Multiple Page/Post

‘தமிழ் மக்களுடைய எதிர்ப்புணர்வு இலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது’ கொமன்வெல்த் முன்பான ஆர்ப்பாட்டத் தொகுப்பு : த ஜெயபாலன்

Robin_Speech_at_the_Protestபுலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் மிகவும் குழப்பகரமானதாகவே இருந்து வந்துள்ளது. இன்னமும் அவ்வாறே உள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அம்மக்களை தங்கள் எஜமானர்களுக்குப் பணிய வைப்பதாகவே இருந்து வந்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலி ஆதரவு அமைப்புகளானாலும் சரி, கிழக்கிலங்கை – தலித் – ஜனநாயக முன்னணிகள் போன்ற பெயரளவில் அல்லது பெயரில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள புலி எதிர்ப்பு அமைப்புகளானாலும் சரி தாயகத்தில் உள்ள மக்களுக்கு தாங்களே குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அம்மக்களின் குரல்களை இருட்டடிப்புச் செய்து தங்கள் அரசியல் நலன்களைத் தக்க வைக்கவே முயன்று வந்துள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கபடும் போராட்டங்கள் மிக அருமையாகவே நடைபெறுகிறது. இது மிகக் குறைந்தளவினருடன் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்போராட்டங்கள் அரசியல் ரீதியில் தங்கள் நியாயத்தை உறுதிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சொலிடாரிற்றி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பினால் யூன் 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன் நூறுக்கும் உட்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்ட தமிழர்களுக்கு இணையாக பிற சமூகத்தவர்களும் கலந்துகொண்டதுடன் அவர்களே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Serra_Leading_the_Protestஒரு ரூபாயோ ஒரு பெனியோ மகிந்த ராஜபக்ச அரசுக்கு கொடுக்கப்படாது!
வழங்கப்பட்ட நிதிக்கு கணக்குகள் காட்டப்பட வேண்டும்!
வன்னியில் உள்ள முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்!

போன்ற கோசங்கள் அங்கு ஓங்கி ஒலித்தது. Stop Slaughter of Tamils என்ற சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தமிழர் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் தற்போதைய போராட்டங்களை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள இடதுசாரி அமைப்பான Committee for Worker’s International என்ற அமைப்பே இப்போராட்டங்களின் உந்து சக்தியாகச் செயற்படுகின்றது. முக்கியமாக ‘த சோசலிஸ்ட’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான Sarah இப்போராட்டத்தில் முன்னின்று கோசங்களை வைத்தார். ஏனையவர்களும் ஈடுபட்டனர்.

இடையிடையே கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி அதற்காக தாங்கள் தார்மீக அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லிச் சென்றனர்.

Robin_Speech_at_the_Protestகுறிப்பபாக ரொபின் என்பவரது கருத்துக்கள் தமிழ் மக்களது போராட்டங்கள் தொடர்பான மதிப்பீடாக அமைந்திருந்தது. நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது மிகுந்த கண்டனத்தை தெரிவித்த ரொபின் இது சிங்கள பொது மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இங்கு லண்டனில் சிலர் பௌத்த விகாரைக்கு தீயிட்டதையும் லோட்ஸ் மைதானத்தில் யூன் 21 அன்று இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த சிங்கள இளைஞர்கள் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ரொபின் இவ்வாறான சிங்கள மக்களுக்கு எதிரான வன்மங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய எதிரிகள் அல்லர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டியில் தமிழர்கள் சிலர் பாகிஸ்தானின் வெற்றியை எதிர்பார்த்து நின்றதையும் பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்ததையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட ரொபின் கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் முழுமையான இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி இருந்ததையும் பாகிஸ்தான் விமான ஓட்டிகள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார். உண்மையில் தமிழர்களுடைய எதிர்ப்புணர்வு பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் அன்று அமைந்திருக்க வேண்டும் என்றும் ரொபின் கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான போராட்டம் வெறும் தமிழர்களுடைய போராட்டமாக அல்லாமல் பிற சமூகங்களையும் இணைத்து போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ரொபின் ஏனைய ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் பரஸ்பரம் புரிந்துணர்வு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். தமிழர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல பாலஸ்தீனியர்களுடைய பிரச்சினை காஸ்மீரியரின் பிரச்சினை எல்லாம் ஒரே வகையினதே என்று கூறிய ரொபின் இம்மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இறுதியாகத் தெரிவித்தார்.

இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை: மஹிந்த சமரசிங்க

mahinda-samarasinha.jpgமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை காணப்படுகிறதென இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் அமுல்படுத்தவேண்டும் என்பதில் இணக்கப்பாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், எனினும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலொன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலையிருப்பதுடன், இலங்கை போன்ற சிறிய நாட்டில் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழேயே இருக்கவேண்டுமென்ற கருத்தியலொன்று நிலவுவதாகவும் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இன்று நள்ளிரவு முதல் கேஸ் விலைமாற்றம்- நுகர்வோர் அதிகார சபை

shellgas.jpg12.5 கிலோ லாவ் கேஸ் சிலிண்டரின் விலை 100 ருபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் 12.5 கிலோ செல் கேஸ் சிலிண்டரின் விலை 53 ருபாவினால் குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த நுகர்வோர் அதிகார சபை இவ்விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்

uthayan_logoயாழ்ப் பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பத்திரிகை இயங்க அனுமதிக்க போவதில்லை என தெரிவித்து அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டை பாதுகாக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என தெரிவித்து இந்த துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

uthayan_29062009.jpg

கனகரட்ணம் எம்.பி.க்கு தொடர்ந்து தடுப்புக்காவல்

tna_mp-kanagarathnm.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணத்தை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதம நீதிவான் நிசாங்க கப்புஆராச்சி அனுமதி வழங்கியுள்ளார்.  விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் கிடைக்க ஒத்துழைத்தாரெனக் கூறப்படுவது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கனகரட்ணம் எம்.பி.யைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரியதையடுத்தே இந்த அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று கண்காணித்த பின்னரே கொழும்பு பிரதம நீதிவான் இந்த அனுமதியை வழங்கினார்.

யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து கடந்த மே மாதம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்தபோதே இவர் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை

images.jpgநாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலையத்தில் அடை மழை பெய்த வருவதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. எலபாத்த,  கஹவத்தை, மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அடை மழை பெய்தால் நாட்டில் பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேனன் ஓய்வு பெறுகிறார்.- அடுத்த செயலாளர் நிரூபமா ராவ்

30-nirupama-rao.jpgஇந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த வெளியுறவுத்துறை செயலாளராக நிரூபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வரும் மேனனின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிகிறது.

தற்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் இருக்கிறார். ஜூலை 31ம் தேதி முதல் நிரூபமா ராவ் புதிய பணியை ஏற்றுக் கொள்வார்.

1950ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்தவர் நிரூபமா. மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் பயின்றார். பின்னர் 1973ம் ஆண்டு இந்திய அயலுறவுப் பணியில் இணைந்தார். 1976 முதல் 1983 வரை வியன்னா மற்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றினார். பின்னர் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்க் ஆபிசராக பணியாற்றினார். நேபாளத்திலும் அதே பணியை மேற்கொண்டார்.

1984 முதல் 92 வரை வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆப்பிரிக்க பிரிவில் பணியாற்றினார். அதன் பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான மையத்தில் பணியாற்றினார். அங்கு ஆசிய, பசிபிக் பாதுகாப்பு குறித்த ஆய்வை அவர் மேற்கொண்டார்.1993 முதல் 1995 வரை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பத்திரிக்கைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.

பின்னர் 1998ம் ஆண்டு மே மாதம் வரை அவர் பெரு நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார்.மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 1998 ஜூன் முதல் 99 ஆகஸ்ட் வரை துணை தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.2001 முதல் 2002 வரை வெளியுறவுத்துறையின் இணைச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.

செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார். செய்தித் தொடர்பாளராக இருந்தபோது பத்திரிக்கையார்களை இவர் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். அதன் பின்னர் தற்போது சீனத் தூதராக பணியாற்றி வருகிறார். நிரூபமா ராவின் கணவர் சுதாகர் ராவ், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புலிகள் படையினரிடம் சரண் : உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgஇது வரை 10000 அதிகமான விடுதலைப்புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொலிசாருக்குக் கிடைக்க பெறும் தகவலைத் தொடர்ந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து பல ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் 22 ஆயிரம் பேர் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் நடந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலாவது ஆசிய இளைஞர்கள் விளையாடுப் போட்டிகள் சிங்கப்பூரில் தொடங்கின

asiangames.gifஆசிய அளவில் நடத்தப்படும் முதலாவது இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் திங்கட்கிழமை தொடங்கின.

இரு வார காலம் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில் 42 நாடுகளில் இருந்து சுமார் 1400 பேர் கலந்து கொள்கிறார்கள்.

14 முதல் 17 வயது உட்பட்டோருக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், நீச்சல், கால்பந்து, துப்பாக்கிச் சுடுதல், படகுப் போட்டி உட்பட பத்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகள் சிங்கப்பூரில் இளைஞர்களை விளையாட்டின்பால் கவர்திழுத்து அவர்களின் மேம்பாட்டுக்கு உதவும் என்று தாங்கள் நம்புவதாக இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவின் இணைத் தலைவரும் சிங்கப்பூர் விளையாட்டு ஆணையத்தின் தலைவரான உன் ஜின் டியக் தெரிவித்தார்.

குறைந்த அளவிலான செலவிலேயே இந்தப் போட்டிகள் நடைபெறுவதால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் இவற்றை நடத்த முடியும் என்பதே இதன் சிறப்பு என்றும் அவர் கூறுகிறார். ஜூலை மாதம் 7 ஆம் தேதி வரை இந்த முதலாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் இடம் பெறவுள்ளன.

இடம்பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்வைத் தோற்றுவிப்பதே அரசின் முக்கிய பணி – கெஹெலிய ரம்புக்வெல

keheliya-111.jpgநாட்டில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச் செல்வதே அரசின் இன்றைய முக்கிய பணியாகும். அதை விடுத்து 13 ஆவது சட்ட திருத்தத்துக்கோ, அரசியல் தீர்வுக்கோ அரசாங்கம் முக்கியத்துவமளிக்கவில்லையென என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்துள்ள எமது சகோதர மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமான பணியாகும்;

தரைவழியாகவும் கடல் வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் இராணுவ ரீதியில் இன்று பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளனர். அதன் சிதைவுகளை அகற்றும் பணியில் இன்று படையினர் ஈடுபட்டுவருகின்றனர். யுத்தத்தின் பின்னர் தோன்றியுள்ள உணர்வுபூர்வமான மனிதநேய பிரச்சினைகளுக்கு இன்று நாம் முகம் கொடுத்துள்ளோம்.

ஆனால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் முயற்சியில் சில சக்திகள் இறங்கியுள்ளன. இடம்பெயர்ந்தவர்களின் இயல்பு வாழ்வைத் தோற்றுவிக்கும் சவாலை அரசாங்கம் ஏற்று அதனை முன்னேடுத்துச் செல்கின்றது. இதனை நாம் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால் மனிதாபிமான நடவடிக்கையால் நாம் அடைந்து வெற்றியால் முழுப் பயனையும் அடைந்து கொள்ள முடியாமல் போகும்.

எனவேதான் பெருந்தொகைப் பணச் செலவில் அந்த மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளை அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. அந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரிந்து சென்ற குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சமைத்த உணவுக்குப் பதிலான அவர்களே தாம் விரும்பிய சுவையில் சமைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

13 ஆவது அரசியில் திருத்தச் சட்டம் எங்கே? யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் எஞ்சிய பணமெங்கே? அதிகாரப் பரவலாக்கம் எங்கே? இறுதித் தீவெங்கே? என்றெல்லாம் இன்று அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவையெல்லம் இரண்டாம் தரப்பிரச்சினைகளே. எமது முதலாவது இலக்கு இடம்பெயர்ந்த எமது சகோர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்பதேயாகும்.

இலங்கையின் சனத்தொகையில் 2 சதவீதமானோர் இன்று இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்குள்ள ஒரே பிரச்சினை தமது இயல்பு வாழ்வில் மீண்டும் இணைந்துகொள்வதே. அதனை சீராக செய்து முடிப்பதையே இன்று அரசு தனது முதற்தர பணியாகக் கொண்டுள்ளது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்த அப்பாவி மக்கள்தான் இன்று நலன்புரி முகாம்களில் உள்ளனர்.

ஒருவனின் ஆணைக்கு அடங்கிப்போன இந்த மக்களுக்கு ஜனநாயம் என்ற சொல்லின் அர்த்தம்கூடப் புரியாது. அந்த அடக்கு முறையிலிருந்து இந்த மக்கள் இன்று மீண்டுள்ள போதும் அவர்களுக்கு இன்னும் வசதியான வாழ்வு அமையவில்லை. அதனை அரசாங்கம் கூடிய விரைவில் பெற்றுக்கெடுக்கும். பயங்கரவாதத்தை துரத்தியடிக்க ஊடகவியலாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். அதேபோன்று இன்று நாடு எதிர் நோக்கும் சவால்களை அரசு வெற்றி கொள்ளவும் ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தொடாந்து வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்