உடன்படிக்கை மூலம் ஐ.தே.கவினால் புலிகளுக்கு இறைமை தாரைவார்ப்பு – அநுர பிரியதர்ஷன யாப்பா

0000anura.jpgபுலி களுடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் புலிகளின் தனி அரசை ஏற்றுக் கொண்டு, நாட்டின் இறைமையைக் காட்டிக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு, இராணுவ வெற்றியை விமர்சிக்க அருகதை உள்ளதா என அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. புலிகளின் தனி அரசுக்கு அங்கீகாரம் வழங்கியது பற்றியும் அவர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் வானொலி உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தது பற்றியும் ஐக்கிய தேசிய கட்சி பதிலளித்தாக வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய செயற்பாடு நாட்டை அராஜகத்திற்குள் தள்ளும் ஒரு சூழ்ச்சியின் ஆரம்பம் என்று குறிப்பிட்ட அமைச்சர் யாப்பா, அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென்றும் வலியுறுத்திக் கூறினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்குமுகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரித்தார்.

“நாடு அடைந்துள்ள வெற்றி குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகளை விதைக்க முனைகிறார்கள். “கசப்பான வில்லையொன்றை சொக்கலட்டுக்குள் வைத்து மூடி விழுங்கச் செய்யப் பார்க்கிறார்கள். இதற்கு இடம் கிடையாது,” என்று கூறிய அமைச்சர் யாப்பா, 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இலங்கை காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும், இந்த உடன்படிக்கையின் ஐந்தாண்டு பூர்த்தியையொட்டி புலிகள் வெளியிட்ட கருத்துகள் மூலம் இது உறுதியாகுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் தாயகத்தை அங்கீகரித்து, தனித் தமிbழ அரசுக்கான சனத்தொகை, பொலிஸ், பாதுகாப்புப் படை, நீதிக் கட்டமைப்பு, சிவில் நிர்வாகம், எல்லை வரையறை ஆகியவற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டிருந்ததாகப் புலிகள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் செலவில் வானொலி உபகரணங்கள்

வானொலி உபகரணங்களை அரசாங்கத்தின் செலவில் தருவித்து அதனை புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஊடகத்துறை அமைச்சு நிதி வழங்கியதா, அல்லது பாதுகாப்பு அமைச்சு வழங்கியதா? என்பதை ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படுத்த வேண்டு மென்றும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஒஸ்ரின் பெர்னாண்டோவின்  நூலில் 673 ஆம் பக்கத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளாரென்று குறிப்பிட்ட அமைச்சர் யாப்பா, நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாடொன்றில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே வானொலிக் கருவிகள் தருவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளாரென்றும் தெரிவித்தார்.

இலங்கையின் இறைமையைப் பார தூரமாகப் பிழிந்தெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி, அந்த நிலையை மேலும் வலுவாக்க முனைந்தவேளையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன்படிக்கையை இல்லாது செய்து நாட்டை மீட்டெடுத்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“இன்று பல வெளிநாடுகளில், இலங்கையில் புலிகள் இருந்த அதே கால கட்டம் நிலவுகிறது. பாகிஸ்தானில் நிலைமை – அவ்வாறு தான் உள்ளது. அதனைத்தான் இலகையில் தோற்கடித்துள்ளோம்.

எனவே, என்ன விதத்தில் உடையணிந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினர் இராணுவ வெற்றியை விமர்சிப்பார்கள்? ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் ஒருவர் இல்லாததாலும், தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்பதாலும், இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றிப் பேசுகிறார்கள்!  இந்த ஜனாதிபதி முறைமை இருந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடிந்தது. அது போல், ஜனாதிபதியின் அரசியல் தலைமைத்துவம் தான் இதற்கு வழி கோலியது.

ஜனாதிபதி முறையை மாற்றுவதென்பது எடுத்த எடுப்பில் செய்ய முடியாது. அது நீண்டகாலச் செயற்பாடு. ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் புதிய யாப்பு கொண்டு வந்தபோது அதனை எரித்துச் சாம்பராக்கினார்கள்.  இலங்கை அரசியலமைப்பின் 3 ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததும், மீண்டும் மக்களின் ஆணையைக் கோர முடியும்.

நிலைமை இவ்வாறிருக்க எதிர்க்கட்சியியிர் நாட்டை அராஜகத்தில் தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்கு இடமளிக்கப் போவதில்லை. எந்தச் சூழ்நிலையையும் எதிர்க்கொள்ள அரசு தயாராகவே உள்ளது,” என்றார் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *