Multiple Page/Post

துவாரகாவாக உயிர்த்தெழுந்தவர் கொல்லப்படும் அபாயம் ! புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வீரவணக்க அஞ்சலி !!

மே 18, 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதி செய்யும் வகையிலும், பிரபாகரனும் அவரது குடும்பமும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் பிரபாகரனுக்கு வீர வணக்க அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு மக்களாலும் ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டால் துவராகாவாக மாறிய பெண் படுகொலை செய்யப்படுவார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வே பிரபாகரனின் இரத்த உறவான அவருடைய மூத்த சகோதரர் மனோகரன் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இளவயதில் பிரபாகரன் இருந்த தோற்றத்திலேயே இருக்கும் மனோகரன் வேலுப்பிள்ளையின் மகன் கார்த்திக் மனோகரன் தனது சித்தப்பா வே பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கு பல்வேறு செவ்விகளை வழங்கிய காரத்திக் மனோகரன் ஈழத்தமிழ் மக்களுக்காக போராடிய தனது சிறிய தந்தையை அவமானப்படுத்தும் வகையிலும் மக்களிடம் பணத்தைக் கொள்ளையிடும் வகையிலும் கதைகளைப் பரப்பி வருவதால் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே தாங்கள் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கார்த்திக் மனோகரன் இந்த அஞ்சலி நிகழ்வை தான் தோன்றித்தனமாகச் செய்யவில்லை எனவும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கும் அமையவே இந்த இறுதி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே 18 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த செய்தியை தமிழ் ஊடகப் பரப்பில் தேசம்நெற்றே முதலில் உறுதிப்படுத்தி வெளியிட்டு இருந்தது. இதுதொடர்பில் தேசம் நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலாளராக இருந்த கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனின் நேர்காணலையும் வெளியிட்டு இருந்தது. அவர் இச்செய்தியை சர்வதேச ஊடகங்களுக்கும் 48 மணி நேரங்களில் அறிவித்து இருந்தார். இச்செய்தி அன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான ரி.ரி.என் இலும் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அத்தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்தவர் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் செயற்குழுவின் தலைவராக இருந்த எஸ் கருணைலிங்கம். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் செயற்பாட்டாளரான சுவிஸ் ரஞ்சனின் சகோதரர். இச்செய்தி வெளியிடப்பட்டதற்காக தங்களைப் புலிகளின் விசுவாசிகளாகக் காட்டிக்கொண்ட சிலர் அத்தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியும் இருந்தனர். அதன் பின் ரி.ரி.என்னும் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்று கும்பலோடு கோவிந்தாவாக ஜால்ரா அடித்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை முற்று முழுதாக உறுதிப்படுத்தினால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் கொதித்தெழுவார்கள். பிரபாகரன் எப்படி இறந்தார்? இறுதி நேரத்தில் என்ன நடந்தது? என்ற கேள்விகளும் எழும். இலங்கை, இந்திய அரசுகள் மீது யுத்தக் குற்றங்களும் எழும் தமிழர்கள் மத்தியில் இந்தியா நெருங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும். இதற்காக பிரபாகரன் உயிரோடு தப்பித்துவிட்டார் என்ற வதந்தியை இந்திய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கசிய விட்டனர். நெடுமாறன், காசி ஆனந்தன் போன்ற இந்திய உளவுப் பிரிவான ரோ வின் முகவர்கள் இதனைப் பரப்புவதில் முன்நிற்கின்றனர். இவர்கள் தான் இப்போது துவாரகா வந்துவிட்டார், பிரபாகரனும் வருகிறார். ஆனால் இம்முறை பிரபாகரன் இந்தியாவை எதிர்க்கமாட்டார் என்றெல்லாம் கட்டியம் கூறுகின்றார் காசி ஆனந்தன்.

