May

May

ஈ.வி.கே.எஸ். : மன்னிப்புகேட்க 48 மணி நேர கெடு: இளந்தமிழர் இயக்கத்தினர்

semaan.jpg ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது, ‘’பெரியாரின் உண்மையான பேரன் என்று சீமான் தன்னை சொல்லிவருகிறார். உண்மையில் நான் தான் உண்மையான பேரன். சீமான் அவர் தான் உண்மையான பேரன் என்று அப்படி சொல்வதை பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் செய்த தவறு போலிருக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது’’என்று பேசினார்.

இளங்கோவனின் இத்தகைய பேச்சால் இளந்தமிழர் இயக்கத்தினர் கொந்தளித்து போய்விட்டார்கள். இந்த இயக்கத்தின் அமைப்பாளர் செந்தமிழன், ‘’பெரியாரை கொச்சைப்படுத்திய இளங்கோவன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை யென்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்’’ என்று அறிவித்துள்ளார். இதனால் போலீசார் இளந்தமிழர் இயக்கத்தினரை வலைவீசி தேடி கைதுசெய்துவருகின்றனர். ‘’கைது செய்தாலும் மிச்சம் இருப்போர் முற்றுகையிடுவோம்’’என்று மீண்டும் அறிவித்துள்ளார் செந்தமிழன்.

மனித நேயமிக்க அமைப்பாக திகழும் செஞ்சிலுவை செம்பிறைச் சங்கம்- புன்னியாமீன்

world-red-cross-and-red-crescent-day.jpgஇன்று மே 08ஆம் திகதி. உலக செஞ்சிலுவை – செம்பிறை  (World Red Cross and Red Crescent Day) தினமாகும்.

உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படைவோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன. செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் என்பன பெயரில் ஒரு வித்தியாசத்தைக் காட்டி நின்றாலும் கூட, அடிப்படையில் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்னெடுப்பவைகளே. குறிப்பாக அரபுலக நாடுகளி;ல் சிலுவை எனும் குறியீட்டுக்கும்,  வார்த்தைப்பதத்திற்கும் பதிலாக பிறை எனும் குறியீடும்,  வார்த்தைப்பதமும் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளினூடாக இந்த அமைப்புகள் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக செஞ்சிலுவை – செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருள் யுத்தங்களினாலும் அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன,  மத,  மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும்.

இச்சங்கத்தின் ஸ்தாபகரான ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் திகதி அம்மனிதாபிமான மிக்க மனிதப் புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகத்தோர் அனுஷ்டிக்கின்றனர்.

ஜெனீவாவில் பக்தியும் கருணையும் குடிகொண்டிருந்த குடும்பமொன்றில் 1828ம் ஆண்டு மே மாதம் 08ம் திகதி ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்தார். தனது பெற்றோரிடமிருந்து கற்ற அனுபவங்கள் காரணமாக சிறுபராயத்திலிருந்தே சமூக சேவைகளில் ஆர்வமிக்கவராக விளங்கினார்.  சிறிய பராயத்திலே அயலவர் படும் இன்னல் கண்டு வேதனையுற்றார். சிறைக் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனம் நொந்தார். சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார். பின்னர் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார்.

1859 ஜுன் 25இல் அவர் வட இத்தாலிக்குச் சென்றபோது அங்கு சோல்பரினோ யுத்தம் நடைபெற்றிருந்தது. ஆஸ்திரிய, பிரான்ஸிய,  இத்தாலிய படைகளின் 3 லட்சம் பேர் 16 மணித்தியாலயங்கள் போரிட்டதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். இவ்வாறு குற்றுயிராய்க் கிடந்தவர்களிடத்தே எத்தரப்பினரும் அக்கறை காட்டவில்லை. இந்தக் காட்சி டியூனண்ட்டின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. ஊரவர் உதவியுடன் காயப்பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி  சிகிச்சையளித்தார். பகை நிரம்பிய அச்சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக அமைந்தது.

பின்பு ஜெனீவா திரும்பிய டியூனண்ட் ‘சோல்பரினோ நினைவுகள்|| என்ற நூலை எழுதினார். இந்நூலில் அவர் மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வினையடுத்து நாடு நாடாகச் சென்று யுத்தகளப் பணிகள் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார். பிற்காலத்தில் வறுமையின் பிடியில் அவர் சிக்கினாலும் ஈற்றில் நோபல் பரிசுக்குரியவரானார். 1910 ஒக்டோபர் 30இல் உயிர் நீத்த ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது

1863ல் போர் நிவாரணப் பணிகளில் ஈடுபபட்ட தொண்டர்களை இனங்காட்டுவதற்காக வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவைச் சின்னம் தெரிவு செய்யப்பட்டது. 1864ல் ஐவர் அடங்கிய குழுவொன்றினால் ஜெனிவாவில் மாநாடொன்று இடம் பெற்றது. இம்மகாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களே ஜெனீவா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மனிதனையும் அவரின் பெருந்தன்மைகளையும் கெளரவிக்கவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதில் தரையில் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது கப்பல் உடைந்ததால் பாதிக்கப்பட்ட ஆயுதந்தரித்தோரைக் காப்பாற்றல் யுத்தக் கைதிகளைப் பாதுகாத்தல் பொதுமக்களைக் காத்தல் சர்வதேச ஆயுத மோதல்களினாலும் உள்நாட்டில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டோரை பாதுகாத்தல் என்பன ஜெனீவா சாசனத்தில் காணப்படுகிறது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம்.

