Multiple Page/Post

பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன்: உலக சிக்கன தினம் (Word Thrift Day) – புன்னியாமீன்

0000lmages.jpg“சிக்கனமும்,  சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924 இல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் ‘உலக சிக்கன தினம்” என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும்,  இத்தினத்தில் சேமிப்பு,  சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும்,  சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு  விளக்குகின்றார்.  “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது. பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே,  இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார்.   “செய்க பொருளை” என்று (குறள் 759).

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றனர் ஆன்றோர். இந்தக் கூத்து பொருள் தேடுவதற்காக அவசியத்தை உணர்த்துகின்றது. இருப்பினும் சிலர் கூறுவார்கள் “சம்பாதிக்கிறேன் ஆனால் வரும் வருவாயோ மிகக் குறைவு. வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.” இதற்கு வள்ளுவர் பின்வருமாறு  பதில் கூறுகிறார்.”ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை. போகாறு அகலாக் கடை” (குறள் 478). வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை. அதாவது வருவாய்க்குள் செலவு செய்பவனுக்குத் தீங்கு இல்லை, கவலைகள் இல்லை. எனவே மேற்படி கருத்துகளில் இருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் சிறுகச் சிறுக சேமிப்பது நடைமுறையிலுள்ள பழக்கமாகும். பிடியரிசி எமது தாய்மாரிடையே பண்டைக் கால முதல் இருந்துவந்த பழக்கமாகும். 

இந்தப் பழக்கம் சிக்கனத்தையும்,  அதே நேரம் சேமிப்பையும் வழியுருத்தி நிற்கின்றது.மனிதன் தனது வருமானத்தின் ஒரு பகுதியை நுகர்வுக்கும் இருபகுதிகளை முதலீடுகளுக்கும். எஞ்சும் பகுதியை திடீர் அவசரத் தேவைகளுக்குமாக சேமிக்க வேண்டுமென கெளதம புத்தர் உபதேசித்துள்ளார். சிக்கனமாக வாழ்ந்து சேமிப்பின் மூலம் சுபீட்சம் பெறலாமெனும் சிந்தனை புராதன காலத்திலிருந்தே நிலவி வந்துள்ளது.

ஆதி மனிதன் வேட்டையாடிய மாமிசத்தைக் காயவைத்தும்,  தேனில் ஊறவைத்தும் தேவைக்கேற்ப நுகர்ந்தான். விவசாய யுகத்தில் ‘நெற் குதிர்’களை அமைத்து சிக்கன முறையால் நெல்லைச் சேகரித்து வைத்தான். பின்பு விவசாயத்திற்காக நீரைச் சேமிக்கவும் பழகினான். ‘வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் கடலில் பாயவிடாது பயன்படுத்தவேண்டும்’ என மன்னன் பராக்கிரமபாகு கூறினான்.

கி.பி. நாலாம் நூற்றாண்டில் (கி.பி 303-331) ஆட்சிபுரிந்த கீர்த்திஸ்ரீ மேகவர்ன மன்னனால் பொறிக்கப்பட்ட தோனிக்கல் சிலாசனத்தில் பயறு, உளுந்து, சாமை, இறுங்கு போன்ற தானியங்கள் சேமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தோமஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராவார். பல விஞ்ஞான சாதனங்களைக் உலகுக்குத் தந்தவர். அவர் தனது சக்திகளை ஒரு முனைப்படுத்தியதோடு,  பணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார். இந்த சேமிப்பு மட்டும் இல்லாதிருந்தால் அவர் வெளியுலகத்திற்குத் தெரியப்படாமலேயே இருந்திருப்பார் என தற்போதைய சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில்,  சேமித்த பணமே அவரின் சாதனைகளை உலகம் அறியச் செய்தது. அவரைப் புகழேணிக்கு ஏற்றியது. தோமஸ் ஆல்வா எடிசனின் இந்த அனுபவம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும்.

‘சிக்கனம் என்பதை முதலில் வைத்திருக்கிறேன். சிந்தனையை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே,  இந்த முறையிலே அந்தச் சிக்கனம்,  சிந்தனை,  சிறந்த பண்பு,  சீர்த்திருத்தமுடன் வாழ்வு,  துணிவு இவை வேண்டும். அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம்,  சிந்தனை,  சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா?  போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக் கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்திலே அமைதி இருக்கும்,  சீர்திருத்தம் பரவ முடியும்,  சிக்கனம் நிலைக்க முடியும்,  நலம் பெற முடியும். எனவே,  அந்த முறையிலே சிக்கனம்,  சிந்தனை,  சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால்இ அந்தச் சிந்தனையாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும்”, என்று ஒரு முறை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டார்கள். இது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாகும். தனிப்பட்ட நபராகவன்றி குடும்பமாக வாழ்பவர்கள் அதிகம் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயம்.

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம். (1) கஞ்சத்தனம்,  (2) சிக்கனம்,  (3) ஆடம்பரம் (4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது குறித்த மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும்,  சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ,  தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும்,  மாரியின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும,   சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது,  அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக,  வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கின்றோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி,  கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு,  மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில்,  ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார்,  “சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன்,  முதல் தர அறையை எடுத்திருக்கிறார்,  தாங்கள் ஏன்…?” உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாய் அவற்றை இழந்துவிட நேரும்.

ஆடம்பரம்,  ஊதாரித்தனம் என்பன மனிதனை அழித்துவிடக்கூடிய சக்திமிக்கவை. தமது வருமானத்தை விட அதிகமான செலவுகள் செய்யும்போது மனிதன் ஒரு கடனாளியாக அல்லது சட்டத்தால் நிராகரிக்கப்பட்ட விடயங்களை செய்யக்கூடிய ஒருவராக மாறி வி;டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். பொதுவாக நாட்டார் வழக்கில் விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும் என்பார்கள். ஆடம்பரம்,  ஊதாரித்தனம் அதிகரிக்கும்போது விரலை மிஞ்சிய வீக்கம் சில சமயங்களில் விரலையே செயலிழக்கச் செய்துவிடலாம்.

இந்த நவீன காலகட்டத்தில் பணத்திற்கு பதிலாக கிரடிட் அட்டை (CREDIT CARD) முறை  புழக்கத்திற்கு வந்துவிட்டது. சில கிரடிட் அட்டைகளைப் பயன்படுத்தும்போது வரையறையில்லாமல் பயன்படுத்துவதையும் இதனால் பின்பு அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதையும் நாம் காண்கின்றோம். பணத்தைப் பணமாக வழங்கும்போது ஏற்படக்கூடிய பக்குவம் சிலருக்கு கிரடிட் அட்டைகளை பயன்படுத்தும்போது ஏற்படுவதில்லை. இந்த கிரடிட் அட்டைகள் பாவனையிலுள்ள எல்லா வெளிநாடுகளிலும் CREDIT CARD HISTORY என்று சொல்லப்படும்  அட்டையைப் பயன்படுத்திய பின் உரிய தொகையை உரிய நேரத்தில் செலுத்தி இருக்கிறார்களா என்ற கடன் வரலாற்றைப் பார்க்கிறார்கள். இந்த  அட்டைகளுக்கான பணத்தைத் தருவதில் தாமதம் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் அட்டை செல்லா அட்டைகளாக ஆகிவிடும். ஆகவே பொருள்களை இப்படி வாங்குபவர்கள் பலமுறை யோசனை செய்து அவற்றை வாங்குவதோடு,  பணம் திருப்பித் தருவதை உறுதி செய்ய வேண்டும்.

நவீன உலகில் முறைகள் மாறினாலும் அடிப்படையை நோக்கினால் நாம் காண்பது மனிதனின் மனோநிலையைத் தான். ஊதாரித்தனமான செலவு என்ற மனோநிலையை மாற்றி,  தேவைக்கேற்ற செலவு என்ற மனோநிலையைக் கொண்டால் சேமிப்பது நிச்சயம். இதை மீறி கடனுக்கு நாம் பழகிவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி நேரிடும்.

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்;:- “NEITHER A BORROWER NOR A LENDER BE; FOR LOAN OF IT LOSES BOTH ITSELF AND FRIEND; IT ALSO DULLS THE EDGE OF HUSBANDRY”  கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில் பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அத்தோடு குடி வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு,  சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும்,  சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை,  சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி,  பாதுகாப்பு,  ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம்,  பாதுகாப்பு,  சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன.

தேசிய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சேமிப்பு எனும் செயற்பாடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும்,  பொருளாதார சுதந்திரத்திற்கும் மிக அடிப்படையாக காரணிகளுள் ஒன்றாகும். சேமிப்பு சிக்கனத்திலிருந்து பிறக்கின்றது. சிக்கனம் என்பது வளங்களை மிக கவனமாக (சிக்கனமாக) முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கும். இந்தப் பொருளில் பார்க்கும்போது சிக்கனம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி,  குடும்ப மட்டத்திலும் சரி,  தேசிய மட்டத்திலும் சரி,  சர்வதேச மட்டத்திலும் சரி அது ஓர் அறநெறியாகும்.

பிரான்ஸ் நாட்டவரான ஹியூக் டெலர்ஸ்ரே என்பார், 1611ல் முதன் முதலாக சேமிப்பு பற்றிய எண்ணக் கருக்களைக் கொண்ட ஒரு கருத்திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைத்துள்ளார். சேமிப்பு வங்கியென ஏற்றுக்கொள்ளத்தக்க முதலாவது வங்கி 1778ல் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1810ல் ஸ்கொட்லாந்தவரான ஹென்றிடிக்கள் சேமிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபித்தார். சமூகத்தில் நிலவிய வறுமை, நிதிமுடக்குகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக இந்நிறுவனத்தை அவர் நிறுவினார். நாளடைவில் உலகளாவிய ரீதியில் சேமிப்பு வங்கிகள் கணிசமானளவு நிறுவப்பட்டுச் செயற்படலாயின.

பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் அவசியமென உணரப்பட்டது. 19ம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு நிறுவனங்கள் உருவாகின. இலங்கையில் சேமிப்பு வங்கிகளை நிறுவிய முன்னோடியாக ஆளுநர் சேர். ரொபர்ட் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்றோர் கருதப்படுகின்றனர். 1832. 08.06 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி, இலங்கையின் முதலாவது சேமிப்பு வங்கியாகும்.  இவ்வங்கி கொழும்பு நகரில் உயர்மட்டப் பிரமுகர்களையும் சில வர்த்தகர்களையும் கொண்டமைந்தது. சேமிப்புக் கணக்குகள் தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டன. வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே இவ்வங்கி இயங்கியது. இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும் வங்கியின் வளர்ச்சி குன்றியே காணப்பட்டது. ஒரேயொரு கிளை மட்டுமே செயற்பட்டது. வைப்புக்கள் கச்சேரி மூலம் ஏற்கப்பட்டன. சேர் பொன். இராமநாதன் 1885. 04.16ல் அஞ்சல் நிருவாகத்தினுள் அஞ்சலக சேமிப்பு வங்கியை அறிமுகஞ் செய்தார். 1938 செப்ரம்பரில் அஞ்சல் தலைமை அதிபரின் கீழ் சேமிப்புப் பத்திர நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. 1942ல் இம்முறை விஸ்தரிக்கப்பட்டு இரண்டாம் உலக மகாயுத்தத்துடன் இலங்கை யுத்த சேமிப்பு இயக்கமெனும் ஒரு அமைப்பு உதயமானது.

மறைந்த நிதியமைச்சர் யூ.பி. வன்னிய நாயக்காவினால் தேசிய சேமிப்பு வங்கி பற்றிய மசோதாவொன்று 1969.08.31ல் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டதெனினும் மறைந்த கலாநிதி என். எம். பெரேரா கொண்டு வந்த மசோதாவின் பிரகாரம் 1971ம் ஆண்டின் 3ம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்திற்கமைய இலங்கை சேமிப்பு வங்கி சேமிப்புச் சான்றிதழ் நிதியம் தபாலக சேமிப்பு என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1972.03.16ம் திகதி முதல் தேசிய சேமிப்பு வங்கி அமைக்கப்பட்டன. பாடசாலைப் பிள்ளைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்குமுகமாக பாடசாலை வங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏனைய வர்த்தக வங்கிகளிலும் சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

மூன்றாம் உலக நாடு என்ற வகையில் பொருளாதார ரீதியில் எமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு நாம் எமது உள்நாட்டு மூலதனத்தைப் பெருக்கும் வழிவகைகளைத் தேடவேண்டும். நாட்டின் எதிர்காலத் தேவைகளுக்குத் தேவையான முதலீட்டில் ஒரு பகுதியையேனும் சேமிப்புக்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்தக்காலில் நிற்பதற்கு (Self Relaince) எமது சிக்கன நடத்தைகளும் சேமிப்பும் எவ்வளவு துணைபுரியும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டுச் சிக்கனமும்,  சேமிப்புமே நாட்டின் முதலீட்டை அதிகரிக்கும் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு கவர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிக்கனம் சேமிப்பு எனும்போது நவீன உலகில் பரந்துபட்ட ரீதியில் சிந்திக்கையில் பணச் சேமிப்பு என்பதைவிட அதன் பொருள் மேலும் பலதாக பிரிந்து செல்வதை அவதானிக்கலாம். உதாரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு எரிபொருள் சிக்கனம் சில பிரதேசங்களில் நீர் சிக்கனம் சில பிரதேசங்களில் உணவுப் பொருட்கள் சேமிப்பு என பலதுறைகளுடனும் தொடர்புபடுகின்றது.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக சில எளிய வழிமுறைகளைக் கொண்ட சி.டி.க்களை பள்ளிகளுக்கு இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு விநியோகித்து வருகிறதாகவும்,  சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு தண்ணீர் விழிப்புணர்வு மற்றும் சிக்கனம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் வல்லுநர்கள்,  உளவியல் நிபுணர்கள்,  பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் சிக்கனம் குறித்த கல்விப் பாடங்கள் அடங்கிய சி.டி.க்களை அவை. 
   
தற்போதைய பொருளாதார சமூக சூழலில் எரிபொருள் சிக்கனம் என்பது சமூக தன்மை வாய்ந்த மிக முக்கிய பிரச்சினையாகும். எரிபொருள் சிக்கனம் நன்றாக கையாளப்பட்டால் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. கட்டுப்பாட்டான எரிபொருள் அளவை முழுமையாக பயன்படுத்தினால் அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த நன்மை தரும். முழு சமூகத்திலும் எரிபொருள் சிக்கனத்தை முன்னேற்றி அதன் பயன்பாட்டு பயனை உயர்த்தும் வகையில் சீன அரசு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் நாள் எரிபொருள் சிக்கனம் பற்றிய சட்டத்தை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் தூரநோக்குத் திட்டத்திற்கு இது மிக சிறந்த முயற்சியாகும். எரிபொருள் சிக்கனம் சீனாவின் அடிப்படை கொள்கையாக கருதப்பட்டுள்ளது. அதே நேரம் 2010ம் ஆண்டிற்குள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களின் எரிபொருள் செலவினை 20 வீதத்தால் குறைப்பதென்ற குறிக்கோளை சீன அரசு முன்வைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இன்று பேணப்படுகின்றது. அத்துடன்,  இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. எதிர்கால சந்ததிக்கான தற்போதைய சேமிப்பு நடவடிக்கைகளாக இவைகள் கருதப்படுகின்றன.

இவ்வாறாக நாட்டுக்கு நாடு பல்வேறுபட்ட வகைகளில் பல்வேறுபட்ட கோணங்களில் சிக்கனத்தினதும்,  சேமிப்பினதும் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றது. இது மட்டுமன்றி சிறு வயதிலே சிறார்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தனிப்பட்ட சேமிப்பினையும்,  சிக்கனத்தையும் புகட்டக்கூடிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில் மாணவர்களின் பாடப்பரப்புகளினூடாகவும் தேசிய பொருளாதார நெருக்கடிகள் அந்த நெருக்கடிகள் சேமிப்பினதும்,  சிக்கனத்தினதும் முக்கியத்துவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே,  நவீன இக்காலகட்டத்தில் சிக்கனம், சேமிப்பு எனும் வார்த்தைப் பதங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை அலகில் அல்லாமல் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட நிலைப்பாடுகளை உலக சிக்கன தினமான இத்தினத்தில் கருத்திற் கொள்வோமாக!

