Multiple Page/Post

சீனா பயணமாகிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க !

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இந்த பயணத்தின் போது அவர் சீன ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் !

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர்  ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் விசேடமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் பிரதமர் இதன்போது தனது விசேட அவதானத்தை செலுத்தினார்.

அத்துடன் நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கல்வி உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் திட்டம் !

அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை இலங்கை அடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

“சுற்றுலா துறையில் தரத்தை அதிகரிக்க வேண்டும். சுற்றுலாத்துறை தரத்தை அதிகரிப்பதன் மூலம் உயர்தர சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும். சுற்றுலா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, இது நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது.” அவர் கூறினார்.

சுற்றுலா விசாவில் வரும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்த அமைச்சர், சுற்றுலாத் துறையில் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றார்.

தமிழர்கள் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் – வடக்கு கிழக்கில் விரைவில் அதிக தமிழ் பொலிஸார் – உறுதியளித்த அனுர அரசு !

தமிழர்கள் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் – வடக்கு கிழக்கில் விரைவில் அதிக தமிழ் பொலிஸார் – உறுதியளித்த அனுர அரசு !

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு மையத்தை யாழ்ப்பாணத்தில்  திறந்து வைக்கும் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இலங்கையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கு பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது உங்களுக்கு (பொலிஸாருக்கு) ஏதேனும் அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் எனக்குத் தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கில் நிலவும் இதர பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதேவேளை வடக்கு மக்கள் எமக்கு பெற்றுத் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் . கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவையை பெற்றுக் கொடுப்போம் . அதேபோன்று சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய ஒழுக்கமான சமூகத்தையும் உருவாக்க நாம் முன்னிற்போமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சர் ஆனந்த விஜயபால அநுராதபுரம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் ஆட்சியேற்று மிகக்குறுகிய கால இடைவெளியில் தமிழ் மக்களின் நம்பிக்கையை அதிகமாக பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. முன்னைய அரசாங்கங்கள் தங்களது தென்னிலங்கை வாக்கு வங்கிக்காக தமிழர்களின் அடிப்படை நினைவேந்தல் உரிமையை கூட மறுத்துவந்தன. எனினும் என்.பி.பி அரசாங்கம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளை முழுமையாக கடந்த ஆண்டு கார்த்திகை 27ஆம் திகதி வழங்கியிருந்தது. மேலும் இராணுவ தடைகள் பல இடங்களில் அகற்றப்பட்டு வருவதுடன் இராணுவம் பொலிஸாரால் அங்கங்கே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டு வருவது மக்களிடையே தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தேசம் நேர்காணலில் பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துவருகின்றனர். இந்த  நிலையில் மிக நீண்டகாலமாக தமிழர் பகுதிகளில் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் வேண்டும் என்ற வேண்டுகோள் காணப்பட்ட நிலையில் தமிழ்தேசிய கட்சிகள் ஆதரவளித்த நல்லாட்சி அரசாங்கம் தொடங்கி முன்னைய அரசாங்கங்கள் இது தொடர்பில் மௌனம் சாதித்து வந்த நிலையில் தமிழர் பகுதிகளில் தமிழ்பொலிஸ் அதிகாரிகள் தவை என்ற நிலைப்பாட்டை தாம் உணர்ந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமையானது அக்கபூர்வமான அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

“நானும் சிறியும் நீரில்லாத நெடுந்தீவுப் பூர்விகம்! ஆனாலும் இரணைமடுத் தண்ணீர் இரணைமடு விவசாயிகளுக்கே ! யாழ்ப்பாணத்துக்கு அல்ல!”

“நானும் சிறியும் நீரில்லாத நெடுந்தீவுப் பூர்விகம்! ஆனாலும் இரணைமடுத் தண்ணீர் இரணைமடு விவசாயிகளுக்கே ! யாழ்ப்பாணத்துக்கு அல்ல!”
விவசாயிகள் சம்மேளனத் தலைவர் முத்து சிவமோகன்

 

 

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் கோருகிறார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் கோருகிறார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்கிறார்கள் ஆனால் அதற்கு முன்னர் ஐந்தாம் தர பரீட்சையினை ஏன் நடத்தக் காரணம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும் அதற்கு பாடசாலைகளுக்கு மத்தியில் உள்ள வேறுபாடுதான் எனத் தெரிவித்திருந்தார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும்.

பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ மட்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படலாம். இவ்வாறான நிலைமைகளைக் குறைக்கும் வகையில் பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறை இருக்க வேண்டும். முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம், இது அரசியல்வாதியோ, அமைச்சரோ அல்லது செயலாளரோ தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்காக அல்ல, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் பொறிமுறையை அமைக்க முயற்சிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

வைத்தியசாலைகளில் ஊழல் மோசடிகளை தடுக்க புதிய திட்டம் : சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி !

வைத்தியசாலைகளில் ஊழல் மோசடிகளை தடுக்க புதிய திட்டம் : சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி !

நேற்றைய தினம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்தக்கசிவு உயிரணு மாற்று சிகிச்சைப் பிரிவானது சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க வைத்தியசாலையொன்றில் முதலாவதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பிரிவானது ருஹூணு கதிர்காம மகாதேவாலயத்தின் நிதியுதவியானால் கட்டப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் இனிவரும் காலங்களில் வைத்தியசாலைகளின் அனைத்துவிதமான அபிவிருத்திப்பணிகளும் தேசிய திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சால் ஒதுக்கப்படும் நிதிமூலம் மட்டுமே செய்யப்படும். இனிவரும் காலங்களில் அரசியல் நலன்சார்ந்து அல்லது வைத்தியசாலைகளின் குறைபாடுகளைக் கண்டு எழுகின்ற உணர்வெழுச்சியினால் தூண்டப்பட்டோ வைத்தியசாலைகளில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிடும் போது எந்தவொரு கடவுள்களை விடவும் ஏன் கதிர்காம கடவுளின் கருவூலத்தில் இருக்கும் பணத்தை விடவும் அதிக பணம் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 33 கோடிகள் ஒதுக்கப்படுகிறது. மேலும் அமைச்சர் குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் சுகாதார அமைச்சுக்கு அதிகூடிய தொகை தொகுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுவாக எந்த அரசாங்கம் கேட்டாலும் சுகாதார அமைச்சு பணம் கொடுக்கும். சுகாதார அமைச்சானது காலத்திற்கு காலம் வெளிநாட்டு சர்வதேச அமைப்புக்களின் ஆதரவை உள்ளூர் ஆளுநர்கள் மூலமாகவும் நேரடியாகவும் குறிப்பிட்ட காலங்களில் பெறுகிறது. அந்தவகையில் எதிர்காலத்தில் இவை அனைத்தும் ஒரு முறையான திட்டமிடலின் கீழ் செயற்படுத்தப்படும். அடுத்த 20 ஆண்டுகளை நோக்காக கொண்டு இத்திட்டமானது வடிவமைக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் இந்த முடிவு ஊழலை ஏற்படாமல் தடுக்கும் ஓரு பொறிமுறையாக அவதானிகள் கருதுகின்றனர். தன்னிற்ச்சையாக வைத்தியசாலைகள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றபோது இடம்பெற வாய்ப்புள்ள மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் இதன் மூலம் தவிர்க்கப்படும்.

கடந்த வருடம் பெரும் சர்ச்சையாக வெடித்த சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் கூட இவ்விடயம் கவனத்திற்கு வந்திருந்தது. தென்மராட்சி அஅபிவிருத்திக் கழகத்தால் சாவகச்சேரி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவை இயங்க வைக்கவென உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தென்மராட்சி மக்களிடம் பணம் சேகரிகப்பட்டிருந்தது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி பணத்தில் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்தமை போக மிகுதி 23 மில்லியன்களுக்கு என்ன நடந்தது என்ற சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அவசர விபத்துப்பிரிவு சத்திரசிகிச்சை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருந்தமையும் பல ஆண்டுகளாக அப்பிரிவு இயங்காமை தொடர்பான முறைப்பாடுகளை முன்னாள் பதில் சாவகச்சேரி பணிப்பாள் வைத்தியர் அர்ச்சனா இராமநாதன் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து விபத்து மரணங்கள் – புளியம்பொக்கணைக்கு நேரடி விஜயம் செய்த ஆளுநர் வேதநாயகன் !

அடுத்தடுத்து விபத்து மரணங்கள் – புளியம்பொக்கணைக்கு நேரடி விஜயம் செய்த ஆளுநர் வேதநாயகன் !
 ஏ- 35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலமானது அடுத்தடுத்து பல விபத்துக்கள் இடம்பெறும் பகுதியாக உள்ளது. இது தொடர்பில் மக்கள் பல்வேறுபட்ட தரப்பினரிடமும் இந்த பிரச்சினையை கொண்டு போய் சேர்த்தும் தீர்வுகள் எவையுமே மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில், குறித்த பகுதிக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர் வெதநாயகன்,  புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு அறிவுறுத்தினார்.
அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால், பாலத்தினுள் வீழ்ந்து உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அந்த வீதியூடாக  பயணித்த ஆளுநர், இடைநடுவில் புனரமைப்பு நிறுத்தப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டதுடன் அந்தப் பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களும், பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
புனரமைப்பை முன்னெடுத்த ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒப்பந்தகாரரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மார்ச் மாதம் அளவில் புனரமைப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்றும், அதுவரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்படும் எனவும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

யாழில் சட்டவிரோத கடத்தல் – களத்தில் இறங்கி மடக்கிப்பிடித்த பா.உ க.இளங்குமரன் !

