Multiple Page/Post

“இலங்கைக்கு இந்தியா போல வேறு யாரும் உதவவில்லை.” – இந்திய  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இலங்கை கடந்த பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தமிழகத்தைக் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து டெல்லியில் இன்று இலங்கை நிலைமை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட 8 மத்திய மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

இன்றைய கூட்டத்தில் இலங்கைக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை கண்ணோட்டத்தில் நாங்கள் விளக்கம் அளித்தோம். இலங்கையின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் நிலைமை குறித்து விளக்கப்பட்டது.

நமது அண்டை நாட்டில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால், அது எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயம். மீனவர் பிரச்சினை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன. இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி உதவி போல் வேறு எந்த நாடும் இந்த அளவு ஆதரவை வழங்கவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர், இலங்கை பொருளாதார நெருக்கடியை இந்தியா ஒரு பாடம் போல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மாநில வாரியாக, வருவாய் ஒப்பீடு, வளர்ச்சி விகிதம், கடன்கள், சொத்துக்களை அடமானம் வைத்தல் போன்றவை குறித்த மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது !

தமிழ்நாடு கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் – செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீ மதி ( 17 ) . இவர் , கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் , பள்ளி விடுதியில் மர்மமான முறையில் ஜூலை 13 – ம் தேதி உயிரிழந்தார்.

 

மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் , நேற்று கலவரமாக மாறியது . இதனிடையே , மதியின் பெற்றோர் ராமலிங்கம் , செல்வி ஆகியோர் நேற்று காலை நெஞ்சுவலியால் , வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . பின்னர் , பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் , கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் செல்வி கூறியது : எனது மகள் ஸ்ரீமதி உயிரிழந்து 5 நாட்களாகிறது . கடந்த 4 நாள்களாக அமைதியான முறையில் நீதிகேட்டும் எந்தவித பதிலும் இல்லை . மாணவர்கள் சங்கம் சார்பில் நீதிகேட்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை , பள்ளி நிர்வாகம் அடியாட்கள் மூலம் தாக்கியதுடன் , பள்ளிக் கட்டிடம் மற்றும் வாகனங்களை எரித்து , கல்வீசி கலவரத்தை ஏற்படுத்தி , தற்போது மாணவர்கள் மீது பழிசுமத்துகின்றனர் .

 

பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை , இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை , இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் . கொலையைத் தற்கொலையாக மாற்றியுள்ளனர் . திட்டமிட்டு கொலை செய்தவர்களைத் தூக்கிலிட வேண்டும் . எனது மகள் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார் .

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.அந்த கடிதத்தில், கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் ரொம்ப பிரஷர் பண்ணறாங்க. என்னால முடியல என குறிப்பிட்டுள்ளதாக தகவல். மேலும் தான் நன்றாக படிப்பதாகவும், ஆனால் கணிதம் மற்றும் வேதியியல் துறை ஆசிரியைகள் படிக்கவில்லை என துன்புறுத்தியதாகவும் தகவல். டாடி, மம்மி மற்றும் தம்பியிடம் சாரி சொல்லி கடிதத்தை முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதே நேரம் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த பள்ளி தரப்பு நிர்வாகிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி தரப்பில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆசிரியைகள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐந்து பேரையும் ஆகஸ்ட் 1 தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்பொழுது ஐந்து பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ – மோசமடையும் மக்களின் நிலை !

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 16,000க்கும் மேற்பட்ட மக்களை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது.

பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரான்ஸின் ஜிரோண்டேவில் உள்ள அதிகாரிகள், முகாம்களில் இருந்து காவலர்களை வெளியேற்றியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் முன்னதாகவே வெளியேறினர். தற்போது, டெஸ்டெ-டி-புச் மற்றும் லாண்டிராஸ் பகுதிகளில் தீ பரவியுள்ளது.

தெற்கு ஸ்பெயினில், 3,200க்கும் மேற்பட்ட மக்கள் மிஜாஸ் மலைகளில் தீயில் இருந்து வெளியேறினர். இருப்பினும் பின்னர் சிலர் திரும்பி வர முடிந்தது.

போர்த்துகலில் தீ தற்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயினில் வெப்பம் காரணமாக 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஸ்பெயினில் உள்ள மிஜாஸ் தீ, பிரபலமான சுற்றுலாப் பகுதியான மலாகாவிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஸ்பெயினின் பிற இடங்களில், காஸ்டிலா ஒய் லியோன், கலீசியா மற்றும் எக்ஸ்ட்ரீமதுரா மாகாணங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

ஸ்பெயின், குரோஷியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் தீ பரவியதால், இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

150 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டு இன்று ஆபத்தில் உள்ள இலங்கைக்கு பிரித்தானியா உதவாமல் உள்ளது – இராஜதந்திரி பீட்டர் ஹீப் விசனம்!

இலங்கைக்கு சர்வதேசசமூகம் உதவி வழங்கும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்கவேண்டும் என பிரிட்டனின் ஓய்வுபெற்ற இராஜதந்திரி பீட்டர் ஹீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thinakkural.lk

கார்டியனில் வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடிக்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தில் பதில் நடவடிக்கை வெட்கக்கேடானது. மக்கள் பட்டினியால் அவதியுறுகின்றனர். மருந்துகள் இன்மையால் உயிரிழக்கின்றனர்.

போதியளவு பெற்றோல் இல்லாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மின்சார தட்டுப்பாடு காணப்படுகின்றது.

அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதற்கு அப்பால் ( ராஜபக்சாக்களின் மோசமான ஆட்சி,30 வருட கிளர்ச்சியால் நாடு சிதைவடைந்ததன் பாரம்பரியம்) நெருக்கடி நிலையில் உள்ள இன்னொரு பொதுநலவாய நாட்டிற்கு உதவும் விடயத்திற்கு பிரிட்டன் தலைமை வகிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். (நாங்கள் அவர்களின் விருப்பமின்றி அவர்களை 150 வருடங்களிற்கு மேல் ஆட்சி செய்தோம் என்பதை கருத்தில்கொள்ளவில்லை, அதற்காக நாங்கள் ஏதாவது கைமாறு செய்யவேண்டும்)

நாங்கள் மிக வேகமாக சர்வதேச நிவாரணமுயற்சியொன்றிற்கு தலைமை தாங்கவேண்டும், பொதுநலவாயத்தின் ஊடாக அதனை செய்யலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வருகிறார் கோட்டாபாய – வெளியாகியுள்ள அறிவிப்பு !

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லவுள்ளார்.

இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ , அதன் பின்னர் நாட்டுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும் மகனின் பாதுகாப்பிற்காக. அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

பிறந்த தாய்நாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

“28 வருட ஜனநாயக அரசியல் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் ரணில் தான் நாட்டை மீட்பார்.”- டக்ளஸ் தேவானந்தா

இடைக்கால ஜனதிபதி பதவிக்கு, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்  ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என தாம் நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே தாம் ஆதரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அதிபர் தேர்வுக்கான விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாசா என்னுடன் பேசியிருந்தார். அதன்போது அவர் என்னை தனது தந்தையின் நண்பர் என்றும் தனக்கு குறித்த அதிபர் போட்டியின்போது ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.

ஆனால் நான் கருத்தில் எடுப்பதாக தெரிவித்திருந்தபோதிலும் குறித்த போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே ஆதரிக்கவுள்ளேன்.

மேலும் போராட்டக்காரர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து அமைதிவழியில் இந்த பிரச்சினையை சமாளிக்க எண்ணுகின்றனர். இது குறித்து பதில் அதிபருடன் கலந்துரையாடி எனது கருத்தையும் அவரிடம் முன்வைத்திருந்தேன். குறிப்பாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தில் முன்வைக்கும் நியாயத் தன்மைக்கு ஏற்ப தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு அவர் அதைத்தான் தானும் எண்ணியிருப்பதாகவும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் தான் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாக நியமனமானால் அவர்களை அழைத்து பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மஹிந்த தரப்பினரை பாதுகாப்பதற்கான தேவைப்பாடு ரணில் விக்ரமசிங்க இருக்கப்போவதில்லை.ஆனால் தற்போதுள்ள அரசு ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற அரசியல் தேவை அவருக்கு இருக்கலாம். அவரும் இந்நாட்டின் ஒரு சிறந்த அரசியல்வாதிதான்.

நாடு குழப்ப நிலையில் இருந்தபோது யாரும் பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வராதிருந்தபோது ரணில் விக்ரமசிங்கவே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். அதன்பின்னர் தற்போது அவருக்கு இந்த சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. அதற்கு அவர் சரியானவராகவே இருப்பதாக நான் கருதுகின்றேன். ஏனெனில் எனக்கும் இந்த நாடாளுமன்றில் 28 வருட ஜனநாயக அரசியல் அனுபவம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் முகநூல் புரட்சியாளர்களும் பொருளாதாரமும் அரசியலும்: எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்குமா?