1934 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.

செஞ்சிலுவை,  செம்பிறை இயக்கம் உலகிலேயே மிக விரிவாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ சமயத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்துள்ளமையினால் இஸ்லாமிய நாடுகளில் அதன் சின்னம் செம்பிறையாகக் கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் யுத்தங்களினால் காயமுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளன. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு பிரதான கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

01. மனிதாபிமானம்
02. பாரபட்சமின்மை
03. நடுநிலைமை
04. சுதந்திரத் தன்மை
05. தொண்டு புரிதல்
06. ஒற்றுமை
07. சர்வவியாபகத் தன்மை என்பனவே அவை.

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன,  மத, மொழி,  பிரதேச பேதமின்றி இவ்வியக்கம் அன்புக்கரம் நீட்டி உதவுகின்றது. முரண்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் எத்தரப்பினரையும் சாராது,  அரசியல் வேறுபாடுகளில் அக்கறை காட்டாது,  நடுநிலைமையுடனும்,  சுதந்திரத்துடனும் இது செயற்பட்டு வருகின்றது. அதேவேளை அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டே கருமமாற்றுகிறது.

1936ல் இலங்கை மக்களைத் தாக்கிய மலேரியா மற்றும் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்தவென இலங்கை அரசுக்கு உதவிபுரியும் வண்ணம் பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் மத்திய கிளையொன்று இலங்கையில் அமைக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இக்கிளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமென மாறியது. 1952ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் இலங்கை இணைந்து கொண்டது.

ஆரம்பத்தில் இரத்ததானம் முதற்சிகிச்சை முதலுதவிக்கான பயிற்சி வழங்கல்,  நடமாடும் சுகாதார சேவை வழங்கல் விபத்துக்குள்ளானவர்களுக்கு உணவு உடை,  உறையுள் என்பவற்றை வழங்கல். வரட்சி, வெள்ளப் பெருக்கு, யுத்தம் குண்டு வெடிப்பு, வரட்சிக்கு முகம் கொடுப்பதற்கான பயிற்சிகள், போன்ற சேவைகளை வழங்கியது.

இலங்கையில் வடக்குப் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் இது முன்னின்று செயற்படுகின்றது. போரின் நிமித்தம் சிறைபட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடல், தடுப்புக் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்வையிடல்,  எதிர்த்தரப்பினரின் தடுப்புக் காவலிலுள்ள இராணுவத்தினரையும், பொதுமக்களையும் பார்வையிடல்,  காணாமற்போகும் நபர்களைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் அக்கறை காட்டுதல்,   யுத்தப் பிரதேசத்திலுள்ளவர்களை அழைத்து வருதல்,  குடும்பச் செய்திகளைப் பராமாறுதல் போன்றவற்றுடன் இரு தரப்பினரிடையே சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் எடுத்துச் செல்லல்,  நோயாளிகளுக்குப் போக்குவரத்து வசதியளித்தல், தொழில் மீட்சிக்கு உதவுதல்,  மருத்துவ உதவி வழங்கல் தற்காலிக கூடரங்களை அமைத்தல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சம்மேளனம் அதன் அனுபவத்தையும் சர்வதேச அமைப்புகளின் அனுபவமிக்க தொண்டர்களையும் இலங்கையில் நீண்டகால சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. எனினும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் இத் தொண்டர்கள் பாதிப்புக்குள்ளாகியமையும் நோக்கத்தக்கது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் சேவைகள் அண்மைக்காலத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போதைய யுத்த நிலையில் மேற்கொண்டு வரும் சேவைகள் எமக்கு கண்கூடான உதாரணங்களாகும்.

ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும்!!! : பா.நடேசன்

nadesan-10.jpgவிடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘த வீக்’ ஆங்கில இதழுக்கு வழங்கிய பேட்டியில்….

இலங்கையின் தற்போதைய நிலமையில் இந்திய தேர்தலின் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் – ஈழத் தமிழ் மக்கள் இந்திய மக்களின் மிக நெருங்கிய நண்பர்களே. யார் ஆட்சி அமைத்தாலும் இது உறவு  எப்போதுமே இப்படித்தான் இருக்கும்.

ஆனால் தற்போது வன்னியில் எற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை இன்றைய இந்திய மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையானது.

இதற்கிடையில் – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இராணுவ ஒத்துழைப்பு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருணாநிதியின் வாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தான் தமிழீழ மக்களின் நம்பிக்கையும், பலமும். தமிழக மக்கள் இதனை நன்கே அறிவார்கள். காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் தமிழின அழிப்பு போருக்கு உதவி வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எதிர்வரும் மே 13 ஆம் நாள் நடைபெறப்போகும் தேர்தலில் ஈழத்தமிழ் மக்களோடு தாம் சேர்ந்திருக்கும் செய்தியை தமிழக மக்கள் தெளிவாகத் தெரிவிப்பார்கள் என்பது எனது வலுவான நம்பிக்கை. தனி ஈழம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என செல்வி ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உங்களின் பார்வை என்ன?

