30

30

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடி அதிகரிப்பு !

சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.71 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 79 ஆயிரத்து 900-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை !

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தியது‌.

இதையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜேக்கப் ஜூமா கோர்ட்டை அவமதித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது‌. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

கனடாவின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை – 70க்கும் மேற்பட்டவர்கள் பலி !

கனடாவில் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் அதிக வெப்பத்தினால் கடந்த திங்கட்கிழமை முதல் இதுவரையில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் வயதானவர்கள்.

நேற்றையதினம் கனடாவின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலையான 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை, பிரிட்டிஸ் கொலம்பியாவின் லிட்டன் நகரில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.