Multiple Page/Post

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சியில் கைது!

Police_Logo

இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி காணாமல் போனவர்களிடம் பணம் பெற முற்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறும் தொலைபேசி அழைப்புகள் கடந்த ஒரு வாரமாக வன்னியிலுள்ள மக்கள் பலருக்குச் சென்றுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசினால் காணாமல் போனவர்களை கண்டபிடித்துத் தர முடியும் எனவும், இவ்விடயம் தொடர்பாக வேறு எவருக்கும் தெரியக்கூடாது எனவும் அத்தொலைபேசி இலக்கத்திலிருந்து பேசியவர்கள் கூறியிருக்கின்றனர்.

மேஜர் சீலன், மேஜர் மதியழகன் அகியோர் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். காணாமல் போன போராளிகள், பொதுமக்கள் என ஐயாயிரம் பேர்வரை தங்களிடமிருப்பதாகவும், மக்கள் தங்களிடம் விபரங்களைக் கூறினால் அவர்கள் உள்ளனரா இல்லையா எனபதைக் கூறமுடியும் எனவும், உயிருடன் உள்ளவர்களை ஒப்படைக்க குறிப்பட்ட தொகைப் பணம் தரவேண்டும் எனவும் பொதுமக்களிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தாம் ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.

நேற்றுக் காலை கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மகாவித்தியாலயத்திற்கு காணாமல் போனவர்கள் சிலரின் உறவினர்களை பணத்துடன் வருமாறு அறிவித்ததுடன், குறித்த பாடசாலை அதிபரிடம் அதற்க அனுமதியினையும் கேட்டுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பாடசாலை அதிபர் உடனடியாக பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்திருக்கின்றார். பின்னர் இது குறித்து இரணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு, சிவில் உடையில் பாடசாலைப் பகுதியில் காத்திருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த மோசடி நபர்கள் பாடசாலைக்கு வந்த போது சுற்றிவளைத்துப் பிடித்திருக்கின்றார்கள்.

பிடிபட்டவர்கள் இம்மோசடிக்கு காரணமானவரின் முகவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதான நபர் பிடிபடவில்லை. இம்மோசடி சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லண்டனில் ரெலோ கட்சியின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நவம்பர் 14ம் திகதி ரெலோ உறுப்பினர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகாரலிங்கம் தலைமையில் ஒன்றுகூடி தமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகத்தையம் செயற்பாட்டுக் குழுவையும் லண்டனில் ஆரம்பித்துக் கொண்டனர்.

லண்டன் கரோவில் உள்ள லேபர் கட்சியின் அலுவலகத்தில் மெளன அஞ்சலியுடன் ஒன்று கூடிய ரெலோ உறுப்பினர்கள், கடந்த காலங்களில் ரெலோவின் நிலைப்பாடுகள், சிறிரெலோவின் நிலைப்பாடுகள், சிறிகாந்தா, ஜிவாஜிலிங்கம் போன்றோரது நிலைப்பாடுகள் பற்றியும், இவர்களிடையே ஒற்றுமைபாடுகளை உருவாக்குவது பற்றியும் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், இந்த விடயங்கள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்று முடிவானது.

லண்டனிலும் மற்றைய ஜரோப்பிய நாடுகளிலும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பது என்றும் இதர அமைப்புகளுடன் ஒன்றிணைந்த அரசியல் உரிமைகளுக்காக சாத்வீக வழியில் போராடுவது என்றும் உடன்பட்டனர். தமது இயக்கத்தின் செயற்பாடுகளை ஜரோப்பிய நாடுகளில் விஸ்தரிப்பது பற்றியும் ஆராய்ந்தனர். புலிகளாலும், இராணுவத்தினராலும், ரெலோவினாலும் பாதிக்கப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் பற்றியும் இவர்களுக்கான உதவிகள் செயல்வடிவங்கள் பற்றியும் ஆராய்ந்து, இவைபற்றி மேலும் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுப்பது என்றும் முடிவானது.

ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரான திரு சுதன், ”ரெலோ என்ற அடையாளத்தைவிட தமிழ் மக்களின் இன்றைய தேவைகள், அம்மக்களின் இலட்சியம், நல்வாழ்வு  இவையே உயர்த்தப்பட வேண்டுமே தவிர, ரெலோவின் குறுகிய அரசியல் செயற்பாடுகளை அல்ல” என்றார். ”ரெலோவிற்காக அல்ல மக்களுக்காக செயற்படல் வேண்டும்” என்றும் சுதன் சுட்டிக்காட்டினார். திரு சுதன் அவர்கள் ரெலோ அமைப்பு ஈஎன்எல்எப் உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்ததை குறிப்பிட்டு, ”இவ்வாறான கூட்டிணைவுச் செயற்பாட்டுக்கு ரெலோ என்றும் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து இயங்க ரெலோ தயாராக இருப்பதையும், இதற்கான பல தொடர்புகள் உருவாகியிருப்பது பற்றியும் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

கூட்ட முடிவில் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜனா தலைமையில் ஏழு பேர் கொண்ட செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. விரைவில் ரெலொவின் முழுமையான தொடர்பு விபரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

”நூலகத்தில் முறைகேடாக நடந்தவர்கள் மீது ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை?” பொலிஸ் அதிகாரியிடம் நல்லிணக்க ஆணைக்குழு கேள்வி.

Jaffna_Libraryசில வாரங்களுக்கு முன்னர் யாழ்.பொதுநூலகத்திற்குள் முறைகேடாக நடந்து கொண்டவர்களுக்கெதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்தி வரும் நல்லிணக்க ஆணக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9மணியளவில் யாழ்.பொது நூலகத்திற்குச் விஜயம் செய்தனர். அப்போது பொதுநூலக நூலகரிடம் அண்மையில் தென்னிலங்கையிலிருந்து சென்ற சுற்றுலாப்பயணிகள் யாழ்.நூலகத்தில் நடந்துகொண்ட முறை குறித்து ஆணைக்குழுவின் தலைவர் கேட்டறிந்துள்ளார். நடந்த விடயங்களையும் நூலக ஒழங்கு விதிகள் குறித்தும் நூலகர் விளக்கியுள்ளார். இது குறித்து சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ் அதிகாரியை அழைத்து இந்த அசம்பாவித சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பொலிஸ் அதிகாரி மௌனம் சாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நெல்லியடியில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரிப்பு. 15 சைக்கிள்கள் பொலிஸாரினால் மீட்பு!

யாழ்.வடமராட்சி நெல்லியடிப் பகுதிகளில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து வருவதாக பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தடுப்பதற்கு பொலிஸார் தற்போது துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் களவு போன 15 சைக்கிள்கள் மேற்படி பொலிஸ் குழுவினரால் மீடக்கப்பட்டுள்ளன. மீட்க்கப்பட்ட இந்த சைக்கிள்களை அதன் உரிமையாளர்கள் அடையாளம் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பாக அதிகளவிலான முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்தமையை அடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவினரே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்த சூனிய வலயமாக வன்னியில் எந்தவொரு இடமும் இருந்ததில்லை – தயா மாஸ்டர் சாட்சியம்

thayamaster.jpgவன்னி யில் யுத்த சூனிய வலயம் என்று எந்தவொரு இடமும் இருந்திருக்கவில்லையென நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டிய தயா மாஸ்டர், மோதல் வன்னியில் உக்கிரமடைந்திருந்தபோது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்பது குறித்துக் கருத்துக் கூற முடியாதெனவும் தெரிவித்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றபோது சாட்சியமளிக்கையிலேயே முன்னாள் விடுதலைப்புலிகளின் ஊடகத்துறை பேச்சாளரான தயா மாஸ்டர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆணைக்குழு முன் தயாமாஸ்டர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை ஊடகப்பிரிவிற்குப் பொறுப்பாளராக நான் கடமையாற்றியுள்ளேன். விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்த நிலையில், நான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற முயற்சித்துள்ளேன். சமாதான உடன்படிக்கையின் முறிவும் புறக்கணிப்பும் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்தமை போன்றவற்றாலேயே நான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகத் தீர்மானித்தேன். போர் மிகவும் உக்கிரமடைந்திருந்த நிலையில் பல பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையில் மக்கள் சிக்கியிருந்தனர். இவ்வாறிருந்த மக்களைப் போலவே நானும் எனது குடும்பமும் மரணத்தின் விளிம்புவரை சென்றிருந்தோம்.குறித்த சில பகுதிகளில் தான் போர் நடைபெற்றன. வரையறுத்துக் கூற முடியாது. போரின் பரிமாணங்கள் பரந்தவையாக இருந்தன.என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருந்தனர்.நாளுக்கு நாள் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், பொருத்தமான முறையில் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையையே ஒவ்வொருவரும் தேடிச் சென்றனர் என்பதுதான் உண்மை.