இதனைத்தான் ஈழத் தமிழ் மக்களும் உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் கேட்பதற்கு வேண்டி நின்றார்கள். தற்போது ஜெயலலிதா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும். அதாவது,  ஈழத் தமிழ் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பதே அந்த தகவல்.

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

ஈழத் தமிழ் மக்கள் சந்தித்துவரும் அழிவுகள் கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகின்றன. தி.மு.க.வும்,  கலைஞர் கருணாநிதியும் தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் தான்.

ஆனால், அறிக்கைகளும், பேச்சுக்களும், தேர்தல் வாக்குறுதிகளும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்துவிடவில்லை. இதுவரை காலத்தில் –  தன்னால் ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்திருக்க முடியும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

யுத்தநிறுத்த அழைப்போ, விசேட தூதுவரை அனுப்பும் சிந்தனையோ பான் கீ மூனுக்கு இப்போதும் இல்லை – இன்னர்சிற்றி பிரஸ்

UN_Logoஐ.நா:  இலங்கையில் ஆயிரக்ககணக்கில் பலியான பொது மக்களை ஐ.நா. எண்ணிக்கொண்டிருக்கும் அதேசமயம், செயலாளர் நாயகம் பான் கீ மூன் இப்போதும் யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்கவோ அல்லது மோதல் தொடர்பாக விசேட தூதுவர் ஒருவரை அனுப்புவதற்கான ஆயத்தத்தில் ஈடுபடவோ இல்லை என்று ஐ.நா. விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் விமர்சித்திருக்கிறது.

உதாரணமாக மோதல் சூன்யப் பகுதியென சொல்லப்படும் இடத்தில் உள்ள குண்டு வீழ்ந்த குழிகள் தொடர்பான செய்மதி புகைப்படங்களையும் இழப்புகளின் எண்ணிக்கையையும் வெளியிட ஐ.நா. ஏன் அனுமதி வழங்காமல் வைத்திருக்கின்றது என்று இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு மூன்று நிமிடங்கள் அளித்த பதிலில்; “நிலுவையாக இருக்கும் சகல விடயங்களையும் உள்ளடக்கிய நீண்ட தொலைபேசி உரையாடல் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இடம்பெற்றது என்று பான் கி மூன் கூறியிருப்பதாக 5 மே 2009 திகதியிடப்பட்ட இன்னர் சிற்றி பிரஸின் செய்தி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் எவையும் யுத்த நிறுத்த அழைப்பை உள்ளடக்கியிருக்கவில்லை. “மனிதாபிமான இடைநிறுத்தம்’ என்ற கோரிக்கையுடன் தனது வேண்டுகோளை பான் கி மூன் மட்டுப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இன்னர் சிற்றி பிரஸுக்கு கசிந்து செல்லும் வரை இழப்புகள் தொகையை வெளியிடாமல் ஐ.நா. வைத்திருந்தது ஏன் என்பது பற்றியோ அல்லது காஸா மோதலின் போது பகிரங்கமாக வெளியிடப்பட்டது போன்ற செய்மதிப் படங்களை யூனோசற்றானது தற்போதும் பகிரங்கமாக வெளியிட மறுப்பது ஏன் என்பது தொடர்பாகவோ, பான் கீ மூன் செவ்வாய்க்கிழமை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இன்னர் சிற்றி பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

அதேவேளை, கடந்த ஏப்ரலின் இறுதிப் பகுதியில், கடந்த மாத ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தலைவரான மெக்சிக்கோ தூதுவர் கிளாடி நெல்லர், இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் கூடிய விசேட தூதுவர் ஒருவரை அனுப்புமாறு பான் கி மூனை கேட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன. மூடிய கதவுக்குள்ளான கூட்டத்தின் போது அவர் இதனை கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது அது தொடர்பாக பான் கி மூன் சிந்திக்கின்றாரா என்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.

“அதனை பின்னர் நாம் கலந்தாராய முடியும்’ என்று பான் கி மூன் பதிலளித்துள்ளார்.

பிறகு என்று அவர் கூறுவதன் அர்த்தமானது மோதல் வலயத்தில் இறுதி “தீர்வு’ என்று சிலர் கூறுவதன் பின்னரா அல்லது ஒரு நாளின் பின்னரா அல்லது ஒரு வாரத்தின் பின்னரா? என்பது குறித்து தெளிவில்லாமல் இருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக அல்லது குறிப்பிட்ட ஒரு தடவையாக தனது தலைமை அதிகாரி விஜே நம்பியாரை தூதுவராக பான் கி மூன் அனுப்பியிருந்தார்.

இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பான் கி மூன் அளித்த பதிலை ஐ.நா. அதற்கு வழங்கியிருந்தது. அவை வருமாறு;

இன்னர் சிற்றி பிரஸ்: செயலாளர் நாயகம் அவர்களே! இலங்கை ஜனாதிபதிக்கு நாங்கள் விடுத்த அழைப்புகளை நான் மெச்சுகிறேன். ஐ.நா.வின் நோக்கம் மற்றும் அங்குள்ள பொது மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக சில கேள்விகள் எழுந்துள்ளன. மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்றால், உதாரணமாக, ஐ.நா.வானது பொது மக்கள் இழப்புகள் தொடர்பான புள்ளி விபரத்தை சேகரித்தது. ஆனால், வெளியிடப்படவில்லை. அண்மையில் யூனோசற் அமைப்பின் செய்மதிமூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் காஸா, சூடான் போன்று அல்லாமல் அவை வெளியிடப்படவில்லை.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் ஐ.நா. ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கு (ஐ.நா.வில்) கேள்வி எழுப்பப்படும்வரை எதுவும் கூறப்படவில்லை. நாட்டின் வட பகுதியிலிருந்து அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகள் வெளியேற்றப்பட்ட போதும் எதுவும் கூறப்படவில்லை. ஏன் யுத்த நிறுத்தத்துக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்றும் மனிதாபிமான இடைநிறுத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டீர்கள் ஏன் என்பதும் குறித்து மக்கள் ஆச்சரியமடைந்தது ஏன் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

நம்பியார் சென்றார், மனிதாபிமான மதிப்பீட்டுக் குழுவை அனுமதிப்பதற்கான உறுதிப்பாடு இருப்பதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். நீண்ட பட்டியலை முன்வைக்கிறேன் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. இந்த மோதல் ஏன் வேறுபடுத்தப்படுகின்றது?

உண்மையில நீங்கள் யுத்த நிறுத்த அழைப்பை விடுக்கிறீர்களா? ஐ.நா. பாதுகாப்பு சபை இதனை விவாதிக்க முடியாவிடில் நீங்கள் சரத்து 99 ஐ பயன்படுத்தக் கூடுமா? அங்குள்ள பொது மக்கள் தொடர்பான உங்கள் கருத்து என்ன? வானத்திலிருந்து குண்டு வீச்சை எதிர்கொண்டுள்ள மக்கள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? மனிதாபிமான அடிப்படையில் நோக்கினால், நிச்சயமாக காஸா மற்றும் டார்பரின் நிலைவரம் தொடர்பாக தாங்கள் வேறுபட்ட முறையில் செயற்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது.

பான் கீ மூன்: இன்று காலை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடினேன். நிலுவையாக உள்ள சகல விடயங்களும் பேசப்பட்டன. சர்வதேச சமூகத்தின் முன்னுரிமைப் பட்டியலில் இலங்கை விவகாரம் உள்ளது. ஜனாதிபதியுடனான உரையாடலில் தற்போது மோதல் வலயத்தில் சிக்கியுள்ள பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பேசினோம்.ஐ.நா. குழு , ஐ.சி.ஆர்.சி.யூடாக மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து முயற்சிக்கிறோம். தற்போது அவர்களுக்கு வழங்கப்படுவது போதாது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐ.நா.ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பு: ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதில் தலைப்புச் செய்தியான “நிலைமையை நேரில் அறிய வருகைதருமாறு ஐ.நா. செயலாளருக்கு ஜனாதிபதி அழைப்பு’ என்ற செய்தியில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இன்னர்சிற்றி பிரஸ்: தூதுவர் ஒருவரை அனுப்புவது பற்றி சிந்தித்துள்ளீர்களா?

பான் கீ மூன்: அதனை பிறகு ஆராய்வோம்.

வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

Part_Of_the_Audienceமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Little Aid – லிற்றில் எய்ட்

மேலும் Little Aid – லிற்றில் எய்ட் என்ற உதவி அமைப்பு தேசம்நெற் நண்பர்களால் உருவாக்கப்பட்டு உள்ளது. ஈழத்தமிழ் மக்களின் வரலாறு காணாத இந்த அவலத்தில் சிக்குண்ட மக்களுக்கு முடிந்த அளவிலான சிறிய உதவிகளைச் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு பிரித்தானியாவின் பொதுஸ்தாபன ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. இவ்வுதவி அமைப்பிற்கான வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவ்விபரங்கள் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

‘மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி’ என்ற தலைப்பிலான சந்திப்பு மே 2ல் லண்டன் புறநகர்ப் பகுதியான சறேயில் இடம்பெற்றது. தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் வன்னி மக்களை நோக்கி தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டிய பலரும் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் பலரும் பல்வேறு கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும் மக்களுக்கான அவசர உதவிகளைச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தனர். இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை பாதுகாத்து ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தவறி இருப்பதாகத் தெரிவித்த நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பைச் சரிவரச் செய்வதற்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இக்கருத்தை சந்திப்பில் கலந்துகொண்ட பலரும் வலியுறுத்தினர்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் நேரடியான உதவிகளை முடிந்த அளவு செய்வதுடன் முக்கியமாக என்ஜிஓ க்களுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிர்வாகம் அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எவ்வாறான நிவாரணப் பணிகளும் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது என்பதும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வன்னி மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வெளியே வருகையில் இலங்கை அரசு அவர்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு கம்பி வேலிக்குள் அடைத்து வைப்பதாக ஆர் புதியவன், சந்திப்பினை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார். தங்கள் வளர்ப்பு விலங்குகளைக் கூட கம்பி வேலிக்குள் அடைக்காத மக்களை அரசு கம்பி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தாங்கள் பின்வாங்கிச் சென்ற இடங்களில் எல்லாம் மக்களை விட்டுவிட்டுச் செல்லாமல் ஆடு மாடுகள் போல் அவர்களையும் சாய்த்துக் கொண்டு சென்று இன்று தங்கள் தலைமையைப் பாதுகாக்க பணயம் வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டிய ஆர் புதியவன் அவர்களுக்கு புதுமாத்தளன் தான் பூர்வீக மண் என்று கதையளப்பதாகத் தெரிவித்தார். அடங்கா மண் வணங்கா மண் என்று புலத்தில் சேர்த்தெல்லாம் எங்கே? என்று கேள்வி எழுப்பிய ஆர் புதியவன் அரசாங்கத்தின் நலன்புரி முகாம்களில் செல்விழமாட்டாது என்ற ஒரே உத்தரவாதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். கம்பி வேலிக்குள் மாளிகையைக் கட்டி குடியேற்றினாலுமே அது ஒடுக்குமுறையின் குறியீடே என்று தெரிவித்த ஆர் புதியவன் அரசாங்கத்தின் வன்னி நலன்புரி முகாம்கள் படுமோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவித்தார்.

Paul_Sathyanesanஆர் புதியவனைத் தொடர்ந்து நியூஹாம் துணைமேயர் போல் சத்தியநேசன் உரையாற்றும் போது ‘இந்த மக்களுடைய அவலம் இரு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் மக்களுக்கு பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் வழங்க வேண்டிய அரசாங்கம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது. இந்த மக்களை கௌரவமாகப் பராமரித்து அவர்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது அதனை இலங்கை அரசு தட்டிக்கழிக்க முடியாது’ என்று குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘மிகப்பெரிய அவலம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு உணர்வு ரீதியான பொறுப்பும் கடமையும் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்ததை உடனடியாகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களது உதவி ஒரு சிறிய அளவினதாகவே இருக்கும்’ என்று தெரிவித்தார். அதனால் ‘என்ஜிஓ க்களை அரச நிறுவனங்களைச் சந்தித்து அவர்களை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிய செயற்திட்டங்களை இயக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். சுனாமி காலகட்டத்தின் போதும் தேசம் சஞ்சிகை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

துணைமேயருடைய உரையை அடுத்து நிகழ்வில் கலங்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

அண்மையில் இலங்கை சென்று வன்னி முகாம்களைப் பார்வையிட்டுத் திரும்பிய எஸ் சூரியசேகரம் கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் சென்று பார்வையிட்ட முகாம்கள் குறிப்பிடத்தக்க அளவு வசதிகளுடனேயே இருந்ததாகவும் ஆனால் அண்மையில் மேலும் ஒரு லட்சம் மக்கள் அதிகரித்து இருப்பதால் நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார். அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மிகவும் அணுகக் கூடியவர் என்று தெரிவித்த சூரியசேகரம் நிவாரணப் பணிகள் அவர்களுக்கூடாக செய்யப்படுவது தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்தார். இதே கருத்தை வெளிப்படுத்திய இலங்கைக்கு விஜயம் செய்த குழுவிலும் இடம்பெற்றிருந்த ரி கொன்ஸ்ரன்ரைன் புலத்தில் உள்ளவர்கள் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அம்மக்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்த கொன்ஸ்ரன்ரைன் புலம்பெயர்ந்த சமூகம் அவர்களது வாழ்நிலையை மேம்படுத்த இயலுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

‘இலங்கை அரசாங்கம் ஒரு இனவாத அரசாங்கம். அது இனப்படுகொலை புரிகிறது. இங்குள்ள நீங்கள் அதனைச் சொல்லத் தயாராக இல்லை.’ என்று குற்றம்சாட்டிய சபா நாவலன் ‘அங்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இனவாத அரசு உங்களை அதற்கு அனுமதிக்காது. அப்படி எதாவது செய்வதாக இருந்தாலும் அதனை கைக்கூலிகளாக இருந்தே செய்ய முடியும்’ எனத் தெரிவித்தார். சபா நாவலன் தொடர்ந்தும் பேசுகையில், ‘ஏசியன் டெவலொப்மன்ற் பாங்க் போன்ற பல்வேறு என்ஜிஓ க்கள் மூட்டைமூட்டையாக பணத்தைக் கொண்டு அலைகிறார்கள். ஆனால் இனவாத அரசாங்கம் அவர்கள் யாரையும் அந்த முகாம்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ‘இனவாத அரசாங்கம் மக்களை அடைத்து வைக்கிறது. அவர்களுக்கு இப்ப புத்தகம் கொடுக்கிறம் என்றதெல்லாம் எப்படிப் போகும் எப்படிப் பயனளிக்கும்’ என்றும் சந்தேகம் எழுப்பினார்.

David_Jeyam‘இன்று ஏற்பட்டுள்ள நிலைமை அரசியல் சார்ந்ததாக இருந்தாலும் நாங்கள் இங்கு அரசியல் விவாதம் ஒன்றை நடத்த விரவில்லை. அவலத்திற்கு உள்ளான மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியே பேச வந்துள்ளோம்.’ என்று தனது கருத்தை வெளியிட்டார் டேவிட் ஜெயம். இவர் வன்னி நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கருத்தைப் பலரும் பிரதிபலித்தனர்.

அதே கருத்தை வெளியிட்ட எஸ் முருகையா முடிந்த அளவில் சிறிய அளவில் செய்யப்படும் உடனடி உதவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். தேசம்நெற் மேற்கொண்டுள்ள நூல் அன்பளிப்பு போன்றவை மிகுந்த பலனளிக்கும் என்று குறிப்பிட்ட முருகையா சூரியசேகரம் அவர்களிடம் முகாமில் இருந்த மாணவர்கள் புத்தகம் தரும்படி கேட்டதை அங்கு சுட்டிக்காட்டினார்.

‘போருக்கு உதவி புரிந்த புலத்து தமிழர்கள் வன்னி மக்கள் உதவியைக் கேட்கும் போது செய்யத் தயாரில்லாதவர்களாக உள்ளனர்’ எனக் குற்றம்சாட்டினார் ரி சோதிலிங்கம். ‘இன்று புலத்துதமிழர்கள் யுத்த முனையில் இருந்து உயிர்காக்க ஓடி வந்த மக்களை துரோகிகளாகப் பார்க்கின்றனர். இந்த மக்கள் பற்றிப் பேசுவது அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளாமல் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் பற்றிக் கதைப்பது அர்த்தமற்றது’ என்றும் குறிப்பிட்ட சோதிலிங்கம் ‘ஒரு செயற்குழு உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட வேண்டும்’ என்றும் கூறினார்.

இதே கருத்தை ஆதரித்த ஈசன் அரசாங்க அதிபருக்கு ஊடாகவோ எவ்வகையிலோ உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறூத்திய அவர் இலங்கை அரசாங்கம் முகாம்களை சர்வதேச தரத்தில் வைத்திருக்கவில்லை என்றும் முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாயும் குற்றம்சாட்டினார். உடனடி உதவிகள் உடனடியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

‘நீங்கள் உதவிகளைப் பெற்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறீரகள். ஆனால் ஏற்கனவே சேர்க்கப்பட்ட பொருட்கள் வணங்கா மண் கப்பலில் உள்ளது. நீங்கள் ஏன் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பினார் எஸ் ஆர் நிஸ்தார் மொகமட். ‘வணங்கா மண் ஏற்பாட்டாளர்களுடன் கதைத்து இலங்கை அரசாங்கத்துடனும் கதைத்து அந்தக் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா இஸ்லாமிக் போறத்தைச் சார்ந்த மஹ்சூர் தனது கருத்தை வெளியிடுகையில் இஸ்லாமிக் போறம் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் ‘பல்வேறு பிரிவுகளாக அல்லாமல் இணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாகச் செயற்பட முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். தவறான நோக்கங்களுக்காக இருந்தாலும் எல்ரிரிஈ இன்று ஒற்றுமைப்பட்டு அவர்களுடைய போராட்டத்தை உயிரோட்டமாக வைத்துள்ளது’ என்று குறிப்பிட்ட அவர் ‘ஒன்றிணைந்து செயற்பட நாமும் முன்வர வேண்டும்’ என வலியுறுத்தினார்.

‘வன்னி மக்களுடைய இந்த அவலத்திற்கு இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள்’ என்று தன் கருத்தை வெளியிட்ட த ஜெயபாலன் ‘இலங்கை அரசு இனவாத அரசு என்பதும் அது இவ்வாறுதான் நடந்த கொள்ளும் என்பதும் 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் கண்ட அனுபவம். அது பற்றி தமிழ் மக்களுக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய அவல நிலைக்கு இரு தரப்பினருமே பொறுப்பு’ என்று ஜெயபாலன் குற்றம்சாட்டினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ஒரு பொட்டலத்திற்காக எத்தினை கைகள் போட்டி போடுகின்ற நிலையை நாம் உருவாக்கி விட்டுள்ளோம். அந்தக் கைகளில் ஒன்று எம் குழந்தைகளாக இருந்தால் நாம் தாங்குவோமா?’ என்று கேள்வி எழுப்பிய அவர் போராட்டம் தத்துவம் பற்றி நாம் இங்கிருந்து நாட்கணக்கில் கதையளக்கலாம் ஆனால் அந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘நாம் நமது பிள்ளைகளுக்கு தனியார் கல்வி, கிரம்மர் ஸ்கூல் என்றெல்லாம் நேரமில்லாமல் ஓடித் திரிகிறோம். ஆனால் அந்த முகாமில் உள்ள மாணவர்களுக்கு அடிப்படைக் கல்விக்கு எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதற்காக தேசம்நெற்றும் சிந்தனை வட்டமும் இணைந்து புலமைப்பரிசில் நூல்களை முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது எமக்கு ஏற்பட்டுள்ள குற்ற உணர்வினைக் களையவும் ஒரு வடிகாலாகிறது எனத் தெரிவித்தார் ஜெயபாலன். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘அம்மக்களுடைய தேவைகள் மிக அதிகம் அதனை ஒரு தனி அமைப்பாகவோ ஒரு சிலராலோ செய்துவிட முடியாது. அதனால் இயலுமானவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை தாங்கள் அறிந்த வழிகளில் உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக ஒரே கொடியின் கீழ் என்பதெல்லாம் யதார்த்தமற்றது’ என்றும் தெரிவித்தார். ‘முதலில் வன்னி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.’ என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்தார் ஜெயபாலன்.

Varathakumar_TICஇறுதியாகக் கருத்து வெளியிட்ட தமிழர் தகவல் நடுவத் தலைவர் வரதகுமார், ‘இன்று ஏற்பட்டுள்ள அவலநிலை அரசினாலேயே கையாள இயலாதநிலையில் உள்ளது. தற்போது பெரும்பாலான என்ஜிஓ க்கள் வவுனியா முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்கின்றனர்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘இன்றைய இவ்வாறான சந்திப்பு மிகவும் அவசியமானது என்றும் புலம்பெயர்ந்தவர்கள் உடனடி உதவிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். தேசம்நெற் ஊடகம் என்ற வகையில் இம்மக்கள் தொடர்பாக முக்கிய பொறுப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த வரதகுமார் ‘அங்குள்ள மனித உரிமை விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ‘அந்த மக்கள் கைவிடப்பட்ட மக்கள். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டக் கூடியவர்கள் புலம்பெயர்ந்த மக்களே’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சந்திப்பின் இறுதியில் அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான குழுவொன்றை அமைப்பது என்றும் அதற்கான சந்திப்பினை அடுத்த இரு வாரங்களிற்குள் தேசம்நெற் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவுக்கூட்டம்

Kalaichelvan கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல் மே 10ல் பரிசில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இவ்வொன்றுகூடலை உயிர்நிழல் சஞ்சிகை ஏற்பாடு செய்து உள்ளது. பாரிஸில் இருந்து நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இலக்கிய சஞ்சிகை இது என்பதும் இது காலஞ்சென்ற கலைச்செல்வனால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வொன்றுகூடல் நிகழ்வில் கலைச்செல்வனின் நண்பர்கள் தோழர்கள் உறவுகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர். காலை 11:00 முதல் மாலை 7:00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்:

11:00 – துன்பம் சூழும் நேரம்: இலங்கை – இந்திய உறவுகளும் ஈழத்தமிழரும் – மு. நித்தியானந்தன்

12:30 – மதிய உணவு

13:30 – யாழ்ப்பாணத்து சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் – ச. தில்லைநடேசன்

14:30 – MEDIA & DEMOCRACY – காமினி வியாங்கொட

16:00 தேனீர் இடைவேளை

17:00 – கோணல்களும் நேர்கோடுகளும் – இலங்கையில் இனப்பிரச்சினை வி. சிவலிங்கம்

17:30 – திறந்த விவாதம்: இலங்கையில் இன்றைய யுத்த சூழலும் எதிர்நோக்கும் சவால்களும்

காலம்:
10.05.2009 ஞாயிற்றுக்கிழமை

மண்டபம்:
Salle Heindenhein
1er étage
6, Place du Marché du centre
92110 Clichy

“லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. – அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா

parliament-of-sri-lanka.jpgஇலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி, இந்தியாவையும் இரண்டாக பிளவுபடுத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே பீலிக்ஸ் பெரேரா இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். ஆனால் வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், சிங்கள மக்களுமே அம் மக்களுக்கு உதவி வருகின்றனர்.  இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அப்பாவித் தமிழ் மக்களுக்காக செயற்படாமல், பயங்கரவாதிகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே, இனியாவது தமிழ் மக்களுக்கு ஏதேனும் உதவிகளை செய்ய வேண்டுமெனில் இப்போதாவது ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.  தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவராக ஜனாதிபதியே இருக்கிறார். அதற்கு அப்பாலான உண்மை எதுவும் கிடையாது.

இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி பின்னர் இந்தியாவையும் இரண்டாக பிளவுபடுத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சி ஜனாதிபதியினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  இது வரலாற்றில் எழுதப்படும். இதேநேரம், கனரக ஆயுத பாவனை நிறுத்தம் தொடர்பாக ஐ.தே.க. எம்.பி.யான பாலித ரங்க பண்டார வெளியிட்ட கருத்து சர்வதேச சமூகத்தை குழப்புவதற்கு கூறியதாகும். எனினும் எமது படையினர் அப்படி செயற்படமாட்டார்கள் என்றார்.

பட்டினிச் சாவிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – உலக நாடுகளுக்கு புலிகள் கோரிக்கை

lttelogo.jpgவன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை இலங்கை அரசு தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு உலக நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களுக்கான உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளைத் திட்டமிட்ட முறையில் இலங்கை அரசு தடுத்து வைத்திருப்பதால், பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கும் முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள தமிழர்களுக்காக நேரடியாகவே மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மனிதாபிமான உதவிகள் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

இந்த முயற்சியைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தார்மீக, அரசியல் ஆதரவை அனைத்துலக சமூகம் வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். கடந்த சில நாட்களில் மட்டும் பட்டினியால் ஒன்பது பேர் மரணமடைந்திருப்பதுடன், இவ்வாறு மரணமடைபவர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் பெருமளவுக்கு அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதையும் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

இங்குள்ள 1,65,000 மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலையில் புலம்பெயர்ந்த மக்களுடைய இந்த முயற்சி மிகவும் அவசரமானதாக இருக்கின்றது. இங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் போன்றவற்றை அனுப்பிவைக்குமாறு ஐ.நா.வும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதுடன், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் அனைத்தையும் மீறும் வகையில் இலங்கை அரசு நடந்து கொள்கின்றது.

