Multiple Page/Post

மன்னார் மாவட்ட தொலைபேசி பாவனை திடீரென்று பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த 09 மாதங்களுக்கு மேலாக கையடக்கத் தொலைபேசி மற்றும் இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சி.டி.எம்.ஏ. தொலைபேசி போன்றவற்றின் செயற்பாடுகள் திடீரென இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.  இந்தச் செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட பாவனையாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்த மொபிட்டெல் கையடக்கத் தொலைபேசிச் சேவையின் இணைப்புக்கள் திடீரென வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் வழங்கப்பட்டிருந்தது.

இதன் போது பாவனையாளர்கள் தொலைபேசிச் சேவையை பெற்றுக் கொண்டனர். மொபிட்டெல் இணைப்பின் மீள் நிரப்பும் அட்டைகள் பல ஆயிரக்கணக்கான ரூபாவுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் தொலைபேசி இணைப்புகள் நிறுத்தப்பட்டது. இந்தச் செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட பாவனையாளர்கள் பெரிதும் ஏமாற்றத்திற்குட் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வுகள் இன்று நடைபெறாது

pillaiyan.jpgஅரசாங்கம் கொண்டு வந்துள்ள உத்தேச உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக கிழக்கு மாகாணசபையின் விசேட அமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டபடி இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 20 ) நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட மூலம் மீதான விவாதத்தை நடத்துவதற்காக மே மாதம் 12 ஆம் திகதியே கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு கூட்டப்படவிருப்பதாக மாகாணசபை செயலாளர் கு. தியாகலிங்கம் சனிக்கிழமை தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான ஒருநாள் விவாதம் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை கிழக்கு மாகாணசபையின் விசேட அமர்வில் இடம்பெற்றது. விவாத முடிவில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பேச்சை அடுத்து சட்டமூலத்தை ஏற்பதில்லை என்று சபை ஏகமனதான முடிவை எடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடைசி நிமிட திருப்பத்தின் காரணமாக சபையின் கூட்டத்தை ஏப்ரல் 20 வரை ஒத்திவைப்பதாக சபையில் தவிசாளர் அறிவித்தார். இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு மே 12 ஆம் திகதியே நடக்கும் என்றும் அப்போது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நடக்கும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

உஷ்ணமான காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் – காலநிலை அவதான நிலையம் தகவல்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவிவரும் உஷ்ணமான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்குமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.

இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுத்தனாலும் காற்றின் திசை மாறியதன் காரணமுமாகவே கடந்த சில திங்களாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவி வருகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் பிராந்தியங்களில் மாலை வேளைகளில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் இதனோடு உஷ்ணமான காலநிலை குறைவடையும் எனவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. மே மாதத்திலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

mullaitheevu.jpgமுல்லைத் தீவில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரச அதிபர் பா.பார்த்தீபன் தெரிவித்துள்ளதுடன்  நாளை கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ள உணவு மூலம் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவு அரச கட்டுப்பாடற்ற பாதுகாப்பு வலயத்தினுள் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதனால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கு சீனி ஒரு கிலோ 2,500 ரூபாவாகவும் தேங்காய் ரூபா 1,400 க்கும் விற்கப்படுகின்றது. இதேவேளை ஒரு கிலோ செத்தல் மிளகாய் 12,000 ரூபாவாக விற்கப்படுகின்றது.

குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி ஒரு கிலோ 400 ரூபாவுக்கு விற்கப்படும் அதேநேரம் குழந்தைகளுக்கான பால்மா 2,200 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. நாளை செவ்வாய்க்கிழமை இங்கு உணவு அனுப்புவதற்காக திருகோணமலையில் கப்பலில் உணவு ஏற்றப்படுகின்றது. இம்முறை 1,000 முதல் 1,100 மெற்றிக் தொன் உணவுப் பொருள் அனுப்பப்படுமென தெரியவருகின்றது.

இதன் மூலம் இங்குள்ள உணவுத் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்கலாம். மண்ணெண்ணை இங்கு இல்லை. இங்குள்ள மக்கள் மலசலகூடம், நீர் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, வெள்ளிக்கிழமை கிறீன் ஓசன் கப்பல் மூலம் 466 பேர் மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் சனிக்கிழமையும் சுமார் 500 பேர் மேலதிக சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

பிரபாகரனிடம் ஒரு மணி நேரமாவது போர் நிறுத்தம் செய்யுமாறு கோர முடியுமா? எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப் படுத்த ஒருபோதும் முடியாது – ஜனாதிபதி

mahinda.jpgபுத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ ஒருபோதும் முடியாது

எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ அவற்றின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்து நாட்டைப் பாதுகாக்க முன்வருமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். மேல் மாகாண ஐ.ம.சு.மு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடை பெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உங்களைப் போன்ற மூன்று இளைஞர்களின் தந்தையாக இருந்து உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமைப்படுகின்றேன். உங்கள் மத்தியில் இருக்கும் துடிப்பையும், எதையாவது புதிதாக செய்யவேண்டு மென்ற ஆர்வத்தையும் நானறிவேன். 

இந்நாட்டின் எதிர் காலத்தைப் பொறுப்பெடுக்கவிருப்பவர்கள் நீங்களே, உங்களைப் போன்ற பருவத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன். மிகவும் குறைந்த வயதில் பாராளுமன்ற உறுப்பினரானேன்.

தாய் நாட்டின் மீது பற்றுள்ள இளம் சமுதாயத்தினரே புலிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த வடக்கையும், கிழக்கையும் விடுவித்திருக்கின்றனர்.

நாட்டின் இளம் சமுதாயத்தினர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பை அண்மையில் கிளிநொச்சிக்கு சென்ற சமயம் நான் புரிந்துகொண்டேன். திருமலை கடற்படை முகாமிலும், விமானப்படை முகாமிலும் நடைபெற்ற வைபவங்களில் கலந்துகொண்ட வேளையிலும் இதனை நான் அறிந்துகொண்டேன்.

இலட்சக்கணக்கான இளைஞர்கள் பாதுகாப்பு படையில் இணைவது வேறு தொழில்களில் ஈடுபட முடியாமல் அல்ல. மாறாகத் தாய் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்று காரணமாகவே அவர்கள் இவ்வாறு இணைகின்றனர்.

இளம் சமுதாயத்தினருக்கு நல்லதொரு நாட்டையும், சமுதாயத்தையும் உருவாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

அவர்களது எதிர்பார்ப்புக்கள் இனம்காணப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுபானத்திற்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தின் மூலம் நல்லொழுக்கமுள்ள சமுதாயம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்கள் அனைவரும் அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எனது நோக்கமாகும் என்றார்.
 

பாதுகாப்பு வலயமாக அறிவிக்கத்திட்டம்

sri-lanka-army.jpg மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு உட்பட்ட பகுதியும் அதிகூடிய பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

150 மெகாவோட்ஸ் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்காக அமுல்படுத்தப்பட்டு வருகின்ற மேல்கொத்மலைத் திட்டப் பிரதேசம் ஏற்கனவே முக்கிய பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தூதரக உறவை சோனியா காந்தி துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் கண்டன போராட்டம் நடத்தப்படும் : பாரதிராஜா

bharathi-raja.jpgஇலங்கை தூதரக உறவை துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் சோனியா காந்தி அறிவிக்காவிட்டால், 23-ந் தேதி முதல் தொடர் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர்.

ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக போரை நிறுத்த முடியும். அதனால் திரையுலகின் பல சங்கங்கள் இணைந்து ஒரு கோரிக்கையை சோனியா காந்திக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். அவர் முயற்சித்தால் இலங்கையில் செத்து மடியும் உயிர்களை காப்பாற்ற முடியும். திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் மற்றும் தமிழ் இன உணர்வுள்ள பல்வேறு அமைப்புகள் எங்கள் இயக்கத்தில் அங்கம் வகிப்பார்கள்.

சோனியா காந்தி, தமிழ்நாட்டுக்கு வாருங்கள், வாருங்கள் என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். எங்கள் சொந்தங்கள் இன்னலில் இருந்து விடுபட, உயிர்கள் காப்பாற்றப்பட உத்தரவிட்டுவிட்டு வாருங்கள். இல்லை என்றால் உங்களை எதிர்த்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

எவ்வளவோ போராடி விட்டோம், நெருக்கடி நேரத்தில் தான் விடிவு பிறக்கும் என்பதால் தான் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இனி மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் இனத்தால் ஒன்றுபடுவான், சாதிப்பான் என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் எங்கள் போராட்டம் இருக்கும். வரப்போகிற மத்திய அரசு தமிழன் சொன்னால் செவி சாய்க்கும். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானம்: “ரிவிர” பத்திரிகை தகவல்

army-wanni.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை அருகே விடுதலைப்புலி கைது: விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்

images-army.jpg இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. இதனால் விடுதலைப்புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் ஊடுருவலாம் என்றும் மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசாரும், கடலோர காவல்படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 3-ந் தேதி அன்று திருவான்மியூரில் சயந்தன் என்ற விடுதலைப்புலியும், அவரது கூட்டாளிகளான குகன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சயந்தன் லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார். இங்கிருந்து விடுதலைப்புலிகளுக்காக இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த தகவல் தெரிந்து கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். சயந்தனை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தார்கள். அப்போது, இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக பொருட்களை கடத்துவதற்கு மூர்த்தி என்ற முத்தண்ணா (வயது 39) என்ற நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. முத்தண்ணா கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரை சென்னையில் உள்ள கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ஜி.பி.எஸ். தகவல் தொடர்பு கருவி ஒன்றும், 2 செயற்கைகோள் செல்போன்களும், 4 சாதாரண செல்போன்களும், இந்தியா-இலங்கை இடையிலான கடல்வழி வரைபடமும் கைப்பற்றப்பட்டது. ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

முத்தண்ணாவிடம் விசாரித்தபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். தனது 26-வது வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகவும், விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்ததாகவும், தற்போது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக மருந்து போன்ற பொருட்களை கடத்தி செல்வதற்காக தமிழகம் வந்ததாகவும் முத்தண்ணா தெரிவித்தார். அவர், இலங்கையில் உள்ள விசுவமடு என்ற இடத்தை சேர்ந்தவர். தீவிர விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் முத்தண்ணா சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இலங்கை விவகாரம் குறித்து 29இல் ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஆராய்வு

hller.jpgஐ.நா. பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்øகப் பிரச்சினை குறித்து ஆராயப்படவுள்ளது. ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் விவகாரங்களுக்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் செயற் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சந்திக்கும்போது இலங்கை, மியன்மார் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவரும் பாதுகாப்புச் சபையின் ஏப்ரல் மாதத்திற்கான தலைவருமான குளோட் ஹெல்லர் தெரிவித்துள்ளதாக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவதை அனுமதிக்கும் எண்ணம் எதுவும் மெக்ஸிகோவிடம் இல்லை என மெக்ஸிகோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கொமஸ் ரொபெல்டோ தன்னிடம் கூறியதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கொஹென அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் அது சரியான தகவல் அல்ல என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவர் ஹெல்லர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விடயத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு தொடர்பான கரிசனை உள்ளது என நாம் மிகத் தெளிவாக உள்ளோம். எந்தவொரு நாடும் தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் அல்லது பாதுகாக்காவிட்டால் அதை செய்தவற்கு சர்வதேச சமூகம் தலையிட முடியும் என்ற “பாதுகாப்பதற்கான கடப்பாடு’ (R2P) எனும் கோட்பாடு ஐ.நா. பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஹெல்லர் கூறியுள்ளார்.