Multiple Page/Post

மனிதநேயன் வை சி கிருபானந்தனுக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலி!

Kirubananthan_Vai_Siதேசம்நெற் இணையத்தின் நீண்ட நாளைய கருத்துப்பதிவாளர் வை சி கிருபானந்தன் காலமானார். பார்த்தீபன் என்ற புனைப்பெயரில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் வை சி கிருபானந்தன் ஒரு மனிதநேயன். நேற்று ஒக்ரோபர் 18 2010ல் மரடைப்பால் கிருபானந்தன் உயிரிழந்தார். அவருக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலிகள்.

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் சுவிஸ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார். காலம்சென்ற சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரான வை சி கிருபானந்தன் சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும் பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். வை சி கிருபானந்தனின் பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு தேசம்நெற் இணையத்தின் சார்பிலும் அதன் வாசகர்கள் கருத்தாளர்கள் சார்பிலும் எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘கட்சி அரசியல் எதனிலும் ஈடுபாடற்ற இவர் மிகுந்த அரசியல் ஆர்வலர். சுவிஸில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்குபற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்’ என்கிறார் அவருடைய நண்பர் அஜீவன். ‘அவருடைய இழப்பு நல்ல நண்பனின் நல்ல மனிதனின் இழப்பு’ எனத் தன் துயரைப் பகிர்ந்து கொண்டார். அஜீவன் மேலும் குறிப்பிடுகையில், ‘மிகவும் சமூக அக்கறை கொண்ட இவர் புறூக்டோர்ப் தமிழ் பள்ளியை நடத்துவதிலும் உதவி வருவதாகத் தெரிவித்தார்.

Kirubananthan_Vai_Siடயஸ்பொரா டயலொக் ஜேர்மனியில் ஏற்பாடு செய்த சந்திப்பில் நான் (த ஜெயபாலன்) வை சி கிருபானந்தனை முதற்தடவையாகச் சந்தித்தேன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புனைபெயரில் தான் கருத்துப் பதிவிடுவதையும் குறிப்பிட்டு தேசம்நெற் இன் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதன் பின்னர் சுவிஸ் மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் சந்தித்துக்கொண்டோம். முகமறியாது இணையத்தில் உரையாடிய போதும் முகமறிந்து நேரில் உரையாடிய போதும் அவருடைய மனிதநேயத்தில் மாற்றம் இருக்கவில்லை.

இந்த துயரச் செய்தியை வை சி கிருபானந்தன் (பார்த்தீபன்) யூலை 01 2009ல் பதிவிட்ட கருத்துடன் நிறைவு செய்கிறேன்.

”இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையை அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணம் தாமாக உருவாகும்.”
பார்த்தீபன், யூலை 01 2009 தேசம்நெற்.

காத்தான்குடியில் மற்றுமொரு முதலை பிடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை வாவியிலிருந்துகொண்டு பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தொந்தரவு கொடுத்து வந்த மற்றொரு முதலையை பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து பிடித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்தார்.

நேற்று மதியம் இம்முதலை பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இதே மாதிரியானதொரு முதலையை காத்தான்குடி வாவியில் பொது மக்கள் பிடித்து அடித்துக் கொன்றனர்.

இம்முதலை மீனவரான 60 வயதுடைய தம்பிலெப்பையை கடித்து குதறி படுகொலை செய்ததுடன் அதிகளவிலான கால் நடைகளையும் கடித்து நாசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

October 18 2010

மட்டக்களப்பு வாவியில் முதலைகளால் தொல்லை. 

மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அம்பலாந்துறை வாவியோரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரை முதலைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளது.  இதனையடுத்து 12 அடி நீளமான முதலையொன்று மீனவர்களால் வலை போட்டுப் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குறித்த வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது  சடலம் மீட்கப்பட்டது. காத்தான்குடி வாவியிலும் முதலைகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் பொறுப்புள்ள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலந்தர் லெப்பை மொகமட் பரீட் தெரிவித்துள்ளார்.

”யாழில் தங்கியிருக்கும் சிங்கள மக்கள் ஆவணங்களை உறுதிப்படுத்தினால் அங்கு குடியமர்த்தப்படலாம்” மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ

jaffna.jpgயாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்களவர்கள் யாழ்குடா நாட்டில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசித்ததாகவும், அதனால் அங்கு தம்மை மீளக்குடியமர்த்த வேண்டுமெனவும் கோரி யாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்கள் உரிய ஆவணங்களை உறுதிப்படுத்தினால், மூன்றுமாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கியபின், அவர்களுடன் கலந்துரையாடிய போதே அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இங்குள்ள குடும்பமொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபா பெறுமதியான நிவாரண உதவிப் பொருட்களை 1000 ரூபாவாக உயர்த்தியிருப்பதாகவும் அமைச்சர் தமிழோசையிடம் கூறினார்.

1970களில் தாம் யாழ்ப்பாணத்தில் வசித்ததாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அங்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்ததாகவும் இந்த மக்கள் தன்னிடம் கூறியதாக மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்தார்.  இவர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக சுமுகமான முறையில் இவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படாதுள்ள நிலையில் 30 வருடங்களுக்கு முன்னர் வெளியேறியதாகக்கூறும் சிங்கள மக்களை குடியேற்ற முனைவது தொடர்பில் சிலர் விசனம் தெரிவிக்கிறார்களே என்ற கேள்விக்கு, ‘ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இனமத வேறுபாடின்றி மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் மில்ரோய் ஃபெர்ணாண்டோ. அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போதுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் நிலைநிறுத்திவிட்டு, அந்தக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கமெனவும் அமைச்சர் கூறினார்.

நன்றி BBC.

._._._._._.

 ”சிங்களக் குடியேற்றங்களை விமர்சிப்பதாலேயே அபிவிருத்திக் கூட்டங்களுக்குகூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை” கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

Sritharan_SivagnamTNA_MPவடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றதாலேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு கூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துவிட்டு தற்போது வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தை அரசாங்கம் நடத்துகின்றது. கூட்டமைப்பின் ஆதரவின்றி அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான அபிவிருத்தியும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதை ஜனாதிபதி உணரும் காலம் விரைவில் வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எதனையும் அது முன்வைக்காமல் காலத்தைக் கடத்தி வருகின்றது. எனவும் அவர் தெரிவித்தார். 

 ._._._._._.

October 15 2010

 ”யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீள்குடியமர்த்தப்படுவது போல தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களும் தெற்கில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்”  தமிழர் விடுதலைக் கூட்டணி

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதென்பது நியாயமானதே. அதே போல் இனக்கலவரங்களினால் தென்னிலங்கையிலிருந்து வந்த தமிழ் மக்களும் மீண்டும் அங்கு குடியேறி வாழ வழிவகை செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா இவ்விடயம் தொடர்பாக  அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அரசியல் நோக்கம். சரி பிழைகளுக்கு அப்பால் தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் குடியிருந்திருந்தால் அவர்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிப்பதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் யாழப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் தங்களுக்கு சொந்தக் காணிகள் வேண்டும் என்று கேட்பதில் எவ்வித நியாயமம் இல்லை.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தென்னிலங்கை மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதற்கு எந்தளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு உரிமை 1956, 1958, 1977, 1983 ஆகிய வருடங்களில் நடந்தேறிய இனக்கலவரங்களின் போது தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிவந்த தமிழ் மக்களுக்கும் உள்ளது. குறிப்பாக அனுராதபுரம், கெக்கிராவ, தம்புள்ள, கலேவெல, திஸ்ஸமகராம போன்ற பகுதிகளிலில்  தங்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறவோ, அல்லது தங்களது சொத்துக்களை விற்பனை செய்யவோ வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்துத தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் மீள்குடியேற வேண்டும் என அக்கறைக்காட்டும் தரப்பினர் தமிழ் மக்களின் விடயத்திலும் அக்கறை காட்டவேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் தமிழர் விடுதலைக்கூட்டணி பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

._._._._._.

