Multiple Page/Post

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

20-karunanithi1.jpgநான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை. தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெண்கள் நடத்தும் போராட்டம் தீவிரம் – 5 பேர் சுகவீனம்

20-fast.jpgஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஐந்து பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளுடன் பெண்கள் போராடி வருகின்றனர். பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 13-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர்.

சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கபப்ட்டிருந்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் போலீஸார் அனுமதி மறுக்கவே, மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 7வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது பல பெண்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு கவிதா (30), சித்ரா (40), சசிகலா (30) ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்களைக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதுரை பழனியம்மாள், காஞ்சீபுரம் சசிகலா, ஜெயமணி, மேகனா, செல்வி ஆகியோரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

இவர்களில் ஜெயமணி மயக்கமடைந்து விழவே, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று 8வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் கருணாநிதி செய்கிறார்:திருமா

thiruma_8-4.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு எதுவுமில்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

தி.மு.க. அரசின் மீது எந்தக் குறையையும் சொல்ல முடியாது. அதனால்தான் ஈழப் பிரச்னையை எதிரணியினர் தேர்தல் பிரச்னை ஆக்குகின்றனர். ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியைப் பறி கொடுத்தவர் கருணாநிதி. அவரும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர். இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் அழைத்து மதுரையில் டெசோ மாநாடு நடத்தினார். இப்போது கூட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், பிரதமருடன் சந்திப்பு என இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்த எங்கள் கூட்டணி இயற்கை கூட்டணி. கூட்டணிக் கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கத் தெரிந்தவர் கருணாநிதி. உண்மையான தலைவர்கள் இல்லாத கட்சிகளும், விபத்தில், வன்முறையில், சாதி உணர்வுகளைத் தூண்டி தலைவர் ஆனவர்களும் உள்ள கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி. நான் தவறானக் கூட்டணியில் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால் அவர் உள்ள கூட்டணிதான் தமிழர்களுக்கு எதிரான கூட்டணி.

ஸ்லம்டாக் மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு : விலை $400,000

rubina.jpgபல ஆஸ்கார்களை குவித்துள்ள “ஸ்லம்டாக்  மில்லியனர்” திரைப்படத்தில் வரும் சிறுவர்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அதில் தேவன் படேல் மற்றும் ப்ரீடோ – லத்திக்காவின் சிறு வயது சிறுவர்களாக இஸ்மாயிலும் ருபீனாவும் நடித்திருந்தார்கள். நேற்று ஒரு பிரிடிஷ் நாளிதழ் “ஸ்லம்டாக்  மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு விலை USD $400,000 என்று அறிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ருபீனாவின் தந்தை ” குப்பத்தில் கஷ்டப்படும் எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை. எங்கள் குழந்தை ருபீனாவின் நட்சத்திர அந்தஸ்தால் அவரை தத்தெடுக்க பலர் முன் வரலாம். அதனால் இந்த விலையை நிர்ணயித்துள்ளோம். இவரது விலையால் அவளது எதிர்காலத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் நல்லது” என தெரிவித்திருந்ததாக பிரிடிஷ் நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிஎனென்-ஐபிஎன்னுக்கு நேரடியாக பேட்டியளித்துள்ள அவரது தந்தை இந்த செய்தியில் உண்மையில்லை. ஆனால் நாங்கள் வறுமையில் வாடுவதும், எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை என்பதும் உண்மை என தெரிவித்துள்ளார்.

கருணாநிதி சிறந்த சாணக்கியன்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

epdp-sec.jpgதமிழக முதல்வர் கருணாநிதி ஓர் சிறந்த சாணக்கியன் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரணை தனது நண்பர் என அவர் வெளியிட்டுள்ள கருத்து முழுக்க முழுக்க அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

“கருணாநிதி, எந்த நேரத்தில் எவ்வாறான ஓர் கருத்தை முன் வைக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தை நன்கு தெரிந்தவர். வன்னிப் பிரதேசத்தில் பிரபாகரனினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 70,000 பொதுமக்களை விடுதலை செய்வது குறித்து கருணாநிதி அக்கறை காட்ட வேண்டும்” என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ

india-election.jpgவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று வைகோ பேசினார். அமைந்தகரையில் நடந்த தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கை தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். சேது சமுத்திர திட்டம் குறித்து நான் சொன்ன கருத்தை வைத்து, அ.தி.மு.க.,வுடன் நெருடல் இருப்பதாக ஒரு ‘டிவி’ பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால், அதற்கு அடுத்த கேள்விக்கு இந்திய பிரதமராக வர அனைத்து தகுதியும் உள்ளவர் ஜெயலலிதா என்று நான் கூறிய கருத்தை வெளியிடவில்லை.

