Multiple Page/Post

நிவாரணக் கிராமங்களில் எவ்வித தொற்றுநோயுமில்லை – வவுனியா அரச அதிபர்

101009displacedidps.gifஇடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எந்தவித தொற்று நோய்களும் இல்லையெனவும் நோய்த்தடுப்புக்கான சகலவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் தாம் நலன்புரி நிலையங்களுக்கு வரும்போதே பல்வேறு தொற்று நோய்களுடன் வந்தனர்.

அவ்வாறானவர்கள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது தொற்றுநோய் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளில் இவ்வாறு இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் பல்வேறு தொற்று நோய்கள் காணப்படுகின்றன. எனினும் இதற்கு முன்னுதாரணமாக தொற்று நோய்களற்றதாக எமது நலன்புரி நிலையங்கள் திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களிடையே மஞ்சட்காமாலை, தோல் நோய் மற்றும் பொக்களிப்பான் போன்ற நோய்கள் இருந்தன. இவற்றைக் குணப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான நோய்களைக் கொண்டோர் வேறாக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதேநேரம் இத்தகைய தொற்றுக்கள் ஏனையோருக்கு பரவாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மழை காலங்களில் நோய்கள் பரவாமலிருப்பதற்காக சுற்றுச் சூழல்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் நிர்தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் வடிகான்கள் புனரமைக்கப்பட்டன. அத்துடன் மக்கள் தங்கியுள்ள கூடாரங்கள் திருத்தியமைக் கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தொற்று நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

031109sarathfonseka.jpgஇலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ”ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

 இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், ” நான் அப்படி நினைக்கவில்லை” என்று பதிலளித்தார்.

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் இன்று

26parliament.jpgஅடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக் கறிக்கை இன்று 3ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரச வருவாய்த்துறை அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இந்த இடைக்கால கணக்கறிக்கை யைச் சமர்ப்பிப்பார் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடும் இவ்வேளையிலேயே பிரதமர் இக்கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அடுத்த வருட த்தின் முதல் நான்கு மாதங்களுக்கு மென பத்தாயிரத்து 600 மில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும்.

இன்றும், நாளையும், நாளை மறுதினமும் இக்கணக்கறிக்கை மீது விவாதம் நடாத்தப்படும்.

நாளை மறுதினம் மாலை இந்த இடைக்கால கணக்கறிக்கை மீது வாக்கெடுப்பு நடாத்தப்படும். இந்த இடைக்கால கணக்கறிக்கை அதிகப்படியான மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவுறும் என்றார்.

இலங்கையின் 32 வது பொலிஸ் மா அதிபராக மகிந்த பாலசூரிய

mahinda-balasuriya.jpgஇலங் கையின் 32 வது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையக நிர்வாக மற்றும் விசேட அதிரடிப்படை நடவடிக்கை என்பவற்றிற்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய எதிர்வரும் நான்காம் திகதி பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

மீள்குடியேற்றப் பணி ஜனவரிக்குள் பூர்த்தி ஜனாதிபதி அறிவிப்பு;

bulgarian-president.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள சகல மக்களும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான மீள்குடியேற்றத்தின் மூலம் 280,000மாக விருந்த இடம்பெயர்ந்த மக்கள் தொகையை 160,000மாக குறைக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எதிர்வரும் 2010 ஜனவரிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை பூரணப்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பல்கேரிய ஜனாதிபதி ஜோர்ஜி பார்வனோவிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு அரசியல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ரீதியானதாக அமைந்ததுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சம்பந்தமாகவும் இதன் போது ஆராயப்பட்டுள்ளன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டுவரும் பிரயத்தனம் சம்பந்தமாகவும் அதன் பிரதிபலன்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்கேரிய ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனைச் கேட்டறிந்த பல்கேரிய ஜனாதிபதி, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் மீள நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார்.

இன மற்றும் மத ரீதியான மக்களின் ஒத்துழைப்புடன் இலங்கையின் இறைமை மற்றும் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஜனநாயக வழியில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதிலும் நாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இடம்பெயர்ந்தோர் மீள தமது கிராமங்களில் மீளக்குடியேற்ற ப்படுவதிலும் அவர் தமது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த பல்கேரிய ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்குமிடையில் நேற்றுக் காலை ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது பல்கேரிய ஜனாதிபதியுடன் வந்திருந்த அந்நாட்டின் வர்த்தகத் தூதுக் குழுவுடனான முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலுமான பொருளாதாரத் தொடர்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப் பட்டுள்ளன. இப்பேச்சுவார்த்தையினையடுத்து பல்கேரிய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்துக்குமிடையில் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ்வுடன்படிக்கைக்கிணங்க இலங்கைக்கும் பல்கேரியாவுக்குமிடையில் பொருளாதார ஒத்துழைப்பை முன்னேற்றும் பல்வேறு செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நேற்றைய இச்சந்திப்புகளுக்குப் பின் பல்கேரிய ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு ஜனாதிபதி மாளிகை யில் நேற்று மதிய போசன விருந்தளித்து கெளரவிக்கப்பட்டது.

இம்மாத முடிவுக்குள் 2474 பேருக்கு அதிபர் நியமனம்

நாடளாவிய ரீதியில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இம்மாதத்தில் 2474 பேருக்கு அதிபர் நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

அத்துடன் கல்வித்துறையில் மேற்கொள் ளப்பட்டு வரும் விசேட திட்டத்தின் கீழ் நாட்டின் சகல மாவட்டங்களிலுமுள்ள அதிபர் வெற்றிடங்களை இவ்வருட இறுதிக்குள் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கல்வியமைச்சின் கல்வி நிர்வாக அதிபர் மற்றும் ஆசியர் சேவைகளில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்கவும் நீண்ட காலமாக நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும் அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்:-

2008 ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவையில் 21,000 பேருக்குப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்வி நிர்வாக சேவையில் முதலாம் இரண்டாம் தரத்தினருக்கான பதவியுயர்வுகள் இம்மாதம் 6 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. எவ்வாறெனினும் கல்வி நிர்வாக சேவை யில் நிலவும் சகல பதவியுயர்வுக ளையும் துரிதமாக வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆசியாவைப் பொறுத்தவரை இலங்கையில் தொழில் தகைமையுள்ள பட்டதாரிகள் 90 வீதம் கல்வித்துறையில் ஆசிரியர்களாக கடமைகளிலுள்ளனர். மீதமுள்ள பத்து வீதமான ஆசிரியர் களுக்கும் உரிய பயிற்சி கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தவகையில் 12,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இலவச பாடநூல் விநியோகம் இம்முறை உரிய காலத்தில் இடம்பெறுவது உறுதி. எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி நாடளாவிய சகல பாடசாலைகளுக்கும் பாடநூல்களை விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதுடன் ஜனவரி மாதத்துக்குள் சீருடை வழங்கும் நடவடிக்கையும் இடம்பெறவுள்ளது.

அதிரடி ஆடுகளங்கள் தேவையென்கிறது ஐ.சி.சி

icc-logo.jpgஒருநாள் மற்றும் “டுவென்டி -20” போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20” தொடர்களில் பெரும்பாலான போட்டிகளில் குறைவான ரன்களே எடுக்கப்பட்டன. போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆடுகளத்தில் மாற்றம் செய்ய ஐ.சி.சி. முன்வந்துள்ளது. இதையடுத்து ஐ.சி.சி, அதன் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி) சீனியர் அதிகாரி வாசிம் பாரி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:-

ஒருநாள் “டுவென்டி-20” போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யவேண்டும் என ஐ.சி.சி, எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. நாங்கள் அவர்கள் ஆலோசனைப்படி நடப்போம் இதற்கு முன்பாகவே உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கு உதவும் வகையிலான ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம் என்றார்.

வவுனியாவிலிருந்து 2139 பேர் யாழ்ப்பாணம் வருகை

வவுனியா நலன்புரி கிராமங்களிலிருந்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 2139 பேர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இம் மக்கள் நேற்று முன்தினமிரவு யாழ். கச்சேரியை வந்தடைந்து பின்னர் தீவகப் பகுதிகளுக்குச் சென்றனர்.

அதேநேரம் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேர் கரவெட்டி விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்திற்கும் பருத்தித்துறை பிரதேச செயலர் அலுவல கத்திற்கும் வந்து சேர்ந்தனர். இம் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இம் மக்கள் தங்களது சொந்த இருப்பிடங்களில் குடியேறிய பின்னர், அவர்களது எதிர்கால தேவைகள் குறித்துதான் நேரில் வந்து ஆராய்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இம் மக்களுக்கான நிதி உதவிகளையும் வழங்கினார்.

சினிமா இறக்குமதி வரி; 550 மில். ரூபா வருமானம்

வெளிநாடுகளிலிருந்து திரைப் படங்களை இறக்குமதி செய்வதற்கான வரிப்பணமாக அரசாங்கத்துக்கு இதுவரை 550 மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல தெரிவித்தார். உள்ளூர் சின்னத்திரை, திரைப்படத் துறையை ஊக்குவிக்க இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூர் கலைஞர்களும், தயாரிப்பாளர்களும் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

அதே போன்று, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திரைப்படங்களுக்கு வரி விதிப்பதாகவும் வரவு – செலவு திட்டத்தை ஜனாதிபதி அறிவித்தார். இதன் மூலம் 550 மில்லியன் ரூபா வருமானம் அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இது இந்தத் துறைக்கே பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தாமல் உள்ளூர் திரைப்படத் துறையை மேம்படுத்த இது போன்ற வரிகள் மேலும் உந்து சக்தியாக அமையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அறவிடப்பட்ட 550 மில்லியனில் சுமார் 200 மில்லியன் ரூபாய் டெலி சினிமா கிராம நிர்மாணப் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். திரைப்பட வரி மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் ஊடக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் பலத்த காற்றினால் பெரும் சேதங்கள்

021009monsoon-rains.jpgகொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென கடும்காற்று வீசியது. இக் கடும் காற்று காரணமாக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இஹல வெல்கம கிராம சேகவர் பிரிவில் நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் 90 வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் களுத்துறை மாவட்ட இணைப்பாளர் மேஜர் சஞ்சீவ சமரநாயக்கா கூறினார்.

இதேவேளை பாலிந்த நுவர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பதுரலிய கெலின்கந்த வீதியில் மக்கிலிஎல்ல என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு மண்சரிவு ஏற்பட்டதாகவும் அப் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக பல இடங்களில் உயர்ந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சில பிரதேசங்களுக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் எச். பி. பத்திரன கூறினார்.

கொழும்பு – 7, மலலசேகர மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றின் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததால் கார் சேதமடைந்துள்ளது. வீதிகளுக்கு குறுக்காக விழுந்திருந்த மரங்களும், மரக்கிளைகளும் தீயணைக்கும் படையினரதும், மாநகர சபை ஊழியர்களினதும் உதவியுடன் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தின் ஒபநாயக்கா பிரதேச செயலகத்திலுள்ள மீகஹவெல கிராம சேவவகர் பிரிவிலிருக்கும் ஹேன்யாய கிராமத்தில் வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவரொருவர் மின்னல் தாக்கி நேற்று முன்தினம் உயிரிழந்தாரென இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினண்ட் கேர்னல் எஸ். எம். பி. பி. அபேரத்ன கூறினார்.

தற்போதைய இடைப் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும். அது இடி, மின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சியாகவே இருக்கும். அதனால் இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என வானிலை அவதான நிலைய வானிகையாளர் பிரீத்திகா ஜயகொடி கூறினார்.