Multiple Page/Post

2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

யுக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என்று கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.

மேலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனா, தனது கொரோனா சுகாதாரக் கொள்கைகளைத் தளர்த்தியதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் போரினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யா துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி.”- ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்திகதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன.

அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதி புடின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டிய புதின், உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யா துண்டாக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தார்.

பாலஸ்தீனப் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் – விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு அழைப்பு!

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது.

பொதுச் சபை தீர்மானத்தில் இஸ்லாமிய உலகில் கிட்டத்தட்ட ஒருமித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 87 வாக்குகள் ஆதராக அளிக்கப்பட்டன. இதில் ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி உட்பட 24 நாடுகள் எதிராக வாக்களித்தன. அதே நேரத்தில் 53 நாடுகளில் பிரான்சும் வாக்களிக்கவில்லை.

உலக நீதிமன்றம் என்றும் அழைக்கப்படும் ஹேக் அடிப்படையிலான சர்வதேச நீதிமன்றம், மாநிலங்களுக்கிடையேயான தகராறுகளைக் கையாளும் உயர்மட்ட ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்துக்கு அவற்றைச் செயல்படுத்த எந்த அதிகாரமும் இல்லை என்றாலும், அதன் தீர்ப்புகள் பிணைக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமையன்று பாலஸ்தீனியத் தலைவர்கள் வாக்கெடுப்பை வரவேற்றனர், மூத்த அதிகாரி ஹூசைன் அல்-ஷேக் ‘இது பாலஸ்தீனிய இராஜதந்திரத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறினார்.

‘இஸ்ரேல் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, மேலும் நமது மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபில் அபு கூறினார்

காதல் தோல்வி – பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய்தீப் ராய் (27) என்பவர் இளம்பெண்ணொருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்ய விரும்பினார்.

ஆனால் அப்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் மனம் உடைந்த ஜெய்தீப் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் அவர் பேசுகையில், நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என அவளிடம் காதலை முன்மொழிந்தேன்.

ஆனால், அனைவரின் முன்னிலையிலும் அவள் மறுத்துவிட்டாள். அவளின் மாமா எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார், நான் இந்த உலகை விட்டு போகிறேன் என்னால் என் காதலி கஷ்டப்படக்கூடாது.

அம்மா, மாமா, அத்தை, சகோதரி, மூத்த சகோதரர், மருமகள் மற்றும் அண்ணியிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன், ஆனால் நான் என் காதலியை அதிகமாக நேசிக்கிறேன், அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என கூறியிருக்கிறார்.

ஜெய்தீப் சகோதரர் ரூபம் ராய் கூறுகையில்,

எங்கள் குடும்பம் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளது.

எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதனால்தான் இதுவரை நாங்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு கூட பதிவு செய்யவில்லை. என் சகோதரரை கொன்றுவிடுவதாக அவளின் மாமா மிரட்டினார்.

என் சகோதரர் ஒரு நல்ல மனிதர், நன்றாக சம்பாதித்தார், ஆனாலும் அவர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை என்றார்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ஜெய்தீப் குடும்பத்திடம் இருந்து எங்களுக்கு இன்னும் முறையான புகார் எதுவும் வரவில்லை, ஆனால் நாங்கள் விசாரணையைத் தொடங்கி விட்டோம் என்றார்.

பனிப்புயலால் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் குளிர், மின்தடை, போக்குவரத்து இடையூறு என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்த மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது பனிப்புயல். அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பனி மூடிய பாறைகள் காணப்படுகின்றன.

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்தது 2023 – கோலாகலமாக வரவேற்ற மக்கள் !

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு பிறந்ததை ஒட்டி கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டிலும் புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

கண்ணைக் கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹேப்பி நியூ இயர் என சொல்லி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து புத்தாண்டை வரவேற்றனர்.

 

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறை

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சான் சூகிக்கு (Aung San Suu Kyi) இதுவரை 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் பதவி கவிழ்ப்பு செய்து கடந்த 2021 பெப்ரவரியில் ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களை சிறையில் வைத்துள்ள இராணுவம், இதற்கு முன்ன இடம்பெற்ற வழக்குகளில் அவர் மீது தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதிலிருந்து நாட்டின் முன்னாள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்போதிருந்து, அவர் 18 மாதங்கள் 19 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் – இது ஒரு போலி குற்றச்சாட்டு என சமூக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

அவரை விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று (30) அவர் எதிர்கொண்ட கடைசி ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அமைச்சர் ஒருவர் ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அவர் பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொவிட் பொது பாதுகாப்பு விதிகளை மீறியமை, வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தமை, உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவருக்கு ஏற்கனவே 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் அனுமதிக்கப்படாமல் இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது இடம்பெற்ற விபரங்களை வெளியில் சொல்வதற்கு சூகியின் சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

77 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, தலைநகர் நே பை தாவில் (Nay Pyi Taw) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் (பர்மா) கூற்றுப்படி, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600 இற்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 13,000 பேர் சிறையில் உள்ளனர்.

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மியான்மரில் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியது. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகியதோடு, தீர்மானத்தின் வார்த்தைகளில் திருத்தங்களைத் தொடர்ந்து அந்நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி மீதான “இடைவிடாத சட்டரீதியான தாக்குதல்”, “எதிரிகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அல்லது கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதற்கு இராணுவம் நீதிமன்றங்களை எவ்வாறு ஆயுதமாக்கியுள்ளது” என்பதைக் காட்டுகிறது என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரியில் இராணுவத்தால் மியன்மார் அதிகாரத்தை வன்முறையாகக் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு எதிராக பொதுமக்களால் பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் விளையவாக மியன்மர் இராணுவம், ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.

இது இராணுவம் மற்றும் இராணுவ ஆட்சியாளர்களை எதிர்க்கும் சிவிலியன் படையான தனி இன கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே புதிய உள்நாட்டு சண்டையையும் தூண்டியது.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் பொதுமக்கள் தங்கியுள்ள கிராமங்கள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக இராணுவ ஆட்சிக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய அடக்குமுறையில் 2,600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட்ஜட் தோல்வி – பதவி விலகினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்பதன் அடிப்படையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3
உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவால் வெற்றி பெற்றது என்பதும் இந்த ஆண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கைக்கு 79ஆவது இடம் !

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன் 79ஆம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலுள்ளது.

குறித்த பட்டியலில் 68.37 சதவீதத்துடன், அமெரிக்கா முதலிடத்திலும் சுவிற்சர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து முதலான நாடுகள், முறையே இரண்டு முதல் ஐந்தாம் இடம் வரை தரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 41.52 சதவீதத்துடன், 91 ஆவது இடத்தில் இந்தியாவும், 34.44 சதவீதத்துடன் 110 ஆவது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

தரமான கல்வி வாய்ப்புகள் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் – கல்வி அமைச்சர்

வெற்றிகரமான மனித வளத்தை உருவாக்குவதற்கு தரமான கல்வி வாய்ப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

எதிர்காலத்தில் பாடசாலைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவது இலகுபடுத்தப்படும்; ஆரம்ப, கனிஷ்ட இரண்டாம் நிலை மற்றும் சிரேஷ்டஇரண்டாம் நிலை மற்றும் 8,000 பட்டதாரிகள் நிதி நிர்வாகத்திற்காக வைக்கப்படுவார்கள்.

தற்போதுள்ள 100 கல்வி வலயங்கள் 120 ஆக அதிகரிக்கப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான சேவை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகில் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள STEM கல்வி (விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கணிதம்) நாட்டின் கல்வி முறையில் பிரபல்யப்படுத்தப்படும் அதேவேளை தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டங்களை வழங்கும் நிறுவனமாக.அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள கல்வி சீர்திருத்தங்கள் மாத்திரம் போதாது என்றும், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் செயலூக்கமான பங்களிப்பை எதிர்பார்க்கும் அதே வேளையில் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.