Multiple Page/Post

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் திரைமறைவில் தொடர்பாடல்கள்

Sambanthan_R_TNAஇனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் திரைமறைவில் தொடர்பாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ்க் கூட்டமைப்பினருடன் அரசாங்க தரப்பினர் மேற்கொண்டுள்ள தொடர்பாடல்களின் உள்ளடக்கம் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் “த நேஷன்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் எதனையும் கூறியிருக்கவில்லை. ஆனால், அந்தத் தொடர்பாடல்கள் தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதாக மட்டும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் அரச தரப்பிலிருந்து அவருடன் தொடர்பு கொண்ட உறுப்பினர்கள் யார் என்பதைப் பற்றிக் கூட அவர் கூறியிருக்கவில்லை. பெயர்களை வெளியிடுவதற்கு தனக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லையென சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால்,  இந்தத் தொடர்பாடல்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவையல்ல என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான முன்னகர்வில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் இந்தியாவின் கருத்துக்கு அமைவாக இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் நம்பப்படுவதாக த நேஷன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். ஆனால், அவற்றை பகிர்ந்தளிக்க ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் முன்வந்திருக்கவில்லை. கடந்த காலத்தில் இந்த விடயம் தென்னிலங்கைத் தலைவர்களுக்கு பிரச்சினையாக இருந்துவந்தது. அதேசமயம், பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கப்போவதில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இருதரப்பினரும் கருதியதாக சம்பந்தன் கூறியுள்ளார். மங்கள முனசிங்க தெரிவுக் குழுவிலிருந்து 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த யோசனைகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்திலான யுத்த நிறுத்த உடன்படிக்கை காலகட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் போன்ற பேச்சுவார்த்தைகளின் போது 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வதென ஆராயப்பட்டதாக சம்பந்தன் கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் சம்பந்தன்; அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனமும் இயங்குவதற்கு பொலிஸ் அதிகாரங்கள் முற்றுமுழுதாக அவசியமானவை என்று கூறியுள்ளார். “பொலிஸார் தங்களது அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்துகின்றார்களா? பொலிஸ் படை மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொலிஸ் சேவையில் ஏதாவது நம்பிக்கையை நாங்கள் கொண்டிருக்க முடியுமென நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இது தொடர்பாக எம்மிடம் தெளிவான கொள்கை இருக்கவேண்டும். நாட்டைப் பிரிப்பதற்காக நாங்கள் பொலிஸ் அதிகாரத்தை கோரவில்லை. ஆள்வதற்கான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய தேவை உள்ளது. பொலிஸ் அதிகாரங்கள் அடிப்படை அம்சமாகும். அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைக் கொண்டுள்ள ஒவ்வொரு நாட்டிலுமே இது காணப்படுகிறது” என்று சம்பந்தன் வலியுறுத்தி தெரிவித்திருக்கிறார்.

காணி அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சம்பந்தன் 1957 இல் மேற்கொள்ளப்பட்ட பண்டாரநாயக்காசெல்வநாயகம் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயத்தை அவர்களால் ஏன் வழங்கமுடியாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“பண்டாரநாயக்கா போன்ற ஆளுமை உள்ள தலைவரால் இந்த உடன்படிக்கை 1957 இல் கைச்சாத்திடப்பட்டது. அவர் இந்த நாட்டின் உயர்ந்த தலைவர்களின் ஒருவராகும். அத்துடன் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் குருவாகும். 1957 இல் பண்டாரநாயக்கா வழங்க முன்வந்ததை ஏன் கொடுக்க முடியாது%27 என்றும் சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் அரசாங்கம் தங்களை நம்பவேண்டுமென விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். “நாங்கள் மிதவாத தமிழ் அரசியல் கட்சியினராகும். வட, கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 18 தமிழ் எம்.பி.க்களில் 14 பேர் எமது கட்சியிலிருந்து வந்துள்ளனர். கடும்போக்கு சக்திகளின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. எமது விஞ்ஞாபனத்தில் கடும்போக்கான நிலைப்பாடுகள் இருக்கவேண்டுமென அவர்கள் விரும்பியிருந்தனர். ஆனால், நாங்கள் அவற்றை நீக்கிவிட்டோம். தேர்தலில் அவர்கள் யாவரும் தோற்றுவிட்டனர். நம்பிக்கையில்லாத ஆட்களுக்கு நாங்கள் நியமனப் பத்திரங்களை வழங்கியிருக்கவில்லை. அவர்கள் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு போட்டியிட்டனர். அவர்கள் ஒவ்வொருவருமே தேர்தலில் தோற்றுவிட்டனர். ஆகவே, நாங்கள் மிகவும் நேர்மையுடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டிருந்தோம்.

