Multiple Page/Post

பொன்சேகாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் ஆதங்கம்

21 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றிய எனது கணவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பி, சேவையிலிருந்து நீக்கப்பட்ட அநியாயத்துக்காக சரத் பொன்சேகா தற்பொழுது தண்டனையை அனுபவித்து வருவதாக அநீதி இழைக்கப்பட்ட படைவீரரின் மனைவியான சமிலா நிஷாந்தி விஜேதுங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லயிலுள்ள தொண்டர் படையணியின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் பொறுப்பாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜர் எஸ். ஏ. எஸ். விஜேதுங்கவின் மனைவியே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது கணவரை பழிவாங்கும் வகையிலேயே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெண் இராணுவ வீராங்கனை செய்த குற்றத்திற்காக எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சரத் பொன்சேகா தனது கணவருக்கு 21 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாத வகையில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார். பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத்தாது இராணுவத்திலிருந்து எனது கணவர் நீக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்பது கூட தெரியாத நிலையில் எனது சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நான் அழுது திரிந்ததை கண்ட சில இராணுவத்தினர் எனக்கு உதவி செய்தனர்.

கொழும்புத்துறை குண்டு வெடிப்பு: 2 மாணவர் மரணம்; 6 பேர் காயம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாடசாலை மாணவர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக் கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.45 மணியளவில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகாமையில் பந்துபோன்ற வொன்று காணப்பட்டதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் சிலர் அதனை எடுத்து பரிசீலித்துள்ளனர்.

அவ்வேளை அங்கு வந்த பெரியவர் ஒருவர் அதனை வீசிவிடுமாறு கூறியதையடுத்து மாணவர்கள் தூரத்தில் எறிந்தபோதே அது வெடித்துச் சிதறியுள்ளது. அங்கே நின்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.

சரத் பொன்சேகா உறவினர் வீட்டில் 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மீட்பு!

சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் தயாரான அசோகா திலகரத்னவின் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து ஐந்து லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்  100 ஸ்டேலிங் பவுண்கள்  15 மில்லியன் ரூபா இலங்கை நாணயம் என்பனவற்றை  அங்கு தேடுதல் நடத்திய பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடக அறிவிப்பாளர் பிரசன்ன ஜயகொடி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்ற மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கோட்டை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இத்தேடுதல் நடத்தப்பட்டதாவும் அவ்வீட்டிலிருந்து நான்கு பாதுகாப்பு பெட்டகங்களில் இப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

சீகிரிய செல்வோர் பாதுகாப்பு கவசங்களை அணிவது கட்டாயம்!

பிரபல சுற்றுதாத் தலமான சீகிரிய குன்றுகளை பார்வையிடச் செல்லும் சகல சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும் என கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுää வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் குளவி தாக்குலுக்கு இலக்கான சம்பவத்தை அடுத்து நேற்று முதல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிங்கப்பாதப் பகுதியிலிருந்து மாளிகை பிரதேசம் வரையிலான பகுதியில் சுற்றுப் பயணிகள் கட்டாயமாக பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்ததுடன் பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்க பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு

police_logo.jpgபொதுத் தேர்தல் காலத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு ஒன்று இம்முறை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 413 பொலிஸ் நிலையங்களிலும் 40 பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல்கள் தொடர்பான தனியான கண்காணிப்பு பிரிவுகள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். நாடு முழுவதிலும் பொலிஸார் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவின் மூலம் கண்காணிக்க ப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க இப்பிரிவு இலகுவாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சத்துணவு நஞ்சாகிய விவகாரம்; ஒப்பந்தக்காரருக்கு விளக்கமறியல்; உதவியாளருக்கு சரீரப்பிணை

சத்துணவு நஞ்சாகி பத்து வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடையக் காரணமாகவிருந்த, நேற்று கைதான ஒப்பந்தக்காரரையும் உதவியாளராக செயல்பட்ட பெண்மணியையும் மாத்தளை மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது ஒப்பந்தக்காரருக்கு இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் உதவியாளரான பெண்மணியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன், இறந்து பத்து வயது பாடசாலை மாணவியின் மரண சடங்குகளின் செலவீனங்களுக்கென ரூபா 50,000 வழங்கும்படியும் சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி இருவரும் இன்று மாத்தளை நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, சத்துணவு நஞ்சாகியமை தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சாந்தி சமரசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் நேற்று பகல் வேளை வரையும் 30 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க விண்ணப்பிக்கும் காலம் புதன் முடிவு

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்ளிப்பதற்கு விண்ணப்பிப் பதற்கான காலம் நாளை மறுதினம் 17ம் திகதியுடன் முடிவடையவிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் தாம் தங்கியுள்ள கிராமசேவைகர் ஊடாக தங்களது விண்ணப்பப் படிவங்களைத் தேர்தல் செயலகத்திற்கு 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் :- இடம்பெயர்ந்திருப்பவர்கள் பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக பொதுத் தேர்தல் சட்டப்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆகவே பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் நாளை மறுதினம் 17ம் திகதிக்கு முன்னர் தாங்கள் தங்கி இருக்கும் பிரதேச கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொலிஸ் மா அதிபர் – பொதுமக்கள் சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தம்

police_logo.jpgபொது மக்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பொலிஸ் மா அதிபரை சந்திக் கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேலைப்பளு காரணமாகவே பொது மக்கள் சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரியஷாந்த் ஜயகொடி தெரிவித்தார்.

பொது மக்கள் பொலிஸ் மா அதிபரை நேரடியாக சந்திக்கும் நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரை பொது மக்கள் நேரடியாக சந்திக்கு நடைமுறை நிறுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு மாதகாலத்திற்குள் அவசர தேவைக்கான உதவி பெற விரும்புபவர்கள் 0112-472592 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலம் தெளிவுபடுத்த முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கனகசபை அரசியலிலிருந்து ஓய்வு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த  மக்களுக்கும், தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும்,  ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை மேலும் தெரிவிக்கையில்:- தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனது கணவருக்கு செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார் – மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி

mrs-pannipitiya.jpgசரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ்வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன்.

ஆனால், எனது கணவருக்கும் ஏனையோருக்கும் செய்த பாவத்தையும் பழியையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார்.

எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது.

ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர். கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன்.

குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனாதிபதியாகி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.