அன்றைய காலகட்டத்தை என்னால் மறக்க முடியாது. யுத்தத்தால் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான உயிர்களுக்காக நானும் வருந்துகின்றேன். இந்த உயிரிழப்புகள் தேவையற்றவை. யுத்தம் தீவிரமடைந்தபோது சமாதானத்தை விரும்பிய விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் புலமையாளர்கள் சிலரும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி விடுதலைப்புலிகளின் ஆலோசகர் பாலகுமாரன் ஊடாக தலைவர் வே.பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். ஆனால், அதற்கு ஏமாற்றமே கிடைத்த நிலையில் போர் மிகவும் உச்ச நிலைக்கு அடைந்துவிட்டது. இவ்வாறான நிலையில், உயிரிழப்புகளும் கட்டுமான சேதங்களும் அதிகரித்த நிலையில் அரசுடன் இணைவதால் சமாதானமாக வாழலாம் என எண்ணிய பலரில் நானும் ஒருவன்.

 இந்நிலையில்தான் 2009 ஏப்ரல் 28 ஆம் திகதி நானும் ஜோர்ஜ் மாஸ்டரும் சரணடைந்தோம். மக்களுடன் மக்களாக நாமும் இராணுவத்திடம் சரணடையும்போது எம்மை மக்களிடமிருந்து வேறாக்கிய இராணுவத்தினர் எம்மை நன்றாகவே நடத்தினர். ஆனால், சரணடைந்த மக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்று கருத்துக்கூற முடியாது. தற்போது நான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளேன். மோதலின் போது அதிக இரத்தம் உயிர் சொத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவன்மாரின் உறவினர்களின் தகவல் அறியாமல் உள்ளனர். அங்கலாய்ப்பும் போரின் வடுக்களும்தான் இன்று மிச்சமாய் இருக்கின்றன. பரஸ்பரம், நம்பிக்கை இன்மையும் மற்றவர்களை அவர்களின் நிலையிலிருந்து புரிந்து கொள்ளாமையுமே இவ்வளவு அழிவுக்கும் காரணமாகும்.

இந்த சமாதானச்சூழல் சாத்தியமற்றுப்போனது. நீண்டதும் அதிக இழப்புமிக்கதுமான போர் முடிவுக்கு வந்துள்ளது. இன்று பல முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்துள்ளனர். எஞ்சியவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நான் நம்புகின்றேன்.முன்னாள் போராளிகள் தொடர்பாக சமூகத்தில் ஒரு தவறான கண்ணோட்டம் இருந்து வருகின்றது. வேலைவாய்ப்பு வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டப்படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ புலிகள் இயக்கத்தில் இணைந்தும் ஆதரவு வழங்கியும் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும், யுத்த காலத்திலும் யுத்தத்தின் முன்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு அதிக அக்கறை காட்ட வேண்டும்.இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்து வரும் வன்னி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும். மீள்கட்டுமானங்களை இழந்தவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

போர் நடைபெற்ற பிரதேசங்களில் இயல்பு நிலையை மீட்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்கள். இவற்றின் அடிப்படையில் நீண்டகால நிலையான சமாதானத்துக்கான பரிந்துரையை ஆணைக்குழு இறுதி அறிக்கையில் வலியுறுத்த வேண்டும். 1987,1990,1995,2000 ஆகிய ஆண்டுகளில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வாறான அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். முன்னர் நடைபெற்ற ஆணைக்குழுக்கள் தொடர்பாக மக்களிடம் தவறான அபிப்பிராயம் இருந்து வருகின்றது. அது மீண்டும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், ஆணைக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தயாமாஸ்டர்;

1972 தொடக்கம் இறுதிக்கட்டப் போர் (2009 மே) வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பதிவு உண்டு. புதுமாத்தளன், பொக்கணை ஆகிய இரு சிறு இடங்களுக்குள் பெருமளவான மக்கள் அடங்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் புலிகளும் அங்கிருந்து தாக்குதல் மேற்கொண்டனர். இராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. ஆனால், புலிகள் மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதித்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். அத்துடன், மோதல் தவிர்ப்பு பகுதி என்று எந்தவொரு இடமும் வன்னியில் அமுலில் இருக்கவில்லை. அத்துடன், இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயத்தினை யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளும் இராணுவத்தினரும் மதிக்கவில்லை.

போர் நிறைவடைந்து முன்னாள் புலிகள்,ஆதரவு வழங்கியோர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். போராட்டம் உருவாவதற்கு அரசியல் பிரச்சினையே காரணமாக இருந்தது. அத்துடன், வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி தனிநாட்டுக் கோரிக்கையை தந்தை செல்வா தரப்பினர் தொடராத நிலையிலேயே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக வே.பிரபாகரன் என்னிடம் பல தடவை கூறினார். அத்துடன், அடிப்படைப் பிரச்சினைகளுக்கு சமாதான முறையில் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினக்குரல் 15.11.2010

11 இலட்சம் மரக்கன்றுகள் 11 நிமிடங்களில் இன்று நடுகை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு ‘தேசத்துக்கு நிழல்’ எனும் தேசிய மரம் நடுகைத் திட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்கத் திணைக்களங்கள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபைகள் உட்பட அனைத்து இடங்களிலும் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரங்கள் நடப்படவுள்ளன. இன்று முற்பகல் 10.07 மணியிலிருந்து 10.18 மணி வரையிலான 11 நிமிடங்களிலேயே 11 இலட்சம் மரங்களும் நடப்படவுள்ளன.

எனினும், இத் தேசிய திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் இன்று 20 இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. வழமையான மரம் நடுகைத் திட்டங்களைப் போலல்லாது ‘தேசத்துக்கு நிழல்’ எனும் இந்தத் தேசிய மரம் நடுகைத் திட்டத்தைக் கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்வதற்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அலுவலகங்களில் மாத்திரமன்றி வீடுகளிலும் குறைந்தது ஒரு மரத்தையாவது நடுவதற்கு முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

K Thevathasanசினிமாத் துறையில் மிகுந்த ஆர்வம் உடையவரும் இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்தவருமான கனகசபை தேவதாசன் இன்று (நவம்பர் 15 2010 முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் 2008 யூனில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களுக்கு மோலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தேவதாசன் தனக்கு விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார். இதே கோரிக்கைகளுக்காக முன்னரும் உண்ணாவிரதம் இருந்து உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். தற்போது அந்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் தேவதாசன் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றார்.

இந்த உண்ணாவிரதம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

”2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன?” எனக் கேட்டு நவம்பர் 21 2009ல் அப்போதைய நீதியமைச்சர் மகிந்த மொறகொடவுக்கு  தேவதாசன் கடிதம் எழுதி இருந்தார்.

தேவதாசன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித நீதி விசாரணையும் இன்றி காலவரையறையற்று தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் 20 வருடங்களாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்ட அரசு சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயமான முறையில் விடுதலை செய்து வருகின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அடங்குகின்றனர். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டு இருந்த ஒருவரை தொடர்ந்தும் நீதி விசாரணையின்றி காலவரையறையின்றி தடுத்து வைத்திருப்பது எவ்வாறு நீதியாகும் என தமிழ் மக்களிடையே கேள்வி எழுகின்றது. தேவதாசன் மட்டுமல்ல பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பய்ங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறான நியாயமான நடவடிக்கைகள மட்டுமே தமிழ் மக்களிடம் அரச மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் என்பது தமிழ் அரசியல் ஆர்வலர்களுடைய கருத்தாக உள்ளது.

கனகசபை தேவதாசன் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது தொடர்பான முன்னைய பதிவு:

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாக நாளை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.

Jaffna_Bus_Strandகாணாமற் போனோர் மற்றும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நாளை திங்கள் கிழமை நடத்தப்படவுள்ளது.

Jaffna_Bus_Strandகாணாமல் போனோர் தடுத்து வைக்கபட்டுள்ளோர் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ். பஸ் நிலையத்தில் அனைத்துலக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சக அமைப்பான ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் எற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

காணாமல் போனோரின் உறவினர்கள் அவர்களின் படங்களுடன் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் அமைப்பாளர் ருவான் போபகே கேட்டுக்கொண்டுள்ளார். இதில் மாணவர்கள் புத்திஜீவிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கு பற்றுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நாளை அவர் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியின் எஞ்சிய இடங்களை யாழ்.மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள குடும்பங்கள் குடியேறி கொட்டில்களை அமைத்துள்ள நிலையில், மிகுதியாகவுள்ள காணிகளில் யாழ்ப்பாண மக்கள் சென்று கைப்பற்றியுள்ளனர்.
நாவற்குழியிலுள்ள குறித்த காணியில் கடந்த 10ஆம் திகதி இரவோடிரவாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த 70 சிங்களக் குடும்பங்கள் குடியேறி கொட்டில்களையும் அமைத்துள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை சாவகச்சேரி மற்றும் குருநகர் பகுதி மக்கள் சென்று எஞ்சிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வேளையில் சிறிது பற்றம் நிலவிய போதும் சிங்கள மக்கள் பிடித்து வைத்திருக்கும் நிலங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களை தமிழ்மக்கள் பிடித்துக்கொண்டனர்.

தற்போது 50 வரையிலான கொட்டில்களை சிங்களக் குடும்பங்கள் அமைத்துள்ளன. ஆனால், 50 இற்கும் மேற்பட்ட கொட்டில்களை தமிழ்மக்கள் அமைத்துளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.