11 Oct 2010 

”யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளை ஆராய மூன்று மாதகால அவகாசம் தேவை” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas Devanandaயாழ்ப்பாணத்தில் மீள்குடியேற வந்துள்ள சிங்கள மக்களின் ஆவணங்களை ஆராய்ந்து தீர்வொன்றை முன்வைக்க மூன்று மாதகால அவகாசம் தேவை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வந்து, யாழ்.புகையிரத நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்த போதே அவர் இவ்வாறு அவர்களிடம் தெரிவித்தார்.

“நீங்கள் மீண்டும் அனுராதபுரத்திற்குச் செல்லப் போகின்றீர்களா?” என அமைச்சர் அவர்களிடம் கேட்டபோது முடிவு தெரியாமல் போக மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

அம்மக்களுக்கான குடிநீர்ப்பிரச்சினை, சுகாதார வசதிகளை மாநகரசபை கவனிக்கும் எனவும், அரிசி மற்றும் சமையல் பொருட்களைத் தமது கட்சி நிதியிலிருந்து வழங்க முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களிடம் தெரிவித்தார்.

தினசரி இரண்டு மூன்று குடும்பங்கள் என மீள்குடியேற்றத்திற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருப்பதாகவும், முன்னர் வந்தவர்களில் பாட்சாலை மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் சில மீண்டும் தாங்கள் இருந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை, யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்து வந்த சிங்கள மக்கள் மீள்குடியமர அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும என ஐக்கியதேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

._._._._._.

10 Oct 2010

மீளக்குடியேற யாழ் வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசஅதிபர் பசில் ராஜபக்சவிற்கு கடிதம்.

Imelda_Sugumar_GA_JaffnaBasil_Rajaparksaயாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பசில் ராஜபக்சவிற்கு யாழ். அரச அதிபர் அவசர கடிதம் ஒன்றை நேற்று சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.

எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு கோரி யாழ். புகையிரத நிலையத்தில் இவர்கள் தங்கியுள்ளனர் இவர்களில் சிலர் முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு சொந்தக் காணிகளோ சொந்த வீடுகளோ இருக்கவில்லை. இந்நிலையில், எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு வந்திருக்கும் இம்மக்களால் யாழ். மாவட்ட அரச நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரும் இவர்களுக்கு உதவிகளைச் செய்யும் அரசாங்க திட்டங்கள் எதுவுமில்லை. எனவே, இங்கு வந்துள்ள சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் உடனடியாக சாத்தியமில்லை. அத்துடன் இவர்கள் தொடர்ந்து புகையிரத நிலையத்தில் தங்கியிருப்பது அவர்களுக்கு ஆரோக்கியமானதல்ல என அரச அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போன்ற கடிதமொன்றை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்திற்கும் யாழ். அரச அதிபர் அனுப்பிவைத்துள்ளார்.

._._._._._.

Oct 09 2010 

யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை ஆராய கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு வருகை.

Jaffna_Mapதெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சமுக்தி அதிகார சபையின் தலமையக அதிகாரிகள் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சமுக்தி அதிகார சபையின் பணிப்பிற்கு இணங்க அதிகாரசபையின் அதிகாரியான கே.ஜி.குணதிலக்க தலைமையில் இக்குழுவினர் வருகை தந்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள குறிப்பிட்ட சிங்களக் குடும்பங்களிடம் சில படிவங்களை வழங்கி விபரங்களைச் சேகரித்தனர்.

இதே வேளை, இம்மக்களுக்கு யாழ்.மாநகர சபையினால் குடிநீர், கழிப்பறை வசதிகள், மின்சாரம் என்பன எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் 500 குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று வெள்ளிக்கிழமை 10 குடும்பங்கள் மட்டும் வந்ததாகவும், அடுத்த சில நாட்களில் மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._._._._._.

Oct 08 2010

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தகவல்: விஸ்வா

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்காக மேலும் பல சிங்களக் குடும்பங்கள் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 180 சிங்களக் குடும்பங்கள் யாழப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் (Oct 08 2010)  500 குடும்பங்களைச் சொந்த 1500 பேர் வரவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். அனுதாரபுரம், மிகிந்தலை, பிரதேசங்களிலிருந்து இவர்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது.

இதேவேளை, இவ்வாறு மீள்குடியேறும் நோக்கத்துடன் வந்திருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு யாழ்.செயலக அதிகாரிகளுக்கு உயர்மட்டத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

._._._._._.

Oct 07 2010

1980ல் யாழில் இருந்து வெளியேறிய 180 சிங்களக் குடும்பங்கள் யாழில் மீளக் குடியிருக்க வந்துள்ளனர்!

Jaffna_Welcome1980ஆம் அண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த வந்ததாகக் கூறப்படும் 180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 180 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் இதிலடங்குகின்றனர். சிறுவர்கள் குழந்தைகளோடு வந்துள்ள இவர்கள் யாழ்ப்பணத்தில் குடியேறி நிரந்தரமாக வசிக்க விரும்புவதாகவும், தங்களுக்கான காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் யாழ். அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போதும், இவர்களுக்கு சொந்தமான காணிகள் எதுவும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு தமிழர்களோடு திருமண பந்தம் உள்ளது. தமிழிலும் பேசக் கூடிவர்களாகவுள்ளனர்.

நேற்று புதன்கிழமை அரசாங்க அதிபரைச் சந்தித்த இவர்கள் தங்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.

இது குறித்து அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், இவர்களின் பிரச்சினை தொடர்பாக உடனடி தீர்வு காணும் திட்டம் எதுவும் இல்லை எனத் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இவர்களின் வருகை குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது இச்சிங்களக் குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையக் கட்டடத்திலும், விடுதிகளிலும் தங்கியுள்ளனர். தங்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கப் போவதாக யாழ். புகையிரத நிலையக்கட்டத்தில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றனர்.

1980க்களில் யாழ்பாணத்தில் இருந்து வெளியேறிய இவர்கள் அனுராதபுரம், மிகிந்தலை, மாத்தளை, குருநாகல், ஆகிய இடங்களில் இவர்கள் வருகின்றனர். இனி நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் வசிக்க விரும்பவதாக  தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்கு தங்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் என கோருகின்றனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி, நாவற்குழி, ஆகிய இடங்களில் தங்களுக்கு காணிகள் ஒதுக்கப்பட்டதெனவும். அதற்கான கடிதங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அக்காணிகளைத் திரும்பத்தரத் தேவையில்லை வேறு இடங்களிலாவது காணிகள் ஒதுக்கித்தர வேண்டும் எனக் கூறுகின்றனர்.

தெற்கின் பல பகுதிகளில் வசித்து வந்த இவர்கள் திடீரென ஒன்றிணைந்து  யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதற்கு தெற்கில் சிங்கள கட்சிகள் அல்லது அமைப்புகளின் பின்னணிகள், தூண்டுதல்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று வவுனியாவில் ஜனாதிபதி தலைமையில் வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

Welcome_to_Vavuniyaவட மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று 19 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த மீளாய்வுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், வட மாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வட மாகாணத்தில் நடைபெறும் முதலாவது அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இதுவாகும். யுத்தத்திற்குப் பின்னர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும், முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு பாரிய அபி விருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், வடக்கின் வசந்தத்தின் மூலம் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளன.

October 18 2010

”வடமாகாண அபிவிருத்திக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை” ததேகூ பிரேமச்சந்திரன் – ”முரண்பாடுகளை ஏற்படுத்தி மக்களுக்குரிய தேவைகளை பூர்த்தி செய்யவிடமாட்டார்கள். அதனால் அழைப்பில்லை” அமைச்சர் பதியுதீன்

Suresh_Premachandran_TNARisath_Bathiyutheen_Ministerஜனாதிபதி தலைமையில் நாளை செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தாங்கள் அழைக்கப்படாமைக்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு அழைப்பு விடுக்காதது தமிழ் மக்களை புறக்கணிப்பதற்கு ஒப்பானது என அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை செவ்வாய் கிழமை வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை என தெரியவருகின்றது. இந்தக் கூட்டம் வவனியாவில் நடைபெற்ற போதும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பும் பொறுப்பு தமக்கில்லை எனவும், அந்தப் பொறுப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு மட்டுமே உள்ளது எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க் கருத்துக்களைக் கூறி முரண்பாடுகளை ஏற்படுத்துவார்கள். இதனால் மக்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படமாட்டாது என்பதாலேயே அபிவிருத்தி தொடர்பான இவ்வாறான கூட்டங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை என வர்த்தக மற்றும். கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் உதவிகளின்றி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை வவுனியா மாவட்டத்திற்கான இணைப்புக்கூட்டம் வவுனியா செயலகத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அழைக்கப்படாமை குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

