விடுவிக்கப்படாத பிரதேசத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு பகுதிக்குள் வருவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு பகுதியில் சுமார் 35 சதுர கிலோமீற்றர் பகுதியை பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு தேவிபுரத்தை மையமாகக்கொண்டு ஏ 35 பாதையில் புதுக்குடியிருப்பு- பரந்தன் பாதையையும் உடையார்கட்டு சந்தி தொடக்கம் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியையும், இருட்டுமடு முதல் தேவிபுரம் வரையிலான பகுதியையும் உள்ளடக்கியதாக 35 சதுரகிலோமீற்றர் பகுதியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் அரசு பொதுமக்கள் தங்கும் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இராணுவத்தினரே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பதால் பாதுகாப்பு வலயத்தினுள் வருமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் கேட்டுக் கொள்கின்றனர். விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் வருமாறு வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விமானம் மூலம் விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கு போடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்தார்.
இப் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய பகுதிகளையும் இராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உள்நுழையும் பகுதிகள் வருமாறு:- வன்னிப் பிரதேசம் ஏ-35 புதுக்குடியிருப்பு, பரந்தன் பாதையில் உடையார்கட்டு சந்தி மற்றும் மஞ்சள் பாலம் வரையில் 4 கி.மீ தூரத்தில் உள்ள இருட்டுமடு மற்றும் பிரதேசம் (09 23 17.20 வ மற்றும் 080 36 25.70 கி) இருட்டுமடு கிழக்கில் இருந்து தேவிபுரம் வரையில் (09 23 17.40 மற்றும் 080 40 53.60 கி) பிரதேசம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நிமித்தம் பாதுகாப்பு வலயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் மஞ்சள் பாலம் (09 20 21.80 வ மற்றும் 080 39 15.20 கி) பிரதேச ஏ-35 பிரதான பாதை எல்லையாகும்.
வவுனியாவில் நான்கு ஏக்கரில் 3 தற்காலிக பாடசாலைகள்
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கென சுமார் 4 ஏக்கர் நிலப் பரப்பில் மூன்று தற்காலிக பாடசாலைகள் கட்டப்படவுள்ளன. வவுனியா மெனிக் பாம் பகுதியில் தலா 150 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முகாமில் தங்கவைக்கப்படும் பொதுமக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காகவே மூன்று பாடசாலைகள் அமைக்கப்படுவதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.
அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளவர்களுள் சுமார் 200 ஆசிரியர்களையும் மேற்படி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்வதற்கான நியமனக்கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளன. வன்னியில் சுமார் 55,000 மாணவர்களும் 2500 ஆசிரிய ர்களும் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வவுனியா அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் பட்சத்தில் மேற்படி பாடசாலைகளிலேயே அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்படி மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடைகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார வவுனியா வலய கல்விப் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதுடன் தேவையான பாடநூல்கள் அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் அனைத்துமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மெனிக்பாம் பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களை தற்காலிகமாக குடியமர்த்தும் பகுதிகளிலேயே மேற்படி பாடசாலைகளும் அமைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சு இவர்களுக்கான சகல நிதி உதவிகளையும் வழங்கி வருவதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.
க.பொ.த (சா/த) பரீட்சை: வன்னி மாணவர்களுக்கென வவுனியாவில் பரீட்சை நிலையம்
க. பொ. த. சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான கணிதப் பாட இரண்டாம் பகுதி பரீட்சைக்குத் தோற்றும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்காக இரண்டு பரீட்சை நிலையங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ளன.
வவுனியா செட்டிக்குளம் மற்றும் நெலுக்குளம் பகுதியில் இரண்டு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 மாணவர்களுக்குரிய வினாத்தாள்கள், பரீட்சை அனுமதி அட்டைகளும் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கல்வி வலய பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.
வன்னியில் இப்பரீட்சை நடைபெறாது என்பதால் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மாணவர்களுக்கு பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. இதற்கமைய வலயப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
வன்னியிலிருந்து வெளியேறியோருக்காக இராமநாதன், அருணாசலம், கதிர்காமர் பெயரில் குடியேற்றக் கிராமங்கள் – அரசாங்கம் அறிவிப்பு
வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று இடங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அங்கு அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் குடியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இப்பகுதியில் அகதி முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது. மெனிக்பார்மில் 150 ஏக்கரும் மெனிக் பார்ம் 2 இல் 450 ஏக்கரும் ஓமந்தையில் 150 ஏக்கரும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட முழு வன்னிப் பிரதேசமும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதிலும் அங்கு சொந்த இடங்களுக்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல கணிசமான காலமெடுக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மக்களை இந்த குடியேற்றக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இக் குடியேற்றக் கிராமங்களுக்கு மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களே சூட்டப்படவிருக்கின்றன. பொன்.இராமநாதன் விடுதலைபுரம், பொன்.அருணாசலம் விடுதலைபுரம், கதிர்காமர் எழுச்சி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இங்கு குடியமர்த்தப்படுவோருக்கு சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும். சமைத்த உணவு, உலர் உணவுகள், விளையாட்டு வசதி, தொலைபேசி வசதி, தொலைக்காட்சி, வானொலி என்பனவும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் வரை ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் நூறு ரூபா கைச்செலவுக்காக வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக இந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இம்மாத இறுதியில் இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான சகல பொறுப்புகளும் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.