ராஜபக்சாக்கள் நிரந்தரமாக துரத்தப்பட்டுவிட்டார்கள் என்ற குதுகலத்தில் போராட்டக்காரர்கள் உள்ளனர். சர்வதேச மேற்கு ஊடகங்கள் கோத்தாபய ராஜபக்சவின் உள்ளாடையை கொண்டாடியது. ஆனால் எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்குமா? என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. போரட்டக்காரர்களிடமும் பதில் இல்லை. அவர்கள் காலிமுகத்திடலில் காற்று வாங்கி இப்போது ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்த்து செல்பி எடுப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர். போராட்டக்காரர்கள் இலங்கையை அடுப்பிற்குள் இருந்து நெருப்பிற்குள் தள்ளியுள்ளனர். ஐஎம்எப் மற்றும் உலக வங்கிக்கு இலங்கையைப் பலிகொடுப்பதற்கு இருந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்தில் பெற்றோல், எரிவாயு, சேதனப் பசளைக்காக இலங்கையின் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வழங்கப்பட்டு வரும் மானியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும். இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பொருளாதாரம் பற்றியும் அரசியல் பற்றியும் புரியாத இதே மக்களின் பிள்ளைகளுக்கு இதுவரை கிடைத்துவந்த அடிப்படை வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையைத் தொடர்ந்தும் பொருளாதார அடிமையாக்குவதில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அதன் பின்னுள்ள உலக நாடுகளும் மிகக் கச்சிதமாக இயங்குகின்றன.

ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள்:

வினைத்திறனற்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் கிளர்ச்சிகளை மேற்கொள்ள மக்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. ஆனால் இவ்வாறான போராட்டங்கள் புரட்சிகர கட்சிகளால் முன்னெடுக்கப்படாமல் தலைமை தாங்கப்படாமல் எழுந்தமானமாக நடத்தப்படுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. மாறாக பிரச்சினையை மேலும் மோசாமாக்குவதோடு, போராடியும் பயனில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். எதிர்காலம் முன்னிலும் மோசமானதாக அமையும்.

உலக அளவில் அண்மைக்காலங்களாக நடத்தப்பட்டுவரும் திடீர் ஆட்சிமாற்றங்கள் ஒன்றும் மக்களால் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு அரப் ஸ்பிரிங் ஆனாலும் காலிமுகத்திடலானாலும் விதிவிலக்கல்ல. மக்களை வைத்தே அந்த மக்களைச் சுரண்டும் கைங்கரியத்தை அமெரிக்க மற்றும் நாட்டுத் தலைமைகள் மிக உன்னதமாக மேற்கொண்டு வருகின்றன. காருக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் பெற்றோல் கிடைக்காத அகரலியாக்களின் காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையை நிரந்தரமாக சீரழிப்பதற்கு மேற்குநாடுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுக்கும் பல்கைலக்கழகங்களில் படிக்கும் இந்த மாணவர்களுக்கு தங்கள் சகமாணவிகளையே ராக்கிங் என்ற பெயரில் கொடூர பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து விடுவிக்க முடியவில்லை. அல்லது விடுவிக்க விரும்பவில்லை. காலிமுகத்திடல் போராட்டம் உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட நீண்டகால சிந்தனையற்ற உயர்தர சமூகத்தின் போராட்டம். இது மோட்டார் சைக்கிள் காருக்கு பெற்றோலுக்காக கீழ்நிலை மக்களுக்கு இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் அகற்றியுள்ளது.

பொருளாதாரப் பிரச்சினைத் தீர்க்காமல் நாட்டை விற்கும் போராட்டம்:

நாட்டில் ஏற்பட்டு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை. அதன் அடிப்படை அம்சம் அந்நியச்செலாவணி கையிருப்பில் இல்லை. இந்த அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லாமால் போனதற்காண முக்கிய காரணம் நாட்டிற்கு அந்நியச் செலவணியைக் கொண்டுவரும் துறைகள் அண்மைய நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்டது. குறிப்பாக சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் 13 வீதத்தை கொண்டுவருவது. அது முற்றாக முடங்கியது. தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர் அனுப்புகின்ற பணம். உலகம் முழவதும் ஏற்பட்ட கோவிட் நெருக்கடியால் இவ்வருமானங்கள் முற்றிலும் முடங்கியது. அதேசமயம் முதலீடுகளை ஊக்குவிக் வரிக்குறைப்பைச் செய்ததன் மூலம் அதன் மூலம் ஈட்டக்கூடிய வருமானமும் முற்றிலும் முடங்கியது. தமிழர்களின் ஜஎஸ்பி பிளஸ் நிறுத்த போராட்டத்தின் மூலம் ஆடை ஏற்றுமதியில் கிடைத்த வரிச்சலுகை இலங்கைக்கு தற்போது இல்லை. இவையே பொருளாதார நெருக்கடியின் பின்னணி.

இதிலிருந்து மீள்வதற்கு முதல் செய்ய வேண்டியது நாட்டில் அமைதியை நிலவச் செய்து உல்லாசப் பயணிகளை செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். அதனைச் செய்திருந்தாலேயே தற்போதிருந்த பெற்றோல் எரிவாயு நெருக்கடியை தீர்த்திருக்க முடியும். நாட்டில் ஏற்பட்டுள்ள விலை வீக்கத்தினால் இலங்கையின் நாணயப் பெறுமதி மிகக் குறைந்துள்ளது. இது வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதனை விடுத்து தொடர்ந்தும் நாட்டை முடக்கி பொருளாதாரத்தை சீரழிப்பது சர்வதேச நாணய நிதியத்திடமும் உலக வங்கியிடமும் இலங்கையை ஒப்படைக்கும் ஒரு திட்டமே.

இலங்கைப் பொருளாதார நெருக்கடியும் சர்வதேசப் பின்னணியும்:

அமெரிக்காவில் ஜனவரி ஆறில் டொனால்ட் ட்ரம் தன்னுடைய ஆதரவு மக்களை ஹப்பிடல் ஹில் மீது ஏவிவிட்டார். செனட்டர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மேசைகளின் கீழ் பதுங்கினர். ஹபிடல் ஹில் அரகலியாக்கள் கட்டடத்திற்குள் நூழைந்து தங்கள் வெற்றியை ஆர்ப்பரித்து கொண்டாடினர். ஹபிடல் ஹில் அரகலியாக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர்வரை கொல்லப்பட்டனர். ஹபிடல் ஹில் அரகலியாக்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிர வலதுசாரிகள் என்றும் அமெரிக்க மற்றும் சார்புநாடுகளின் ஊடகங்கள் முத்திரை குத்தின. விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது. மாறாக கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை கைப்பபற்றிய காலிமுகத்திடல் அரகலியாக்களை சர்வதேச ஊடகங்கள் கொண்டாடியது மட்டுமல்ல ஜனாதிபதியின் உள்ளாடையையும் தூக்கி கொண்டாடினர். அத்தோடு சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் தான் இலங்கையை பொருளாதாரக் கஸ்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கோரும் காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கு ஆதரவானவர்களின் பேட்டிகளும் ஒலிபரப்பப்பட்டது.

சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தான் நாட்டை இந்நிலைக்கு இட்டுச்சென்றது என்ற பரப்புரையை இந்தியாவும் மேற்குநாட்டு ஊடகங்களும் தீவிரமாகப் பரப்பின. ஆனால் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் 10 வீதம் மட்டுமே. இந்த பத்துவீத கடன் கூட இலங்கையின் நீண்டகால கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள். அவை நீண்டகாலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பயன்படக்கூடியவை. இலங்கையில் சீனாவின் ஆளுமையை விரும்பாத இந்தியாவும் மேற்குநாடுகளும் இலங்கைக்கும் சீனாவுக்கும் எதிரான பரப்புரைகளில் மிகநீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றன. இதற்குச் சாதகமாக 2009 யுத்த முடிவை கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராகப் பயன்படுத்தி வந்தன. இந்த யுத்தத்திற்கு முற்று முழதான ஆதரவை அழித்துவந்த சர்வதேசமும் இந்தியாவும் தாங்கள் ஏதோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் போல் நடித்துவருகின்றனர்.

மேலும் அமெரிக்க சார்பான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ரஷ்ய விமானங்களைத் தடுத்து வைத்திருந்தார். அதன் பின் கோட்டபாய ராஜபக்ச தனது பிரதிநிதிகளை ரஷ்யாவுக்கு அனுப்பி பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி இருந்தார். அதன் முடிவுகள் வருவதற்கு முன்னரேயே அரகலியாக்கள் கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதிச் செயலகத்தைவிட்டும் நாட்டைவிட்டும் வெளியேற்றினர். பாகிஸ்தானில் சினாவுடன் நெருக்கமாக முற்பட்ட தன்னை அமெரிக்கா சதிமூலமாக வெளியேற்றியதாகவும் தற்போது நாட்டை கிரிமினல்களிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானுக்கு நடந்த அதே நிலை ராஜபக்சவுக்கும் நடந்தேறியுள்ளது. நாட்டுத்தலைவர்கள் எப்பேர்ப்பட்ட மோசமானவர்களாக, கொடூரமானவர்களாக, சர்வதிகாரிகளாக, மனித உரிமையை மீறுபவர்களாக இருந்தாலும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் அமெரிக்க மற்றும் சார்பு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் வரை. அவர்களுக்கு எதிரான ரஷ்யாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டுச் சேர்ந்தால் அல்லது திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைக்கு மாறாகச் சென்றால் அவர்கள் நையப்புடைக்கப்படுவார்கள். அவர்களுடைய உள்ளாடைகள் சர்வதேச ஊடகங்களில் வலம்வரும். சதாம் ஹ_சைன், கேர்ணல் கடாபி, முகாபே இவர்கள் எல்லோருமே அமெரிக்க – பிரித்தானிய கூட்டின் செல்லப்பிள்ளைகளாக இருந்து அமெரிக்காவிற்கு எதிரியானவர்கள். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையீடு செய்த எந்தநாடும் உருப்படவில்லை. உருப்படவும் விடமாட்டார்கள். அந்த நீண்ட பட்டியலில் காலிமுகத்திடல் அரகலியாக்களின் உதவியோடு இலங்கையும் சேர்க்கப்பட்டு உள்ளது.

அரகலியாக்களின் கோரிக்கைகள் அல்ல விருப்பப்பட்டியல்:

பல்கலைக்கழக மாணவர்கள் கீழ்த்தரமான பகிடிவதைகளில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளாகும் தமது சக தோழர்களுக்கு சார்ப்பாக எப்போது போராடத் தொடங்கினார்களோ அதிலிருந்து அவர்களது போராட்டங்கள் மிகக் கீழ்த்தரமானவையாக்கப்பட்டுவிட்டன.

இந்த காலிமுகத்திடல் அரகலியாக்களால் முன்வைக்கப்பட்ட காலிமுகத்திடல் கோரிக்கை ஒன்றும் மோசமானதல்ல. ஆனால் அதில் உள்ளடக்கம் இல்லை. கபொத சாதாரணதர மாணவர்களிடம் எவ்வாறான அரசு உங்களுக்கு வேண்டும் என்று கேட்டால் அவர்கள் ஒரு விருப்பப்பட்டியலை எழுதித் தருவார்கள். அதற்கு ஒத்ததாகவே அரகலியாக்களின் கோரிக்கைகள் உள்ளது. அவர்களிடம் அரசு பொருளாதாரம் சார்ந்த அடிப்படை அறிவுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கொண்டுவந்த நல்லாட்சி விளையாட்டுத்தான் அது. மத்திய வங்கியை கொள்ளையடித்தது போல் செய்வதற்கான வழி.

நாட்டில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடத்தப்பட்டு அதில் அரகலியாக்களும் ராஜபக்சக்களும் போட்டியிட்டால் ராஜபக்சாக்கள் அரகலியாக்களைக் காட்டிலும் கூடுதல் வாக்கைப் பெறுவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஹபிடல் ஹில் அரகலியாக்கள் ட்ரம் தலைமையில் போட்டியிட்டால் பைடன் தோற்றுவிடுவார். இதுதான் நிலவரம். இந்த அரகலியாக்கள் இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் கார் வைத்திருப்பவர்களும் இலவசக் கல்வி முடிய வெளிநாடு செல்ல இருப்பவர்களும் தான். இவர்கள் ஒட்டுமொத்த இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

உலகத் தலைவர்கள் பொறிஸ் ஜோன்சன், மோடி போல் ராஜபக்சாக்களும் ஊழல் பண்ணி உள்ளனர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. குஜராத் படுகொலைகளுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமைக்காக, இந்தியப் பிரதமர் மோடி பிரதமராகுவம் வரை அவருக்கு அமெரிக்கா செல்லத் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. சவுதி அரசர் பின் சலமனின் உத்தரவில் அவரை கடுமையாக விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளும் துண்டுதுண்டாக்கப்பட்டது. சவுதியை ‘பறையர் தேசம்’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி பைடன். இப்போது பைடனும் பின் சல்மனும் கூடிக் குலாவுகின்றனர். ‘கொஞ்சம் உன்டெண்ண பெற்றோல் விடுங்கோ’ என்று கேட்க பைடன் சவுதி சென்றுள்ளார். மறுபக்கம் யேமன் மக்களை சவுதி குண்டுபோட்டு அழித்துக்கொண்டுள்ளது.

‘உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யக்கூடாது’ என்று சொல்வார்கள். அதேபோல் முதலுதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிலையை மோசமடையச் செய்யக் கூடாது. உங்களால் ஒரு விடயத்தை ஆக்கபூர்வமாகச் செய்ய முடியாவிட்டால் அதனைச் செய்யாமல் இருப்பதே மேல். குட்டையைக் குழப்பி விடுவதில் பயனில்லை. காலிமுகத்திடல் போராட்டம் குறுகிய சிலரின் நலன்களுக்காக ஒரு பொழுது போக்காக ஆரம்பிக்ப்பட்டது. தமிழரசுக்கட்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இப்படித் தான் தூண்டிவிட்டது. மக்களது மெல்லிய உணர்வுகளை உணர்ச்சியூட்டி தூண்டிவிட்டு அழிவை ஏற்படுத்துவதே கடந்தகால போராட்டங்கள் தந்த படிப்பினை. காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் இன்னுமொரு உதாரணம்.

கருக்கலைப்புக்கு அனுமதி – அமெரிக்காவில் இரு மசோதாக்கள் நிறைவேற்றம் !

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை ரத்து செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

பேரம்பேசுவதற்கு மீண்டும் ஓர் சந்தர்ப்பம் – பயன்படுத்திக்கொள்வார்களா தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவதாக உத்தியோகபூர்வமாக இன்று காலை உத்தியோகபூர்வமாக செய்தி வெளியான நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாக எண்ணி இன்று கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் பாற்சோறு செய்தும் பட்டாசு வெடித்தும்  தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்தப் போராட்டம் உண்மையிலேயே புரட்சி என கூற கூடிய அளவிற்கு இருந்ததா..?  என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும். போராட்டக்காரர்கள் பெரிதாக எந்த ஒரு அரசியல் விடயங்களும் – புதிய இலங்கைக்கான தெளிவான திட்டங்களும் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக ராஜபக்சக்கள் மீதான வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருந்தது.

இது மட்டும் இல்லாது போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்துக்கான கொள்கைகளையும் கோஷங்களையும் முறையாக வெளிப்படுத்தவில்லை என்பதே கண்கூடு. குறிப்பாக ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டமையாக இருக்கலாம் அல்லது அலரி மாளிகை மற்றும் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கான முயற்சியாக இருக்கலாம் அனைத்தும் இலங்கையில் ஜனநாயகம் என்ற விடயத்தை கேள்விக்கு உள்ளாக்கி கேலிக்கூத்தாக்கி உள்ளது என்பதே உண்மை. போராட்டம் இடம்பெற்றது ஏன்..? எதற்கு..? என்ற வினாக்களுக்கு இன்று வரை விடை தெரியவில்லை. ஜூலை 9  போராட்டத்தினுடைய முடிவில் போராட்டக்காரர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை மிக்க கனதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மாறாக போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சாதாரணமாக கடந்து விடக் கூடியவையாக காணப்பட்டன. உண்மையிலேயே இந்த போராட்டம் எரிபொருள் தட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாடு என ஆக சில விடயங்களோடு மட்டுமே முற்றுப் பெற்றுள்ளது என்பதே கவலையான உண்மை. போராட்டக்காரர்கள் ராஜபக்சக்களை எதிர்ப்பது போன்றதான ஒரு தோரணையில் மட்டுமே போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி  தமிழின் கள அனுபவம் - BBC News தமிழ்
இந்தப் போராட்டத்தின் அறிக்கைகளில் முன் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கூட தனித்து மீண்டும் தனிப் பெரும்பான்மை என்ற கருத்தியலையே முன்னிறுத்துவதாகவே காணப்பட்டது. முக்கியமாக கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்ட எந்த சந்தர்ப்பத்திலும் அவருடைய போர் குற்றங்கள் தொடர்பிலும் , காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வு தொடர்பிலோ பெரிதாக அலட்டிக்கொள்ளப்படவில்லை.  இது இன்னமும் இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு  ஏற்படவில்லை என்பதையே மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 30 வருட போர் வெற்றியை கொடுக்க மனதில்லாது சரத் பொன்சேகாவிற்கு அந்த 30 வருட போர் வெற்றியை சூட்டுவதற்கு முயற்சித்ததையும் காண முடிந்தது. இது தவிர போராட்டத்தில் ஈடுபட்ட  ஏனைய மத குருமார்களை காட்டிலும் பௌத்தசங்கத்துக்கும் – அதன் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதன் பின்னணியில் இன்னமும் சிங்கள-பௌத்த மனோநிலையில் இருந்து இந்த நாடோ – சிங்கள இளைஞர்களோ மீளவில்லை என்பதையே காண முடிகின்றது.
இவற்றுக்கு அப்பால் ,
ராஜபக்சக்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை தமிழர் தரப்பு முறையாக பயன்படுத்தியதா..? எனக் கேட்டால் முற்றிலும் இல்லை என்றே கூற வேண்டும். ஆக குறைந்தது தங்களுடைய அபிலாஷைகளையும் – தேவைகளையும் – தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீத்யையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் சரி போராட்ட களத்தில் ஏதாவது கோஷங்கள் முன்வைக்கப்பட்டதா என்று கேட்டால் அதுவும் இல்லை. வடகிழக்கு தமிழர்கள் தங்களுடைய தேவைகளையும் – தங்களுடைய அபிலாசைகளையும் – தங்களுடைய பிரச்சனைகளையும் தென்னிலங்கைக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை இன்று தவற விட்டுவிட்டார்கள் என்பதை உண்மை.
இந்தப் போராட்டத்துக்காக பெருமளவு கலந்து கொண்ட இளைஞர்களில் அதிகம் பேர் சிங்கள இளைஞர்களாகவே காணப்பட்டனர். தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போதும் சொற்பமானவர்களாகவே கலந்து கொண்டனர்.            வட- கிழக்கில் இருந்து கலந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை காட்டிலும் தென் இலங்கையிலும் – மத்திய இலங்கை பிராந்தியங்களிலும் பிறந்து வளர்ந்த – வேலைக்காக குடியேறியுள்ள  தமிழ் இளைஞர்களே இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு இருந்தனர். இதனாலையோ என்னமோ ராஜபக்சக்களிடமும் – தென்னிலங்கை சமூகத்திடமும்  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் – தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்களும்  கேட்கப்படாமலும் – தெரிவிக்கப்படாமலுமே  விடப்பட்டு விட்டன.
இது போக ராஜபக்சகளுக்கு எதிராக தென்னிலங்கை முழுமையிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க அதனை ஏதோ விளையாட்டுப் போட்டி பார்ப்பது போல தமிழர் தரப்பு யார் வெற்றி பெறுவார்கள்..? என்பது போலவும் ஏதோ நடத்தி முடிக்கட்டும் நாம் வெறும் பார்வையாளர்களே என்ற கோணத்தில் கையாண்டு இருந்தது. மேலும் Karma is boomerang என்ற மனோ நிலையில் நின்று கொண்டு ராஜபக்சக்களை கர்மா தண்டிக்கிறது என பேசிக்கொண்டு இருந்தனர். மேலும் தென்னிலங்கை முழுமையுமே போராட்டத்தால் எரிந்து கொண்டிருக்க வட-கிழக்கு திருவிழா கொண்டாட்டங்களாலும் – பெட்ரோலுக்கான காத்திருப்புகளாலும்  நிறைந்து வழிந்தது.
மேலும் தமிழ் அரசியல்வாதிகள் சரி இந்த போராட்டங்களை  ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் –  காலதிகாலமாக பேசி வரும் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு களமாக பயன்படுத்தினரா..?  என கேட்டால் அதுவும் இல்லை. ஜூலை 9 ராஜபக்ச அரசுக்கு எதிராக நடந்து முடிந்திருந்த  இறுதிப் போராட்டத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ் தலைமைகள் சார்பில் சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர். தமிழர் தரப்பினுடைய பிரச்சனைகள் தொர்பில் பலமாக  அவர்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த போதும் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் எதையுமே அங்கு கதைத்து இருக்கவில்லை. குறிப்பாக இன்னமும் அமுலில் இருக்கக்கூடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதன் தேவை குறித்தோ, காணாமல் ஆக்கப்பட்டு ஒருபிரச்சினைக்காக ஆயிரம் நாட்களை தாண்டியும் போராடும் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் குறித்தோ , வடகிழக்கு சுவிகரிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பிலும் எந்த ஒரு விடயங்களையும் அவர்கள் பேசி இருக்க வில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு நாள் ஜனாதிபதி பதவியை ஏற்கும் வாய்ப்பையோ –  அதிகாரத்தையோ  கூட வழங்காதீர்கள் என மிக வினயமாக  அவர்கள் வேண்டி இருந்தனர். (இதே ரணில் விக்கிரமசிங்க வெற்றிக்காக ஓட்டு போடுங்கள் என வட-கிழக்கின் தெருக்களில் இறங்கி கூவி கூவி திரிந்ததும் இதே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தான் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வோம்.) ஏனைய தமிழ்  அரசியல் தலைவர்களின் அடையாளமே இந்த போராட்ட காலங்களில் இல்லாது போய்விட்டது.
முழுமையாக தமிழ் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் –  தமிழ் மக்களும் – தமிழ் இளைஞர்களும்
இந்தப் போராட்டத்தில் இருந்து முழுமையாக  விலகியே இருந்தனர்.
பயன்படுத்த வேண்டிய – பயன்படுத்தி இருக்க வேண்டிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இன்று தமிழ் சமூகம் தவற விட்டுவிட்டது என்பதை உண்மை. ஆக குறைந்தது இந்த ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தினை பயன்படுத்தி தென்னிலங்கை சமூகத்தின் கவனத்தை  தமிழர் பக்கம் திருப்புவதற்கு இம்மியளவு முயற்சி கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை. இன்னும் இந்த சர்வதேசம் தமிழர்கள் விடயத்தில் தீர்வை தரும் என அதே பழைய பொய்களை தான் இந்த அரசியல்வாதிகள் தமிழ்ர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள். தமிழர்களும் அதனைத் தான் உண்மை என்றும் – சரியானது என்றும் நம்பிக் கொண்டு அதே போலி தமிழ் தேசியத்தில் திளைத்திருக்கப் போகிறார்கள் என்பதை கடந்த மூன்று மாதங்களில் இருந்த தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
சரி நடந்து முடிந்த விடயங்களை கைவிடுவோம். இன்னும் மீதமாக ஒரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைமைகளை நம்பி தமிழ் மக்கள் வழங்கிய அந்த ஓட்டுக்களையும் பயன்படுத்தக்கூடிய இறுதி சந்தர்ப்பம் ஒன்று எஞ்சியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள  சவால்கள்? – Maatram
இந்தப் போராட்டம் இலங்கையில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டியதற்கான புதிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவு ஜூலை 20ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீ நான் என்ன முண்டியடித்துக் கொண்டு தங்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக பிரகடனப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்கப் போகிறவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் வட-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 13 பேர் உள்ளனர். இவர்கள் தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய முக்கியமான ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது.  நீ நான் என்ன போட்டி போட ஆரம்பித்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தங்களுடைய சரியான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அதே நேரம் இந்த பந்தயத்தில் வெற்றிபெறக்கூடிய  வேட்பாளர் ஒருவரை தமிழ் தலைமைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் மிக நீண்ட காலமாக இருந்து வரக்கூடிய பல பிரச்சனைகளும் வட- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால்  கோரிக்கையாக முன் வைக்கப்படுதல் வேண்டும்.   குறிப்பாக தமிழர் பகுதிகளில் இன்னமும் எரிந்து கொண்டிருக்கக்கூடிய பிரச்சனைகளான ; வட-கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பான விடயங்களும், போர் முடிந்த பின்னும் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் தமிழர்களின் நிலங்கள் தொடர்பிலும், ஆயிரக்கணக்கான நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் , பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தேவை தொடர்பிலும் , இயங்காது இருக்கக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் தொடர்பிலும் அழுத்த திருத்தமாக குறித்த கோரிக்கைகள் ஊடாக வலியுறுத்தப்படுதல் வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்த வகையில்  ஒரு வேட்பாளரை தெரிவு செய்து குறித்த கோரிக்கைகள் தொடர்பில் வலியுறுத்தி தங்களுடைய ஆதரவை குறித்த வேட்பாளருக்கு  வழங்க  முன்வர வேண்டும்.
தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல் - GTN
பரபரப்பான அரசியல் நிலவரம் ஒன்று இலங்கையில் தோன்றியுள்ள நிலையில் , இன்னமும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்ததாகவோ  அல்லது இது தொடர்பான ஒரு கூட்டத்தை நடத்தி ஒரு பொதுவான முடிவுக்கு வந்ததாகவும் எந்த ஒரு அசைவுகளையும் காண கிடைக்கவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் கடந்த காலங்களைப் போலவே பேரம் பேச வேண்டிய இன்னும் ஒரு அற்புதமான தருணத்தை இந்த ஒற்றுமை இல்லாத தமிழ் தேசிய தலைவர்கள் தவறவிடப்போகிறார்களா..? அல்லது பயன்படுத்தப்போகிறார்களா..? என்று..!

இலங்கை நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் -உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி சொல்லும் விளக்கம் !

உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், “அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது” என்றார்.