யாழில் சட்டவிரோத கடத்தல் – களத்தில் இறங்கி மடக்கிப்பிடித்த பா.உ க.இளங்குமரன் !

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தி மூலமாக சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமாரனுக்கு கிடைக்கப்பெற்றது.

அதனை தொடர்ந்து இளங்குமரன் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது 02-01-2025 இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது, அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் எற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த பாரவூர்தி சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

உலகில் நடந்த மிகப்பெரிய இராசாயன விபத்தின் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

உலகில் நடந்த மிகப்பெரிய இராசாயன விபத்தின் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

அமெரிக்காவின் யூனியன் கார்பைட் (Union Carbide) நிறுவனத்திற்குச் சொந்தமான கிருமி கொல்லி தயாரிக்கும் இந்தியாவின் போபால் (Bhopal) மாநிலத்தில் இருந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயுக் கசிவின் பின் அதன் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமல் அத்தொழிற்சாலையிலேயே உள்ளது. அதனை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக இது இன்றும் உள்ளது.

1984 டிசம்பர் 2 இரவு ஆரம்பமான விசவாயுக் கசிவு மறுநாள் காலையும் தொடர்ந்தது. காற்றில் கலந்த ஐசொசையனைட் வாயு ஓரிரு வாரத்தில் 30,000க்கும் மேற்பட்டவர்களைப் பலியெடுத்தது. இதன் உண்மையான தொகை இதனிலும் அதிகம் என்றே கருதப்படுகின்றது. இப்பகுதியில் பிறக்கின்ற குழந்தைகள் இப்போதும் அதன் தாக்கத்தல் பாதிக்கப்பட்டு குறைபாடுகளுடன் பிறக்கின்றனர்.

இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக கூறிக்கொண்ட போதும், போபால் விசவாயு விபத்தில் பலியானவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு, அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டது. இவ்வளவு மோசமான விபத்தின் பொறுப்புக் கூறலிலிருந்து யூனியன் கார்பைட் தப்பிக்க வைக்கப்பட்டது. இந்தக் கழிவை அகற்றுவதற்கு 40 ஆண்டுகள் எடுத்துள்ளது. இந்தப் பொறுப்பிலிருந்தும் யூனியன் காபைட் விடுவிக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு விபத்து அமெரிக்காவில் நிகழ வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்கான இழப்பீடுகளை அந்த நிறுவனம் வழங்கியிருக்க வேண்டும். தங்களுடைய தவறுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டடு சில வாரங்களில் இவ்விபத்து நிகழ்ந்தது. இந்திராகாந்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவருடைய மகன் ராஜீவ்காந்தி பிரதமரானார். 1989 டிசம்பர் வரை அவர் பிரதமராக இருந்தார். இவருடைய காலகட்டத்தில் நிகழ்ந்த இப்பாரிய விபத்தின் பொறுப்புக்கூறலிலிருந்து யூனியர்கார்பைட் நிறுவனம் தப்பிக்க வைக்கப்பட்டது.

தி ரெய்ல்வே மென் – The Railway Men’ என்ற விபரண நாடகமாகத் தயாரிக்கப்பட்ட படம் இந்த விபத்தை மிகத் தத்துரூபமாக விபரிக்கின்றது. யூனியக் கார்பைட் நிறுவனம் அங்கு உருவாகக் கூடிய வாயுவின் நச்சுத்தன்மையையும் அதன் தாக்கத்தையும் 1975ம் ஆண்டே அறிந்திருந்தும், அதன் ஆபத்தை வெளியிடாததும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அத்தொழிற்சாலையின் அடிப்படை பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்கவில்லை என்பதையும் அந்த விபரண நாடகம் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த ‘’விபத்துக்குக் காரணமானவர்கள் யூனியன் கார்பைட்டும் டோவ் கெமிக்கல்ஸ்ம் (Dow Chemicals, போபாலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்பபடி ஏன் வற்புறுத்தப்படவில்லை’’ என ரட்சன டின்ங்றா Rachana Dhingra என்ற உள்ளார் அழுத்தக்குழவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்