நிவாரணக் கிராமம்: புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி 111 – பரீட்சை முடிவு இன்று

Wanni Childவவுனியா நிவாரணக் கிராமங்களில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும். பரீட்சை திணைக்களம் இன்று காலை 10 மணியளவில் வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளரிடம் பெறுபேறுகளை கையளிக்கிறது.

இதேவேளை பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தினூடாகவும் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

இங்கு பரீட்சைக்கு தோற்றியோருக்கான வெட்டுப்புள்ளி 111 எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.

தாய்நாட்டைக் கட்டியெழுப்ப சகல இலங்கையரும் நாடுதிரும்ப வேண்டும் நேபாளத்தில் ஜனாதிபதி அழைப்பு

pr-nep.jpgசுதந்திர மடைந்துள்ள தாய்நாடு உங்களை வரவேற்கத் தயாராகவுள்ளது. தாய்நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கையர்களும் நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்திலிருந்து பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந் நாட்டில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்தபோதே இத்தகைய அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி:-

தாய் நாடு தற்போது முழுமையாக மீட்கப்பட்டு சகல இன, மத மக்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீள நாடு திரும்பி தாய்நாட்டைக் கட்டியெழுப்ப உரிய பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்படி சந்திப்பு நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை யைச் சேர்ந்த வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில்:

நான் கடந்த முறை நேபாளத்திற்கு வரும்போது இலங்கையில் தாய்நாட்டை மீட்கும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனினும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டின் தலைவராக நான் இம்முறை நேபாளம் வந்துள்ளேன். தாய்நாட்டை பாரிய அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதே எனது அடுத்தகட்டச் செயற்பாடு. அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

தமது அறிவு, திறமை, உழைப்பு ஆகியவற்றை தாய்நாட்டின் எதிர்கால நலனுக்காக உபயோகப்படுத்த சகல இலங்கையர்களும் அணிதிரள வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் எமது பெருமளவிலான படை வீரர்கள் பலியாகியுள்ளதுடன் பெருமளவிலானோர் அங்கவீனமாகியுமுள்ளனர். இத்தகைய தியாகங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் நாடு முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்பட வேண்டும்.

“கிழக்கின் உதயம்” கருத்திட்டத்தின் மூலம் கிழக்கிலும் “வடக்கின் வசந்தம்” கருத்திட்டத்தின் கீழ் வடக்கிலும் தற்போது பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. யுத்தத்தினால் இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்தும் பணிகளும் துரித ப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிகளை ஏந்திய வடக்கு சிறுவர்கள் தற் போது புத்தகங்களை ஏந்தி பாடசாலை செல்லும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது. பயங்கரவாதத்தினால் உருக்குலைக்கப்பட்ட அவர்களது எதிர்பார்ப்புக்கள் இன்று நிறைவேறி வருகின்றன.

நாடு பிளவுபட்டிருந்தால் அங்கு ஒருபோதும் தேசிய ஒற்றுமை நிலவ முடியாது. இன்று ஐக்கிய இலங்கையில் சகல இனமும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இலங்கையர் கெளரவமான இனமாக மதிக்கப்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, நிமல் சிறிபால டி சில்வா, திஸ்ஸகரலியத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

லும்பினியில் ஸ்ரீலங்கா விஹாரை ஜனாதிபதி மஹிந்தவினால் அங்குரார்ப்பணம்

சித்தார்த்தக் குமாரன் பிறந்த நேபாள லும்பினி நகரில் இலங்கை அரசினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீலங்கா விஹாரை’யை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இரண்டு கட்டங்களாக நிர்மாணிக் கப்பட்டுவரும் மேற்படி விஹாரையின் முதற்கட்டப்பணிகள் நிறைவுபெற்றுள்ளதுடன் இதற்கென 74 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கென 195 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.

