Multiple Page/Post

சென்னையில் தொடரும் மிக்ஜாம் புயலின் தாக்கம் – ஐவர் பலி !

புயல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(04) முதல் நிலவிய கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையினால் சென்னை முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் சென்னையிலிருந்து 130 கிலோமீட்டர் வடக்கு திசை நோக்கி பயணிப்பதுடன் இன்று(05) காலை தெற்கு ஆந்திராவை அடைந்து, காலை 5.30 மணி முதல் 11.30 மணிக்குள் நெல்லூர் – காவாலி இடையே தீவிர புயலாக மாறக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வௌ்ள அனர்த்தம் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் சுமார் 150 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காசா பகுதியில் அகதி முகாமை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – குழந்தைகள் உட்பட 13 பேர் பலி !

மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள பல வீடுகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சனிக்கிழமை இரவு இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் அகதிகள் முகாமில் உள்ள அசார் மற்றும் ஜாகவுட் குடும்பங்களின் குடியிருப்புகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

 

காயமடைந்தவர்கள் காசாவின் மத்திய மாகாணத்தில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்.

நுசிராத் அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு மேலதிகமாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா நகரில் உள்ள அல்-ஜலா வீதியில் உள்ள மக்களின் குடியிருப்பு பகுதியிலும் தாக்குதலை மேற்கொண்டன.இங்கும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் இரண்டும் பதிவாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒக்டோபர் 7 ம் திகதி காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து, 6,500 குழந்தைகள் மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 16,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 38,000 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 30 பில்லியன் ரூபா நிதி !

தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்காக 30 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும். ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் சிறு மற்றும் மத்திய தரத்திலான துறைகளைப் பலப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்ளை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.

அதேபோல் சாதாரண தர பரீட்சையின் பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில் சந்தைக்குள் நுழைகிறார்கள். இருப்பின் அவர்களுக்கான வாய்ப்பு தொழில் சந்தையில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே எமது நோக்கமாகும். முச்சக்கர வண்டியுடன் வீதியிலிறங்கும் சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய தெரிவையும் பயிற்சிகளையும் வழங்குவதே எமது நோக்கமாகும்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதோடு, அவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான தலைமுறையாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் எம்முடையதும் நோக்கமாகும்.

அதேபோல், உலகச் சந்தையில் 2024-2025 ஆண்டுக்காக விடுவிக்கப்படவுள்ள 789 பில்லியனிலிருந்து 1% பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்” என்று தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியதாவது;

தங்களுடைய மரண தண்டனை தொடர்பில் 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். அதில் 07 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டு பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர். சிறைச்சாலைகளில் 346 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள்.

அத்துடன், சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10784 கைதிகளில் 61.3 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களை கைது செய்யும் இஸ்ரேலிய படைகள் !

இஸ்ரேலிய படைகள் இன்றையதினம் 12 பாலஸ்தீன மக்களை அவர்களது வீடுகளிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக காசா தகவல்கள் தெரவிக்கின்றன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3415 ஆக உயர்வடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பிய ஒரு யுவதியையும் சோதனைச் சாவடியில் படைகள் தடுத்து வைத்ததாக அவர்கள் கூறினர்.

Nablus, Tubas, Jenin, Hebron மற்றும் Qalqilya ஆகிய பகுதிகளிலும் கைது நடவடிக்கை தொடர்ந்ததாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. அத்துடன் சோதனையிட்ட வீடுகளையும் படைகள் சூறையாடியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக நீக்கப்படுகிறது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை !

சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சபையுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று சபைக்கும் இலங்கைக்கு வருமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்யூஸ் மற்றும் ஹசரங்க ஆகியோர் ஐ.பி.எல் ஏலத்தில் !

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டி தொடர்பிலான வீரர்கள் ஏலத்தில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மத்யூஸ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்திய மதிப்பில் ரூபா இரண்டு கோடிக்கு ஏஞ்சலோ மத்யூஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க, ஒன்றரை கோடி இந்திய ரூபா அடிப்படை ஏலத்துடன் இரண்டாவது பிரிவில் இடம்பிடித்துள்ளார்.

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் – இஸ்ரேலிய தாக்குதலால் காசா பகுதியில் 178 பேர் பலி !

ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ ஹமாஸ் பதுங்கிடம் என அடையாளம் காணப்பட்ட 200 இடங்களை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியை ஒட்டிய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு சாத்தியப்படாமல் போனதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிப்பதாகவும், காசாவில் இறந்துபோன இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தாங்கள் முன்வந்தும் இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

வயதானவர்களையும், போரில் இறந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் விடுவிக்கிறோம் என்றோம். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதி யார்டன் பிபாஸின் மனைவி, இரு சிறு குழந்தைகளின் சடலங்களையும், பிபாஸையும் விடுவிக்கிறோம் என்றும் கூறினோம். ஆனால் அவர்கள் திடீரென தாக்குதலைத் தொடங்கிவிட்டனர் என்று ஹமாஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹமாஸ் தாக்குதல்களால்தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துபாயில் COP28 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் கூறுகையில், ”வியாழக்கிழமை ஜெருசலேமில் ஒரு பேருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளது. அந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது. வெள்ளிக்கிழமை இஸ்ரேல் எல்லையோர பகுதிகளைக் குறிவைத்து ஹமாஸ் 50 ராக்கெட்டுகளை ஏவியது. இதனால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டது” என்று தெரிவித்தார்.

 

கடந்த மாதம் 7-ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவில் இருந்தனர். இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த போர், கடந்த மாதம் 24-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொடர் முயற்சி காரணமாக ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்த ஒரு வார காலத்தில், இஸ்ரேல் தரப்பில் இருந்து கைதிகள் சிலர் விடுவிக்கப்பட, பதிலுக்கு ஹமாஸ் தன்னிடம் இருந்த பிணையக் கைதிகளில் சிலரை விடுவித்தது. இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தாக்குதல் தொடங்கியது.

ஒரு மனித குல விரோதியின் மரணம்!!!

பல்லாயிரக் கணக்காண மனிதர்களைக் கொன்றொழித்த அமெரிக்க கொலை இயந்திரத்தின் சூத்திரதாரி ஹென்றி கிசிஞ்சர் இன்று தனது 100வது வயதில் மரணித்தார். உலகின் மிக மோசமான யுத்தக்குற்றவாளி நரகாசுரன் இயற்கையால் இந்த உலகை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். யூத இனத்தவரான ஹென்றி கிசிஞ்சர் இனவெறி கொலை வெறி கொண்ட ஹிட்லரின் கொலைத் தாண்டவத்திலிருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு அகதியாகச் சென்று பிற்காலத்தில் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையை அல்ல கொள்ளைகளை கொலைகளை வகுத்தவர். இவரது வழிகாட்டலிலேயே வியட்நாம், கம்போடியா முதல் சிலி வரை இலங்கை உட்பட இன அழிப்பு, காப்பற் பொம்பிங், கொம்யுனிச அழிப்பு என்பன முடுக்கி விடப்பட்டது.

மனித நேயத்திற்கு புறம்பான மனிதனாகக் கருதப்படும் ஹென்றி கிசிஞ்சர் மனித குலத்தின் சாபக்கேடாகவே பார்க்கப்பட வேண்டியவர். ஹிட்லரால் பாதிக்கப்பட்ட இனத்தில் இருந்து மேலெழுந்து வந்த ஹென்றி கிசிஞ்சர் ஹிட்லர் அளவுக்கு மிகப் பாரிய மனித அழிவுகளை உலகெங்கும் ஏற்படுத்தியவர். அதே ஹிட்லரின் கொலை வெறியில் இருந்து தப்பித்து வந்த யூத சமூகத்திலிருந்து உருவான இஸரேல் பாதுகாப்புப் படைகள் ஹிட்லரைக் காட்டிலும் மோசமான அழிவுகளை கொலை வெறியை காஸாவிலும் வெஸ்ற் பாங்கிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை மட்டும் கொல்லவில்லை. நாளைய பாலஸ்தீன சமூகத்தை துடைத்தழிக்கும் வகையில் பெண்களை, சிறார்களை கொல்கின்றனர். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றக் கூடாது என்பதற்காக மருத்துவ வண்டிகளையும் மருத்துவ மனைகளையும் தாக்கி அழிக்கின்றனர். கருவுற்றிருக்கும் பெண்கள் கருக்கள் கலைக்கப்படும் அளவுக்கு தாக்குதல் முடக்கிவிடப்படுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகளைக்கூடக் கொல்ல வேண்டும் என கொலை வெறிகொண்ட இஸ்ரேலிய பயங்கரவாத அரசு துடிக்கின்றது.

ஹன்றி கிசிஞ்சர் எழுபதுக்களில் கம்போடியா, வியட்நாமில் “நகர்வது எதுவானாலும் தாக்கி அழியுங்கள்” என்று குறிப்பிட்டது போல் காசாவில் நகருவது எதுவானாலும் தாக்கி அழிக்கப்பட்டது. ஹிட்லர் கொலைவெறித் தாண்டவம் ஆடிய போது சமூக வலைத்தளங்கள் எதுவும் கிடையாது. தகவல் தொழில்நுட்பமும் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனாலும் உலகம் முழுவதும் ஹிட்லருக்கு எதிராக கொதித்து எழுந்தது. ஆனால் ஹிட்லரின் வாரிசுகளாக மாறியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க துடைத்து அழிக்கின்றனர்.

உலகம் என்றும் கண்டிராத அதர்மத்துடன் இஸ்ரேல் இராணுவம் தனது கொலைவெறித் தாண்டவத்தை புரிகின்றது. அதற்கு அமெரிக்தகா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பூரண அங்கிகாரம் வழங்கியுள்ளன. ஹின்றி கிசிஞ்சர் கொம்யுனிசத்தை தீண்டத்தகாத சொல்லக்கூட்டாத கெட்ட வார்த்தை என்று மேற்குலகை நம்ப வைத்தார். இன்றைய வலதுசாரி இஸ்ரோலிய பென்ஜமின் நெத்தன்யாகு யுத்த நிறுத்தத்தை கெட்ட வார்த்தை என்று அறிவித்துவிட்டார். ஹென்றி கிசிஞ்சரின் பள்ளியில் படித்த அன்ரனி பிளின்கனும் அதனைப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவரோடு சேர்த்த மேற்குலகக் கும்பலும் இப்போது யுத்த நிறுத்தம் என்றால் ஏதோ துஸணம் பேசுவது போல் கருதி அதனை பொது மேடைகளில் சொல்வதில்லை. பத்திரிகையாளர்கள் அதுபற்றி கேட்டாலும் வெட்கப்பட்டு பூசிமெழுகி அந்தச் சொல்லையே சொல்வதில்லை.

ஆயத வன்முறையால் உலகெங்கும் ஆண்டு தோறும் 500,000 பேர் கொல்லப்படுகின்றனர். உலகின் ஆயத விற்பனையில் 75 வீதத்திற்கும் அதிகமான வியாபாரம் நேட்டோ நாடுகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதில் 40 வீதமான வியாபாரம் அமெரிக்காவினால் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது. அமெரிக்காவில் பாடசாலைகளுக்குள்ளேயே துப்பாக்கிச் சுடுகள் நடத்தப்படுவதும் குழந்தைகள் கொல்லப்படுவதும் சாதாரண விடயமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த ஆயத விற்பனைக்கு தடையைக் கொண்டுவருவதே முடியாத காரியமாக இருந்து வருகின்றது. தங்கள் சொந்த மக்களின் குழத்தைகளின் உயிரிழப்புப் பற்றியே அக்கறையற்ற அமெரிக்க ஆட்சியாளர்கள், அச்சிறார்களின் குருதியில் லாபத்தை சுவைக்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தில், உக்ரெயினில், எரித்திரியாவில், சுடானில் உயிரிழப்பவர்கள் பற்றி கரிசனை கொள்வார்களா?

உலக ஒழுங்கு மிகவும் மாறிக்கொண்டுள்ளது. மனிதமும் மனித நேயமும் ஹின்ரி கிசிஞ்சர், பென்சமின் நெத்தன்யாகு மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதும் மேற்குலகினால் மரணத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துவிடப்பட்டுள்ளது. ‘சமாதானம்’ என்பது ஒரு கேவலம் கெட்ட சொல் என்று அடுத்த தலைமுறையை நம்பவைக்க மேற்குலகம் முயற்சித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சமாதானம் என்றால் போர் இல்லை. போர் இல்லாவிட்டால் ஆயதங்களை விற்க முடியாது. ஆயதங்களை விற்காவிட்டால் எப்படி லாபமீட்டுவது? லாபமீட்ட எதுவெல்லாம் தடையாக இருக்கின்றதோ அதுவெல்லாம் மிகக் கெட்ட விடயங்கள். இது தான் இன்றைய மேற்குலகின் நியதி.

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம் !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.