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட புலிகளின் ஒரு பிரிவினர் தற்போது இந்திய உளவுத்துறையின் முகவர்களாக சுவிஸில் உள்ள பெண்ணை துவாரகாவாக மற்றியுள்ளனர். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மக்கள் அவர் இனி வரமாட்டார் என்று நம்பினால் துவாரகா வேடம் போட்ட பெண் கொல்லப்பட்டு அவருடைய கதை முடிவுக்கு வந்துவிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்போதைய வேடம் கலைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள் மேலும் இந்திய உளவுத்துறையும் அம்பலப்படுத்தப்படும் என்பதால் போலித் துவாரகா கொல்லப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது நலன்களுக்காகத் தூண்டிவிட்டு தமிழ் – சிங்கள முரண்பாட்டை படுகொலைகளாக மாற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ. இந்திய புலனாய்வுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் விக்ரர் தலைமையில் அனுராதபுரம் படுகொலையை 1985இல் மேற்கொண்டனர். சிங்களக் கிராமங்கள் தாக்கியளிக்கப்பட்டதும் இதன் பின்னணியிலேயே. தாங்கள் சொன்னதைச் செய்ததைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயதப் பயிற்சியை இந்தியா வழங்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்திய நலன்களைப் பேணுவதற்கான போராட்டமாக மாறியது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய இந்தியா, 1987 இல் அமைதிப்படையாக இலங்கைக்குள் நூழைந்தது. புலிகளைக் குறைத்து மதிப்பிட்ட இந்தியாவும் இந்திய இராணுவமும் புலிகளிடம் வாங்கிக் கட்டியது.

அடிபட்டுக் கிடந்த இந்தியா தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. பிரபாகரனிடம் எவ்வித அரசியல் பார்வையும் தெளிவும் இல்லாதது இந்தியாவுக்கு மிகச் சாதகமாக அமைந்தந்து. இலங்கை இராணுவத்தை குறைத்து மதிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2006இல் மாவிலாற்றை மூடி சண்டையை வலிந்து ஆரம்பித்து இலங்கை இராணுவத்திடம் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தனர். இதற்குப் பின்னணியில் இந்தியாவும் மேற்குலகமும் இணைந்து செயற்பட்டனர். ஒப்பிரேசன் பீக்கன் என்ற 2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்ட தாக்குதல் திட்டமே பின் மீள்திருத்தம் செய்யப்பட்டு 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு அது முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

2008 பிற்பகுதிகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தப்பிக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. விடுதலைப் புலிகள் சிறிய ரக மல்ரிபரல்கள் கொண்டு தாக்க இலங்கை இராணுவம் கனரக சக்தி வாய்ந்த மல்ரிபரல்களைக் கொண்டு வந்து புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்தது. ஒரு சில மணித்தியாலங்களே கட்டாய இராணுவப் பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விட்டில் புச்சிகளாக வன்னி மண்ணில் உயிரிழந்தனர். இந்த யுத்தம் தோல்வி அடையும் என்பதை 2008 முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் புலிகள் அழிக்கப்பட்டால் தாங்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்பதால் இது பற்றி மௌனமாகவே இருந்தனர். அப்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் மட்டும் தான், இதனை தேசம்நெற் நேர்காணலூடாக 2009 ஜனவரியில் வெளிப்படுத்தினார். அதில் தமிழ் மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்று 2009 ஜனவரியில் வேண்டுகோள் விடுத்தனர். அச்சமயத்தில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் பாரிய உயிரிழப்பொன்று ஏற்படப் போவதற்கான அறிகுறிகள் வெளித்தெரியத் தொடங்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் பார்வையற்ற அரசியல் தெளிவற்ற ஒரு முட்டாள்தனமான இராணுவக் கட்டமைப்பாக இருந்தமையால்தான் சர்வதேசம் ‘உங்களை இப்படித்தான் தாக்கி அழிப்போம்’ என்று கால அட்டவணை போட்டு அவர்களுடைய கையில் திட்டத்தை ஒப்படைத்து விட்டு தாக்கி அழித்துள்ளனர். நிலைமை தங்களுக்கு சாதகமாகவில்லை என்பது தெரிந்திருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முட்டாள்தனமாகத் தொடர்ந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மீண்டும் இந்திய அரசியல்வாதிகளை நம்பியதும் அவர்களுக்குப் பின்னிருந்த இந்திய புலனாய்வுத்துறையினரை கண்டுகொள்ளமல் இருந்ததும் தான். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குப் பிதில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் தமிழகத்தில் திமுகாவுக்குப் பதில் அம்மா ஜெயலலிதா அதிமுகா ஆட்சிக்கு வரும் என்றும் நம்பினர். அதனால் இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே 16, 2009 வரை சரணடையாமல் யுத்தத்தை இழுத்துக் கொண்டிருந்தனர். இலங்கை அரசோ யுத்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியத் தேர்தல் ஆரம்பிக்க முன்னரே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்கச் செயற்பட்டது.

இந்தப்பின்னணியில் நிகழ்த்தப்பட்டது தான் ஏப்ரலில் பிரபாகரன் இருந்த இடத்தை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். இத்தாக்குதலிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் பிரபாகரனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தனர். அச்சண்டையில் பிரபாகரன் உயிர் தப்பினார். அப்போது கூட அவர்கள் சரணடையும் முடிவை எடுத்திருந்தால் வன்னி யுத்தத்தில் 75 வீதமான உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் கதைகளைக் கேட்டும் அசட்டுத்தனமான முட்டாள்தனமான நம்பிக்கையிலும் பாஜாகா வரும் ஜெயலலிதா அம்மா வருவார், அவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பினர். இறுதி யுத்தம் நாளுக்குநாள் இறுக இறுக குறுகிய நிலப்பரப்புக்குள் மக்களும் புலிகளும் தள்ளப்பட்டனர். இந்திய – இலங்கைப் புலனாய்வுத்துறையும் யுத்தத்தை இழுத்தடிக்காமல் முடிவுக்குக் கொண்டுவர என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஏப்ரல் முதல் மே 18 வரையான ஆறு முதல் ஏழு வரையான வாரங்களிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. இந்தப் பேரவலத்திற்குக் காரணம் பாஜாகா வும் ஜெயலலிதாவும் வந்து தங்களை மீட்பார்கள் என்ற நம்பிக்கையே.

மே 16 2009 தேர்தல் முடிவுகள் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பில் மண் வீழ்ந்தது. அதனை அறிந்த சில மணி நேரங்களிலேயே தாங்கள் ஆயுதங்களை மௌனிக்கத் தயார் என்று தங்களுடைய தொடர்புகளுக்கு அறிவித்தனர். எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நேரம் இருக்கவில்லை. வெறும் வாய்வார்த்தைகளை நம்பி சரணடைய வேண்டியதாயிற்று. குறைந்தது சில வாரங்களுக்கு முன் தங்கள் சரணடைவை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்து சரணடைந்திருந்தால் வரலாறு வேறு வதமாக அமைந்திருக்கும். சரணடைந்த முக்கிய தலைவர்கள், தளபதிகள், பிரபாகரன் குடும்பத்தினர் எவ்வித மனிதாபிமானமும் காட்டப்படாமல் படுகொலை செய்யப்பட்டனர். ஆட்டத்தை தொடக்கிய இந்தியா, அதனை முடித்தும் வைத்தது. இப்போது தனது அடுத்த ஆட்டத்திற்கு இந்தியா தயாராகிவிட்டது. ஆனால் நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை…

 

தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது – அமெரிக்க தூதுவர்ஜூலி சங்

தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற பூர்த்தியாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக காணாமல்போனோர் குடும்பங்கள் முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்தேன் என ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்றும் பல குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் கதைகள் அமைதியான நீடித்த அரசியல்தீர்வின் அவசியத்தை நினைவுபடுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம்

பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை ஒருபோதும் மறக்ககூடாது என்பதனை இந்த அறிக்கை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் டேர்க் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அவர்கள் குறித்து அக்கறையுள்ளவர்களும் நீண்டகாலமாக காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் விடுதலை!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

 

குறித்த வழக்கானது நகர்த்தல் பத்திரத்தின்மூலம் இன்றையதினம் வழக்கு விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராந்த நீதிபதி குறித்த நால்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

குறித்த நபர்களுடைய பிணைக்கான நகர்த்தல் விண்ணப்பத்தினை சட்டத்தரணி நாகராஜா மோகன் இன்றையதினம் தாக்கல் செய்திருந்தார். இதற்கு ஆதரவாக சட்டத்தரணி புவிராஜசிங்கம் முகுந்தன், சட்டத்தரணி தேவராஜா ரமணன் மற்றும் சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

 

சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிசாரினால் குறித்த நால்வருக்கும் எதிராக ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் 3 (1) இன் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அதற்கான போதியளவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அதனை நீக்கிக் கொண்டு குறித்த வழக்கை சம்பூர் பொலிசார் நகர்த்தல் பத்திரத்தின் மூலம் தண்டனைச் சட்டக்கோவை பிரிவின்கீழ் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த பிணை விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தார். குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

கடந்த 12ஆம் திகதி சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் அன்றைய தினம் இரவு கமலேஸ்வரன் விஜிதா, பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா, செல்வவினோத்குமார் சுஜானி, நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

“சர்வதேசத்திற்கு செய்தி சொல்வதானால், நுட்பமான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களை கற்றுணர வேண்டும்” – இதயரஞ்சன்

சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன்!

அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும்.

அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு.

அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் எல்லாம் இடத்துக்கு இடம் மாறும்.

‘அது ஏனுங்க?’ என்று கேட்டால், ‘இராஜதந்திரம், மூலோபாயம், தந்திரோபாயம், நாட்டு நலன்’ என்கிற பதில்கள் அடுக்கடுக்காக வரும். இத்தகைய சொற்களை ஆய்வு செய்வதற்கு பல அரச சார்பற்ற -ஆனால் அதன் நிதியில் இயங்கும் நிறுவனங்கள் உள்ளன.

இவைதவிர உலக நாடுகளில் பல கூட்டுக்களும் உண்டு என்கிற விடயம் எம்மில் பலருக்குத் தெரியும்.

பொருளாதாரக் கூட்டு, இராணுவக்கூட்டு, இராணுவ-பொருளாதாரக்கூட்டு, நாடுகள் ஒன்றிணைந்த ஒன்றிய கூட்டு.

எண்ணெய்க்கூட்டு, எண்ணெய்+கூட்டு, பிராந்தியக்கூட்டு, 195 நாடுகளும் இணைந்த சாம்பார் கூட்டு, மனித உரிமை பேசும் நாடுகளின் கூட்டு, குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட தனிக்கூட்டு என பல வகைகள் உண்டு.

ஆகவே சர்வதேசம் என்பது முரண்பட்ட கூட்டுக்களின் சங்கமிப்பு என்று கூறுவதே சிறந்தது.

இரண்டு கண்களுக்குப் பக்கத்தில் தடுப்புக்களைப் போட்டவாறு உலகத்தை முழுமையாகப் பார்க்க முடியாது.

உலகப் பொருளாதாரத்தின் அசைவியக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் பூகோள அரசியல் மாற்றத்தை முழுமையாக தெரிந்து கொள்வது கடினம்.

சீனாவிற்கெதிராக பிலிப்பைன்சை உசுப்பிவிடும் அமெரிக்காவின் பின்புலத்தில், Nickel என்ற கனிமத்தின் தேவை உண்டு.

மின்சாரக் கார் உற்பத்தியில் அதன் பங்கு உண்டு.

தற்போது சீன மின்சாரக்காருக்கு 100% வரிவிதித்துள்ளார் பைடன்.

ஏனிந்தக் கோபம் என்று கேட்டால், ‘மிகை உற்பத்தி, அதிகளவிலான சீனஅரச சலுகை’ என்பார் அவர்.

Samsung மற்றும் தைவானின் TSMC ஐ அச்சுறுத்தி அமெரிக்காவில் ஆலையைப் போட வைத்த அதிபர் பைடன் , அதற்கு கொடுத்த சலுகைகள், முதலீட்டில் உதவி செய்தமை குறித்த கேள்விகளை சீனர்கள் தற்போது முன்வைக்கிறார்கள்.

இந்தப் பொருளாதார போட்டியில் நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப் போர், சைபர் தாக்குதல் யாவும் இணைந்து வரும்.

அதன் உச்சநிலையில் ஆயுதப்போர் மூழும். 1929 இன் பொருளாதார வீழ்ச்சியை ,1945 இல் பெரும்போராகக் கண்டது இவ்வுலகம்.

2008 இன் வீழ்ச்சி ,இன்றளவில் தடைகளின் உச்சத்தை நோக்கி நகர்ந்து உலகப்போராக மாறாமல் இருந்தால் மானுட குலத்திற்கு நல்லது.

ஆனாலும் அதனை கார்ப்பரேட் உலகமே தீர்மானிக்கும் என்பது இயங்கியல் விதி.

அணுஆயுத நாடுகள் தமக்கிடையே மோதும் போது அதிக வரிவிதிப்பு, பொருளாதார தடை, சொத்து முடக்கம் போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகிறது.

இவ்வகையான அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, உலக ஒழுங்கும் மாறும். புதிய கட்டமைப்புகளும் உருவாகும்.

அடிப்படையில், சந்தைக்கான போட்டியும், உற்பத்திறன் அதிகரிப்பும், அதீத தொழில்நுட்ப வளர்ச்சியும், சில நிறுவனங்களின் சந்தை மதிப்பினை உயர்த்தியுள்ள Cloud Capital உம், படைத்துறை விரிவாக்கமும், நவீன இருதுருவ உலக ஒழுங்கினை தற்போது தீர்மானிக்கின்றன.

சந்தை மதிப்பில்,Amazon, Microsoft, Apple, Nvidia, Alphabet, Facebook,TSMC போன்ற கம்பனிகள் 2 ரில்லியனை கடந்து விட்டன.

ஆகவே நாம் சர்வதேசத்திற்கு செய்தி சொல்வதானால், இந்த நுட்பமான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களை கற்றுணர வேண்டும்.

ஆகவே இது குறித்து பேசுவோம். விவாதிப்போம்.

-இதயச்சந்திரன்

(15/5/2024)

உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறோம் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

ரஸ்ய உக்ரைன் போர் தொடர்பில், பேசுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து புடின் இன்று(16)சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

2 நாட்கள் தங்கும் அவர் ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சீனா செல்லும் முன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த புடின், உக்ரைன் போர் தொடர்பில் தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததில்லை என்று கூறியுள்ளார்.

உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறோம், என்றாலும், அந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா உட்பட, பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா நாடுகளின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கற்றுத்தந்த பாடம் – இந்தியாவும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்..!

தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இலங்கை தமிழரின் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. குறித்த தாக்கம் தமிழீழம் கோரிய போராட்டத்தில் ஏற்படுத்திய முடிவுகள் தொடர்பிலும் – கடந்த காலத்திலிருந்து தமிழர்களும் – தமிழ் அரசியல் தலைமைகளும் எவ்வாறான கற்றலை பெற்றுள்ளனர் – அதனை முறையாக நடைமுறை அரசியலில் பயன்படுத்துகின்றனரா..? என்பது தொடர்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் பற்றிய கருத்தாடல்களின் போக்கு ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடன் பரபரப்பான ஓர் அரசியல் கலந்துரையாடல் .

தொகுப்பாளர் – திரு.த. ஜெயபாலன்.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட்  !

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட்  தனது முதலாவது தெற்காசிய பிராந்திய விஜயத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

அந்த விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவேந்தலில் ஆக்னஸ் காலமர்ட் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 24ஆம் திகதி நேபாளத்தின் காத்மாண்டுவில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், இளைஞர் சமூகம் மற்றும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவிப்பு !

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

“ஊபா” சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு தடை செய்தது.

இத் தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியத் தேசிய பாதுகாப்புக் கருதி, 1992 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் முதன் முதலில் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் ஒரு ‘பீ ‘ குளம்! நான் ஒரு பீக்குளத்து மீன்!! வெளியே வந்தால் செத்துவிடுவேன்!!! – பேராசிரியர் ஹூல் –

யாழ்ப்பாணத்தின் சமகால அரசியல் – சமூக கட்டமைப்புக்களின் நிலை தொடர்பில் பேராசிரியர் கூல் அவர்களுடன் உரையாடல்..!

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!