முதலாம் கட்டப் பணிகளில் விஹாரையின் அரும்பொருட் காட்சியகம், யாத் திரிகர்கள் விடுதி, நூலகம், பிக்குமாருக்கான ஓய்வு விடுதியும் நிர்மாணிக்கப்பட்டுள்ள துடன் இவற்றை ஜனாதிபதி நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைத்து விஹாரையின் மகாநாயக்கதேரரிடம் அவற்றைக் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா லும்பினி அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தினூடாக மேற்படி விஹாரை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. பெலியத்த தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த போது 1970ம் ஆண்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் உப குழுவுக்கு சமர்ப்பித்த ஆலோசனைக் கிணங்கவே மேற்படி விஹாரை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

25 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இடையில் கைவிடப்பட்ட பின்னர் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த விஹாரைக்கு மிக அருகாமையிலுள்ள துட்டகைமுனு ஓய்வு விடுதியைப் புனரமைத்து யாத்திரிகர்களுக்கு வழங்குவதற்கும் ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

லும்பினி நகர பயணத்தையடுத்து ஜனாதிபதி லும்பினி விஹாரையையும், மஹாபோதி விஹாரையையும் தரி சித்துள்ளார். அத்துடன் ‘ஸ்ரீலங்கா மகா விஹாரை’யின் அபிவிருத்தி நடவடிக் கைகளுக்காக ஸ்ரீலங்கா லும்பினி அபி விருத்திப் பொறுப்பு நிதியத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றரை மில்லியன் ரூபாவையும் நன்கொடையாக வழங்கினார்.

மன்னார், விடத்தல்தீவு மீள்குடியேற்றம் – அதிநவீன மிதிவெடி அகற்றும் இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மன்னார் நெற்களஞ்சிய பகுதி மற்றும் விடத்தல்தீவு பகுதியில் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக நேற்று தருவிக்கப்பட்ட 5 மிதி வெடி அகற்றும் இயந்திரங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

விடத்தல்தீவு பகுதி மற்றும் நெற் கள ஞ்சிய பகுதியில் சுமார் 89 சதுர கிலோ மீற்றர் பகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்ற வேண்டியுள்ளது.விடத்தல்தீவு பகுதியில் மீன்பிடித் தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் வித த்தில் மக்கள் அங்கு குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே 14 மிதிவெடிகள் அகற்றும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அவை மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதி உட்பட ஏனைய பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்றுக்காலை விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன எயார்லைன்ஸ¤க்கு சொந்தமான வீ 18-706 ரக சரக்கு விமானத்தில் ஸ்லோவேக்கியாவிலிருந்து தானியக்க மிதிவெடி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.

யாழ். பாடசாலைகளுக்கு 33 தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூட வசதிகள்

யாழ். மாவட்டத்திலுள்ள 33 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக கணனிகள் வழங்கும் நிகழ்வு யாழ். நகரில் நடைபெற்றது.

தகவல் தொழில் நுட்ப ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் 1000 தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடங்கள் 1000 பாடசாலைகளில் அமைக்கப்படவுள்ளன.

இத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கு 41 பாடசாலைகளில் 41 ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. யாழ். மாவட்டத்தில் 33 பாடசாலைகளிலும், ஏனையவை வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன.

அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் இரத்மலானை சிவகுமார் சடலம் மீட்பு; பொலிஸ் காண்ஸ்டபிள் கைது

bambalapitiya.jpgகொழும்பு,  பம்பலப்பிட்டி கடலில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் நேற்று பம்பலப்பிட்டி கடற் பகுதியில் கரையொதுங்கியது. சடலத்தை மீட்டெடுத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரான திமுது சொம்னத் என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இறந்தவரின் சகோதரர் நேற்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இறந்த தனது சகோதரர் அங்கொடை மனநோயாளர் மருத்துவ நிலையத்தில் மூன்று தடவைகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். குறிப்பிட்ட நபரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரும் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளை தனியார் தொலைக்காட்சி யொன்று நேற்றுமுன்தினம் இரவு ஒளி பரப்பியது. இதனையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர்.

விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது: கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர்.

அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் அமிழ்ந்து போவது காண்பிக்கப்பட்டது.

உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேபாள முன்னாள் பிரதமர் புஷ்பகமல் பாராட்டு!

pr-nep.jpgபயங் கரவாதம் ஒழிக்கப்பட்டமைக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறந்த முறையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் பாராட்டியுள்ளார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நேபாளம் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் சந்தித்து பேச்சு நடத்தினார். சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நாட்டில் 30 வருடங்களாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைககள் முழு உலகிற்கும் சிறந்த முன்னுதாரணமாகுமென முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

நேபாளம், இலங்கை ஆகிய இரு நாடுகளிடையே நீண்டகாலமாக நிலவி வரும் கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் தன்னுடைய இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுப்பெறுமென தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
நேபாளத்தில் லும்பினி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “ஸ்ரீலங்கா மஹாவிகாரை”யினை ஜனாதிபதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்படுகிறது. 

ஜீ. எஸ். பி சலுகை கிடைக்காவிட்டாலும் விளைவுகளை முகம்கொடுக்க தயார் – மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்

ஜீ. எஸ். பி. + சலுகை கிடைக்காமல் போகும் பட்சத்தில் கூட அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

சரியான தயார்படுத்தல்கள், அணுகு முறைகள், கவனம் செலுத்தல் என்பனவற்றின் மூலம் இது சாத்தியமாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சலுகைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதுடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

ஜீ.எஸ்.பி. + சலுகை கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்த அவர், அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் முழு நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜீ.எஸ்.பி + சலுகை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

“இடர் முகாமைத்துவ நோக்கிலிருந்து பொதுவாக்கப்பட்ட முன்னுரிமைகளின் முறைமையும் (ஜீ.எஸ்.பி+) இலங்கையையும் பற்றிய ஒரு பகுப்பாய்வு” என்ற தொனிப் பொருளில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

ஜீ.எஸ்.பி + சலுகை கிடைக்கும் பட் சத்தில் அது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். ஆனால் நீக்கப்படும் பட்சத்தில் கூட அந்த சலுகை இல்லாமலேயே முன் னேறிச் செல்வதற்கான தயார் நிலைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரஸ்பர நன்மையற்ற சலுகைகள் எப்போதும் பாரிய இடர்நிலையையே ஏற்படுத்தும். ஜீ.எஸ்.பி + இதுபோன்ற ஒன்றுதான். ஜீ.எஸ்.பி + மூலம் கிடைக்கும் நன்மைகள் வேறுவகையான இடர்களை தோற்றுவிக்கக்கூடியவை.  எனவே பொருளாதார முகாமைத்துவத்தில் தொடர்ச்சியாக இடர் முகாமைத்து வத்திற்கான ஆயத்தங்களை செய்திருக்க வேண்டும். ஐரோப்பிய யூனி யனுக்கான ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அதற்கான போட்டியில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. நவம்பர் 2008 முதல் ஜனவரி 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் இதில் அதிகரிப்பை காட்டியுள்ளனர்.

இலங்கையின் நாணயப் பெறுமானத்தில் ஏற்பட்ட தேய்வும் இதற்கான காரணமாகும். இந்நிலையில் ஜீ.எஸ்.பி + சலுகை நீக் கப்பட்டால் முன்னுரிமை வரிஎல்லை 7 சதவீதமாக இழப்பினை ஏற்படுத்தக் கூடும். ஆனால் இது நாணயத்தின் பெறு மான தேய்வு எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். எனவே இந்த சலுகை இழப்பானது ஏற்றுமதிக்கு பாரிய தாக் கத்தை ஏற்படுத்துவதாக அமையாது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முன்வைக்கப்படும் சகல தகவல்களையும் கருத்துக்களையும் மத்திய வங்கியின் ஆய்வுக்குழு ஆராய்ந்து அது தொடர்பில் அவ்வப்போது தேவையான நடவடிக்கை களையும் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டாக்டர் டி.எஸ். விஜேசிங்க, உதவி ஆளுநர் டாக் டர் பி.என். வீரசிங்க, பொருளியல் ஆய்வு திணைக்களத்தின் பதில் மேலதிகப் பணிப் பாளர் திருமதி எஸ். குணரட்ன உட்பட முக்கியஸ்தர் பலர் கலந்து கொண்டனர்.

உடன்படிக்கை மூலம் ஐ.தே.கவினால் புலிகளுக்கு இறைமை தாரைவார்ப்பு – அநுர பிரியதர்ஷன யாப்பா

0000anura.jpgபுலி களுடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் புலிகளின் தனி அரசை ஏற்றுக் கொண்டு, நாட்டின் இறைமையைக் காட்டிக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு, இராணுவ வெற்றியை விமர்சிக்க அருகதை உள்ளதா என அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. புலிகளின் தனி அரசுக்கு அங்கீகாரம் வழங்கியது பற்றியும் அவர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் வானொலி உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தது பற்றியும் ஐக்கிய தேசிய கட்சி பதிலளித்தாக வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய செயற்பாடு நாட்டை அராஜகத்திற்குள் தள்ளும் ஒரு சூழ்ச்சியின் ஆரம்பம் என்று குறிப்பிட்ட அமைச்சர் யாப்பா, அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென்றும் வலியுறுத்திக் கூறினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்குமுகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரித்தார்.

“நாடு அடைந்துள்ள வெற்றி குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகளை விதைக்க முனைகிறார்கள். “கசப்பான வில்லையொன்றை சொக்கலட்டுக்குள் வைத்து மூடி விழுங்கச் செய்யப் பார்க்கிறார்கள். இதற்கு இடம் கிடையாது,” என்று கூறிய அமைச்சர் யாப்பா, 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இலங்கை காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும், இந்த உடன்படிக்கையின் ஐந்தாண்டு பூர்த்தியையொட்டி புலிகள் வெளியிட்ட கருத்துகள் மூலம் இது உறுதியாகுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் தாயகத்தை அங்கீகரித்து, தனித் தமிbழ அரசுக்கான சனத்தொகை, பொலிஸ், பாதுகாப்புப் படை, நீதிக் கட்டமைப்பு, சிவில் நிர்வாகம், எல்லை வரையறை ஆகியவற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டிருந்ததாகப் புலிகள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் செலவில் வானொலி உபகரணங்கள்

வானொலி உபகரணங்களை அரசாங்கத்தின் செலவில் தருவித்து அதனை புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஊடகத்துறை அமைச்சு நிதி வழங்கியதா, அல்லது பாதுகாப்பு அமைச்சு வழங்கியதா? என்பதை ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படுத்த வேண்டு மென்றும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஒஸ்ரின் பெர்னாண்டோவின்  நூலில் 673 ஆம் பக்கத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளாரென்று குறிப்பிட்ட அமைச்சர் யாப்பா, நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாடொன்றில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே வானொலிக் கருவிகள் தருவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளாரென்றும் தெரிவித்தார்.

இலங்கையின் இறைமையைப் பார தூரமாகப் பிழிந்தெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி, அந்த நிலையை மேலும் வலுவாக்க முனைந்தவேளையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன்படிக்கையை இல்லாது செய்து நாட்டை மீட்டெடுத்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“இன்று பல வெளிநாடுகளில், இலங்கையில் புலிகள் இருந்த அதே கால கட்டம் நிலவுகிறது. பாகிஸ்தானில் நிலைமை – அவ்வாறு தான் உள்ளது. அதனைத்தான் இலகையில் தோற்கடித்துள்ளோம்.

எனவே, என்ன விதத்தில் உடையணிந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினர் இராணுவ வெற்றியை விமர்சிப்பார்கள்? ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் ஒருவர் இல்லாததாலும், தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்பதாலும், இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றிப் பேசுகிறார்கள்!  இந்த ஜனாதிபதி முறைமை இருந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடிந்தது. அது போல், ஜனாதிபதியின் அரசியல் தலைமைத்துவம் தான் இதற்கு வழி கோலியது.

ஜனாதிபதி முறையை மாற்றுவதென்பது எடுத்த எடுப்பில் செய்ய முடியாது. அது நீண்டகாலச் செயற்பாடு. ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் புதிய யாப்பு கொண்டு வந்தபோது அதனை எரித்துச் சாம்பராக்கினார்கள்.  இலங்கை அரசியலமைப்பின் 3 ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததும், மீண்டும் மக்களின் ஆணையைக் கோர முடியும்.

நிலைமை இவ்வாறிருக்க எதிர்க்கட்சியியிர் நாட்டை அராஜகத்தில் தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்கு இடமளிக்கப் போவதில்லை. எந்தச் சூழ்நிலையையும் எதிர்க்கொள்ள அரசு தயாராகவே உள்ளது,” என்றார் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா.