Multiple Page/Post

“மலையக மக்களுக்கு பயன்தராத அமைச்சை இ.தொ.கா. ஏற்காது”

மலையக மக்களுக்குசேவையாற்றக்கூடிய அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே அதனை ஏற்றுக்கொள்வதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டம் கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பேச்சாளர் ஏ.பி.சக்திவேல் கருத்துத் தெரிவிக்கையில்;

நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட்ட மூவர் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். எமக்கு ஒரு பிரதியமைச்சுப் பதவியும் அமைச்சுப்பதவியும் வழங்க அரசு முன்வந்தது. பிரதியமைச்சுப் பதவியை எமது கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் ஏற்றுள்ளார். கால்நடை அபிவிருத்தி அமைச்சை அரசு வழங்க முன்வந்த நிலையில் அதனை நாம் ஏற்கவில்லை.

கால்நடை அமைச்சை வைத்துக்கொண்டு மலையக மக்களுக்கு பணியாற்ற முடியாது என்பதால் எமது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் அதனை ஏற்கவில்லை. மலையகத்துக்குச் சேவை செய்யக்கூடிய சமூக அபிவிருத்தி மற்றும் மனித வளத்தையும் இணைத்துத் தருமாறு நாம் கோரியுள்ளோம். இதன் மூலமே உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும்.

மலையகத்தில் வீடு, குடிநீர் உட்பட பல அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதால் கால்நடையுடன் இணைந்த அமைச்சுப் பதவியை நாம் கோரினோம். இந்நிலையில், அரசாங்கம் மலையகத்தக்குச் சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவியை வழங்க இணங்கியுள்ளது. ஜனாதிபதியின் பூட்டான் விஜயத்துக்குப் பின்னர் எம்மால் பணியாற்றக்கூடிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஏற்போம் இல்லாவிட்டால் நிராகரிப்பதெனத் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சி, தொழிற்சங்கத்துக்கு அப்பால் சமூக ரீதியான சிந்தனை வலுப்பட்டு வருகின்றது. இதனாலேயே மாற்றுக் கட்சியின் மத்தியில் பொதுத் தேர்தலில் எமது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை மலையக மக்கள் பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர். பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கவும் மலையக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளைப்பெற்றுக்கொடுக்கவும் எமக்கு சக்தியளிக்கும் பொருட்டு கொட்டகலை நகரில் நாம் நடத்தவுள்ள மே தினக் கூட்டத்தில் பேதங்களை மறந்து அணிதிரளுமாறு கோருகின்றேன் என்றார்.

மே தினத்தையிட்டு ஊர்வலங்கள், கூட்டங்கள்

2010-may-day.jpgபயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதையடுத்து மே தினம் உழைக்கும் வர்க்கத்தினால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனையிட்டு கொழும்பு உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்சிகளும் தொழிற் சங்கங்களும் ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

ஐ. ம. சு. முன்னணியின் பிரதான மேதினக் கூட்டம் கொழும்பு மாநகர சபை முன்றலில் இடம்பெறுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு தலைமைதாங்குவார். பெருமளவிலான தொழிலாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப் படுகிறது. ஐ. தே. க. இம்முறை சமய நிகழ்வுகளை மாத்திரமே ஏற்பாடு செய்துள்ளது.

இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இடதுசாரி முன்னணி ஆகியன நாரஹென் பிட்டி சாலிகா மைதானத்தில் நடைபெறும். இ. தொ. கா. அதன், மே தினக் கூட்டத்தை தலவாக்கலையில் நடத்துகிறது. ஜே. வி. பி. பொரள்ள கம்பல் பூங்காவில் அதன் கூட்டத்தை நடத்துகிறது.

வவுனியா வடக்கில் 80 வீத மீள் குடியேற்றம் பூர்த்தி

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 80 சதவீதமான மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர். இரண்டு கிராமசேவையாளர் பிரிவில் மாத்திரமே மீள்குடியேற்றம் நடைபெறவேண்டியுள்ள தென வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நெடுங்கேணி அரசினர் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகளும் நடைபெறுகின்றன. நெடுங்கேணி பிரதேச செயலகம் உரிய இடத்தில் இயங்கவைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள தெனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை -சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ

gunasekara.jpgபுலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

பொரளையிலுள்ள அமைச்சில் நேற்று (29) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் குணசேகர இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அமைச்சர் குணசேகர நேற்றுக் காலை 10. 45 இற்கு சுபவேளையில் கடமைகளைப் பொறுப்பேற்று ஆவணங்களில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வுக்குப் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா மற்றும் நிதிப் பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ரணசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ. ஆர். சில்வா, பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க, கட்சி முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டியூ மேலும் கூறியதாவது, “நாட்டின் பதில் அரச தலைவராக பிரதமர் விளங்குகின்ற சமயத்தில், அவர் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வது பெருமையளிக்கிறது. அவருக்கும் எனக்கும் நான்கு தசாப்தகால உறவு உண்டு. அவர் கண்டியில் கல்வி கற்றபோது வகுப்புகளுக்குச் செல்வதை விடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

1956 இல் 1970 இல், 1994 இல், 2004 இல், 2010 இல் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பெரும்பங்காற்றி இருக்கிறார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவர். அவர் பிரதமராக இருப்பதைவிட பதில் அரச தலைவர் என்பது இப்போதுதான் தெரியும். இது ஒரு புதிய அமைச்சு, இதனைப் பொறுப்பேற்றபோது அதன் பொறுப்புகள் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்.

இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர் வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கவேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன், சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.

இதற்குப் பொலிஸ், நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர், முதியோர், பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும். நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எமக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விஜேகுமாரதுங்கவும், சந்திரிகாவும் காலை ஆறு மணிக்கே வந்துவிடுவார்கள். எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எமக்கு உணவு வந்தது.

ஆகவே, சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். சமூகத் தேவைகளின் அடிப்படையில்தான் சிறை வைக்கின்றோம். அவர்களை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பவேண்டும். குற்றச் செயல்கள் உருவாக வறுமையும் காரணம். சிறைச்சாலை உத்தியோகத்தர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருவேன். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான் பாதாள உலகத்திற்கும் சிறைக்குமான உறவைத் தடுக்க முடியும். இதுவிடயத்தை உளவியல் நோக்கில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் டியூ.

கிளிநொச்சி, முல்லையில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 960!

கடந்த கால யுத்த அனர்த்தங்களால் கிளிநொச்சி, முலலைத்தீவு மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக வட மாகாண பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக இருந்தவருமான தி.இராசநாயகம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் இவ்விபரம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 960 சிறுவர்களும் தந்தை, தாய் இருவரையும் இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள மகாதேவ ஆச்சிரம சைவச் சிறுவர் மகளிர் இல்லத்தில் தாய் தந்தையரை இழந்த 100 பெண்கள் முதற்கட்டமாக தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் எனபதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதே வேளையில், முழுமையான கணக்கெடுப்பொன்று நடத்தப் பட்டால் பெற்றோரை இழந்து அநாதைகளாக்கபட்டுள்ள சிறுவர்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்படத்தக்கது.

தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா

Jaffna_Signயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சில பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் தங்கநகைகள் களவாடப்பட்டன. சில பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் நவாலியில் வைத்து 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் அவன் கூக்குரலிட்டதால் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளான். அச்சிறுவன் கூறிய தகவல்கள் அச்சமூட்டுவதாகவுள்ளன.

தன்னைக் கடத்தியவர்கள் தனக்கு ஏதோ மருந்தை பருக்க முற்பட்டதாகவும், ஊசியேற்ற முற்பட்டதாகவும் அவன் தெரிவித்ததோடு. அவ்வாகனத்தில் இன்னொரு சிறுவன் மயக்க நிலையில் இருந்நதாகவும் அவன் தெரிவித்துள்ளான். கடந்த 11ம் திகதி ஓட்டுமடம் பகுதியில் கணனி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாவணவன் ஒருவனை கடத்த முற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே நாள் அராலியில் வைத்து 5ம் தரம் கல்வி பயிலும் மாணவியொருத்தியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. இவை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதனைத்தொடாந்து மூளாய் பகுதியில் வைத்து சிறுவன் ஒருவன் மீது மயக்க மருந்தை தெளித்து கடத்த முயன்ற சம்பவமும். சங்கனையில் சிறுமியொருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் குறித்த செய்திகள் யாழ். குடாநாட்டு செய்திப் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. இக்கடத்தல்களோடு தொடர்புடைய சிலர் பிடிபட்டுள்ள போதும் கடத்தல்கள் தொடர்ந்தவாறேயுள்ளன.

கடந்த 25ம் திகதி வடமராட்சி நெல்லிலடியைச் சோந்த 24 வயதுடைய யுவதியொருவர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். பின்னர் இவரது நகைகள் யாவும் கடத்தயவர்களால் பறிக்கப்பட்டு அவரைக் கொலை செய்யும் நோக்கில் அவரின் கழுத்தை நெரித்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும,; துன்னாலைப் பகுதியிலுள்ள பற்றையொன்றிற்குள் அவரை தள்ளியெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் பொதுமக்களின் உதவியுடன் மீட்க்கபட்ட இப்பெண் மந்திகை மருத்துவமனையில் சோக்கப்பட்டார். இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீடொன்றிலிருந்து அந்த யுவதியின் சைக்கிள். நகைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடத்தல்கள் குடாநாட்டில் தொடர்ந்த வண்ணமுள்ளதால் மக்கள் பிதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அவர்களுடனேயே தினமும் பாடசாலைகளுக்கு வந்து செல்லும் நிலை எற்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவுகள், கொலைகளுக்குப் பின்னால் தமிழர்களே இருந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர். இச்சம்பவங்கள் திட்;டமிடப்பட்ட அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் பாதாள உலகக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கைகள் பார்க்கப்படுகிற்னது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் சில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதணை நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக யாழில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நடவடிக்கை மீண்டும் யாழ்பாணம் இராணுவ பொலிஸ் கெடுபிடிகளுக்கு உள்ளாகும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீடுகளில் களவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க குடாநாட்டில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் தமக்கு வரவில்லை எனவும், யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நன்றி – விஸ்வா, யாழ்ப்பாணம்.

சர்வதேச மேடைகளில் சார்க் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

m-r.jpgசர்வதேச மற்றும் பல் தரப்பு அமைப்புகளுடன் செயற்படும் போது எமது வலயத்தின் பொதுவான நன்மை கருதி ஒரே குரலில் பேச வேண்டும். வெளியில் பெறப்படும் தீர்வுகள் எமக்கு ஏற்றவைதானா என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எமது வலயத்துக்குள் நாமே மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றி கண்டறிய வேண்டும்.

சர்வதேச மேடைகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன் எமது வலயத்தின் பொதுப் பிரச்சினைகள் பற்றி ஒருமித்த குரலில் பேசும் செயற்பாட்டை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பூட்டானில் நேற்று ஆரம்பமான 16வது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சார்க் நாடுகளுக்கிடையே வலய தொடர்களின் தசாப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பத்தாண்டு காலத்தில் எமது நாடுகள் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிராக சார்க் கோவையின் விதிமுறைகள் முழுமையாக செயற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கண்டறியப்பட வேண்டும்.

வலய அமைப்பு என்ற ரீதியில் சார்க் அமைப்பு தனித்து முன்னேற்றம் காண முடியாது. எனவே நாம் இனங்கண்டுள்ள சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக ளுடன் செயற்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்காசிய உலகின் பழைமையான மற்றும் சீரிய உரிமைகளின் இருப்பிடமாகும் உலகின் சிறந்த சாஸ்திரவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் ஆகியோர் இந்த வலயத்தில் இருந்து உருவாகியுள்ளனர்.

சார்க் வலயம் அபிவிருத்தியடைந்துள்ள போதிலும் தெற்காசியாவின் ஒன்றிணைந்த பலத்தை சில சமயங்களில் நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். எமது தொழில்நுட்ப திறனையும் எமது வளங்களின் மூலம் அபிவிருத்தி சவால்களுக்கு முகங்கொடுக்கவும், சமூக மற்றும் பாதுகாப்பு நிலையை ஸ்திரப்படுத்தவும் எமக்கு திறமை இருப்பதை சில சமயங்களில் நாம் நினைப்பதில்லை. அதற்கு பதில், வலயத்துக்கு புறம்பாக உள்ள சக்திகளுக்கு முன்னுரிமை வழங்குகிறோம். நாம் செய்ய வேண்டியது அதுவல்ல. எமது வலயத்துக்குள் இருக்கும் அபிவிருத்தி மற்றும் தொடர்புகளை நாம் முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சார்க் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்த 18 மாத காலத்தில் முக்கியமான பல துறைகளில் வலய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மின்சாரம், உயர் கல்வி, சிறுவர், போக்குவரத்து, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஆறு அமைச்சு மட்ட கூட்டங்கள் எமது நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 2009 பெப்ரவரியில் இடம்பெற்ற சார்க் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார சீர்கேடு தொடர்பாக வலயத்தின் ஒன்றிணைந்த கூட்டத் தொடர் பற்றி இணை அறிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை வலய அபிவிருத்திக்கான முதல் நடவடிக்கையாகும். காலநிலை மாற்றம் இந்த மாநாட்டின் தொனிப் பொருளாக இருப்பது காலேசிதமானதாகும்.  தெற்காசிய பிராந்தியத்தின் பனி யால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூட்டானியிலிருந்து மாலை தீவு வரையிலான பிராந்தியம் சகல ருக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாகும்.

இது தொடர்பான எமது பிராந்தியத்தின் நிலை சர்வதேச மேடைகளில் வலுவாக எழுப்ப வேண்டியது நம் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும். ஜனநாயக நிர்வாகத்திற்கான எமது முழுமையான அர்ப்பணிப்பு இப்போது எமது முழுப் பிராந்தியத்திற்கும் பொதுவான நடைமுறையாகும்.

இந்தியாவின் பரந்த அபிவிருத்தியுடன் வளர்ச்சி கண்ட எமது பொருளாதாரம், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தது. உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு இருந்த போதிலும் இலங்கையில் எமக்கு 6% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 1060 டொலராகவிருந்த தனிநபர் வருமானம் இன்று 2050 டொலர் வரை உயர்வடைந்துள்ளது.

பொருளாதார மேம்பாட்டுக்காக நகரத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லையென்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் முன்னெடுத்த கொள்கை வெற்றியளித்தது. எனது அரசாங்கம் குடியிருப்பு, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நகரத்தில் மாத்திரமன்றிக் கிராமத்தில் மேற்கொண்டது. அதனால்தான் எமது அரசாங்கத்திற்குக் கிராம மக்கள் கூடுதலாக வாக்களித்தனர்.

அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்ள எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக நெருக்கடி நிலவிய பகுதிகளில் மக்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களுக்கு ஜீவனோபாயத்தைப் பெற்றுக் கொடுத்து அந்தப் பிரதேசங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக் கொடுக்க எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

சார்க் அமைப்பு அதன் வெள்ளி விழா வருடத்தில் கால் பதிக்கின்றது. பூட்டான் பிரதமர் தின்வே இம்முறை இவ்வமைப்பின் தலைவராகியுள்ளார். அவர் தலைமைப்பதவியை வகிக்கும் காலத்தில் அவருக்கு எனது பூரண ஆதரவை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15வது சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் எமது நாடு பயங்கரவாதத்துக்கெதிரான சவாலை எதிர்கொண்டிருந்தது.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள நாம் தற்போது துப்பாக்கிகளின் சவால்களில்லாத வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் இணக்கப்பாட்டை காணவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக மக்கள் ஆணை எமக்குக் கிடைத்துள்ளது. இதனூடாக எமது நாடு, மக்கள் மற்றும் இளைய சந்ததிக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்ப எமது அயல் நாடுகள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுண்டு.

சார்க் அமைப்பானது எமது பிராந்திய நாடுகளின் மக்களினது நலன், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான அமைப்பாக விளங்குகிறது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாம் கட்டியெழுப்பியுள்ள இணக்கப்பாடுகளே பெரும். இதன் மூலம் எமது நாடுகள், மக்களுக்கிடையில் நெருங்கிய நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

1985ம் ஆண்டிலிருந்து படிப்படி யான செயற்பாடுகளுடன் ‘சார்க்’ 25 ஆண்டுகளை எட்டியிருப்பது நாம் பெருமைப்படக் கூடிய தொன்றாகும். தற்போது எமது எதிர்கால சந்ததி க்காக எமக்கிடையிலான ஒத்துழைப் புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது அவசியம்.

சார்க்கில் சீனா இணைவதற்கு சந்தர்ப்பம் எதுவும் இல்லை

ஆசியாவின் வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவானது 16ஆவது சார்க் உச்சி மகாநாட்டில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாவ் குயங்கியா “அவதானி” என்ற அந்தஸ்துடன் கலந்துகொண்டிருக்கின்ற போதிலும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்.

சார்க் அமைப்பில் தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் பிராந்தியத்துக்கு வெளியேயுள்ள நாடொன்று (சீனா) அங்கத்துவம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அதிகாரி ஒருவர் ரான் ஒஸ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

அத்துடன் சார்க் அமைப்பினை விரிவுபடுத்தும் யோசனை எதுவும்
முன்வைக்கப்படவில்லை என்றும் அத்துடன் புதிய நாடொன்றை உறுப்பினராக சேர்த்துக்கொள்வதாயின் சகல உறுப்பினர்களும் ஏகமனதாக இணங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனது சொந்த தேவைக்கு பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன் – கடமைகளை பொறுப்பேற்று பிரதமர் தி. மு. உரை

pm.jpgநாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன், பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் உலகின் சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தமது பொறுப்புகளை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையேற்றார். இந்நிகழ்வு நேற்றுக் காலை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வ மதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்றுக் காலை 7.30 மணி சுபவேளையில் பிரதமர் தமது பொறுப்புக்களைக் கையேற்றதுடன், அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரிதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டி. எம். ஜயரத்ன இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலில் 60 வருட கால மக்கள் சேவையின் பின்னர் நாட்டின் பிரதமர் என்ற உன்னதமான பதவி எனக்குக் கிடைத்துள்ளது. இது எனது மக்களுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமென நான் கருதுகிறேன். இப்பதவியினூடாக நான் எனது மக்களுக்கு சேவை செய்வதில் பின்நிற்க மாட்டேன். ஒருபோதும் எனது சொந்தத் தேவைகளுக்கு இப்பதவியைப் பயன்படுத்த மாட்டேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டு மக்களுக்கான சேவையின் போது நான் பல தடைகளையும் அசெளகரியங்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் எனது மக்கள் என்னுடனிருந்தனர். அதனால் எனது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர்கள் அவர்கள். பயம் சந்தேகமின்றி சகல இன, மத மக்களும் சமத்துவமாக வாழும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவருடன் இணைந்து செயற்படுவேன்.

ஒரேவிதமான நாணய புழக்கத்திற்கு தெற்காசியா இன்னமும் தயார் இல்லை

saarc-logo.jpgதெற்காசிய நாடுகள் யாவும் ஒரேவிதமான நாணயத்தை பாவனையில் விடுவது தொடர்பான யோசனைகள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இன்னரும் உறுப்பு நாடுகள் இதற்கு ஆயத்தமான நிலையில் இல்லை என்று பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பிராந்தியத்தில் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவது தொடர்பாக ஆராய்வது முன்முதிர்ச்சியற்றது என்று சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் ஷீல் காந்த் சர்மா கூறியதாக பேர்னாமா செய்திச் சேவை நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

புதுடில்லியில் 2007 இல் சார்க்கின் 14 ஆவது உச்சிமாநாடு இடம்பெற்ற வேளை சார்க்நாடுகளின் மத்தியில் பொதுவான நாணயத்தைப் புழக்கத்தில் விடும் யோசனையை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதலாவதாக வெளியிட்டிருந்தார். இதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார, அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்தத் தெற்காசிய நாடுகள் மத்தியில் தாழ்ந்த மட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதும் நிதிப்பாய்ச்சல் குறைவாக இருப்பதும் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்குரிய சாதகமான தன்மையை கொண்டிருக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றகரமான கட்டத்தை எட்டும் போதே பொதுவான நாணயம் புழக்கத்தில் விடப்படுவது வழமையான நடைமுறையாகும். எமது வழக்கங்களை உகந்தவகையில் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எமது பொருளாதாரத்தைத் தாராளவாதப் போக்கிற்கு மாற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது. இத்தகைய நிலைமையிலேயே உரிய வகையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ஷீல் காந்த் சர்மா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட பிரிட்டனின் “ஸ்ரேலிங்”  இன்னரும் யூரோ வலயத்திற்கு வெளியிலேயே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 150 கோடி மக்களைக் கொண்ட தெற்காசியாவில் நாடுகளுக்கிடையிலான வர்த்தகமானது 11 பில்லியன் டொலராகவே இருக்கின்றது