August

August

ஜனாதிபதி தேர்தலுக்கான எவ்வித பிரச்சாரத்தையும் ஆரம்பிக்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பாரிய கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளமை மிகவும் நல்ல விடயம் எனவும் மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்

நமது ஆட்சியில் தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் – அனுர குமார திசாநாயக்க

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின், தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் நமது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

 

கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று இந்த கொள்கைப்பிரகடனம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் விடுதியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதிகள், மத தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த அநுரகுமார திஸாநாயக்க,

 

”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை எமது அரசாங்கத்தில் நீக்கப்படும். அதற்கு மாற்றீடாக புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவரவுள்ளோம்.

 

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம்.

 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015-2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.

 

குறிப்பாக புதிய சந்தனையில் அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை நாம் உருவாக்குவோம்.

 

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்.

 

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமைகளில் மாற்றம் ஏற்படவேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை நாம் நாட்டில் கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம்.

 

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

 

பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சார கட்டணத்தையும் குறைப்போம்.

 

இதற்கு மக்களின் அங்கீகாரம் எங்களுக்கு மிகவும் அவசியமானது” என அநுரகுமார திஸாநாயக்க மேலும் தொிவித்தாா்.

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் – ஹரிணி அமரசூரிய

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய  தொிவித்துள்ளாா்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஹரிணி அமரசூரிய,

 

தேர்தல் நடைபெறும் போது போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கொள்கை பிரகடனத்தை வெளியிடுவது வழக்கமானதே.ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டிற்கு பொருத்தமான மக்களுக்கு தேவையான கொள்கை திட்டமொன்றே அவசியமாகின்றது.

 

கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை பலர் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுகின்றனர்.இது இன்று நாட்டில் அரசியல் கலாசாரமாக உள்ளது.

 

பலர் கட்சிமாறுகின்றனர் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதனை முற்றாக மாற்றுகின்றார்கள். மக்களால் தெரிவு செய்யடுகின்ற ஆட்சியாளர்களினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

 

தேர்தல் ஒன்று இடம்பெறும் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் வேட்பாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.அதன்பின்னர் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் அங்கு செயலற்றுபோகின்றது.

 

இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மேலும் தொிவித்தாா்.

மது அருந்தி விட்டு கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி யாழில் கைது !

குறிகட்டுவான் பகுதியில் மது அருந்திவிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) பொதுமகனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் குறிகட்டுவான் பகுதியில் மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்தார்.

 

இதன்போது வீதியால் சென்ற நபரை மறித்து அவருடன் முரண்பட்டு, இலஞ்சம் வாங்க முற்பட்டுள்ளார். பின்னர், அவரை தாக்கியுள்ளார்.

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைதானவர் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்று ஞாயிற்றுக்கிழமை (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி !

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இதேவேளை, 13,389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சரத்சந்திர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் வைத்தியர்களின் கவனயீனத்தால் இறந்த பெண்ணின் கணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது கொல்கத்தா மருத்துவமனையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை !

இந்தியாவின் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதன் விவரம்:

கடந்த 9-ம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. கையால் கழுத்தை நெரித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இது கொலைதான். பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளது. பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன.

 

எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்தம் உறைந்துள்ளது. கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளி பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் கடுமையாக போராடி உள்ளார் என தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ துறை பேராசிரியர் அபூர்வ பிஸ்வா, இணை பேராசிரியர் ரினா தாஸ், என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரியின் தடயவியல் மருத்துவ துறை துணை பேராசிரியர் மொல்லி பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் விரல் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ரத்த மாதிரியும் ஒன்றுபோல இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், கொலையில் சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, சம்பவம் நடந்த 2 நாட்களில், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவி விலகினார். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

 

‘‘பெண் மருத்துவர் உயிரிழந்த தகவல்அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரதுபெற்றோரை, மகளின் சடலத்தை பார்க்க 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைத்தது ஏன்?’’ என்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். கொலை குறித்து முதலில் உங்களுக்கு தகவல்கொடுத்தது யார், சடலம் இருந்தபகுதிக்கு அருகே உள்ள அறைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டது யார் என்பன உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

 

பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்: புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கதிரியக்க நிபுணர் ஹர்ஷ் மகாஜன், எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குநர் பல்ராம் பார்கவா, நரம்பியல் வல்லுநர் எம்.வி.பத்மா வஸ்தவா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட, நம் நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல், மருத்துவ சேவையின் அடித்தளத்தையே ஆட்டம்காண செய்துள்ளது. பெண்கள், சிறுமிகள், சுகாதார துறையினருக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் உடனே தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

வேகமெடுக்கும் குரங்கு அம்மை – சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு!

உலகில் 13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை நோய் தீவிரமடைத்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் குரங்கம்மை காய்ச்சல் பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களென 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் கொங்கோ நாட்டில் 96 சதவீத அளவு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, கொங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசாக இது பரவி வருகிறது.

கொங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே கையிருப்பில் உள்ளன.

இது பற்றி உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும் போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரஸ், ஆபிரிக்காவை கடந்து பரவக்கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல  அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல  ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2024 லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதன் படி, நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது தண்டனை காலம் எவ்வளவு என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

“இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” – இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனுஸ்

“பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்ட இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனுஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனஸ், இந்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

பங்களாதேஷ் கலவரத்தின்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கியதில், இந்து மதஸ்தலங்கள், இந்துக்களின் வீடுகள், வணிக வளாகங்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலகியது முதல் பங்களாதேஷில் சிறுபான்மையின மக்கள் மீது 205 தாக்குல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், டாக்காவிலுள்ள தாகேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார்.

இதனையடுத்து இந்து அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் 17 கோடி மக்கள் தொகையில், 8 வீதம் பேர் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் என கருதியே கலவரக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முகமது யூனுஸ், அனைவரும் சம உரிமைகளை கொண்ட மக்கள் என்றும் மக்களுக்குள் வேறுபாடுகளை உருவாக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் சிதைந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் அவை சரி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.