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு 2,474 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் தேவை என உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டிருந்த போதிலும், 2008 ஏப்ரல் 2 ஆம் நாள் 60 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் விநியோகிக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்குத் உலக உணவுத் திட்டம் தயாராகவிருந்த போதிலும், உணவுப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் அரசினால் தடுக்கப்பட்டது.

இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கத்திடமும், ஏனைய மனிதாபிமான அமைப்புக்களிடமும் விடுதலைப் புலிகள் அமைப்பு வலியுறுத்திய போதிலும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த நிலைமையைக் கவனத்திற்கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

உலக நாடுகளின் அக்கறைகளைக் கவனத்திற்கொள்ளாமல் புறந்தள்ளி, தன்னுடைய இனப்படுகொலை நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து கொண்டிருப்பதற்கு எதிராக உலக நாடுளால் இதுவரையில் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு தடுப்புக்காவல் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களும் வெளிநாட்டு அரசுகளும், விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் உள்ள 1,65,000 மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

எமது மக்கள் உடனடி ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்த நிலைமை காரணமாகத்தான் நேரடியாக மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தூண்டப்பட்டனர். எறிகணை வீச்சுக்களாலும், குண்டு வீச்சுக்களினாலும் அவதிப்படும் எமது மக்களின் நிலை திட்டமிட்ட முறையில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் தடுத்துவைத்திருப்பதால் மேலும் மோசமாகியிருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடங்கியுள்ள இந்தப் பணிக்கு தார்மீக ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்பு ஐ.நா.வுக்கும் உலக நாடுகளுக்கும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ. முரண்பாடுகளின் மொத்த உருவம்-ப.சிதம்பரம்

chitambaram.jpgஅதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா முரண்பாடுகளிம் மொத்த உருவம். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்த அவருடன் நாங்கள் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்குட்பட்ட காரைக்குடியில் பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பல விஷயங்களில் காங்கிரசோடு முரண்படுகிற கட்சியாக இருந்து வருகிறது. அது ஒத்த கருத்துடைய கட்சியாக மாறும் சூழ்நிலை உருவாகும் என்று நான் நம்பவில்லை. அதிமுக மதசார்பற்ற கட்சி என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த கரசேவைக்கு ஆதரவு அளித்தவர்தான் ஜெயலலிதா. நரேந்திர மோடியுடன் நட்பு கொண்டு அவரது பதவி ஏற்பு விழாவுக்கும் சென்று வந்தார்.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து வருவதோடு சிறுபான்மையினரை அச்சுறுத்தும் பொடா சட்டம், கட்டாய மதமாற்ற சட்டம் போன்றவற்றை கொண்டு வந்து சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியவர். இவரை எப்படி மதசார்பற்ற தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி கடந்த 4 வாரமாக அவர் தனது நிலைகளையும், முடிவுகளையும் மாற்றிக்கொண்டே இருக்கிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழும் ஜெயலலிதாவின் நோக்கம் இந்திய அரசை அமைப்பது அல்ல.

தமிழகத்தில் உள்ள திமுக அரசை கவிழ்ப்பது அல்லது கலைப்பதுவுமே ஆகும். இந்த நோக்கத்தோடு செயல்படும் அவரோடு காங்கிரஸ் கட்சிக்கு எப்படி உறவு ஏற்பட முடியும். இதுபோன்ற ஐயங்களை கிளப்பும் ஆதாரமற்ற செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்க இதுவரை 1 87 840 பேர் வந்துள்ளனா – அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் தகவல்

20090424063601srilanka4.jpgபுலிகளின் பிடியில் சிக்கியிருந்த 1 இலட்சத்து 87 ஆயிரத்து 840 பேர் இதுவரை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளதாக அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரத்ன  தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தகவல் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவர்களில் 141492 பேர் 20 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன் ஏனையோர் நான்கு நலன்புரி கிராமங்களில் தங்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 11150 பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் புல்மோடையில் 5663 பேர் தங்கியுள்ளனர்.

புலிகளிடம் தற்போது சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கைகையை திட்டவட்டமாக கூற முடியாவிடினும் மேலும் 20 ஆயிரம் பேர் புலிகளிடம் சிக்கியிருப்பதாக அரசாங்கம் உத்தேசிக்கின்றது. அவர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களை தங்கவைக்க வலயம் நான்கின் ஆயிரம் ஏக்கர் காணியில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு இலட்சம் பேர் வந்தாலும் அதத்னை பேரையும் தங்க வைக்க அரசு தயாராகவுள்ளது.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ள மக்களுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சு மிகப்பாரிய அளவிலான ஒரு சேவையை மேற்கொண்டு வருவதாகவும் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.