இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல குகுலேகம தோட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அத்தோட்டத்திற்குச் சென்றுள்ள போதும், அவர்கள் தொடர்ந்தும் அத்தோட்டத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்று வந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அங்கு விஜயம் செய்த சிவாஜிலிங்கம் அத்தோட்டத்திலுள்ள மக்களிடம் கலந்துரையாடியதாகவும் அம்மக்கள் அத்தோட்டத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 10 குடும்பங்கள் மட்டுமே அத்தோட்ட குடியிருப்பிற்குத் திரும்பி உள்ளதாகவும், அவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாட முடியாது உள்ளதாகவும், அங்குள்ள தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் உடமைகளும் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே தம்மை வந்து பார்வையிட்டதாகவும், வேறு எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ தம்மை வந்து பார்க்கவில்லை எனவும் அம்மக்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
Related News and Articles:
இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!