October 17 2010

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி உட்பட 800 பேர் வவுனியாவில் கூடுகின்றனர்

Charles_Mrs_GA_Vavuniyaஎதிர்வரும் செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் வட மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் அதிகாரிகள் என 800 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கூட்டத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விடயங்கள், உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுதல் முதலான விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறை பெண்கள் பிரிவில் சுற்றிவளைப்பு – கைத்தொலைபேசிகள், பற்றரிகள், கஞ்சா சுருட்டுகள் மீட்பு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலி ஸார் நாற்பது பேர் அடங்கிய விசேட குழு நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்திய திடீர் சோதனையின் போது 53 கையடக்க தொலைபேசிகள், பற்றரிகள், சார் ஜர்கள் மற்றும் கஞ்சா சுருட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த விசேட குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேருடன் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலு ள்ள கைதிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொழு ம்பு மாளிகாகந்தை நீதிவான் நீதி மன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவுக்குள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென நுழைந்த விசேட குழுவினர் திடீர் சோத னையை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடத்த ப்பட்ட திடீர் சோதனை நடவடி க்கையின் போது தடுத்து வைக்கப் பட்டிருந்த 464 பெண்கள் சோத னைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் சோதனையின் போது 44 கஞ்சா சுருட்டுகள், 53 கையடக்கத் தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப் படும் 100 பற்றரிகள், 66 சார்ஜர்கள், 12 சிம் கார்ட்கள், 5 மல்டி பிளக் மற்றும் தண்ணீர் சூடாக்கப் பயன் படுத்தப்படும் ஹீட்டர்கள் என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர். மேற்படி பொருட்கள் சிறைச் சாலைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரி வினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மாதாந்தம் 10 கோடி ரூபா செலவு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மாதம் தோறும் 10 கோடி ருபாவை அரசாங்கம் செலவிட்டு வருவதாக இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 மே மாதம் தொடக்கம் இவ்வாறு செலவிடப்பட்டதாகவும்,  முன்னாள் போராளிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இச்செலவினம் 6 கோடி 50 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 4500 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் மேலும் 1500 பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலைக்கு 30 சக்கர கதிரைகளை ‘எயர்ரெல்’ நிறுவனம் வழங்குகிறது.

Jaffna_Hospitalஇன்று திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் தனது கிளையை ஆரம்பிக்கும் ‘எயர்ரெல்’ நிறுவனம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 30 சக்கர கதிரைகளை அனபளிப்பு செய்கிறது.

யாழ். வைத்தியசாலை நிர்வாகம் யாழ். வணிகர் கழகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கையை அடுத்தே வணிகர் கழகத்தின் முயற்சியால் இச்சக்கர கதிரைகள் வழங்கப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. நிகழ்வில் இதனை ‘எயர்ரெல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யாழ். வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நகை வியாபாரியைக் கடத்தி கப்பம் பெற்ற இராணுவ மேஜரும் இருவரும் பிடிபட்டனர்.

கொழும்பில் தமிழ் நகை வியாபாரி ஒருவரைக் கடத்தி 50 மில்லியன் கப்பம் பெற்றவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இராணுவ மேஜர் ஒருவரும், அவரது உதவியாளர்கள் இருவருமே இவ்வாறு பிடிபட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது – இந்த நகை வியாபாரி ஏற்கனவே இதே சந்தேக நபர்களால் கடத்தப்பட்டவர். இவர் 20 மில்லியன் ரூபாவை கப்பமாகச் செலுத்தியே விடுவிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவரது மகனை காரில் பாடசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இதே குழுவினரால் மீண்டும் கடத்தப்பட்டார். அவரது மகனான சிறுவனை விடுவித்த கடத்தல் காரர் நகைக் கடை உரிமையாளரின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெருந்தொகைக் கப்பம் கேட்டுள்ளனர்.

அவ்வளவு பெரிய தொகையை செலுத்தவது சாத்தியமில்லை எனவும், கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டால் அதனைக் கொடுக்க முடியும் எனவும், அடுத்த நாளே பணத்தைக் கொடுக்க முடியும் எனவும் கடத்தப்பட்டவரின் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் பொலிஸாருக்குத் தெரிய வந்தால் வர்த்தகர் கொலை செய்யப்படுவார் என்ற எச்சரிக்கையுடன் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், நகை வியாபாரி கொழும்பிலுள்ள பிரபல மருத்துவமனையொன்றிலிருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு பணத்தைப் பெற்றுக்கொள்ள அங்கு வரும் படி தெரிவித்துள்ளார்.

இதே சமயம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சாதாரண உடையில் அங்கு காத்திருந்துள்ளனர். கடத்தில் குழுவைச் சேர்ந்த இராணுவ மேஜர் மருத்துவமனையின் மேல் மாடியிலிருந்த நகை வியாபாரியிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பும் போது அவர் கைது செய்யப்பட்டாh. கீழ் மாடியில் காத்திருந்த அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனா. வெளியில் வாகனம் ஒன்றில் காத்திருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் தப்பியோடிவிட்டனர். அவ்விருவரையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணி தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

குக்குலேகம தோட்ட மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழ முடியாத அச்சநிலை எற்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவிப்பு.

Sivajilingam M K Presidential Candidateஇரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல குகுலேகம தோட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அத்தோட்டத்திற்குச் சென்றுள்ள போதும், அவர்கள் தொடர்ந்தும் அத்தோட்டத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்று வந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அங்கு விஜயம் செய்த சிவாஜிலிங்கம் அத்தோட்டத்திலுள்ள மக்களிடம் கலந்துரையாடியதாகவும் அம்மக்கள் அத்தோட்டத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை 10 குடும்பங்கள் மட்டுமே அத்தோட்ட குடியிருப்பிற்குத் திரும்பி உள்ளதாகவும், அவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாட முடியாது உள்ளதாகவும், அங்குள்ள தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் உடமைகளும் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே தம்மை வந்து பார்வையிட்டதாகவும், வேறு எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ தம்மை வந்து பார்க்கவில்லை எனவும் அம்மக்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related News and Articles:

குக்குலெகம தமிழ் குடும்பங்கள் குடியிருப்பிற்குத் திரும்பின. நட்டஈடு பெற்றுக் கொடுக்க வாசுதேவ நடவடிக்கை.

இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Constantine_T_and_Minister_DDயாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் தெரிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி இணைய வலையில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்  ( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன் ) பிரதிகளை ‘டயஸ்பொறா டயலக்’ அமைப்பின் சார்பில் ரி கொன்ஸ்ரன்ரைன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார். நேற்று (ஒக்ரோபர் 17 2010) கொழும்பில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாவணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற உரையாடலில் புலம்பெயர்ந்தும் தாயகத்திலும் வாழும் யாழ் பல்கலைக்கழக்தின் நலன்விரும்பிகளின் நிலைப்பாட்டை தான் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதாகவும் அவர்களுடைய எண்ணப்பாடுகளைக் கவனத்தில் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தெரிவுசெய்யும்படி கோரும் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை எனத் தெரிவித்த ரி கொன்ஸ்ரன்ரைன் நலன்விரும்பிகள் தொடர்ந்தும் கையெழுத்துக்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm இக்கையொப்பப் போராட்டத்தின் பிரதிகள் கல்வி அமைச்சர் எஸ் பி திஸ்ஸநாயக்காவிடம் ஒக்ரோபர் 21ல் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

யாழ் பல்கலையில் பொறியியல் பீடம் அமைப்பது பற்றி வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு அமைச்சருடன் சந்திப்பு:

இந்நிகழ்வுக்கு முன்னதாக வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் (Institution of Engineers Sri Lanka – North)  குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது தொடர்பாக இக்குழு இச்சந்திப்பை மேற்கொண்டது. இச்சந்திப்பின் போது அமைச்சரின் அழைப்பில் ரி கொன்ஸ்ரன்ரைன்,  மற்றும் பேராசிரியரும் ஒக்ரோபர் 6 பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்றவருமான  பாலசுந்தரம்பிள்ளை ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழுவிற்கு இலங்கை மின்சாரத் திணைக்களத்தின் ஜிஎம் ஆர் முத்துராமநாதன் தலைமை தாங்கினார். இக்குழுவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், டொக்டர் அற்புதராஜன், டொக்டர் பிரபாகரன், தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் நவரட்ணராஜா கலந்துகொள்வதாக இருந்த போதும் அவரால் இச்சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

Minister_DD_17Oct10_Colomboஇச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் விசேட ஆலோசகர் திருமதி விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, 2006ல் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உப வேந்தராக தெரிவு செய்ய தான் போராடியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனால் அவர் அப்பதவியை ஏற்று செயற்பட முற்பட்ட போதும் கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியதை ஒரு குற்றச்சாட்டாகவே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்தமாகவே தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ”என்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல்களை விட்டனர். எனது மகளுக்கு அவளுடைய தம்பியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டினர். மனைவியை வெள்ளைச் சேலை அணிய வேண்டி வரும் என மிரட்டினர். உங்களைப் போன்ற தைரியம் எனக்கில்லை. அதனால் நான் நாட்டைவிட்டு வெளியேறி விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்திருக்கிறேன்” என்றார்.

இச்சந்திப்பில் தற்போதைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றிய அதிருப்தி அமைச்சரவைக் குழுவில் வெளிப்பட்டது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு அங்கு கடமையாற்றுகின்ற பேராசிரியர்களே காரணம் என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னணியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிருப்தியும் வெளிப்பட்டது.

வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு அமைச்சரின் ஒத்துழைப்பையும் கோரினர். யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் பீடத்தை அமைக்க வேண்டும் என்று சில அறிக்கைகளை வெளியிட்டதற்கு அப்பால் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யாழ் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தை அமைக்கும் முயற்சி நீண்டகாலமாக கிடப்பிலேயே உள்ளது. அதனால் வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு தங்கள் ஆர்வமேலீட்டால் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அழுத்தத்தை மேற்கொண்டனர்.

”பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது என்பது சாதாரண விடயமல்ல” என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான திட்ட ஆவணங்களையும் திட்ட வரைபுகளையும் தயாரித்து தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். பொறியியல் பீடத்திற்கான திட்ட ஆவணங்களும் திட்ட வரைபுகளும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் அது பற்றி கவனம் கொள்ளாததால் அமைச்சர் தன்னைச் சந்தித்த பொறியியலாளர் குழுவிடம் அவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றி கருத்து வெளியிட்ட விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், ”முறையான திட்ட ஆவணங்கதை தயாரித்து வந்தால் 2011 – 2012 நிதி ஆண்டிலேயே அந்த நிதிக் கோரிக்கையை வைக்கமுடியும்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உலகம் முழுவதுமே அரசாங்கங்கள் பொதுத்துறைக்கான நிதியை குறைக்கின்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கை அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைக் குழு இந்தியாவினதும் சர்வதேச அணுசரனையுடனும் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கான உதவியைப் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

”ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த போதும் அவ்வாறான உதவிகள் வருவதில்லை” என பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். ”இந்தியா உதவி அளிப்பதாக செய்திகள் வந்ததைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தான் அங்குள்ள கல்வியியலாளர்களுடன் பேசும்போது அவர்கள் அவ்வாறான எவ்வித உதவியும் வழங்கப்படுவது பற்றி அறிந்திருக்கவில்லை” எனச் சுட்டிக்காட்டினார்.

Minister_DD_17Oct10_Colomboஇது பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சரவைக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ”அரசாங்கம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கைகள் பலனளிக்காது” எனத் தெரிவித்தார். ”இலங்கையில் இவ்வளவு மோசமான அழிவுக்கு வித்திட்டதில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது” எனவும் அவர் குற்றம் சாட்டினார். ”பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு, இப்போது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இடித்துக் கேட்க முடியாது” எனவும் சந்திரமோகன் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கு தான் முழு முயற்சி எடுப்பேன் என உறுதியளித்த அமைச்சர் வேண்டிய அவணங்கள் தயாரிக்கப்பட்டதும் அமைச்சரவையில் முன்வைத்து வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி அளித்தார்.

(தகவல் ரி கொன்ஸ்ரன்ரைன்)

._._._._._.

லண்டன் குரல் (ஒக்ரோபர் 07 2010) இதழ் 36ல் வெளியான செய்தி:

தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வர வேண்டும்!

யாழ் பல்கலையின் நலன்விரும்பிகள் இணைய வலையில் கையொப்பப் போராட்டம்!!!

University_of_Jaffna”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”
எஸ் சுவர்னஜோதி, ஓடிறர் ஜென்ரல், ஓடிற் 2009 

இது மலையெனக் குவிந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சீரழிவின் ஒரு சிறு பகுதியே.

யுத்த சூழலில் இருந்து மீண்டுள்ள தமிழ்க் கல்விச் சமூகம் தமது கல்விக் கட்டமைப்புகளில் உள்ள சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளினால் அதிர்ந்து போயுள்ளனர். தமிழ் சமூகத்தினை வேரறுக்கும் அளவிற்கு கல்விக் கட்டமைப்புகளில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகச் சீர்கேடு, ஊழல், மோசடி, பாலியல் பலாத்காரம் என்பன மலிந்து போயுள்ளன. யாழ் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் அர்த்தமற்றவையாகிக் கொண்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தைச் இச்சீரழிவில் இருந்து மீள்விக்க அமைச்சர் தேவானந்தாவும் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நலன்விரும்பிகள் இணையப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நவம்பரில் நடைபெறவுள்ள யாழ் பல்கலையின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில் இப்பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்ததொரு பல்கலைக் கழகமாக்க கனவு கண்ட பேராசிரியர் கைலாசபதியின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே அமைச்சர் தேவானந்தாவும் கவுன்சில் உறுப்பினர்களும் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் ரரின் கொன்ஸ்ரன்ரைன்.

இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கம், கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமரன், வரலாற்றுத்துறையின் தலைவர் பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் முக்கியமாகப் போட்டியிடுகின்றனர். யாழ் பல்கலைக்கழகம் சீரழிந்து கீழ்நிலைக்குச் சென்றதற்கு மிகமுக்கிய பொறுப்புக்களில் இருந்த இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் பல நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இவர்களே காரணமாகவும் இருந்தள்ளனர்.

அதனால் யாழ் பல்கலைக்கழகத்தை மீள்விக்க சிரழிவுக்கு வெளியே இருந்து கல்வித் தகமையும், நிர்வாகத் திறனும் உடைய ஒருவரைக் கொண்டுவருவதே பொருத்தமானது என போராட்டத்தில் இணைந்து கையொப்பம் இட்டுள்ள பலரும் கருத்து வெளியிட்டு உள்ளனர். அந்த வகையில் உபவேந்தர் பதவிக்கு போட்டியிடுகின்ற சர்வதேச பல்கலைக்கழக அனுபவமும் தகமையும் நிர்வாகத் திறனும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களே இப்பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுகிறார்.

Douglas_and_Studentதமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ் கல்விச் சமூகத்தை 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப கட்டியெழுப்ப விரும்பினால் அமைச்சர் தேவானந்தா பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலுக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமைச்சருக்கு நீண்டகாலம் தம் அரசியல் ஆதரவை வழங்கிவரும் வி சிவலிங்கம், எம் சூரியசேகரம், ராஜேஸ் பாலா உட்படப் பலர் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் ஹூல் இலங்கையிலேயே தகமைபெற்ற ஒருவர் என்றும் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கு வாழத்துக்கள் என்றும் ஈபிடிபி கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா ரிபிசி வானொலியில் தெரிவித்து இருந்தார்.

தமிழ் மக்களின் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற அமைச்சர், பரிசு பெறும் மாணவி தன் காலத்தில் யாழ் பல்கலையில் பாதுகாப்பாகவும் பெருமிதத்துடனும் கற்க வழிசெய்வார் என நம்புவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்