Multiple Page/Post

சமையல் எரிவாயு மீதான சகல வரிகளும் நீக்கம் – விலை அதிகரிப்பதைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை

bandula.jpgஉலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதும் விலையதி கரிப்பின்றி நடைமுறை விலையிலேயே மக்களுக்கு தொடர்ந்தும் அதனை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

செல், லாஃப்  எரிவாயு நிறுவனங்கள் மார்ச் முதலாம் திகதி முதல் விலையதிகரிப்பைக் கோரியிருந்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய சமையல் எரிவாயுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டு விலையதிகரிப்பைத் தவிர்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றி விளக்கிய அமைச்சர்; நடைமுறை விலை மேலும் இரண்டு மாதங்களுக்குத் தொடருமெனவும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படு மெனவும் தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவின் விலை மாற்றம் தொடர்பில் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு ஒழுங்கு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரூமி மல்சூக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்து விளங்குக்கையில்:-

கடந்த 2009 நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு ஷெல், லாஃப் எரிவாயு நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதி கோரியிருந்தன. எனினும் அச்சபையானது அதற்கான அனுமதியை வழங்க மறுத்துவிட்டது.

தற்போது உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதால் மார்ச் முதலாம் திகதி முதல் இந்நிறுவனங் கள் விலையதிகரிப்புக்கான வேண்டுகோளை மீண்டும் முன்வைத்தன. இதன்படி ஷெல் சமையல் எரிவாயுவின் விலை 224 ரூபாவாலும், லாஃப் சமையல் எரிவாயுவின் விரை 198 ரூபாவாலும் அதிகரிப்பு செய்யப்படவிருந்தன.

இவ்விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு மேற்படி எரிவாயு நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி மக்கள் மீது ஏற்படவிருந்த சுமைகளை இலகுவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எரிவாயுவுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டுள்ளன.

நடைமுறையில் ஷெல் எரிவாயு சிலிண்டரொன்று 1550 ரூபாவாகவும் லாஃப் எரிவாயு சிலிண்டரொன்று 1422 ரூபாவாகவும் விற்பனையில் உள்ளன. அரசாங்கம் ஒருகிலோ சமையல் எரிவாயுவிற்கு 8 ரூபா 70 சதத்தை வரியாக அறவிட்டு வந்தது.

ஷெல் எரிவாயு நிறுவனமானது கடந்த நவம்பர் மாதத்தில் 195 ரூபாவாலும் 2010 ஜனவரியில் 180 ரூபாவாலும் விலையதிகரிப்புச் செய்வதற்கான அனுமதியினைக் கோரியிருந்தது. அத்துடன் மார்ச் முதலாம் திகதி முதல் 220 ரூபாவால் எரிவாயுவின் விலையினை அதிகரிக்கவும் அனுமதி கோரியிருந்தது.

எனினும் அரசாங்கம் கடந்த ஆறுமாத காலங்களில் எரிவாயு நிறுவனங் களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி விலையதிகரிப்பைத் தவரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இந்த ஆறுமாத காலத்திலும் நிலையான விலையொன்றைத் தக்கவைப்பதற்கும் வழிவகை செய்தது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டில் தற்போது அரிசி, மரக்கறி மற்றும் மீனின் விலை குறைந்து வருகின்றன எனக் குறிப்பிட்ட அமைச்சர்; வடக்கிலிருந்தும் பொருட்கள் வருவதால் எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் குறைவடையுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, தொடர்ச்சியாகத் தமது விலையதிகரிபுக்கான வேண்டுகோளுக்கு அதிகார சபை அங்கீகாரமளிக்காத காரண த்தால் ஷெல் எரிவாயு நிறுவனம் அரசாங்கத்திடம் 1.4 பில்லியன் ரூபாவை நட்டஈடாகக் கோரியுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வருவதுடன் எதிர்வரும் 26ம் திகதி இது தொடர்பில் விளக்கமளிக்கவுமுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணிவெடியகற்றல்; சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள், கூடாரங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

நேற்றுக் கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் சீனத் தூதுவர் யென் சிங் ருவென் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் இந்த இயந்திர உபகரணங்களை உத்தி யோகபூர்வமாகக் கையளித்தார்.

அத்துடன் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் 6252 கூடாரங்களையும் 34 கனரக இயந்திரங்களையும் அதனோடு சம்பந்த ப்பட்ட உபகரணங்களையும் நேற்று வழங்கியதுடன் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதனையும் சீனத் தூதுவரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இவற்றை சீனக்குடியரசு மக்கள் இலங்கையில் மீள் குடியேற்றப்படும் மக்களுக்காக அன்பளிப்புச் செய்துள்ளனர்.

ஜெனரல் சரத் தடுத்து வைப்பு சட்டவிரோதமானது : சரத் என்.சில்வா

sarath.jpgஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு குற்றங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கொழும்பு 7 இல் உள்ள அவரது அலுவலகத்தில் இணையத்தளம் ஒன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இணையத்தளத்தில் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரும் மக்கள் கோரிக்கைகள் சேகரிக்கப்படவுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் நீதியரசர்இ மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், கருத்துத் தெரிவித்த சரத் என். சில்வா  “இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களை இராணுவச் சட்டத்துக்குள் தண்டனை வழங்க முற்படுவது இதற்கு முன் நாட்டில் எப்போதும் நடந்ததில்லை” என்றும் தெரிவித்தார்.

மிலிபாண்ட்டுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் – விமல் வீரவன்ச ஆவேசம்

wimal-weerawansa.gifஇலங்கை விவகாரங்களில் தலையிடும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் என தேசிய சுதந்திர முன்னணியில் தலைவர் விமல் வீரவன்ச கூறினார்.

உலக தமிழர் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டமைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையைக் கூறு போடுவதும்,  எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு மீண்டும் களம் அமைத்துக்கொடுப்பதும்,  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டின் இரகசியத் திட்டமாகும்.  இதனை முறியடிக்க நாட்டுப்பற்றுள்ள அனைத்துச் சக்திகளும் ஒன்றிணையவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரித்தானிய வெளிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்,  பிரதமர் கோடன் பிறவுண் ஆகியோருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி  கோஷங்களை எழுப்பினர். 

9 பால்குடம் அறிமுகப்படுத்தினால் 10வது பால்குடம் இலவசம் ! தாயக மக்களின் பெயரில் வசூல் !! எட்மன்டன் நாகபூசணி அம்பாளுக்கே அனைத்தும் வெளிச்சம் !!! : த ஜெயபாலன்

Chief Priest Kamalanatha Kurukkalதாயக மக்களின் பெயரில் அரசியலும் வியாபாரமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வெகு அமோகமாக நடைபெறுகின்றது. குறிப்பாக தாயக மக்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்களும் பொது ஸ்தாபனங்களும் தங்கள் கணக்கியல் கோவைகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை.

என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்படுகின்றது என்ற பெயரிலேயே ஒன்பது பேர் இணைந்து இந்த ஆலயத்தை உருவாக்கினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயமும் அதே நோக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆர் ஜெயதேவனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை நழுவிச் சென்றது.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் 2002 யூலையில் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான தற்போது ஆலயம் அமைந்தள்ள கட்டிடம் 2003ல் 370 000 பவுண்களுக்கு வாங்கப்பட்டது. நவரட்ணம் சண்முகநாதன், அந்தோணிப்பிள்ளை காந்தரூபன், கதிரவேற்பிள்ளை சிவசின்மியநாதன், பொன்னையா கைலாயபதிவாகன் ஆகியவர்களின் பெயரில் தற்போதைய ஆலயக் கட்டிடம் அமைந்துள்ளது.

Nagapoosani Amman Trustee Vahanவடக்கு கிழக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவுவதை தங்கள் நீண்டகாலத் திட்டமாக அறிவித்து இருந்த ஆலய நிர்வாகம் இந்த ஆலயத்தை பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் Charity Commission கீழ் பதிவு செய்யவில்லை. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் கட்டிடங்கள் வாங்கும் போது நன்கொடைகள் பெறப்படும் போதும் வரி விலக்குச் சலுகைகள் இருந்தும் இவர்கள் தங்களைப் பதிவு செய்வதைத் தவிர்த்துள்ளனர். பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்வது என்பது ஒரு பொது அமைப்பினது நல்லநடைமுறை. கணக்கு விபரங்கள் பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படும். ஆனால் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயம் அதனை பல ஆண்டுகளாகச் செய்யவில்லை.

Nagapoosani Amman Kodi Archchanaiஆயினும் தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் பல்வேறு ஆலயப் பூஜை முறைகளை அறிமுகப்படுத்தி நிதி வசூலில் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. வன்னி யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் 2009 ஜனவரி முதல் மார்ச் வரை தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் கோடி அர்ச்சனை என்ற பூஜையை அறிமுகப்படுத்தி ஒரு நாளுக்கு ஆயிரம் பவுண்கள் என்ற அடிப்படையில் 100 நாட்களுக்கு 100,000 பவுண்கள் திரட்டி இருந்தனர்.

தற்போது மாசி மகத்தை முன்னிட்டு 1008 குடம்பால் அபிசேகம் மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த நிதி தாயகத்தில் முதியோர் இல்லம் அமைக்க வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஒரு பால் குடம் 10 பவுண்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒன்பது பேர்ரை அழைத்துவந்து பால்குடம் எடுத்தால் 10வது குடம் இலவசமாக வழங்கப்படுவதாக அவ்வாலயத்திற்குச் சென்றுவரும் பக்தர் ஒருவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு ஒரு இணையத்தளம் இருந்த போதும் அவ்விணையத் தளத்தில் ஆலய நிர்வாகம் பற்றியோ அல்லது ஆலயம் மேற்கொள்ளும் உதவித்திட்டங்கள் பற்றியோ எவ்வித தகவலும் அதில் காணப்படவில்லை.

Nagapoosani Amman Trustee Rubarah with LTTE Leader Thamilchelvanலண்டனில் உள்ள ஆலயங்களில் பொருளாதாரரீதியாகக் கூடுதல் லாபமீட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் அதன் கணக்கு விபரங்களையோ அதன் உதவி நடவடிக்கைகளையோ இணையத்தில் வெளியிடத் தயக்கம் காட்டி வருகின்றது.

இது பற்றி ஆலயத்தின் தனாதிகாரி பசுபதி அவர்களிடம் கேட்டபோது ஆலயத்திற்கு நேரில் வந்து அவற்றைப் பார்வையிட முடியும் என்றும் தொலைபேசியில் அவற்றை தெரிவிப்;பது சிரமம் என்றும் தெரிவித்தார். ஆலயத்திற்கு வரும் அனைத்து வருமானங்களிலும் செலவு போக மிகுதியை தாயகத்திற்கு அனுப்பி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். எதற்காக இதுவரை பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யவில்லை எனக் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கே தாங்கள் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

Nagapoosani Amman Trustee Rubarajமுதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் எனஉதவி கேட்பவர்களுக்கு உதவி வருவதாகத் தெரிவித்த அவர் நேரில் வரும்பட்சத்தில் அவற்றைப் பார்வையிடலாம் எனவும் தெரிவித்தார். பல்கலைக் கழகங்களில் கற்கும் 15 வன்னி மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய்களை வழங்கி வருவதாகவும் சென் ஜோன்ஸ் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னி மாணவர்களுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

லண்டன் குரலின் அடுத்த இதழில் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்துடனான சந்திப்பின் விபரங்களை வெளியிடுவோம்.

என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பூஜைமுறைக்கு ஒத்த பூஜைமுறைகள் கனடாவில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திலேயே இடம்பெற்றது. இவ்வாலயம் ஸ்பாபறோவில் விக்ரொரியா பார்க் லோறன்ஸ் சந்திப்பில் அமைந்தள்ளது. இங்கு லட்ச தீப அர்ச்சனை என்ற முறையை அறிமுகப்படுத்திய குருக்கள் ஒரு சுட்டி தீபத்தை 2 கனடிய டொலருக்கு விற்பனை செய்தார். ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எத்தினை தீபச்சுட்டிகளையும் வாங்கி ஏற்றலாம். ஆனால் லட்ச தீபங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றப்பட வேண்டும். இது வெற்றியளிக்கவே குருக்கள் கோடி தீப அர்ச்சனையை அறிமுகப்படுத்தினார். இவற்றின் தொடர்ச்சியே என்பீல்ட் கோடி அர்ச்சனையும் பால்குடமும்.

தாயகத்திற்கு என்ற பெயரில் பெரும் எடுப்புகளில் நிதி வசூலிப்புகள் நடைபெறுகின்றது. ஆனால் இவ்வாறு பெரும் எடுப்புகளில் சேகரிக்கப்படும் நிதிக்கு என்ன நடந்தது என்பதனை நிதி சேகரிப்பில் முன்னிள்றவர்கள் வெளியிடுவதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வணங்கா மண். பலநூறாயிரம் செலவில் அனுப்பப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் பாவணைக்கு உதவாதி நிலையை அடைந்தன. சுண்டக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவில் புலம்பெயர்ந்த மக்கள் வழங்கிய நிதி விரயமானது.

Nagapoosani Amman Trustee Vahan with LTTE Leader Thamilchelvanதற்போது நிதி சேகரிப்பில் ஈடுபடும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே தமது கணக்குக் கோர்வைகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் நீண்டகாலமாகவே பெருமளவு உதவித் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. அத்துடன் அதன் கணக்கு விபரங்களையும் இணையத்தில் வெளிப்படையாகவே வெளியிட்டும் வருகின்றது. அதனால் அடியார்களது நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

புலம்பெயந்த நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் முடிந்தவரை தாயக மக்களுக்கு உதவமுன்வர வேண்டும் அதே சம்யம் தங்கள் கணக்குக் கோவைகளை வெளிப்படையாகப் பேணவும் முன்வர வேண்டும். அது மட்டுமே அவர்களுடைய நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ள ஒரே வழி.

அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் – பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவிப்பு

rathnasiri_wicremanayake.jpgஅரச சார்பற்ற உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

மேற்கொள்ளப்படவேண்டிய சட்டத் திருத்தங்களை முன்மொழிவதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு அதன் சிபாரிசுகளை ஏற்கனவே கையளித்துள்ளது. அது குறித்து விரைவில் கலந்துரையாடப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையடுத்து அவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.

அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயவும் அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவுமே இவ்வாறு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் மேலும் கூறினார். இதேவேளை குறிப்பிட்ட சிபாரிசுகள் சட்ட மாஅதிபருக்கு அவரது ஆலோசனையை பொறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார

குரூஸ் தீவில் சுனாமி தாக்கியதில் ஐவர் பலி 13 பேரை காணவில்லை

chilee_earthquake.jpgதென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று முன்தினம் 8.8 ரிச்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் சான்டியாகோ மற்றும் கன்செப்ஷன் உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதில் ஏராளமானோர் பலியாகினர்.

நில நடுக்கம் ரிச்டர்  அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்தன. இதன் மையம் கடலுக்கு அருகே இருந்தது. எனவே பசிபிக் கடல் பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து இந்தத் தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 13 பேரை காணவில்லை.

சிலி நாட்டில் உள்ள துறைமுக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதமடைந்தன. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கிவிட்டு, அதைவும் தாண்டி வேகமாகச் சென்றது.

எனவே அமெரிக்காவின் ஹவாய் தீவூ, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் கிழக்கு பகுதி உட்பட பசிபிக் கடல் பகுதியில் உள்ள 53 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

பூகம்பம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து, ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையைத் தாண்டி வந்தன. ஆனால் முன்னெச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் சேதம் எதுவூம் ஏற்படவில்லை. பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான போலினிசா தீவிலும் சுனாமி தாக்கியது.

விருப்பு இலக்கம் வழங்கும் பணி மும்முரம்

parliament.jpgபாராளு மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணியில் தேர்தல்கள் செயலகம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு இன்று உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அது தொடர்பான பணிகள் நிறைவு பெறவில்லை.

கூடிய விரைவில் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் மாவட்ட ரீதியாக தேர்தல்கள் செயலகத்தினூடாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸார்

police_logo.jpgபாராளு மன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் 65 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் சட்ட மூலத்துக்கமைய நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவது முள்ள 40 பொலிஸ் வலயங்களிலும் 413 பொலிஸ் நிலையங்களினூ டாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தேர்தல்களுக்கான பொலிஸ் ஊடக பேச்சாளர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

நேற்று காஷ்மீரிலும் நில நடுக்கம்

kashmir.jpgகாஷ் மீரிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் காணப்பட்டது. ஹெய்ட்டி மற்றும் சிலி நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமானவர்கள் பலியானார்கள்.

இதற்கிடையே, காஷ்மீரிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலை பகுதியை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நில நடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.