Multiple Page/Post

சரத் பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க

ranil.jpgஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க

அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும், அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.

அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த 45 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தைக் கோரியுள்ளது.

இது தொடர்பில் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் தருகையில்; அவுஸ்திரேலிய எல்லைப் படை யினரால் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி 45 பேரும் இலங்கையர் கள் தானா என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சரியான தகவல்களை இலங்கைத் தூதரகம் பெற்றுத் தரவேண்டுமென கோரியுள்ளதாகவும் தெரிவித்தது.

அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முனைந்த 45 இலங்கையர்கள் அந் நாட்டுப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த இரு தினங்களாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பில் வினவிய போதே வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்த மேலும் 45 பேரை அவுஸ்திரேலிய படையினர் வழிமறித்து கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த 45 பேரும் நான்கு நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி இருந்துள்ளரென அவுஸ்திரேலியாவின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

வெளிவிவகார அமைச்சு இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் 45 பேரும் இலங்கையர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே வெளிவிவகார அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடரும் எனவும் அதற்கான பணிப்புரைகளை அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 70 ஆயிரம் பேரே எஞ்சியுள்ளனர். மீள்குடியேற்றம் விரைவில் நிறைவுபெறும் – றிஷாட்

இடம்பெயர்ந்துள்ள சுமார் 70 ஆயிரம் மக்களே மீளக்குடியமர்த்தப் படுவதற்காக எஞ்சியுள்ளனர் என்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 70 ஆயிரம் மக்களும் வெகுவிரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பொருட்டு சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் வெகுவிரைவாக மேற்கொண்டு வருவதுடன் கண்ணிவெடி கள் அகற்றும் பணிகளும் துரிதப் படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வட மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்கள் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதாக தெரிவித்த அவர் செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தை தவிர சகல நலன்புரி முகாம்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மூவாயிரம் பேர் அடுத்தவாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த ளளளமக்களை மீளக்குடியமர்த்த தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி, துணுக்காய், தர்மபுரம் பகுதிகளில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  பூநகரியில் கடந்த 2ம் திகதி 300 குடும்பங்களைச் சேர்ந்த 1232 பேரும், 3ம் திகதி மடு, விலாத்தி குளத்தைச் சேர்ந்த 49 குடும்பங்களும், 5ம் திகதி துணுக்காயில் 613 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேரும் மாந்தை கிழக்கில் 7ம் திகதி 260 குடும்பத்தைச் சேர்ந்த 690 பேரும், மீளக்குடியமர்த்த ப்பட்டுள்ளனர் என்றார்.

யுத்தத்தினால் பாதிப்புற்ற வடக்கில் அரசாங்க கட்டடங்களை புனரமைக்க ரூ. 175 மில்லியன் ஒதுக்கீடு

இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றப்படுவதற்கு முன்னர் யுத்தத்தினால் சேதமடைந்த சகல அரச கட்டடங்களையும் புனரமைத்து மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி லுள்ள அரச கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெறுவதுடன், பெரும்பாலான அரச அலுவலகங்கள் தற்போது இயங்குவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருவதுடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

யுத்தத்தினால் சேதமடைந்த வடக்கின் 5 மாவட்டங்களிலுமுள்ள அரச நிறுவனங்களை இயங்க வைப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. 180 நாள் அவசர புனரமைப்பு, இரண்டு வருட செயற்றிட்டம் என இரண்டு கட்டங்களாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

முதற்கட்டமான 180 நாள் வேலைத் திட்டம் நிறைவுற்றுள்ளதுடன், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கணிசமான அரச அலுவலகங்கள் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இதன்படி மன்னாரில் 5 பிரதேச சபைப் பிரிவுகளில், முல்லைத்தீவில் 3 பிரதேச சபைப் பிரிவுகளில், கிளிநொச்சியில் 4 பிரதேச சபைப் பிரிவுகளில் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதேச சபைப் பிரிவில் அரச அலுவலகங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

இந்த 180 நாள் அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 158 மில்லியன் ரூபா செலவிலான திட்டங்கள் முடிவ டைந்துள்ளன. ஏனையவை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் புனரமைப்புச் செய்து இயங்க வைக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விமலேந்திர ராஜா நேற்று தெரிவித்தார்.
 

இடம்பெயர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் கல்வியைத் தொடர அரசு நடவடிக்கை

இடம்பெயர்ந்த நான்காயிரம் மாணவர்கள் அவர்களது கல்வி நடவடிக்கைகளை தொடர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இரண்டாயிரம் மாணவர்கள் வவுனியாவிலுள்ள 59 பாடசாலைகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதேவேளை எஞ்சியுள்ள 2000 சிறுவர்கள் நாளை புதன்கிழமை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கே நாளை புதன்கிழமை இரண்டாயிரம் சிறுவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய ஆளுநர், காலை, மாலை என்று இரண்டு கட்டமாக வகுப்புகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்கு தேவைப்படும் இரண்டாயிரம் மேசை, கதிரைகளை கல்வி அமைச்சு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து நவநீதம்பிள்ளைக்கு இன்று விளக்கம்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று (08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரிவித்தது. சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ. நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து உண்மை நிலைமையை தெளிவுபடுத்த உள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கில வாராந்தப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பல்வேறு அழுத்தங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் நெதோனியோ குட்டரயையும் சந்தித்து உரையாட உள்ளார். தனது விஜயத்தின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அடுத்த மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐ. நா. மனித உரிமை விசேட செயலமர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார். ஐ. நா. மனித உரிமை பேரவை விசேட செயலமர்வில் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் விவாதிக்கப் படலாம் என அறியவருகிறது. இந்த அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டு இலங்கை அரசாங்கம் சார்பாக உத்தியோக பூர்வ அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

ஜெனீவாவில் இரு நாட்கள் தங்கியிருக்கும் அமைச்சர் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகரை சந்தித்து இடம்பெயர்ந்த மக்கள் வெற்றிகரமாக மீள்குடியேற்றப்படுவது குறித்தும் தெளிவுபடுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது-

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரத் பொன்சேகா தெரிவித்தது போன்ற எதுவித சம்பவமும் இடம்பெறவில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மறுத்திருந்தது தெரிந்ததே.

சரத் பொன்சேகா கைது

sarath.jpgஇலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகா இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி: 12ம் திகதி வரை

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலவில் தற்போது நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிடும் இறுதி திகதி எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நேற்று (7) மாலை அறிவித்துள்ளார்.

கடந்த 4ம் திகதி முதல் 10ம் திகதி வரையும் மேற்படி கண்காட்சி இடம்பெறுவதாக அறிவித்திருந்த போதி லும் பொதுமக்களின் வேண்டு கோளுக்கி ணங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினது ஆலோசனையின் பேரில் இந்த திகதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை – ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு

வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.

இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.

மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் மும் மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனை யாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

புதிய திசைகள் அமைப்பின் சந்திப்புத் தொகுப்பு : ரி சோதிலிங்கம்

newdirections.jpgபுதிய திசைகள் அமைப்பினரின் ‘இலங்கையின் இன்றைய அரசியல் நிலைகள்’ என்ற தலைப்பிலான சந்திப்பு லண்டன் லூசியம் சிவன்கோயில் மண்டபத்தில் பெப்ரவரி 6ல் இடம்பெற்றது. மே 18க்குப் பின் உருவான பல்வேறு அரசியல் அமைப்புகளின் தோற்றத்தில் புதிய திசைகள் லண்டனில் உருவான ஒரு அமைப்பு. முன்னர் தமிழீழ மக்கள் கட்சி என்று அறியப்பட்ட அமைப்பின் ஒரு பிரிவினர் இவ்வமைப்பை மே 18க்குப் பின்னதாக உருவாக்கி உள்ளனர். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தாமே தமது உரிமைகள் பற்றிய நிலைப்பாட்டை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அதற்கான பின்புல ஆதரவை லண்டனிலிருந்து வழங்குவது என்ற கோட்பாட்டுடனேயே இந்த அமைப்பு செயற்ப்பட ஆரம்பித்துள்ளதாக இதன் ஸ்தாபகர்களில் ஒருவரான மாசில் பாலன் தெரிவித்தார்.

கூட்டம் ஈழப்போராட்டத்தில் அர்ப்பணிப்பு செய்த போராளிகள் பொதுமக்கள் எல்லோருக்குமான ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது.

கூட்டத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களும் முட்டி மோதியது. நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு போராட்டங்களை செய்ய முடியாது என்றும் நாட்டிலுள்ள மக்களே தமது அரசியல் போராட்டங்களை தீவிரப்படுத்தி செயற்பட வேண்டும் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர்கள் நாம்தான் அவர்களுக்கான ஆதாரதளம் என்றும் எம்மிடையே தான் அதற்கான பல பொறுப்புக்கள் உள்ளது என்றும் எமது ஆதரவின்றி அவர்களால் செயற்ப்பட முடியாது என்றும் தெரிவித்தனர். இதனிடையே நாங்கள் தான் கடந்த காலங்களில் போராட்டங்களை இங்கிருந்து செயற்ப்பட்டு மக்களை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள் என்றும் ஆகவே இங்கிருந்து செயற்ப்படுவது என்பது மிகவும் ஆபத்தானது, இங்குள்ளவர்கள் அங்குள்ள மக்களின் அரசியல் நலன்களிலும் பார்க்க தங்கள் அரசியல் அடையாளத்தையே முன்னிறுத்திச் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே பதிலளித்த புதிய திசைகள் கூட்ட ஏற்பாட்டாளர் புவி நாம் இங்கிருந்து தலைமை தாங்குவது என்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்பதில் மிகத்தெளிவாக இருக்க விரும்புகிறோம் என்றும் புதிய திசைகள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு அமைப்பாகவே இப்போதைக்கு இருக்கும் எனவும் தெரிவித்தார்.

புலிகளின் கடந்தகாலத் தோல்விகளையும் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைககளையும் பேச முற்ப்படும்போது கூட்டத்தில் இருந்த சிலர் பலமான விசனங்களை எழுப்பினர். புலிகளின் கடந்தகால நடவடிக்கைகள் சிலவற்றை வாதத்திற்கு எடுத்துச் சென்ற போது விவாதம் உணர்ச்சிகரமானதாக மாறியது. குறிப்பாக விடுதலை அமைப்புகளை அழித்தமை இறுதி யுத்தத்தில் தமிழ் பொது மக்கள் மீது தாமே தாக்குதலை நடாத்தி அரசியல் செய்ய முற்பட்டமை, மே 18 வரை இருந்த புலிகளின் சொத்துக்கள் மாயமாக மறைந்தமை, வன்னி மக்கள் முகாம்களில் வாட பல்லாயிரம் பவுண்கள் செலவில் மாவீரர் தினத்தை நடாத்தி பணத்தை விரயமாக்கியமை போன்ற விடயங்கள் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டது.

இதில் முக்கியமாக புலிகளினால் நடாத்தப்பட்ட மாவீரர் தினம் பற்றியும் அதன் செலவுகள் பற்றியும் குறிப்பிடும்போது மாவீரர் தினம் ஒன்று தான் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் தினமாக இருக்கும் என்றும் அது தமிழ் மக்களுக்காக போராடிய அத்தனை பேருக்குமானது என்றும் சிலர் கருத்துக்களை முன்வைத்தனர். இதனை இடைமறித்து அந்த மாவீரர்தின விழாவில் சிறீசபாரத்தினம், உமா மகேஸ்வரன் மற்றும் போராளிகளது படங்கள் இல்லை என்றும் அவையும் இருந்திருந்தால் இது பொதுவான தமிழ்ப் போராளிகளுக்கான தினமாகலாம் என்றும் கருத்து வைக்கப்பட்டது. அங்கிருந்த யாரும் மாவீரர்களை குறைத்து மதிப்பிடவோ கொச்சைப்படுத்தவோ இல்லை. ஆனால் மாவீரர் தினத்தை பணத்தைக் கொட்டி விரயமாக்கும் களியாட்ட நிகழ்வாக அல்லாமல் ஆக்கபூர்வமான நிகழ்வாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து வலுவாக வெளிப்பட்டது.

இதனை தொடரந்து மாற்றுக் கருத்தாளர்களின் கடந்த காலங்கள் பற்றியும் குறிப்பாக மாற்றுக் கருத்தாளர்களில் பலர் புலிகளை தேசிய சக்தியாக ஏற்றுக்கொண்டு செயற்பட முனைந்தபோதும் புலிகளால் அந்த அமைப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றியும் இதில் தீப்பொறி என்எல்எப்ரி போன்ற அமைப்புக்களுக்கு நடந்தவை பற்றியும் சில கருத்துக்கள் வெளிப்பட்டது. புலிகளின் தந்திரோபாயமே இணைவது போன்று இணைவதும் பின்னர் அவர்களை அழிப்பதும் அதிலும் தாம் மட்டுமே தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்பதை உறுதிப்படுத்துவது பற்றியதுமான கருத்துக்கள் பல எழுந்தன. இதனிடையே புலிகளை எதிர்ப்பவர்கள் அரசுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக செயற்ப்பட்டனரே அன்றி தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களை செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனை நிராகரித்து கருத்து வெளியிட்ட சிலர் புலிகளை எதிர்த்தவர்கள் எல்லாம் அரச ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்படுவதை முட்டாள்தனமானது என்றனர். அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் புலிகளால் துரோகிகள் என்று பட்டம் சூட்டப்பட்டதை சிலர் அங்கு சுட்டிக்காட்டினர்.

புலிகளின் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் பற்றி கருத்துக்கள் எழும்போதெல்லாம் நெருப்பின் மேல்நின்ற சிலர் இன்னும் புலிகளின் போராட்ட தவறுகள் பற்றியோ புலிகளின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் பற்றியோ விளங்கிக்கொண்டதாக இல்லை என்பதை அவதானிக்க முடிந்தது.

கூட்டத்தில் புலிகளின் சவுத்ஈஸ்ட் கூட்ட பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் உட்பட மற்றும் சில புலிகளின் ஆதரவாளர்களும் பிரிஎப் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுபான்மை மக்களுக்காகப் போராடிய புலிகள் அந்த சிறுபான்மையினரை தமது இறுதி யுத்ததில் தமது ஆயுதங்களால் கொலைசெய்தும் அந்த இறப்பில் ஆதாயம் தேட முற்ப்பட்டதையும் தமிழரின் இயக்கங்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக செய்த போராட்டங்கள் என்பதைவிட பயங்கரவாத்தினையே செய்திருந்தனர் என்பதையும் இந்த இயக்கங்களில் பலர் இன்னும் போராட்டம் பற்றி தவறான அடிப்படைகளையே கொண்டுள்ளனர் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. புலிகள் இறுதிக்காலப் போராட்டத்திலும் கடந்த 30 வருட போராட்டங்களிலும் பாரிய தவறுகளையும் தவறுக்கான பொறுப்புக்களையும் கொண்டவர்கள் என்பது போல மற்றைய இயக்கத்தவர்களுக்கும் இந்த தவறுகளுக்கும் பொறுப்புண்டு என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இனிமேல் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற கேள்ளிகட்கு விடைதேட முயன்றபோதும் அதனை நோக்கி கலந்துரையாடல் நகரவில்லை. தாங்கள் என்ஜிஓ அமைப்பல்ல மக்களின் அன்றாட தேவைகள் பற்றி புதியதிசைகள் சந்திப்பை ஏற்பாடு செய்யவில்லை என்று அவ்வமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் சபாநாவலன் தெரிவித்தார். தாங்கள் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பது பற்றி புதியதிசைகளின் நிலைப்பாடு பற்றி கேட்கப்பட்ட போதும் அவர்கள் தாங்கள் எவ்வித நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது பற்றியோ அதை நோக்கி கலந்துரையாடலை நகர்த்தவோ தவறிவிட்டனர்.

வட்டுக்கோட்டை தீர்மானம் கொண்டு வருபவர்களுடன் மற்றும் புலம்பெயர் நாட்டில் தமிழீழம் அமைப்பவர்கள் போன்றவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு வழியில் அவர்களும் பாதையினை கொண்டுள்னர் என்றும் பலரும் பல திசைகளில் சென்று விடாமல் இவர்களுடன் இணைந்து செயற்ப்பட வேண்டும் என்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இவை பற்றிய நிலைப்பாடுகளை இனிமேல் வரும் கூட்டங்களில் இவற்றை விவாதிக்கலாம் கலந்துரையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய திசைகள் போன்று பல அமைப்புக்கள குறிப்பாக தமிழர் தகவல் நடுவம் போன்றோர் சில கூட்டத் தொடர்களை நடாத்தி வந்துள்ளதையும் இவர்களையும் அழைத்து ஒருகிணைத்து செயற்ப்பட வேண்டும் என்றும் முரண்பாடு கொண்டவர்களும் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் ஒரு பொதுவான வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் சமூகத்தில் இப்படியான யதார்த்த நிலைப்பாட்டுடனேயே செயற்பட முடியும் என்ற கருத்துக்களும் வெளிப்பட்டது.

எங்கிருந்து தொடங்குவது என்ற கருத்து பகிர்வின்போது புலிகள் விட்ட இடத்திலிருந்து தொடங்குவது என்ற பதத்திற்கு ஒரு அர்த்தம் இல்லாது உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. புலிகளில் புலம்பெயர்நாட்டு தலைவர்கள் நிதிப்பொறுப்பாளர்கள் அரசியல் பொறுப்பாளர்கள் எனப் பலர் உள்ளபோதிலும் இன்று வரையில் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா? புலிகள் இயக்கத்திற்கு என்ன நடந்தது? அல்லது தம்மிடையே உள்ள பணத்தின் நிலை என்ன? மக்கள் இவ்வளவு கஸ்டப்படம் போதும் அந்த நிதி வளங்கள் அந்த மக்களுக்கு உதவி செய்யபோக முடியாமல் போனதின் காரணம் என்ன? புலிகளின் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது? போன்ற விபரங்களை இன்று வரையில் வெளியிடாதது புலிகளின் கடந்த 30 வருட மக்களுக்கான போராட்டம் என்ற பதத்தையே கேவலப்படுத்துகிற செயலாகவே உள்ளது என்றும் அங்கு குற்றம்சாட்டப்பட்டது.

இவ்வாறு பல்வேறுபட்ட கருத்துக்கள் முட்டி மோதி இவ்வாறான கருத்துப் பகிர்வுகள் தொடர வேண்டும் என்றளவில் இச்சந்திப்பு நிறைவுபெற்றது.