2020
2020
சீனாவின் சர்வதேச ஆதிக்கத்தை தாங்க முடியாத அமெரிக்கா!
அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ இலங்கை வருகை!!!
உலக பொருளாதார ஆதிக்கத்தை தன் பக்கம் சுவீகரித்துக்கொள்ளும் சீனாவின் வளர்ச்சியயைத் தடுக்க அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதில் ஒரு கட்டமாக இலங்கைக்கும் வருகின்றார் இன்று. மைக்கல் பொம்பயோ காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துக் கொடுக்க இலங்கைக்கு வரவில்லை. அது பற்றி கரிசணையுடையவரோ அல்ல. அடுத்த இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக்குறியாக இருக்கின்ற போது அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் ஆசிய விஜயம் ஒரு பொருட்டாகவே அமையப் போவதில்லை. தனது சொந்த நாட்டில் 225,000 பேர் கொல்லப்பட்டதையே பொருட்படுத்தாத ஒரு இராஜாங்க அமைச்சரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்கும் அதிகாரம் அந்த நாட்டிடம் உள்ளது என்று உளறும் முட்டாள்தனத்தை என்ன செய்வது.
இறுதி யுத்தத்தில் பெரும்பாலும் உயிரோடு இல்லை என்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும், தமிழ் அரசியல் வாதிகளுக்கும், இலங்கை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் மிகத் தெளிவாகத் தெரியும். உயிருடன் இருப்பவர்களையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பரலோகம் அனுப்பிக்கொண்டுள்ளார். அவருடைய ராஜாங்க அமைச்சர் இல்லாதவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்?
ஈராக், அப்கானிஸ்தான், லிபியா இன்று சிரியா இப்படியே இந்த மேற்குலகம் கொலைக்களமாக்கிய நாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏராளம்! ஏராளம்!! யார், யாரிடம் எல்லாம் போய் நீதி கேட்பது என்ற விவஸ்தையே இல்லாமல் இன்னும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்துத் தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் அரசியல் ஈனமாகிப் போய்க் கிடக்கின்றது.
இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க படைகள் வன்னியில் உள்ள மக்களை மீட்கப் போவதாக ஒரு செய்தி அந்நேரத்தில் கசிந்தது. அவர்கள் எவ்வளவு தூரம் சாத்தியப்பட்டு இருக்கும் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இச்செய்தி வெளியானதும் அமெரிக்காவில் உள்ள பேர்ள் என்ற தமிழர் அமைப்பு வன்னி எங்களின் சொந்த மண் அந்த மண்ணில் இருந்து மக்களை மீட்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டது. அதற்குக் காரணம் வன்னி யுத்தகளத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட்டால் – போராட்டத்தின் மண் மூட்டைகள் – பாதுகாப்பு அரண் – அடுத்த சில மணிநேரங்களிலேயே யுத்தம் முடிவுக்கு வந்துவிடும். போராட்டத்தை வைத்து சர்வதேச நாடுகளில் தாங்கள் வியாபாரம் செய்ய முடியாது. அதற்காகவே இந்த வெளிநாட்டு சரகு புலிகள் குரல்கொடுத்து வந்தனர். அன்று வன்னிமக்களை கொல்லக்கொடுத்து சூறையாடிய பணத்தில் இன்று பகட்டு வாழ்க்கை வாழ்கின்றனர். அதில் கொஞ்சத்தை வீசியெறிந்து இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கின்றோம் என்று உலாவிக்கொண்டு திரிகின்றனர்.
லங்கன் பிரிமியர் லீகில் விளையாடவுள்ள அணிகளில் ஒன்றான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம்(26.10.2020) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் இணைப்பாளர் G.வாகிசேன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று வீரர்களின் அறிமுகமும் இடம்பெற்றிருந்தது. யாழ்.பரியோவான் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரியின் வீரர்களான வி.வியஸ்காந்த், தி.டினோஷன் மற்றும் க.கபில்ராஜ் ஆகியோரே அணியில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் , யாழ் கிரிக்கெட் சம்மேளன தலைவர் நிசாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரேஸில் நாட்டில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த 28 வயதுடைய தன்னார்வளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேஸில் அரசோ, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேஸில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
















