சங்கக்கார தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று (24 ஆம் திகதி) தொடங்குகிறது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கப்டன் டோனிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. லேசான காயம்தான் பயப்படும்படி எதுவும் இல்லை.
முன் எச்சரிக்கை காரணமாக தினேஷ் கார்த்திக் அவசரமாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருந்தார். 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு இல்லாததால் ரஞ்சி போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் தற்போது இந்திய வீரர்களோடு இணைந்து கொண்டார். டோனி உடல் தகுதி பெற்று விடுவார். அவர் ஆடாத பட்சத்தில் தான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அகமதாபாத் ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பந்து வீச்சாளர்கள் சிக்கி திணறி விட்டார்கள். அகமதாபாத் டெஸ்டில் 7 வீரர்கள் சதம் அடித்தனர்.இந்திய அணியில் டிராவிட், டோனி, காம்பீர், டெண்டுல்கர் ஆகியோரும் இலங்கை அணியில் டில்சான், ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோரும் சதம் அடித்தனர்.
அது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் முடிவு தெரியும் வகையில் “பிட்ச்” இருக்க வேண்டும் என்று இரு அணி கப்டன்களும் தெரிவித்துள்ளனர். மைதானம் முதல் 3 தினங்கள் துடுப் பாட்ட வீரர்களுக்கும் கடைசி இரண்டு தினங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. கடைசியாக கான்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.