தற்போது, தனித்தமிழ் ஈழம் அமைய அ.தி.மு.க., பாடுபடும் என்று அ.தி.மு.க., அறிவித்திருப்பது மிக முக்கியமான விஷயம். முடிவெடுத்தால் அந்த முடிவில் உறுதியாக இருக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். ஆனால், தற்போது தனியார் ‘டிவி’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பிரபாகரன் எனது நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்,’ என்று கூறியிருக்கிறார். பிரபாகரன் எப்போது சாவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டவர் அவர். முன்கூட்டியே பிரபாகரனுக்கு இரங்கல் கவிதையை கருணாநிதி எழுதி வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர் எண்ணம் பலிக்காது; பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்.எனக்கு மரண தண்டனை விதித்தாலும், பிரபாகரனுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்.

சோனியாவே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா? – கருணாநிதி

20-karunanithi.jpgசோனியா காந்தியே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியின் இன்னொரு பகுதியை அந்த டிவி வெளியிட்டுள்ளது.

அதில், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்வது என்பது மாநில அரசின் கையில் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றார்.

பின்னர், கொள்கை அடிப்படையில், அனுதாபத்தின் அடிப்படையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி அவர்களே நளினியிடம் இரக்கம் காட்டியபோது, நான் காட்டாமல் இருக்க முடியுமா என்றார் கருணாநிதி.

இதற்கிடையே, சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ் காந்தி படுகொலையை நான் மன்னிக்க மாட்டேன். அதை செய்த இயக்கத்தையும் நான் மன்னிக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.

பெப்ரவரி முதல் இதுவரை 10.000 நோயாளிகள் அரச பகுதிக்கு வருகை!

taking-to-green-ocean.jpgகிரீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த பெப்ரவரி முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் புலிகளின் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாக ஐ. சி. ஆர். சி. தெரிவிக்கின்றது. கடந்த இரு தினங்களில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 940 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் ஐ. சி. ஆர். சி.யினூடாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். நோயாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தமிழ் சிங்களப் பாடசாலைகளின் இரண்டாம்; தவணை நாளை ஆரம்பம்!

schools_stu.jpgநாட்டி லுள்ள தமிழ் – சிங்கள – பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை இன்றுடன் முடிவடைவதுடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் – சிங்கள பாடசாலைகள் நாளை 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகின்றது. தமிழ் – சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய உள்ளதுடன்,  முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்விச்செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன.

இந்த வருடத்தின் பாடசாலைக் கல்வி; நடவடிக்கைகள்; யாவும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக் கல்விமையமைச்சு அறிவித்துள்ளது.

புலிகளுக்கெதிரான மற்றுமொரு புகைப்படக் கண்காட்சி நாளை ஜெனீவாவில் ஆரம்பம்

புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளைச் சித்தரிக்கும் மற்றுமொரு புகைப்படக் கண்காட்சி நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெனீவாவிலுள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ள இப்புகைப்படக் கண்காட்சியின்போது கடந்த மூன்று தசாப்தங்களில் எல்.ரீ.ரீ.ஈ. யினர் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் என்பவற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பவற்றுடன் இணைந்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடமிருந்தும் சர்வதேச செய்தி முகவர் நிலையங்கள்,  வெளியீட்டு நிறுவனங்கள் என்பவற்றிடமிருந்தும் பெறப்பட்ட புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. புலிகளின் கொடுமைகளை சித்தரிக்கும் இவ்வாறான புகைப்படக் கண்காட்சிகள் கடந்த வருட இறுதிப் பகுதியில் பிரித்தானியா, நெதர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.