காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சியில் கைது!

Police_Logo

இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி காணாமல் போனவர்களிடம் பணம் பெற முற்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறும் தொலைபேசி அழைப்புகள் கடந்த ஒரு வாரமாக வன்னியிலுள்ள மக்கள் பலருக்குச் சென்றுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசினால் காணாமல் போனவர்களை கண்டபிடித்துத் தர முடியும் எனவும், இவ்விடயம் தொடர்பாக வேறு எவருக்கும் தெரியக்கூடாது எனவும் அத்தொலைபேசி இலக்கத்திலிருந்து பேசியவர்கள் கூறியிருக்கின்றனர்.

மேஜர் சீலன், மேஜர் மதியழகன் அகியோர் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். காணாமல் போன போராளிகள், பொதுமக்கள் என ஐயாயிரம் பேர்வரை தங்களிடமிருப்பதாகவும், மக்கள் தங்களிடம் விபரங்களைக் கூறினால் அவர்கள் உள்ளனரா இல்லையா எனபதைக் கூறமுடியும் எனவும், உயிருடன் உள்ளவர்களை ஒப்படைக்க குறிப்பட்ட தொகைப் பணம் தரவேண்டும் எனவும் பொதுமக்களிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தாம் ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.

நேற்றுக் காலை கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மகாவித்தியாலயத்திற்கு காணாமல் போனவர்கள் சிலரின் உறவினர்களை பணத்துடன் வருமாறு அறிவித்ததுடன், குறித்த பாடசாலை அதிபரிடம் அதற்க அனுமதியினையும் கேட்டுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பாடசாலை அதிபர் உடனடியாக பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்திருக்கின்றார். பின்னர் இது குறித்து இரணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு, சிவில் உடையில் பாடசாலைப் பகுதியில் காத்திருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த மோசடி நபர்கள் பாடசாலைக்கு வந்த போது சுற்றிவளைத்துப் பிடித்திருக்கின்றார்கள்.

பிடிபட்டவர்கள் இம்மோசடிக்கு காரணமானவரின் முகவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதான நபர் பிடிபடவில்லை. இம்மோசடி சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *