ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறை

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சான் சூகிக்கு (Aung San Suu Kyi) இதுவரை 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் பதவி கவிழ்ப்பு செய்து கடந்த 2021 பெப்ரவரியில் ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களை சிறையில் வைத்துள்ள இராணுவம், இதற்கு முன்ன இடம்பெற்ற வழக்குகளில் அவர் மீது தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதிலிருந்து நாட்டின் முன்னாள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்போதிருந்து, அவர் 18 மாதங்கள் 19 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் – இது ஒரு போலி குற்றச்சாட்டு என சமூக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

அவரை விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று (30) அவர் எதிர்கொண்ட கடைசி ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அமைச்சர் ஒருவர் ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அவர் பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொவிட் பொது பாதுகாப்பு விதிகளை மீறியமை, வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தமை, உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவருக்கு ஏற்கனவே 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் அனுமதிக்கப்படாமல் இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது இடம்பெற்ற விபரங்களை வெளியில் சொல்வதற்கு சூகியின் சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

77 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, தலைநகர் நே பை தாவில் (Nay Pyi Taw) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் (பர்மா) கூற்றுப்படி, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600 இற்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 13,000 பேர் சிறையில் உள்ளனர்.

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மியான்மரில் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியது. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகியதோடு, தீர்மானத்தின் வார்த்தைகளில் திருத்தங்களைத் தொடர்ந்து அந்நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி மீதான “இடைவிடாத சட்டரீதியான தாக்குதல்”, “எதிரிகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அல்லது கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதற்கு இராணுவம் நீதிமன்றங்களை எவ்வாறு ஆயுதமாக்கியுள்ளது” என்பதைக் காட்டுகிறது என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரியில் இராணுவத்தால் மியன்மார் அதிகாரத்தை வன்முறையாகக் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு எதிராக பொதுமக்களால் பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் விளையவாக மியன்மர் இராணுவம், ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.

இது இராணுவம் மற்றும் இராணுவ ஆட்சியாளர்களை எதிர்க்கும் சிவிலியன் படையான தனி இன கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே புதிய உள்நாட்டு சண்டையையும் தூண்டியது.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் பொதுமக்கள் தங்கியுள்ள கிராமங்கள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக இராணுவ ஆட்சிக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய அடக்குமுறையில் 2,600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *