Multiple Page/Post

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது!

dutch_policeஏப்ரல் 26ல் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக நெதர்லாந்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். 16 வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சோதணையிட்ட பொலிசார் 40 000 ஈரோ பணம் மற்றும் அவர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணணிகள் தொலைபேசிகள் புகைப்படங்கள் டிவிடி க்கள் என்பனவற்றை கைப்பற்றி உள்ளனர்.

நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களில் உள்ள வீடுகளையும் கட்டிடங்களையும் பொலிசார் சோதணையிட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டதாக நெதர்லாந்தின் தேசிய பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. நிதி சேகரிப்பது நிதி சேகரிப்பு நிகழ்வுகளை நடாத்தி நிதி சேகரிப்பது கலண்டர் டிவிடி என்பனவற்றை விற்பனை செய்து நிதி சேகரிப்பது சட்ட விரோதமான வாக்களிப்பை நடாத்தி நிதி சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடங்குவதாகவும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப் பின்னலுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் Tamil Coordinating Committee (TCC), the Tamil Rehabilitation Organisation (TRO), Tamil Youth Organisation (TYO), Tamil Women Organisation (TWO) and Tamil Arts and Cultural Organization Netherlands (TKCO), ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் எனத் தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2006ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்யப்பட்டனர். 2008ல் பிரான்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து பலரைக் கைது செய்திருந்தது. அதன் பிற்பாடு இவ்வாண்டு ஜேர்மன் அரசு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு சிலரைக் கைது செய்தும் இருந்தது.

தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல புரிந்துணர்வுடன் செயற்படுவோம்; அமிதாப்பச்சன்

amitabh-bachchan.jpgஇலங்கை யில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்தக்கூடாதென பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனை வலியுறுத்தி தமிழ்க் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில், சகலரினதும் உணர்வுகளுக்கு நிச்சயமாக தான் மதிப்பளிப்பேன் என்று அமிதாப் பச்சன் நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.

தமிழ்க் குழுவொன்று எனது வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இலங்கையில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்த வேண்டாமென என்னைக் கேட்டுக்கொண்டது. இந்தத் திரைப்பட விழாவை நடத்துவது விஸ் கிராவ்ட் என்ற அமைப்பாகும். அதன் அதிகாரிகளிடம் நான் இதுதொடர்பாகக் கதைத்துள்ளேன். இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக என்னை வந்து சந்திக்குமாறு கேட்டுள்ளேன். இதற்கு உரிய அளவு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று இந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கான கௌரவத் தூதுவரான அமிதாப் பச்சன் தனது இணையத்தளத்தில் தெரிவித்திருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டிருக்கிறது.

மும்பாயில் உள்ள அமிதாப் பச்சனின் பிரதிக்ஸா பங்களாவிற்கும் ஜால்ஸா வாசஸ்தலத்திற்கும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழர்கள் சிலர் ஊர்வலமாக சென்றுள்ளனர். கொழும்பில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் விழாவை பகிஸ்கரிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, கனடாவிலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய தமிழ் காங்கிரஸும் அமிதாப் பச்சன் இலங்கைக்கு செல்வது தொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது.

கையடக்கத் தொலைபேசியில் கதைத்தவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்தார்

lightning-01.jpgதெல் தோட்டை ஹைத் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கடும் மின்னல் நேரத்தில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்த இராணுவ வீரரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்தோட்டை பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கடும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன்போது கடும் காற்றும் வீசியது.

இவ்வேளையில், ஹைத் தோட்டத்தில் வீடொன்றிலிருந்த இராணுவ வீரரொருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். கடும் மின்னலின்போது தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இராணுவ வீரர் அவ்விடத்திலேயே கருகிப் பலியானார்.

வீட்டில் வேறு ஆட்கள் இருந்தபோதும் அவர்களுக்கு அதிக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரது சடலம் பின்னர் தெல்தோட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதேநேரம்,கடும் மழையுடன் இங்கு பலத்த காற்றும் வீசியதால் பயன்தரு மரங்கள் உட்படபல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் அடியோடும் பெயர்க்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்துமுள்ளன.

மயோன் முஸ்தபாவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்போது ஓய்வுபெற்ற ஜெனரல் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான நோக்கத்தில் இலஞ்சம் வழங்க முன்வந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தி அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் நேற்றுக் காலை இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.

இதில் 21 சாட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் முகமட் முசம்மிலின் ஆதரவைக்கோரி அவருக்கு 4.3 மில்லியன் ரூபா இலஞ்சமாகக் கொடுத்ததாக மயோன் முஸ்தபா மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு முசம்மிலின் ஆதரவைக்கோரி இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கை மூலம் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை மயோன் முஸ்தபா மீறியிருந்ததாக நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். தொலைபேசி அழைப்புகளின் பட்டியல், ஒலிநாடா, ஒளிநாடா பதிவுகள் என்பன நீதிமன்றத்தில் இந்தக் குற்றப்பத்திரிகை தொடர்பான சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அததெரண செய்திச்சேவை நேற்று தெரிவித்தது

குற்றச்செயல்களை ஒழிப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டலாம்

go-ra.jpgபயங்கர வாதத்துடன் உருவெடுத்த குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்துடன் உருவான பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகள், குற்றச் செயல்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளை இல்லாதொழிக்க பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவம் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்,

மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் செயற்பாடுகளில் முப்படையினர் முழுமையாக ஈடுபட்டிருந்த அதேசமயம் அவர்களுக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் பொலிஸார் வழங்கி வந்தனர். நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவ பொலிஸாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அதற்கு பொருத்தமான பொலிஸாரை உருவாக்குவது காலத்தின் கட்டாய தேவையாகும்.

உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி அந்த நாடு தொடர்பான சிறந்த பிரதி பலிப்பை அந்தந்த நாட்டின் பொலிஸாரின் மூலமே காண்பிக்க முடியும். அதனால் பொலிஸார் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார். சமூகம் விரும்பும் சேவையை பொலிஸார் வழங்க வேண்டும். அதே சமயம் சமூகத்தின் மத்தியில் கெளரவத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் பொலிஸார் தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பொலிஸாருக்கு துறைசார் பயிற்சிகளும் கற்கைகளும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலமே அவர்களிடமிருந்து சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதனை நோக்கமாகக் கொண்டே இந்த பொலிஸ் அகடமி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

சிறந்த பயிற்சிகளை பெற்று தமது திறமைகளை வெளிக்காட்டும், அமுல்படுத்தும் பொலிஸாருக்கு மேலதிக பயிற்சிகளை வெளிநாடுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தம் நிலவிய காலகட்டத்தில் பொலிஸாருக்கு தேவையான பயிற்சிகள் வழங்க முடியாமல் போனது. தற்பொழுது வழங்கப்படும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி

police.jpgவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சிறந்த சேவைகளை பொலிஸாரால் வழங்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும். பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். களணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் பொறுப்புகள் தொடர்பாக அடுத்த வாரம் வர்தமானி அறிவித்தல்

அமைச்சுகளின் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவிருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தமது அமைச்சுப் பொறுப்புகளை பொறுப்பேற்கும் வைபவத்தில் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது,

அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள போதும் அதற்கான பொறுப்புகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த வாரம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளது. இதன்போது அமைச்சர் பெளசிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

lightning-01.jpgநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில தினங்களுக்குத் தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

தென் மற்றும் மேல் மாகாணத்தின் கடற் பகுதியில் 30 கி. மீற்றர் வேகத்துடன் கூடிய காற்று மாலை வேளைகளில் வீசுவதுடன் இதனால் பாரிய கடல் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாதெனவும் வானிலை அவதான நிலைய உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக மத்திய, வட மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மாலையில் கடும் காற்று இடியுடன் கூடிய மழை பெய்யும், அத்துடன் மேல் மாகாணம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் காலை மற்றும் மதிய வேளைகளிலும் இடைக்கிடை மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை, அதிகரித்து காற்று வீசியபோதும் பாரிய கடல் கொந்தளிப்பு அபாயம் எதுவும் இல்லையெனவும், இடி மின்னல்களின் போது மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வானிலை அவதான நிலைய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு கூடுதல் அதிகாரத்துடன் செயலணி – அமுலிலுள்ள சட்டங்களுக்கு வலு சேர்க்கவும் ஏற்பாடு

ஆட்கடத்தலை தடுப்பதற்காக விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய நுழைவாயில் தளங்களில் செயலணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலகு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள செயலணி அடுத்த சில மாதங்களுக்குள் செயற்படும் எனத் தெரிய வருகிறது. நீதி அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சட்ட அமுலாக்க அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மற்றும் குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு ஆகிய அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த செயலணிப்படை செயற்படும். அதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் எல்லைப் பாதுகாப்பு அலகுகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த நுழைவாயில்களுக்கூடாக வருவோர் மற்றும் வெளிச் செல்வோரில் ஆட்கடத்தலினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளோரை இனங்காண்பதற்கு இந்த அலகு பயன்படுத்தப்படும்.

அதேவேளை ஆட்கடத்தில் தொடர்பாக தற்போது அமுலில் உள்ள சட்டங்களுக்கு வலு சேர்க்கவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் செயலணி அமைப்பது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில் இலங்கை நீதிமன்றமொன்றில் முதல் முறையாக ஆட்கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இலங்கை குற்றவியல் கோவையில் கடந்த 2006 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டத்தையடுத்து ஆட்கடத்தல் குற்றங்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இந்த தண்டனை ஏனைய பாரிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.

ஆட்கடத்தல் தொடர்பாக அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் நாடுகள் மூன்று வெவ்வேறு வரிசைகளில் அவற்றின் பாதிப்பு இனங்காணப்படும் அளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் இலங்கை இரண்டாவது வரிசையில் இருப்பதையடுத்தே மேற்கூறிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அந்த அறிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்களை பணத்துக்காக வெளிநாடுகளுக்கு கடத்த உதவுதல் மற்றும் வர்த்தக ரீதியிலான பாலியல் நடவடிக்கை வியாபாரம் ஆகியவை இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை இனங்காணப்பட் டுள்ளது. இவ்வாறு ஆட்கடத்தல் இடம் பெறுவதற்கு பின்வரும் சாத்தியக்கூறுகளே காரணம். தொழில்களுக்காக குடியேறுவோர், வெவ்வேறு நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்த பின்னர் விசா வழங்கும் நடைமுறைக் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் போக்குவரத்து மையமாக அது அமைந்துள்ளமை என்பனவாகும்.

நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் – தாயக மக்களின் பெயரில் புலம்பெயர் அரசியல் சவாரி : த ஜெயபாலன்

tgte_2010_Electionமே 18க்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப் புயல் மையங்கொண்டது போன்று மாறி மாறித் தேர்தல்கள் வந்து போகின்றது. வட்டுக்கோட்டைத் தேர்தல், ஜனனி ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல், நாடுகடந்த தமிழீழத்தின் நாட்டுக் குழுக்களுக்குத் தேர்தல், யாழ்ப்பாண மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல், இலங்கை ஜனாதிபதித் தேர்தல், இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானியத் தமிழர்களுக்கு இவற்றுடன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்று கடந்த ஓராண்டுக்குள் தமிழ் மக்கள் மீதான ஜனநாயகச் சுமை பெரும் சுமையாகிவிட்டது. இதுவரை ஏக தலைவரும் அவரது இயக்கமும் மட்டும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முடிவெடுத்த நிலைபோய் தற்போது தமிழ் மக்களை வாக்களித்து ஆணை வழங்கும்படி கேட்கின்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. போகின்ற போக்கில் வட்டுக் கோட்டைக்கும் நாடு கடந்த தமிழீழத்திற்கும் மட்டுமல்ல ஏக தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? ஏக தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்று தேர்தல் வைத்து முடிவெடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் ஏதோ ஒரு வகையில் வீச்சுப் பெற்றுள்ளது.

மே 02, 2010ல் நாடு கடந்த தமிழ் பாராளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து செறிந்து வாழும் இடங்களில் நடைபெறவுள்ளது. 135 பேர் கொண்டு அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் 115 பேர் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் செறிவாக வாழுகின்ற நாடுகளில் இருந்து தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனைய 20 பேரும் தமிழ் மக்கள் செறிவு குறைந்த அல்லது தேர்தலை நடாத்துவதற்கு வாய்ப்புக் குறைந்த பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்வார்கள். இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 115 பேரால் தெரிவு செய்யப்படுவார்கள். 20 பேரில் ஈழத்தமிழ் மக்கள் வாழாத நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் பங்குபெற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி அதன் மதியுரைக் குழு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கின்றது: ”தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்றெடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைக்கூடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி வாழுகின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அத்தோடு தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்தும் போராட்டத்தினை முன்னெடுக்கும் பணியில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரும் பெரும் பங்கு வகிக்க வேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் தாராளவாத மக்களாட்சியின் இடையே வாழ்கின்றனர். தாம் வாழும் நாடுகளின் விதிமுறைகளுக்கேற்ற வகையில் தமிழீழ இலட்சியத்தை ஜனநாயக அமைதி வழிகளால் முன்னெடுக்கலாம் என்பதில் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள். அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.”

இதில் உள்ள ஆபத்தான அம்சம் இதுவரை சரிவர உணரப்படவில்லை. ஈழத் தமிழ் மக்களின் பெயரால் நடாத்தப்படுகின்ற இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் தமது தாயகத்தை விட்டகலாத தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லை. இலங்கை அரசு அப்பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்கின்ற நியாயமான அச்சம் காரணமாக இருந்தாலும் தாயக மக்களின் பெயரில் நடாத்தப்படுகின்ற இந்தப் பாராளுமன்றத்தில் அம்மக்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டு இராதது இதன் மிகப்பெரும் பலவீனம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் பிரதிநித்துவப்படுத்தவில்லை என்பது கடந்த ஓராண்டு காலத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. வன்னி யுத்தத்தில் இடம்பெற்ற மிகமோசமான அழிவுக்கு இலங்கை அரசு எவ்வளவு பொறுப்புடையதோ அதேயளவு பொறுப்பு இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கும் உண்டு. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தகமையாக புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்குபற்றியதை குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே அம்மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வன்னி மக்கள் யுத்தத்தில் இருந்து தப்ப முடியாது தடுத்து வைக்கப்பட்டதையோ, தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறார்கள் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டதையோ, யுத்த்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையோ சுட்டிக்காட்டவில்லை. பணயம் வைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிக்கும் படி விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. சர்வதேச சமூகம் அம்மக்களை விடுவிக்க எடுத்த முயற்சிக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பி இருந்தனர். இந்நடவடிக்கைகள் அனைத்தும் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்திருந்தது. வன்னி மக்கள் மிகக் கடுமையான யுத்தத்தை எதிர் கொண்டு வரலாறு காணாத அழிவைச் சந்தித்த போதும் இன்று தேர்தலை நடாத்துகின்ற நாடு கடந்த தமிழீழத்திற்கான செயற்குழுவும் தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளர்களும் பொறுப்பற்ற முறையிலேயே அன்று நடந்து கொண்டனர். இவர்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்ய எவ்வித தகுதியையும் கொண்டிருக்கவில்லை.

இவர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பதனை இவர்களின் பிரதிநிதிகளை முற்றாக நிராகரித்ததன் மூலம் தாயக மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலட்சிய வாக்கியமான தாயகம் தேசியம் இறைமை இவற்றை முன்வைத்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிட்டது. இதற்கு புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களும் பெரும்பாலும் ஆதரவு வழங்கி இருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். இப்போராட்டங்களில் முன்னின்ற மற்றுமொருவரான எம் கெ சிவாஜிலிங்கமும் தோற்கடிக்கப்பட்டார். இவை புலம்பெயர்ந்த அரசியல் தலைமைகள் தாயக மண்ணில் இருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு உள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழு நாடு கடந்த அரசு பற்றி இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகிறது: ”ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும்.”

இப்பகுதியில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை அவர்களின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைப்பதற்கு இதுவும் ஒரு வழிமுறையாக அமையலாம். ஆனால் அதனைத் தாண்டி தாயகத்தில் வாழ்கின்ற மக்களின் அரசியல் பொருளாதார வாழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலுக்குள் வாழ்ந்து கொண்டு அம்மக்கள் தொடர்பான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறுவது ஏற்கனவே வன்னி மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்திய கைங்கரியத்தையே இவர்கள் மீளவும் செய்ய உள்ளனர் என்பதனைக் கட்டியம் கூறுகின்றது. ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பண்புள்ள மேற்குலகில் வாழ்ந்து கொண்டும் தங்கள் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய எவ்வித மீளாய்வும் இல்லாமல் தங்கள் பலம் பலவீனம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இல்லாமல் மீண்டும் தாயக மக்களுக்காக இவர்கள் சிந்திக்க முற்படுவது அம்மக்களுக்கு இவர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கின்றது.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களில் முற்றாக அல்லது பெரும்பாலானவர்கள் அரசியல் அலையில் அடிபட்டுச் செல்பவர்களாகவே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தியதற்கு அப்பால் இவர்களிடம் எவ்வித அரசியல் அனுபவமும் இருந்ததில்லை. இதனை அவர்கள் பற்றிய குறிப்புக்களே புலப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் போட்டியிடுபவர்கள் செயற்பாட்டாளர்களும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு தங்கள் நோக்கங்களுக்காக பினாமிகளாகப் பயன்படுத்தினார்களோ இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்குப் பின்னால் உள்ளவர்களும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். இந்தத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு எவ்வித அரசியல் பொருளாதாரப் பலமும் கிடையாது. உண்மையான பொருளாதார பலம் இதன் பின்னணியில் உள்ளவர்களிடமே உள்ளது. அவர்களே இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இயக்கப் போகின்றார்கள். அவர்களே இத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலும் அரசியல் முகவரியற்றவர்கள். அல்லது அரசியலில் பாலபாடத்தைத் தாண்டாதவர்கள்.

”நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்த நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் மேற்கொள்ளப்படும்.” என்று நாடு கடந்த அரசின் மதியுரைக் குழு தெரிவிக்கின்றது. இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தற்போது தொடர்புபட்டவர்கள் ஒவ்வொருவருமே மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்திற்கான அதன் நடவடிக்கைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள். தற்போது அது பற்றிய எவ்வித மீள்பரிசீலனையும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி வன்முறையைக் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கின்றனர். மே 18ல் இரவோடு இரவாக இவர்கள் பெற்ற ஞானம் மிக ஆபத்தான ஞானம். இன்னொரு மே 18ல் இரவோடு இரவாக ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள் வெறும் பினாமிகளே. இவர்களை இயக்குபவர்கள் தான் எப்போதும் முடிவுகளை எடுப்பார்கள்.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கு 20 பேரைத் தெரிவு செய்வதற்கு 38 பேர் வரை போட்டியிடுகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொருளாதார பலத்தை தம் வசம் வைத்துள்ள ரூட் ரவி, தனம் மற்றும் முக்கிய புள்ளிகள் போட்டியிடவில்லை. இவர்களால் இயக்கப்படுகின்ற அடிப்பொடிகளே தேர்தலில் நிற்கின்றனர். இவர்களில் யார் வென்றாலும் முடிவுகள் எடுக்கப் போகின்றவர்கள் இவர்களை இயக்குகின்ற எஜமானர்களே. நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றம் இன்னுமொரு பிரிஎப், ரிவைஓ போன்றே இயங்கும்.

தங்களுக்கு சமூக அந்தஸ்த்தை வேண்டுபவர்கள் போட்டியிட்டு தங்கள் இமேஜை கட்டமைப்பதற்கு அப்பால் தாயக மக்களுக்கு இவர்களால் ஏதுவும் சாதிக்க முடியும் என்பது சந்தேகமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன், மாவை, சுரேஸ் கூட்டு குறைந்த பட்சம் மே 18ற்குப் பின்னாவது தங்கள் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத் தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுயமான அரசியல் சிந்தனையே கிடையாது.

சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய சகோதரர் ஆறுமுகம் கந்தையா மனோகரன் யுகே யில் வட்டுக்கோட்டைக்கு வாக்கெடுப்பு நடத்தி இப்போது நாடுகடந்த தமிழீழம் அமைக்கவும் போட்டியிடுகின்றார். இவர் படித்துப் பெற்ற சமூக விஞ்ஞானம் – (அரசியல்) கலாநிதிப் பட்டமோ அல்லது ‘தூள்’ விநாயகர் என்று அறியப்பட்ட இல்போர்ட்டில் ‘செல்வ விநாயகர்’ என்ற ஆலயத்தை நிறுவிய செல்வராஜா செல்லத்துரை ஆன்மீகப் பலத்தோடு மேற்கொண்டுள்ள அறவழிப் பயணமோ தாயக மக்களுக்கு உதவியாக அமையாவிட்டாலும் உபத்திரவமாக அமையாது இருக்க முயற்சிக்க வேண்டும். இவர்கள் நாடு கடந்த தமிழீழம் எடுக்கிறார்களோ அல்லது தாங்கள் வாழும் நாடுகளில் தமிழீழம் எடுக்கிறார்களோ அவர்களது ஜனநாயக உரிமை. ஆனால் தங்கள் அபிலாசைகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் (நாடு கடந்த தமிழீழம்) பதவிகளுக்காகவும் தாயக மக்கள் மீது சவாரி செய்யாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக பிரித்தானியாவைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கான தேர்தலும் இத்தேர்தல் ஆணைக்குழுவும் சிறு பிள்ளைத் தனமானதாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தல் வாக்காளர் அட்டையிலும் அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து வாக்களிப்பு நடைபெறுகின்ற தேர்தல்களிலேயே முறைகேடுகள் பற்றிய செய்திகள் வருகின்றன. இங்கு வாக்காளர் அட்டை இல்லை. தன்னை உறுதிப்படுத்த முடியாத வாக்காளரும் வாக்களிக்க வழியுண்டு. சில மாதங்களுக்கு முன்னர் இரு நாள் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தலில் ஈஸ்ற்ஹாம் பேர்ச்சஸ் வீதியில் உள்ள ஒருவர் ஒரே நாளில் தான் வெவ்வேறு வாக்களிப்பு நியைங்களில் 15 வாக்குகளை அளித்ததாகத் தெரிவித்தார். இதற்கு மேல் இத்தேர்தல் பற்றியோ அதனைக் கண்காணிக்கும் ஆணைக்குழு பற்றியோ குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணைக் குழுத் தலைவர் நடராஜா விஜயசிங்கம் தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் விமர்சனம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் துதிபாடி வன்னி மக்கள் முள்ளிவாய்க்காலில் பேரழிவுக்கு உள்ளாவதை வேடிக்கை பார்த்தவர். ஓய்வு பெற்றுள்ள இவருக்கு இதுதான் தற்போது பொழுது போக்கு.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களின் முக்கிய தகுதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கு பற்றியது, கோசம் எழுப்பியது, புலிக் கொடி பிடித்தது. இதற்கு அப்பால் இவர்கள் தங்கள் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக எதனையும் குறிப்பிடவில்லை. பலருக்கு அவ்வாறு குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதும் உண்மை. போட்டியிடும் வேட்பாளர்கள் கல்வித் தகமை உடையவர்களாகவும் வியாபார உரிமையாளர்களாகவும் ஆலய உரிமையாளர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் இதுவரை தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் எவ்வாறான காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளனர் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் ‘தூள் விநாயகர்’ உரிமையாளர் செல்வராஜா உட்பட சிலரது குறிப்புகளோ 1977 அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்பதில் நம்பிக்கை கொள்வோம். அவை நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.

இக்கட்டுரையை 18 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற நினைவுக் குறிப்புடன் முடிக்கலாம் என நினைக்கிறேன். தற்போதைய ரிஆர்-ரெக் கல்வி நிலையம் தங்களது ஆறு மாத கணணிப் பயிற்சியில் டிப்ளோமா பெற்ற மாணவர்களுக்கு மிடில்செக்ஸ் பல்கலைக் களகத்தில் பட்டமளிப்புச் செய்யும் முறையை அப்போது அறிமுகப்படுத்தி இருந்தது. பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டமளிப்பின் போது அணியும் அங்கிகளை அணிந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் வீட்டில் பிறேம் போட்டு அலங்காரத்துக்கே வைக்க முடியும். இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றமும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு விடயமே.