03

03

இலங்கையின் வரலாற்றில் இல்லாத சுற்றுச்சூழல் அனர்த்தம்! இரு வாரங்களாகியும் அணையாத தீ!!

எம்வி எக்ஸ் பிரஸ் பேர் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் இரு வாரங்களாகியும் தொடர்ந்தும் எரிந்துகொண்டும் கடலுக்குள் வெடித்துச் சிதறிக்கொண்டும் உள்ளது. இலங்கை – இந்திய கரையோர கடற்படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவர முடிந்த போதும் பல முயற்சிகளை எடுத்த போதும் கப்பல் தொடர்ந்தும் எரிந்த வண்ணமே உள்ளது. தற்போது இலங்கையயை நோக்கி விசுகின்ற பருவக்காற்று இத்தீயை கட்டுப்படுத்த பெரும் தடையாக இருந்து வருகின்றது. கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் சிப்பந்திகள் 25 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். ஆனால் கப்பலில் ஏற்றி வரப்பட்ட ஆபத்தான இரசாயணப் பொருட்கள் மற்றும் 300 தொன் எரிபொருட்கள் என்பன அளவிட முடியாத சேதத்தை இலங்கையின் கடற்பரப்பில் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் மேற்கு கரையான நீர்கொழும்பு களுத்துறையைச் சுற்றியுள்ள 50 மைல் பிரதேசம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. நுண் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயணப் பொருட்கள்: நைற்றிக் அமிலம், சோடியம் குளோரைட் என்பன கடலில் கலப்பதுடன் கடல் வாழ் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன. இப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதுடன் அயலில் உள்ள பகுதிகளிலும் மக்கள் கடலுணவுகளை பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே கோவிட் இனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் நெருக்கடியால் மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

“கடலுக்குள் செல்லாமல் வியாபாரத்தைச் செய்யாமல் எப்படி தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்?” தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றார். டேவிட் பெர்னான்டோ. நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நீர்கொழும்புப் பகுதி மீனவர். இந்த அனர்த்தத்தால் சிறிது காலத்திற்கு மக்கள் கடல் உணவுகளை தவிர்க்கவே விரும்புவார்கள் என்று சொல்லும் டேவிட் பெர்னான்டோ அவர்கள குற்றம்சொல்ல முடியாது என்றும் அவர்கள் கடலுணவை சாப்பிடத் தயங்குவது நியாயம்தானே என்றும் டேவிட் பெர்னான்டோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

கடற்பரப்பில் கடந்த இரு வாரங்களாக தொடரும் இந்த அனர்த்தம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரையொதுங்கும் கழிவுகள் எதனையும் தொட வேண்டாம் என கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனர்த்தத்தை கட்டுப்படுத்தவும் கரையொதுங்கும் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றவும் ஆயிரக்கணக்கான கடற்படையினர் பாதுகாப்பு அங்கிகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கை, பிரித்தானியாவின் பயண அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டது!

சில மணிநேரங்களுக்கு முன்னதாக பிரித்தானிய அரசு இலங்கையை தனது சிவப்பு அபாய பட்டியலில் சேர்த்துக்கொண்டது. பிரித்தானியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்வது என்ற முடிவை எடுப்பதற்கு வசதியாக வீதிப் போக்குவரத்து சமிஞை நிறப் பட்டியலை அறிமுகப்படுத்தியது. அதன்படி பச்சை நிறப்பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு பிரித்தானியர்கள் பெரும் கெடுபிடிகள் இல்லாமல் பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மஞ்சள் அல்லது அம்பர் நிறப் பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இம்முறையின் படி சிவப்பு நிறப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு அத்தியவசிய தேவையின்றி பயணிக்கக் கூடாது என பிரித்தானிய அரசு அறிவுறுத்துகின்றது. மேலும் இந்நாடுகளுக்கு பயணிப்பவர்கள் மீது நடைமுறை விதிகளும் கெடுபிடியாக இருப்பதுடன் இவர்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் இடங்களில் இருவாரங்கள் வரை தனிமைப்படுத்தலுக்குள் வைக்கப்படுவர். பயணிகளே அதற்கான செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் சுற்றுலா மற்றும் பயணத்துறையயை பாரதூரமாகப் பாதிப்பதுடன், பயணிகளது பயணச் செலவையும் மிகவும் அதிகரித்துள்ளது. மே இறுதிப்பகுதியில் திருமண நிகழ்வுக்குப் பாரிஸ் சென்றிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் (படம்) ஈரோ ஸ்ராருக்கு செலுத்திய £200 பவுண் பயணக் கட்டணத்துடன் கோவிட் பரிசோதணைகளுக்காக £305 பவுண்கள் செலுத்தியதாக தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரிவித்தார். பிரித்தானியாவை விட்டு நீங்குவதற்கு முன் கோவிட் இல்லை என்ற சான்றிதழைப் பெற £150 பவுண்கள் செலுத்தி உள்ளார். பின்னர் பாரிஸில் அதனைப் புதுப்பிக்க மேலும் £50 பவுண்களைச் செலுத்தி உள்ளார். ஏனெனில் முதற் சான்றிதழ் 72 மணிநேரங்களிற்கே செல்லுபடியாகும் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் பிரித்தானியாவிற்கு திரும்பி வந்து 10 நாட்கள் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கோவிட் பரிசோதணைப் பொருட்களுக்காக £105 பவுண்கள் செலுத்தி உள்ளார். மொத்தத்தில் சஞ்சீவ்ராஜ் பாரிஸ் சென்று திரும்ப £505 பவுண்களைச் செலுத்தி உள்ளார். இதில் ஐந்தில் மூன்று பங்கு கோவிட் பரிசோதணைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

தற்போது இலங்கையும் அபாயப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் போகும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் இலங்கையில்; திரும்பி வரும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் என்று ஒவ்வொருவருடைய போக்குவரத்துக் கட்டணங்களும் இரு ஆயிரங்களைத் தொட்டு நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள: கோவிட் பரிசோதணை மற்றும் தனிமைப்படுத்தல் இடங்கள்; இதன்மூலம் கொள்ளை இலாபமீட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் நிதி நேர்மையற்ற ஒருவராகக் கருதப்படுகின்றார். அவருடைய வீட்டுத் திருத்த வேலைகள் தொடர்பிலும் அவர் பொதுப்பணத்தில் கை வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி – 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகள் !

2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகளும் டி20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகளும் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2023 – 2031 காலகட்டத்திலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் விவரங்கள்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்ந்து நடைபெறும். 9 அணிகள் 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்கிற நடைமுறை தொடரும். ஒவ்வொரு இரு வருடங்கள் கழித்தும் இறுதிச்சுற்று நடைபெறும். 2025, 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

2027, 2031 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. எனவே 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கடைசியாக 10 அணிகள் பங்கேற்கும். 2003 உலகக் கிண்ண போட்டியில் நடைபெற்றது போல சூப்பர் சிக்ஸ் சுற்று சேர்க்கப்படும். 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸில் மோதும். அதன்பிறகு அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

டி20 உலகக் கிண்ண போட்டியில் 20 அணிகள் பங்கேற்கும்.

கடைசியாக 2017 இல் நடைபெற்ற ஒருநாள் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி அடுத்ததாக 2025, 2029 ஆண்டுகளில் நடைபெறவுள்ளன.

2024 – 2031 இல் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகள்.

2024 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.

2025 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2026 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2027 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.
2028 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2029 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2030 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2031 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.

ஈரானின் பிரமாண்ட போர்க்கப்பல் ‘கார்க்’ தீப்பிடித்து கடலில் மூழ்கியது !

உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

U.S. defends the world's access to Strait of Hormuz | ShareAmerica

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறது.‌

இந்தநிலையில் ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஈரான் நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டு கடற்படைக்கு சொந்தமான ‘கார்க்’ என்கிற போர்க்கப்பல் ஹார்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில் உள்ள ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த கப்பலில் நேற்று அதிகாலை 2:25 மணியளவில் திடீரென தீ பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் கப்பல் முழுவதிலும் பரவியது.‌

கப்பலில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகளை அணிந்து கப்பலிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். இதனிடையே தீயில் முற்றிலுமாக உருக்குலைந்த ‘கார்க்’ போர் கப்பல் கடலில் அப்படியே மூழ்கியது.‌ 20 மணி நேரம் தீயணைக்கும் பணி இறுதியில் தோல்வியில் முடிந்தது.

கப்பலில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததையும் அதனால் வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் எழுந்ததையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்ன என்பதை ஈரான் கடற்படை உடனடியாக தெரிவிக்கவில்லை. எனவே இது எதேச்சையாக நடந்த விபத்தா ? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் கட்டப்பட்டு 1977-ம் ஆண்டு ஈரானிடம் ஒப்படைக்கப்பட்ட ‘கார்க்’ கப்பல் 1979 இஸ்லாமியப் புரட்சியை தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 1984-ல் ஈரான் கடற்படையில் சேர்க்கப்பட்டதும், இது ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றாக விளங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

‘கார்க்’ கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியது, ஈரான் கடற்படையில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு ஆகும். முன்னதாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாஸ் துறைமுகத்துக்கு அருகே நடந்த ராணுவ பயிற்சியின் போது போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணை தவறுதலாக மற்றொரு போர்க்கப்பலை தாக்கியதில் 19 மாலுமிகள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.