அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோருக்கு இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் இவான் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதலில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடிகள், தும்புக்கட்டைகளால் தடுப்பு நிலையத்திலுள்ள இரு நாட்டவர்களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியுள்ளனர். “இந்த விடயங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்போருடன் நாம் ஆராய்ந்து வருகிறோம். ஆனால், புகலிடம் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அது தொடர்பாக ஆட்கள் கவலையடைவார்கள். அவர்கள் அகதிகளென அடையாளம் கண்டு கொள்ளப்பட்டால் எமது பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்படும்.
இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கிறிஸ் இவான்ஸ் கூறியுள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் வன்முறைக்கு பொறுப்பானவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்மஸ் தீவு தடுப்பு நிலையத்தில் 975 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தமது விரக்தியை அங்குள்ளோர் தெரிவித்திருப்பதாக அகதி செயல்பாட்டு முன்னணியின் பேச்சாளர் அயன் ரின்ரவுல் ஏ. பி. சி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். இதேவேளை, சில அகதி விண்ணப்பங்கள் தொடர்பான பெறுபேறுகளை அடுத்து ஏற்பட்ட தப்பபிப்பிராயத்தினால் வன்முறை மூண்டதாக பிரதமர் கெவின்ரூட் கூறியுள்ளார்.
“கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் ஒருவர் பாரதூரமான குற்றச் செயலை மேற்கொண்டிருந்தால் அவர்களுக்கு விசா வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகக் கணிப்பீடு செய்யும் போது இந்த விடயமும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரூட் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.