14

14

2400 க்கு மேற்பட்ட மக்கள் இராணுவம் விடுவித்த பிரதேசத்துக்குள் வருகை

mullivaikaal-01.jpgமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை விடுவிக்கும் மனிதாபிமான மீட்டுப் பணியின் இறுதி அத்தியாயத்தில் படையினர் இறங்கியுள்ளனர். கரையாமுள்ளி வாய்க்காயைத் தாண்டி வெள்ளமுள்ளி வாய்க்கால், பகுதிகளை நோக்கி இரு திசைகளிலும் இராணுவம் இன்று ( மே 14) முன்னேறி, புதிய பாதுகாப்பு வலயத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுசனத்தில் 2400க்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேறக் கூடிய சூழலை ஏற்படுத்தினர் என தெரிய வருகிறது.

புதிய பாதுகாப்பு வலயத்தை நோக்கிய இராணுவத்தின் வருகையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி  அதிகமான மக்கள் களப்புக் கடல் ஊடாக வெளியேறிவருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

mullivaikaal-02.jpg

தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி: விடுதலைப்புலிகள்

obama_.jpgஇலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பேச்சை வரவேற்கின்றனர், நன்றி கூறுகின்றனர். ஈழத்தில் தமிழர்கள் படும் துயரம் குறித்து அவர் பரிவுடன் பேசியதற்காகவும், மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த அவர் விடுத்துள்ள கோரிக்கைக்காகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அதேபோல, ஐ.நா. பாதுகாப்பு சபையும், ஐ.நா. அவையும், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான முறையில் விவாதித்ததையும், ஈழத் தமிழர்களைக் காக்க விடுத்த வேண்டுகோளையும் நாங்கள் வரவேற்கிறோம். மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அதிபர் ஒபாமாவின் தலையீட்டை ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

அதிபர் ஒபாமா கூறியதுபோல, பாதுகாப்புடன் கூடிய, நீடித்த அமைதிக்கு இலங்கை அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்பதை நாங்களும் ஆதரிக்கிறோம். மேலும், அமைதியை நோக்கிய நிரந்தர போர் நிறுத்தத்திற்கும் நாங்கள் ஆதரவு தருகிறோம். நாங்கள் வைத்துள்ள ஆயுதங்கள், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அமைதியான இறுதித் தீர்வை பாதுகாப்பதற்காகத்தான்.

இன்று இலங்கை அரசு, ஈழத்தில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக தண்டித்துக் கொண்டிருக்கிறது. தங்களது சுய நிர்ணயத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழர்களை அது தண்டித்துக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து இலங்கை அரசு அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்தவித மரியாதையும், கௌரவமும் இல்லாத முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.

தமிழர்களின் நிலங்களுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருக்கும் தமிழர்களையும், அரசுப் பகுதிகளுக்கு வந்த தமிழர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி அழித்து வருகிறது. இடம் பெயர்ந்து வரும் அப்பாவி மக்களை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணவில்லை. இவற்றை எந்தவித சாட்சியமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

அதிபர் ஒபாமா கூறுவதைப் போல, தமிழர்களை பேரழிவிலிருந்து காக்க, மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மீட்க அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. சர்வதேச சமுதாயத்தின் கண்களை மூடி விட்டு, இலங்கை அரசு தனது தாக்குதல்களை தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிரது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி உலக சமுதாயத்தை அது ஏமாற்றி வருகிறது.

மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளைக் கூட அது ஏற்கவில்லை. அனுமதிக்கவில்லை. இந்த சமயத்தில், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்திருப்பதற்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்.

தற்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுயேச்சையான மனிதாபிமான உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அவர்கள் இப்பகுதிகளுக்கு குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.  ஈழத் தமிழர்களுக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுக்காக பேசிய அதிபர் ஒபாமாவுக்கு நாங்கள் மீண்டும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் நடேசன்.

3ஆவது நாளாகவும் கிறீன் ஓசியன் கப்பல் முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

ship.jpgமூன்றாவது நாளாகவும் உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கிறீன் ஓசியன் கப்பல் பயணிக்கிறது. 500 தொன் உணவுப் பொருட்களுடன் ஓரியன்டல் பிரின்சஸ் கப்பல் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் முயன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியைச் சென்றடைய முடியாமல் திருகோணமலைக்குத் திரும்பிய கிறீன் ஓசியன் கப்பல் இன்று காலை மீண்டும் முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஐசிஆர்சியின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

லண்டனிலும், பிரான்ஸிலும் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்

temple1.jpgபிரான்ஸிலும், லண்டனிலும் அமைந்துள்ள இலங்கையர்களின் இரண்டு வழிபாட்டுத்தலங்கள் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளன. கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயிலின் ஆலய கோபுரம் இனந்தெரியாதோரால் பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டதாக ஆலயத் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை சந்தேகத்தில் கைது செய்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் அமைந்துள்ள சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடம் இன்று அதிகாலை சிலரால் தாக்கப்பட்டிருக்கிறது.

தாக்குதலை நடத்தியவர்கள் கற்களை வீசி மையத்தின் யன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்த பௌத்த மதகுரு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது

பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, இடம்பெயர்ந்தோர் முகாம்களை பார்வையிட வவுனியா விஜயம்

sarath-n-silva.jpgபிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இன்று காலை வவுனியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவருடன் நீதியமைச்சின் முக்கிய அதிகாரிகளும் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடம் பெயர்ந்தவர்களுக்கு கூட்டுத்தாபன நிவாரண உதவி

kumarawelgama.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூட்டுத்தாபனங்கள் ஊடாக  நிவாரண உதவிகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி நிவாரண உதவித்தொகையாக ஐந்து நிறுவனங்களால் 3.8 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.

முஸ்லிம் கவுன்சிலின் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

muslim_council_donation.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் கவுன்சிலினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநதிகள் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா,  இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியமான முஸ்லிம் கவுன்சில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு ஏற்கனவே பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இன்று 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதற்காக அந்த அமைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.

G-11 நாடுகளின் உலக பொருளாதார பேரவை கலந்து கொள்ள ஜனாதிபதி ஜோர்தான் பயணம்

mahinda-rajapaksha.jpgG-11 நாடுகளின் உலக பொருளாதார பேரவை கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானுக்கான பயணமாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மீள்குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்பு: – வடமாகாணத்துக்கு ஜனாதிபதி செயலணி

nor.jpgவட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கென முழு அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். 19 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதன் செயலாளராக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய அமைச்சர்களின் செயலாளர்கள், பிரதான பாதுகாப்பு அதிகாரி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஆணைக்குழு, நிறுவனங்களின் முக்கியஸ்தர்களைக் கொண்டதாக இச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஜனாதிபதி செயலணியின் முதலாவது அமர்வு நேற்று அதன் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியினூடாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் புனர்வாழ்வளித்தல், வடமாகாண பொருளாதார, சமூக, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுத்தல், அவற்றை செயற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புகளை செய்தல். மேற்படி நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அரச பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளல்.

குறிப்பிட்ட மாகாண அதிகாரிகள், உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களை கண்காணித்தல்.முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அரச தனியார், மற்றும் தனிப்பட்ட நபர்களின் சமூகத்தின் ஒத்துழைப்பை பெறுவதும், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதலும்.

மேற்படி செயலணியின் உத்தியோகபூர்வ பணிப்புரைகளை, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், தடைகளுக்கு உடனடி தீர்வு காணவும் உடனடியாக மாற்று வழிகளை கண்டறியும் விதத்தில் ஜனாதிபதி செயலணி செயற்படும். வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்னெடுப்பதில் ஏற்படும் முன்னேற்றங்களை அவ்வப்போது ஆராய்தலுடன் தேவையேற்படும் பட்சத்தில் உடனடியான மாற்றங்கள், திட்டங்களை நடை முறைப்படுத்துவதும் மேற்படி செயலணியின் கடமையாகும். இதேவேளை செயலணியின் நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அவ்வப்போது அறியத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன் மேற்படி செயலணியின் நடவடிக்கைகளின் போது உதவிகள் அல்லது சரியான தகவல்கள் கேட்கப்படும் பட்சத்தில் தவறாது சரியான தகவல்களையும் தாமதமின்றி வழங்க வேண்டுஎனவும் சகல அரச ஊழியர்களுக்கும் இத்தால் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு அரச ஊழியரோ அல்லது எந்தவொரு அமைச்சிலோ, அரச திணைக்களமோ, அரச கூட்டுத்தாபனமோ, அல்லது இவ்வாறான நிறுவனங்களிலுள்ள ஊழியர் எவரோ நியமிக்கப்பட்ட செயலணியின் மூலம் வழங்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புக்களையும், தவறவிடுவாராயின், அவ்வாறு அவர் தவறவிட்ட சந்தர்ப்பங்களை உடனடியாக தமக்கு அறியத்தர வேண்டும் என்றும் செயலணிக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு வழங்கப்பட்ட ஆணைக்கமைய செயற்பட்டு தனது செயற்பாடுகளை பூர்த்தி செய்த பின்பு ஒருவருட காலத்தினுள் தமக்கு அறிக்கையிடுமாறும் ஜனாதிபதி செயலர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணி குழுவில் அங்கம் வகிப்போர் விபரம் வருமாறு:- 1. பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் 2. லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலாளர் 3. கோத்தாபய ராஜபக்ஷ செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு 4. சுமித் அபேசிங்க செயலாளர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு 5. யூ.எல்.எம். ஹால்தீன் செயலாளர் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு 6. டபிள்யூ.கே.கே. குமாரசிறி செயலாளர் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு 7. எஸ். அமரசேகர செயலாளர் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு 8. எம்.எம்.சி. பேர்டினன்டோ செயலாளர் மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு 9. ஜே.ஆர்.டபிள்யூ. திஸாநாயக்க செயலாளர் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு 10. டாக்டர் அதுல கஹந்தலியனகே செயலாளர் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் போஷாக்கு அமைச்சு
11. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா பிரதான பாதுகாப்பு அதிகாரி 12. லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதி 13. வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதி 14. எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க விமானப் படைத் தளபதி 15. ஜயந்த விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபர் 16. ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் 17. மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இராணுவ பிரதான அதிகாரி வட மாகாணத்திற்கான தகுதிவாய்ந்த அதிகாரி 18. எஸ். பி. திவாரத்ன அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் 19 டீ. அபேயகுணவர்தன முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேசிய திட்டமிடல் திணைக்களம்

இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையும் கவலை

un-council.jpgஇலங்கையில் மோசமாகிவரும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபையும், தனது பெரும் கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கை விடயம் குறித்து மூடிய கதவுகளுக்கு பின்னால் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த ரஷ்யாவின் ஐ.நாவுக்கான தூதர் விடாலி சர்கின் அவர்கள், அதிகாரப் பூர்வமாக கட்டுப்படுத்தாத அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதில், இலங்கையின் வடக்குப் பகுதியில் மோசமாகிவரும் மனிதாபிமான அவல நிலைமைகள் குறித்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பதினைந்து உறுப்பினர்களும், பெரும் கவலையடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சமீப நாட்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து அவர்கள் பெரும் கவலையடைவதாக ரஷ்ய தூதுவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல ஆண்டுகளாக நடத்தி வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தற்போது அவர்கள் பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, மனித கேடயங்களாக அவர்களை பயன் படுத்துவதை மிகக்கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இலங்கை அரசுக்கு இருக்கும் சட்டரீதியான உரிமையை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் கூறினார்.

விடுதலைப்புலிகள் தங்களின் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரிய ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புசபையின் உறுப்பு நாடுகள், பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்களில் இலங்கை அரசு கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்துவதாக வெளியாகும் செய்திகளை கண்டு தாங்கள் ஆழ்ந்த கவலை கொள்வதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கைக்கான மூலவடிவம் கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.  இவர்கள் இலங்கையின் மிகமோசமான மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு சபை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நிலைமைகள் சமீப காலத்தில் மிகமோசமான கட்டத்தை எட்டிய பிறகு, ஐநாவின் பாதுகாப்புச்சபையால் வெளியிடப்பட்ட முதலாவது கடுமையான அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அம்னெஸ்டி இண்டர் நேஷனல், ஹூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் இலங்கையில் சார்வதேச சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுவதற்கான வலுவான சான்றுகள் உருவாகி வருவதாகவும், அது குறித்து ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த பின்னணியில் இந்த அறிக்கை நேற்று வெளியாகியிருப்பதாகவும் அங்குள்ள செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது