Multiple Page/Post

பொங்கல் பரிசாக யாழ். மாவட்டத்துக்கு 24 மணிநேர மின் விநியோகம்

power1.jpgயாழ். மாவட்டத்துக்கு பொங்கல் பரிசாக 24 மணித்தியால மின்சார விநியோகத்தை மின் சக்தி வள அமைச்சு வழங்கவுள்ளது. தற்போது சீன நிறுவனத்தினால் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “நோத்பவர்’ மின் உற்பத்தி நிலையம் தனது செயல்பாட்டை பூரணப்படுத்தியிருப்பதால் அடுத்த இருவாரங்களுக்குள் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிறுவனம் தினமும் 35 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் திறன் கொண்டுள்ளதால், குடாநாடு முழுவதும் நாள் முழுவதும் தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமென யாழ். மாவட்ட மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குடாநாட்டுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த வருடத்துடன் முடிவடைவதால், புதிய சீன நிறுவனமே மின் உற்பத்தியை தொடரமுடியும். இதேவேளை வடபகுதிக்கு லக்ஸபான மின்சார பாதையை விஸ்தரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியாகவுள்ள மாங்குளம் வரையான விஸ்தரிப்பு வேலைகள் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ளன.

பஸ் கட்டணங்கள் இன்று முதல் குறைப்பு

திட்ட மிட்டபடி சகல பஸ் கட்டணங்களும் இன்று முதல் (6) குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக் குழு அறிவித்துள்ளது.  பஸ் கட்டண அதிகரிப்பை இடை நிறுத்துமாறு சில பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ள போதும் திட்டமிட்டபடி கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுத் தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.

டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் 4.3 வீதத்தினால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதோடு இதனுடன் இணைந்ததாக மேல் மாகாணத்தில் உள்ள 780 மார்க்கங்களில் நிலவும் பஸ் கட்டண முரண்பாடும் சீர்செய்யப்படுவதாக ஆணைக்குழு கூறியது. இதன் பிரகாரம், 231 மார்க்கங்களில் பஸ் கட்டணம் ஒரு ரூபா, முதல் 22 ரூபா வரை குறைக்கப்பட உள்ளதோடு 237 மார்க்கங்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. பஸ் கட்டணங்கள் குறைக்காத பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்டணம் குறைக்காத பஸ்கள் தொடர்பாக முறையிடுமாறும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய கட்டணக் குறைப்பின்படி ஆரம்பக் கட்டணத்திலும் ஒன்பது ரூபா கட்டணத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. 12 ரூபா முதல் 33 ரூபா வரையான கட்டண தொகைகள் ஒரு ரூபாவினாலும் 35 ருபா முதல் 59 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவினாலும் 61 முதல் 96 ரூபாவரையான கட்டணங்கள் 3 ரூபாவினாலும் 98 ரூபா முதல் 118 ரூபா வரையான கட்டணங்கள் 4 ரூபாவினாலும் 120 ரூபா முதல் 142 ரூபா வரையான கட்டணங்கள் 5 ரூபாவினாலும் குறைக்கப்படுகின்றன. அரைச் சொகுசு, சொகுசு பஸ் கட்டணங்களும் இன்று முதல் குறைக்கப்படுகின்றன. பஸ் கட்டணங்கள் கடந்த டிசம்பர் மாதத்திலும் குறைக்கப்பட்டது தெரிந்ததே.

கிளிநொச்சி வீழ்ந்ததால் புலிகள் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை- தமிழக கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

tamils-conference.jpgசென்னையில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் வர்த்தக மாநாட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாலும் இலங்கையில் கிளிநொச்சி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் ஊடுருவி வருவதைத் தடுக்கவும் தமிழக கடல் பகுதியில் தீவிர ரோந்துப் பணியும் கண்காணிப்பு பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழில் அதிபர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் தாக்குதல் நடத்தப்போவதாக சவூதி அரேபியாவில் இருந்து ஈமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். எங்கள் அடுத்த தாக்குதல் இந்த மாநாடு தான் என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்திய “டெக்கான் முஜாகிதீன்’ தீவிரவாத இயக்கம் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளது. மிரட்டல் கடிதம் வந்தது பற்றி சென்னை சைபர் கிரைம் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் தொழில் மாநாட்டுக்கு வரலாறு காணாத வகையில் 5 அடுக்கு பாதுகாப்புப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்படுகிறார்கள். மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரதமரும் ஜனாதிபதியும் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கவுள்ளனர்.

எனவே, ஆளுநர் மாளிகைக்கும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்புப்போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இப்போது இருந்தே சென்னை புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியதால் தமிழக கடலோரப் பகுதியும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் கடல் வழியாக நுழையாமல் தடுக்கத் தமிழக கடலோரப் பகுதியில் தீவிர ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேல் மாகாண பொலிஸ் கணக்கெடுப்பு: 1657 பேர் புதிதாக பதிவு: போதிய ஆவணங்கள் இல்லாத 106பேர் கைது

colo-reg.jpgமேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பொலிஸ் கணக்கெடுப்புகளின் போது புதிதாக 1657 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கணக்கெடுப்பின் போது தனது வதிவை உறுதிப்படுத்த போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போன சிங்களம், தமிழ், முஸ்லிம் மூவினங்களைச் சேர்ந்த 106 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

2003ம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வதிபவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நேற்று முன்தினம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவு களில் நடத்தப்பட்ட இந்த பொலிஸ் கணக் கெடுப்பின் போது 29,244 பேர் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

29,244 பேரில் 15,975 ஆண்களும், 13,269 பெண்களும் அடங்குவர். இதேவேளை, கடந்த பல மாதங்களுக்கு முன்னர் பொலிஸார் நடத்திய தேடுதலின் போது பதிவு செய்யப்பட்ட வர்களிலிருந்து 1657 பேர் மேலதிகமாக இம்முறை பதிந்துள்ளனர். இவற்றில் 929 ஆண்களும், 728 பெண்களும் அடங்குவர்.

இதேவேளை மேல் மாகாணத்தில் தற்காலிகமாவோ, நிரந்தரமாகவோ தங்கியிரு க்கும் காரணத்தையோ, அதனை உறுதி செய்யும் ஆவணங்களையோ உரிய முறையில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் 106 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்களில் 67 தமிழர்களும், 36 சிங்களவர்களும், இரண்டு முஸ்லிம்களும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வுமட்டுமே இலங்கையின் இன மோதலுக்கு முடிவைத் தரும் – ஜப்பான்

kilinochchi-victory.jpgவிடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகர் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அதிகளவு உதவிவழங்கும் நாடுகளில் ஒன்றான ஜப்பான், இனநெருக்கடியை அரசியல் தீர்வினால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை இராணுவம் முல்லைத்தீவை நெருங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன நெருக்கடிக்கு உண்மையான தீர்வை அரசியல் முயற்சிகளூடாகவே யதார்த்தபூர்வமானதாக்க முடியும், என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு நேற்று தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பான இந்த அதிகாரி மேலும் கூறுகையில்; வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்ளக சுயாட்சியை கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஜப்பான் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கை நிகழ்வுகள் குறித்து ஜப்பான் இன்னமும் உத்தியோகபூர்வமான கருத்துகளை தெரிவிக்க வில்லையென்றும் தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். மோதல் மேலும் தொடருமென்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டரீதியற்ற தலைநகரை கைப்பற்றுவது ஒரு அடையாளரீதியான விடயமாகும். ஆனால், யுத்தரீதியான முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் கிழக்குப்பகுதி காட்டுக்குள் மோதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இலங்கைக்குக் கிடைக்கும் சர்வதேச உதவிகளில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியை ஜப்பானே வழங்குகின்றது. கடந்த மூன்று வருடங்களில் 4 தடவைகள் விசேட தூதுவரை மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட ஜப்பான் அனுப்பியிருந்தது.

பங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று பதவியேற்பு

haseena.jpgபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று செவ்வாக்கிழமை பதவியேற்கவுள்ளார்.  தலைநகர் டாக்காவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். ஜனாதிபதி அய்ஜுத்தீன் அகமது பிரதமருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்ற பின்னர் புதிய பிரதமராக ஹசீனாவைத் தேர்ந்தெடுத்தனர்.  பங்களாதேஷில் கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 259 இடங்களில் வென்று மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது.

இந்தக் கூட்டணியில், முன்னாள் ஜனாதிபதி எச்.எம்.எர்ஷத் தலைமையிலான ஜாதியா கட்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலிதா ஷியா தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் குளறுபடி, மோசடி என்று தொடக்கத்தில் புகார் கூறி வந்தாலும் பின்னர் தமது கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொண்டு புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் காலிதா ஷியா . இருப்பினும் அவரது கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்கவில்லை.

சிரஸ, சக்தி, எம்.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் தாக்குதல். வழமையான சேவைகள் ஸ்தம்பிதம்.

sirasa.jpgகொழும்பு பன்னிப்பிட்டிய தெப்பானமவில் அமைந்துள்ள மஹாராஜா நிறுவனத்தின் எம்டிவி, எம்பிசி ஊடக நிறுவன பிரதான கலையத்தின் மீது இன்று அதிகாலை 2.10 மணியளவில் இனம்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதான கலையகம் பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக எம்பிசி நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகளான எம்டிவி, சிரச, மற்றும் சக்தி தொலைக்காட்சி சேவைகளும் இன்று நண்பகல் வரை தமது வழமையான சேவைகளை நடத்தவில்லை.  இதுவரை பிந்திய செய்தி என்றடிப்படையில் இத்தாக்குதல் சம்பவத்தையே மூன்று தொலைக்காட்சி சேவைகளும் ஒளிபரப்பி வருகின்றன. வழமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பிரதான கலையகம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கின்றன.

இலக்கத்தகடற்ற வெள்ளை வேனில் வந்த சுமார் 15 தொடக்கம் 20 பேர் வரையிலான ஆயுதம் தாங்கிய கும்பலே இத்தாக்குதலை நடத்தியதாகவும் அவர்களிடம்  டி 56 ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிகளும், கைகுண்டுகளும் இருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சென்ற பொலிஸார் கைக்குண்டு ஒன்றை மீட்டதாகவும் கூறியுள்ளனர்.

இனந்தெரியாத கும்பல் கலையகத்துக்குள் நுழைந்து பல இடங்களில் கைக்குண்டு வீச்சுகளை நடத்தியதுடன் துப்பாக்கி சூட்டுகளையும் பொல்லுகளாலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பின் பிரதான கலையகம் தீயுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,  கலையகத்தில் பொறுத்தப்பட்டிருந்த அதிநவீன ஒளி,  ஒலி பரப்புச் சாதனங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலகோடிக்கணக்கான ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தின்போது, ஆயுததாரிகள் அங்கு சேவையில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதன்போது பல ஊழியர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினமும் இலக்கத்தகடற்ற வெள்ளை வானின் நடமாட்டம் இருந்ததாகப் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்றும் தெப்பானம கலையகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
sirasa-02.jpg

ஆனையிறவின் தென்பகுதி படையினரால் முற்றாக மீட்பு ஒட்டுசுட்டான் பிரதேசமும் முழுமையாக வீழ்ந்தது

lanka-map.jpgபுலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஆனையிறவின் தென்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கமைய, ஆனையிறவுக்கு தெற்கே உள்ள கரையோர பகுதிகள் முழுவதும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிளிநொச்சியை முழுமையாக விடுவித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் யாழ். குடாவின் நுழைவாயிலான ஆனையிறவை நோக்கி முன்னேறி வந்தனர். பரந்தன், கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்பொழுது ஆனையிறவுக்குள் பிரவேசித்துள்ளனர். இந்தப் படைப்பிரிவினர் கடந்த ஐந்து நாட்களுக்குள் பெற்ற மூன்றாவது பாரிய வெற்றி இதுவாகும்.

ஆனையிறவுக்கு தெற்கே தமிழ்மடம் கரையோரப் பிரதேசம் இராணுவத்திடம் முழுமையாக வீழ்ந்ததையடுத்து யாழ்ப்பாணத்தின் களப்பு பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அதேசமயம், பூநகரி – பரந்தன் வீதி, பரந்தன் ஆனையிறவு வீதி மற்றும் ஏ-9 வீதிக்கு தென் பகுதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவுக்குள் பிரவேசித்த படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், படையினரின் கடுமையான தாக்குதல்களில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனையிறவை புலிகளிடமிருந்து ஏற்கனவே மீட்டெடுக்கும் படை நடவடிக்கைகளின் போது முக்கிய பங்களிப்பை வகித்து இராணுவத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஹஸலக காமினியின் உருவச்சிலை ஒன்றும் ஆனையிறவு பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது படைவீரர்கள் அந்த உருவச் சிலையையும் தாண்டி, வடக்கே நோக்கி முன்னேறி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆனையிறவு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படையினர் தற்பொழுது தமது நிலைகளை மேலும் பலப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தனுக்குக் கிழக்காக அமைந்துள்ள முரசுமோட்டை பகுதியிலும் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வன்னி நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பல முக்கிய பிரதேசங்களை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர். புலிகள் பாவித்து வந்த பல விநியோக பாதைகளையும் பாதுகாப்பு படையினர் நாளுக்கு நாள் துண்டித்து வருகின்றனர். முகமாலை, செம்பியன்பற்று மற்றும் முல்லைத்தீவு ஆகிய தரை வழிப்பாதைகளின் ஒரு சில பகுதிகள் மாத்திரமே தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவிலுள்ள ஒட்டு சுட்டான் பிரதேசத்திற்குள் நேற்று முன் தினம் பிரவேசித்த இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தற்பொழுது ஒட்டுசுட்டான் முழுவதையும் நேற்றைய தினம் விடுவித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய ஏ-32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வரையான பிரதேசம் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். இதன் மூலம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்கள் ஊடாக புலிகள் முன்னெடுத்து வந்த பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளும் நிர்வாக செயற்பாடுகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
 

சந்தேகத்திற்கிடமான பொருட்கள், நபர்கள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – பொலிஸார் அறிவுறுத்தல்

police.jpgகொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குண்டு வெடிப்புகள் காரணமாக மக்களை விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொருட்களையோ அல்லது நபர்களையோ கண்டால் உடனடியாக அருகிலிருக்கும் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர மக்களைக் கேட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதல்களை தடுத்துக்கொள்ளும் முகமாக பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேநேரம், படையினர் கிளிநொச்சியை கைப்பற்றியதை அடுத்து, விடுதலைப்புலிகள் நடத்தக்கூடிய எதிர்பாராத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கைப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் பொலிஸார் விஷேட திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

சர்வகட்சி மாநாட்டை உடனடியாக கலைக்குமாறு வற்புறுத்துகிறது ஜே.வி.பி.

jvp.jpgசர்வகட்சி மாநாட்டை உடனடியாக கலைக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் செயலாளருமான விஜித ஹேரத், சர்வகட்சி மாநாடு தயாரித்துள்ள தீர்வுத் திட்டம் பிரிவினை வாதம் பலமடையவே வாய்ப்பளிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து இனமக்களையும் ஒன்றுபடுத்தி தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு தேட முடியுமெனவும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குரிய விதத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்திலும் ஈராக்கிலும் ஆயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்களைச் கொன்று குவித்து வரும் அமெரிக்காவுக்கு இலங்கையில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கேட்பதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தேசப்பற்றுள்ள தேசிய நிலையம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் ?ச்பாதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

“இன்றைய அரசு அதிகாரத்துக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையை தொடர்வதிலேயே ஆர்வங்காட்டியது. ஜெனீவா பேச்சுவார்த்தையின் போதும் போர் நிறுத்தத்தை பாதுகாப்பதிலேயே ஆர்வம் காட்டியது. தென்னிலங்கை மக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டது. நாட்டு மக்களின் இந்த வெற்றியை அரசாங்கமும் அரசில் உள்ள சில தலைவர்களும் தம்மால் ஈட்டப்பட்ட வெற்றிபோல் காட்டிக்கொள்ள முற்படுகின்றனர். நாட்டின் பொருளாதார பின்னடைவை மூடிமறைக்கவும் இதனைப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. நாட்டின் பொருளாதார வளங்களை இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தாரை வார்க்கும் ஒரு முயற்சியிலும் அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இயங்கிக் கொண்டிருப்பது சர்வகட்சி மாநாடல்ல. அதுவெறும் அரசாங்கக் கட்சிகளின் மாநாடாகும். அது எடுக்கும் தீர்வு முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் ஒரு போதும் அங்கீகாரமளிக்கப் போவதில்லை. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்ட அரசியல் தீர்வு யோசனை முன்வைக்கப்படப் போவதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு தீர்வுத் திட்டம் கொண்டுவரப்பட்டால் அது பிரிவினைவாதத்தை வலுவடையச் செய்யும் ஒரு திட்டமாகவே காணமுடியும். இந்தியாவில் இருக்கும் பிராந்திய அரசுகளுக்கு அப்பால் சென்ற அதிகாரத் தீர்வாகவே அமைய முடியும். அப்படி வந்தால் தற்போதைய பயங்கரவாத செயற்பாடுகளைவிடவும் மோசமான விளைவுகளையே நாடு எதிர்கொள்ள நேரிடலாம். திஸ்ஸ விதாரண தலைமையில் இயங்குவது சர்வகட்சி மாநாடாக நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அது இன்று தவறான வழியில் சென்று கொண்டிருக்கின்றது. பிரதான கட்சிகள் அதிலிருந்து வெளியேறிவிட்டன. அரசாங்க சார்புக் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. எனவே சர்வகட்சி மாநாட்டை உடன் கலைக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் ஒன்றுபடுத்தி தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சமமாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமநீதி கிட்ட வேண்டும். அதனைச் செய்யத் தவறியதனால் தான் இந்தளவு பேரழிவை நாடு சந்திக்க நேரிட்டது. 1960 களில் ஐ.நா. தலையிட்டு பாலஸ்தீனத்தை வேறுபடுத்தியது. ஐ.நா.வின் சமாதானத் தீர்வுத் திட்டம் நிறைவேறியதா? அதன் விளைவு, இன்று பாலஸ்தீனம் பிணக்காடாக மாறியுள்ளது. அத்தகையதொரு நிலைக்கு இலங்கையை இனியும் தள்ளிவிடமுடியாது. தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் இயக்கத்தை அமைத்து ஒன்றுபட்டுச் செயற்பட அனைத்து சமூகங்களும் ஒன்றுபடவேண்டும்’ எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச் சாளர் கோர்டன்கிட் இலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியிருக்கிறாரே என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த விஜிதஹேரத் கூறியதாவது; “சர்வதேச பயங்கரவாதத்துக்கு ஊக்கமளித்த அமெரிக்கா எமக்கு யோசனை கூற முற்படுகின்றது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் அனைத்து உதவிகளையும் செய்து பாலஸ்தீனத்தில் குண்டுகளைக் கொட்டி அப்பாவி மக்களை கொன்றொழிப்பதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர், அப்பாவி பாலஸ்தீன மக்கள் 400க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஈராக்கை பிணக்காடாக மாற்றிய பெருமை கூட அமெரிக்காவையே சாரும். மிலேச்சத்தனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா எந்த யோக்கியதையுடன் இலங்கையை சமாதானப் பேச்சை ஆரம்பிக்குமாறு கேட்க முடியும்? அமெரிக்கா முதலில் ஒசாமா பின்லேடனுடனும் அல் ஹைடா அமைப்புடனும் சமாதானப் பேச்சுக்களை நடத்தட்டும். அதன் பின்னர் எமக்கு ஆலோசனை கூறட்டும்’ எனக் குறிப்பிட்டார்.