  மட்டுமே கொண்ட சீனாவைச் சேர்ந்த பிங்பிங் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் சென்றிருந்தவேளை அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிறன்று இஸ்தான்புவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றிலும் இவர் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகத்தின் அதி உயர்ந்த மனிதரான சுல்தான் கோசனுடன் இவர் உரையாடி மகிழ்ந்தார். இவரது திடீர் மறைவு சீன மக்களுக்குப்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை இன்று 16ம் திகதி கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் ஆரம்பமானபோது  சரத் பொன்சேகா இன்று முதல் தடவையாக இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நாளையும் இவர்  நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகளும் இன்று இராணுவ நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்தனர்

சரத் பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் என இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -03 : மிகப் பெரும் மீதி முறை சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு நன்மை பயக்கத்தக்கதே – புன்னியாமீன்

election_cast_ballots.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் 6 படி முறைகளில் போனஸ் ஆசனத்தை வழங்குதல்,  குறைந்த பட்சம்  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல் போன்ற இரண்டு படி முறைகளையும்,  இந்த இரண்டு படிமுறைகளினூடாகவும் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், கடந்தவாரம் நோக்கினோம். ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் ஏனைய முறைகள் பற்றி இன்று நோக்குவோம்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளை கணிப்பீடு செய்வதாகும். இதனையும், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட உதாரணம் மூலமாகவே விளக்குவோம். அதாவது x எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும், இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A  = 5400 வாக்குகள்
கட்சி B  = 3600 வாக்குகள்
கட்சி C  = 1410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11850
நிராகரிக்கப்பட்ட வாக்கு 150
செல்லுபடியான வாக்கு 11700

இரண்டாம் படி  முறையின் கீழ் வெட்டுப் புள்ளி வாக்கினைப் பெறாத சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளைக கணிப்பிடுதல்.

இங்கு தொடர்புடைய வாக்குகள் எனும் போது தேர்தல் முடிவுகளின் படி ஒரு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைய வாக்கினைக் குறிக்கும். அதாவது,  ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து,  5 வீதத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று நீக்கப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளையும்,  நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும்,  கழித்துப் பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகளாகும். 

தொடர்புடைய வாக்குகள் = அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – (நீக்கப்பட்ட வாக்குகள் +  நிராகரிக்கப்பட்ட வாக்குகள்)

எமது உதாரணப்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11, 850 . இவ்வாக்குகளில் இருந்து நீக்கப்பட்ட வாக்குகள் 540 உம், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 150உம் கழிக்கப்பட்டு பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகள் ஆகும்.

அதாவது
தொடர்புடைய வாக்குகள்  = 11850 – (540+150)  = 11160
இங்கு பயன்படுத்தப்படும் வாக்குகள் 11160 மட்டுமே.

4வது படிமுறை – முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல்

ஓர் ஆசனத்தைப் பெற குறைந்தபட்சம் ஒரு கட்சி புறைந்த பட்சம் பெற வேண்டிய வாக்கே முடிவான எண்ணாகும். அதாவது ஆசன எண்ணிக்கையில் இருந்து ஒன்றைக் கழித்து வரும் விடையினால் தொடர்புடைய வாக்குகளை வகுத்தல் வேண்டும்.

முடிவான எண் = தொடர்புடைய வாக்குகள்/ ஆசன எண்ணிக்கை – 1

எமது உதாரணப்படி
முடிவான எண்  = 11160 /  (10-1)  =  1240

ஏற்கனவே போனஸ் ஆசனம் வழங்கப்பட்டமையால் இங்கு மொத்த ஆசன எண்ணிக்கையிலிருந்து 1 கழிக்கப்படும். எமது உதாரணப்படி 1240 வாக்குகளைப் பெற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்,  குழுக்களும் ஓர் ஆசனத்தைப் பெற உரித்துடையதாகும்.

5வது படிமுறை – முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

போட்டியிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளை முடிவான எண்ணால் வகுத்து முழுமையான எண்ணுக்கமைய ஆசனங்களை வழங்குதல்.

எமது உதாரணப்படி 

A கட்சி பெற்ற வாக்குகள் 5400/ 1240 = 4
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 4 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
354 வாக்குகள் மீதியாகின்றன.

B கட்சி பெற்ற வாக்குகள் 3600/ 1240 = 2
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 2 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
903 வாக்குகள் மீதியாகின்றன.

C கட்சி பெற்ற வாக்குகள் 1410/ 1240 = 1
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 1 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
137 வாக்குகள் மீதியாகின்றன.

சுயேட்சைக்குழு – 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சுயேட்சைக்குழு – 2 முடிவான எண்ணைப் பெறாமையால் ஆசனத்தைப் பெறவில்லை. இருப்பினும் சுயேட்சைக்குழு 2 பெற்ற 900 வாக்குகளும் பயன்படுத்தப்படாமையால் இந்த 900 வாக்குகளும் மீதியாகின்றன.

எனவே 5ம் படிமுறை முடிவின்போது 10 ஆசனங்களைக் கொண்ட X தேர்தல் மாவட்டத்தில் ஆசனங்கள் பின்வருமாறு பகிரப்பட்டிருக்கும்.

           கட்சி           போனஸ்    முடிவான எண்ணுக்கமைய
கட்சி   A                         01                                    04
கட்சி B                           –                                      02
கட்சி C                           –                                       01
சுயேட்சை 1                –                                         –
சுயேட்சை 2                –                                         –

5ம் படிமுறை நிறைவில் 08 ஆசனங்களே பகிரப்பட்டிருக்கும் மீதான 2 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள 6 வது படிமுறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

6ம் படிமுறை – மிகப் பெரும் மீதி முறை

பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது விகிதாசார முறையில் பிரச்சினைக்குரிய ஆசனங்களைப் பெற, கடைப்பிடிக்கப்படும் மிகப்பெரும் மீதி முறையே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பாக அமைகின்றதெனலாம்.

5ம் படிமுறையின் போது முடிவான எண்ணுக்கமைய ஆசனங்கள் பகிரப்பட்ட பின்பு மிகுதியாக உள்ள வாக்குகளின் பெரும்பான்மைக்கமைய பிரச்சினைக்குரிய ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். இம்முறையையே மிகப்பெரும் மீதி முறை என அழைப்பர்.

எமது உதாரணப்படி மிகுதிகள் வருமாறு:

A கட்சி மீதி      354 வாக்குகள்
B கட்சி மீதி      903 வாக்குகள்
C கட்சி மீதி       137 வாக்குகள்
சுயேட்சை 2     மீதி     900 வாக்குகள்

எனவே பிரச்சினைக்குரிய 2 ஆசனங்களும் ஆகக் கூடுதலான மீதியைப் பெற்றுள்ள B கட்சிக்கு ஓர் ஆசனம் என்றும்,  இரண்டாவது மீதியைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழு 2க்கு ஓர் ஆசனம் என்றும் பகிரப்படும்.

எனவே, இறுதித்தேர்தல் முடிவானது பின்வருமாறு அமையும்.

A கட்சி  போனஸ் முறையின் கீழ் 01ஆசனத்தையும்,  முடிவான எண்ணுக்கமைய 4 ஆசனங்களையும், கொண்டதாக மொத்தம் 5 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

B  முடிவான எண்ணுக்கமைய 2 ஆசனங்களையும், மிகப் பெரும் மிகுதிக்கமைய ஒரு ஆசனத்தையும், கொண்டதாக மொத்தம் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

C முடிவான எண்ணுக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும்.

சுயேட்சைக் குழு 2 மிகப் பெரும் மிகுதிக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும். மேற்குறிப்பிட்ட அடிப்படையில் X மாவட்டத்தில் 10 ஆசனங்களும், வழங்கப்படும். 

எனவே குறைவான வாக்குகளைப் பெற்ற போதிலும் கூட மிகப் பெரும் மிகுதி முறையின் கீழ் சுயேட்சைக்குழு 2 இனால் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

2000ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை எடுத்துநோக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆசனங்களை வென்றெடுக்கவும், தேசிய ஐக்கிய முன்னணி (NUA) சில ஆசனங்களை வென்றெடுக்கவும் மிகப் பெரும் மிகுதி முறையே காரணமாக அமைந்தது. கண்டி தேர்தல் மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி ஓர் ஆசனத்தை வென்றெடுத்தமைக்குக் காரணம் இந்த மிகப்பெரும் மிகுதி முறையே.

எனவே விகிதாசார தேர்தல்முறை காரணமாக சிறுபான்மைக் கட்சிகளும், மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் அதிக பயனைப் பெறுகின்றன என்றால் மிகையாகாது.

விருப்பு வாக்குகள்

ஆசனப்பகிர்வின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்களுக்கமைய,  வெற்றி பெற்ற கட்சியில் கூடிய விருப்பத் தெரிவினைப் பெற்ற அபேட்சகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்.

தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் முறை பற்றி அடுத்த வாரம் நோக்குவோம்.

பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு

BTபிரித்தானிய அரசின் புதியதிட்டத்திற்கமைய பாரிய அளவில் வேலை பயிலுனர்களை சேர்த்துக்கொள்ளும் ஊக்குவிப்பில் பல நிறுவனங்களும் கம்பனிகளும் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. லண்டனில் இந்த திட்டத்திற்கு அமைய பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனமும் (British Telecom) பல புதிய இளம் சந்ததியினரை பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ள அறிவித்தல்களை வெளியிடப்பட்டுள்ளது.

கீழ் உள்ள இணையத்தளத்தில் மேலதிக விபரங்களை அறியமுடியம். இந்த பயிலுனர் திட்டத்தில் சேர விரும்புவோர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இணையத்தள முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளக வேலை – பயிற்சி அலுவல்களைப் பற்றி அறிய தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளலாம்.

T Sothilingam- 0784 6322 369

Good luck

http://www.btplc.com/careercentre/careerstart-apprentices/index.htm
Login to BT Apprenticeship Registration Form or go via www.bt4me.co.uk