கடந்த காலத்தில் கூட செல்வநாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தரப்பானது 100% நேர்மையாக இருந்ததாக சம்பந்தன் நினைவுகூர்ந்திருக்கிறார். 1970 தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெடரல் கட்சியானது பிரிவினைவாதத்தை எந்த வேட்பாளராவது அல்லது கட்சியாவது வரித்துக்கொண்டால் அவர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு பெடரல் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அவற்றை எமது விஞ்ஞாபனத்தில் நாம் எழுத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதுவே எமது நேர்மைத் தன்மையாகும்.

தீர்வொன்றைக் காண்பதற்கு நீண்டகாலம் எடுக்காது. அதுதொடர்பாக ஜனாதிபதி துரிதமாக செயற்பட வேண்டும். அவரால் எமது ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். அவருடன் மிகவும் நேர்மையாக நாங்கள் இருப்போம். அவரை நாங்கள் ஏமாற்றமாட்டோம். நாங்கள் சிங்கள மக்களை ஏமாற்றமாட்டோம்” என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

நன்றி-தினக்குரல்

“இந்திய திரைப்பட விழாவில் அமிதாப்பச்சன் ஒருநாள் மட்டும் என்றாலும் பங்கேற்பார்”

indian-film.jpgகொழும்பில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்வாரெனவும் ஒருநாள் மட்டும் என்றாலும் அவர் பங்கேற்பார் எனவும் இலங்கை சுற்றுலா சபையின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சாருக்கானும் ஐஸ்வர்யாராயும் நிச்சயமாக கலந்துகொள்வார்கள். அமிதாப்பச்சனும் வருவார். ஒரு தினத்திற்கு என்றாலும் அவர் வருவார் என்று தன்னை இனம் காட்டவிரும்பாத அதிகாரி “எக்ஸ்பிரஸ்” செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

ஜூன் 3-5 வரை இடம்பெறும் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழு அளவில் இடம்பெறுகின்றன. இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருக்கும் “விஸ் கீராவ்ட் இன்ரர் நஷனல் என்ரர் ரெய்ன்மன்ட் பிரைவேட் லிமிட்டெட்டின்’ சுமார் 50அதிகாரிகள் ஏற்கனவே இங்கு பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே எதிர்ப்பு என்றும் ஏனைய மாநிலங்களிலிருந்து இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் நாட்டில் வைகோ போன்ற அரசியல்வாதிகளிடமிருந்தே இந்த விழா தொடர்பாக எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுவதாகவும் ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் விடயங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஏனைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சவர்தேச இந்திய திரைப்பட விருது வைபவத்தை இங்கு நடத்துவதால் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை நாட்டில் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பாக அமையும் என்ற கருத்தை இலங்கை உல்லாசப் பயணசபை, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்கள் கொண்டுள்ளன. ஆனால், இந்த விழாவில் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பதை தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த் தேசியவாத சக்திகள் எதிர்க்கின்றன. 2007,2009 காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற போரை நியாயப்படுத்துவதாக அமையும் என்று தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாத சக்திகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மும்பையிலுள்ள அமிதாப் பச்சனின் இல்லத்தின் முன் தமிழர்கள் குழு ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து எவரின் உணர்வுகளையும் தான் புண்படுத்தப் போவதில்லையெனவும் ஏற்பாட்டாளர்களுடன் கலந்தாராய்ந்த பின்னர் சகலராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்மானத்தை எடுக்கப்போவதாகவும் அமிதாப்பச்சன் கூறியிருந்தார். இதனையடுத்து திரைப்பட விருது விழாவில் அமிதாப் பச்சன் கலந்துகொள்ளமாட்டார் என்ற விதத்திலான ஊகங்களும் வெளிவந்தன.

அரச ஆஸ்பத்திரிகளில் 319 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு – விமானப்படை விமானங்கள் மூலம் மருந்து இறக்குமதி

drage.jpgஅரச வைத்தியசாலைகளில் தற்போது நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாட்டிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய இலங்கை விமானப் படையினரின் விமானங்கள் பயன்படுத்தப்பட விருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உடனடியாக மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்டு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளனவெனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச வைத்திய சாலைகளில் மருந்துகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் பாதுகாப்புச் செயலாளரினதும் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, இலங்கை விமானப் படையினரின் விமானங்களை பயன்படுத்தி தேவை யான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களினுள் அரச வைத்திய சாலைகளில் நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியுமெனவும் சுகாதார அமைச்சு நம்பிடிக்கை தெரிவித்து ள்ளது.

அரச வைத்தியசாலைகளில் 319 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதில் 44 வகையான மருந்துகள் கப்பல் மூலம் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.  ஏனைய 27 வகை மருந்துகள் இலங்கை மருந்தக கவுன்சிலிலிருந்து விலைக்கு வாங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர்த்த ஏனைய மருந்துகள் இந்தியாவிலிருந்து உடனடியாக கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்படவுள்ளமை இதுவே முதற்தடவை யென்பது குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கி நால்வர் பலி

rain.jpgமின்னல் தாக்குதல் காரணமாக சனிக்கிழமை மட்டும் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

பொலநறுவை மெதிரிகிரிய பகுதியில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த மூவரும் அநுராதபுரம் பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவருமே இந்த மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னரும் புசல்லாவை நயபனை பகுதியில் மின்னல் தாக்கி ஏழு பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இடிமின்னல் தாக்குதல் தொடருமென்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் மீண்டும் எச்சரித்துள்ளது.

இவ்வாண்டு இதுவரை 17 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு

srilanka-war.jpgவவுனியா வடக்கில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் படையினர் நிலைகொண்டிருந்த அரச கட்டடங்கள், தனியார் காணிகள் என்பவற்றில் பொது மக்களை மீளக்குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார்.

அந்த வகையில் முதற் கட்டமாக பேயாடிகூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 65 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுள் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தலா ஒருவர் இன்று திங்கட்கிழமை தமது சொந்த இடத்தை பார்வையிடுவதற்காக முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தின் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான படையதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்ட விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போதே பாலமோட்டை, சேமமடு ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதென தீர்மானிக்கப் பட்டதாகவும் அதனடிப்படையிலேயே, அவர்கள் தமது சொந்த இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

அத்துடன் பெரியதம்பாணை, பரையநாளன்குளம், பிரம்மநாளன்குளம், கண்ணாட்டி, கணேசபுரம் ஆகிய இடங்களிலும் 500 குடும்பங்கள் விரைவில் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் குடும்பங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இன்று திங்கட்கிழமை அவர்களது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்படவிருப்பதாக அரச அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினருடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக வவுனியா பூவரசன்குளம் விமானப் படை முகாம் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் பிரப்பன்மடு பகுதியில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரத்கத்தேகம பகுதிக்கும் பிறப்பன்மடு பகுதிக்கும் மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது முல்லைத்தீவை சொந்த இடமாக கொண்ட 34 ஆயிரம் பேரும் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட 34 ஆயிரம் பேரும் உள்ளனர். இவர்களுள் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவரெனவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

SMS அச்சமூட்டிய குறுந்தகவல்: சூத்திரதாரிகளை கண்டுபிடிக்குமாறு தொ.தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு

hand-phone.jpgஅநாம தேய குறுந்தகவல்கள் மூலம் பொதுமக்களை வீண் பீதிக்கு உட்படுத்தியவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கோரியுள்ளது.

இது தொடர்பில் நேற்றுத் தகவல் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ்பெல்பிட்ட குறுந்தகவல்கள் மூலம் புரளியைக் கிளப்பியவர்களைக் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனச் செயற்பாட்டாளர்களுக்கு விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு உறுதிப்படுத்தப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி புரளிகளைக் கிளப்பியவர்கள் சம்பந்தமாகத் தகவல்களைத் தெரிவிக்க முன்வருவோர் பொலிஸ் நிலையங்களில் தமது தகவல்களைத் தெரிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

7.4 ரிச்டர் பூமியதிர்ச்சி இந்தோனேஷியாவை தாக்கியது – இலங்கைக்குப் பாதிப்பில்லை

இந்தோனேசியாவில் நேற்று (9) காலை 7.4 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது.

அஷே மாகாணத்தின் தலைநகரான பண்டா அஷேக்கு 21 கிலோ மீட்டர் தூரத்தில் 61.4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. பூமியதிர்ச்சி ஏற்பட்டதும் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் பூமியதிர்ச்சியின் மையத்துக்கு கிட்டிய நகரமான மீலாபோவில் 7.9 அங்குல (20 சென்றி மீட்டர்) உயரத்துக்கான சுனாமி அலை மட்டுமே ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப் பட்டது. இதனால் இலங்கைக்கு எத்தகைய பாதிப்புக்களும் ஏற்படாதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கல்விக்கென தனியான தொலைக்காட்சி

tv.jpgகல்விக் கெனத் தனியான தொலை க்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பில் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச் சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்விக்கான தனித் தொலைக் காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ‘யுனெஸ்கோ’ நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

புசல்லாவை நயபனை தோட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் ஆஸ்பத்திரியில்

lightning-01.jpgபுசல்லாவை நயபனை மேமலை தோட்டம் மற்றும் நயபனை தோட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 7 பேர் புசல்லாவை வகுகபிடிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நயபனை மேமலை தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்தனர். இவர்கள் 6 பேரும் பின்னர் வகுகபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம் நயபனை தோட்டத்தில் வீட்டு முற்றத்தில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த என்.பிரபாளினி (21 வயது) என்னும் குடும்பப் பெண் மின்னலினால் தாக்குண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேமலை தோட்டத்தச் சேர்ந்த ஆர்.முத்தாய் (47 வயது), கே.ராஜமணி (48 வயது), எம்.ஞானேஸ்வரி (43 வயது), எம்.சரஸ்வதி (33 வயது), கே.வரதலட்சுமி (36 வயது), ஏ.உதயகுமார் (22 வயது) ஆகியோரே மின்னல் தாக்குதலினால் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிகவும் கஷ்டப்பட்ட பிரதேசமான நயபனை மேமலை தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் அடிக்கடி இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வருவதால் காலநிலை சீரற்றிருக்கும் நாட்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டு நிவாரணங்களை தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டுமென்றும் தொலைவில் இருக்கும் நயபனை தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று வருவதற்கு தமது பிள்ளைகள் அஞ்சுவதாகவும் இதனால், மேமலை தோட்ட மாணவர்களுக்கு நேர காலத்தோடு பாடசாலையிலிருந்து வீடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.நேற்று முன்தினம் சில மணித்தியாலங்களுக்கு புசல்லாவை பகுதியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

குடாநாட்டில் ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடிப் பேர்வழிகள் குறித்து எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது நிலவும் அமைதிச்சூழலைப் பயன்படுத்தி வெளியிடங்களைச் சேர்ந்த சிலர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதுடன், அவர்களில் சிலர் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்த யாழ்ப்பாண வாசி ஒருவருடன் கூடப்பயணம் செய்த மன்னாரைச் சேர்ந்த ஒருவர் நட்பாக பழகியுள்ளதுடன் தனக்கு யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க உதவுமாறும் கேட்டுள்ளார்.

அந்த மன்னார் வாசி நட்பு முறையில் பழகியதால் அதனை நம்பிய யாழ்.வாசி அவரை யாழ்ப்பாணத்தில் 2 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அவரும் வீட்டில் உள்ளவர்களுடன் அன்பாகப் பழகி அவர்களையும் நம்பவைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க வந்தவர் வியாழக்கிழமை இரவு தானே இரவு சாப்பாடு வாங்கித் தருவதாகக்கூறி வாங்கி வந்துள்ளார். இரவு சாப்பாட்டில் அவர் மயக்க மருந்தை கலந்திருப்பதை அறியாத யாழ்ப்பாண வாசியின் குடும்பத்தினர் அதனை உண்ட பின்னர் மயங்கிவிட்டனர். இதையடுத்து, மன்னாரிலிருந்து வந்தவர் அந்த வீட்டிலிருந்த பணம் , நகை மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

மறுநாள் இவர்கள் எழுந்துபார்த்த போது தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதேபோல, சிலர் நிவாரணம் தருவதாக போலி விண்ணப்பப்படிவங்களை ஒன்று 100 ரூபா வீதம் வழங்கி பலரிடம் பணமோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேறு சிலர் கைத்தொலைபேசி போன்ற பொருட்களை மலிவு விலைக்குத் தருவதாகவும் தாம் ஒரு நிறுவனத்தின பிரதிநிதிகள் என்றும் கூறி முற்பணம் பெற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். எனவே, இவ்வாறானவர்கள் குறித்து குடாநாட்டு மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.