Multiple Page/Post

எவரையும் இழிவுபடுத்தும் உரிமை ஊடகவியலாளருக்கு இல்லை – ஊடகத்துறை அமைச்சர்

kahiliya.jpgஎவரையும் இழிவுபடுத்தவோ அல்லது மற்றையோர் மனங்களைப் புண்படுத்தவோ ஊடகத்துறையினருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்று தகவல், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டின் நடப்புகள நிலவரங்களை எழுதும் அதேவேளை அரசாங்கம் எதை செய்தாலும் அதற்கு விரோதமாக எழுதும் போக்கையும் சிலர் கொண்டுள்ளனர். எனினும் நான் அனைத்து ஊடகவியலாளருடனும் சுமுகமாக செயலாற்றுவேன் எனவும் அமைச்சர் கூறினார். அமைச்சர் கெஹெலிய நேற்று (16) கண்டியில் உள்ள மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரினது ஆசிபெற்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றேன். கண்டி நகரான மரபுரிமை நகரை பாதுகாப்பது எமது அனைவருடைய கடமைப்பாடாகும்.

இந்த வகையில் கண்டி நகரில் உள்ள நிருவாக கட்டமைப்புகள் அனைத்தும் வேறிடத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன் அடிப்படையில் தான் கண்டி போகம் பறையில் அமைந்துள்ள சிறைச்சாலையை பள்ளேகலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும் நேற்று அமைச்சர் பெளத்த, இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மத வழிபாட்டு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள மத குருக்களிடமும் ஆசி பெற்றார்.

ஜூன் 8 இல் ஜனாதிபதி இந்தியா பயணம்

 president.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முதல்வர் தலைமையில் கிழக்கு மா. சபை உறுப்பினர் கேரளா விஜயம்

ep.jpgஎதிர்வரும் யூன் 6ந் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு பயணமொன்றை மேற்கொள்ள உள்ளனர்.

கேரளா மாநில அரச நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு விடயங்களை நேரடியாக பார்வையிட்டு, கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளுக்கு அவ் அனுபவங்களை பயன்படுத்தும் நோக்கில் இவ் ஐந்து நாள் பயணம் யூ. என். டீ. பி. நிதி அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான எம். எஸ். உதுமா லெவ்வை கூறினார்.

கிழக்கு மாகாண சபையின் 35 உறுப்பினர்களும் மூன்று குழுக்களாக கேரள மாநிலத்திற்கான பயணத்தை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உதுமா லெப்பை மேலும் கூறியுள்ளார்.

மீளக்குடியமர்ந்தோருக்கு சொந்தக் காணியில் வீடுகள் – நெடுங்கேணியில் ரூ. 100 மில். குடிநீர்த் திட்டம்

கனகராயன் குளம் உட்பட நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களது சொந்த காணிகளில் சுமார் 600 நிரந்தர வீடுகள் கட்டப்படவுள்ளன. யூ. என். ஹெபிடாட் நிறுவனம் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுகான வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதுடன் மலசலகூட வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர் விநியோகத் திட்டமொன்று 100 மில். ரூபா செலவில் முன்னெடு க்கப்படவுள்ளது. என்ரிப் நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்தவு ள்ளது. 43 மில். ரூபா செலவில் பஸ் நிலையம், பொதுச் சந்தைக் கட்டடம் என்பவற்றுடன் முதல் தர தபாலகமும் கட்டப்படவுள்ளன.

இப்பகுதியில் அரச ஊழியர்களுக்கென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 30 மில்லியன் ரூபா செலவில் கூட்டு விடுதிகளை கட்டுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களின் மேட்டு நிலம் மற்றும் வயற் காணிகளை துப்புரவு செய்வதற்கும் உலக வங்கி நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.

ரூ. 36 மில். செலவில் வடபகுதி தபாலகங்கள் புனரமைப்பு

post-boxes.jpgவடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள தபால் அலுவலகங்களை புனர்நிர்மாணம் செய்ய 36 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் சேதமடைந்த அனைத்து தபாலகங்களும் இத்திட்டத்தின் கீழ் விரைவில் மீளக் கட்டியெழுப்புவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி. குமரகுரு தெரிவித்தார். ஏற்கனவே கட்டப்பட்டு நிறைவு செய்யப்படாத தபாலகங்களும் இந்த நிதி மூலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படும். அதனைவிட வன்னியில் போரினால் சேதமடைந்து முழுமையாக அழிவடைந்தும் உள்ள தபாலகக் கட்டடங்களும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது எனவும் பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகள் இன்று இந்தியாவுக்கு அவசர பயணம்

drage.jpgஅரசாங்க ஆஸ்பத்திரிகளில் தற்போது தட்டுப்பாடு நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யவென அரசாங்கம் விசேட குழுவொன்றை இன்று (17 ம் திகதி) இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டில் இன்று இந்தியாவுக்கு பயணமாகும் இக் குழுவில் மருந்துப் பொருள் விநியோகப் பிரிவு பணிப்பாளர், அரசாங்க மருந்துப் பொருள் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர், தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், நிதியமைச்சு பிரதிநிதி ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இன்று இந்தியாவுக்கு பயணமாகும் இக் குழுவினர் இலங்கைக்கு மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளை மும்பாய் நகரில் சந்திக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மேற்படி 95 அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை இக் குழுவினர் இந்திய நிறுவனங்களிடமிருந்து இன்று பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.  இந் நிறுவனங்கள் தங்களிடமுள்ள மருந்துப் பொருட்களின் அளவு, அவற்றின் விலை, இலங்கை தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையில் மருந்து பொருளை விநியோகிப்பதற்குப் பதிவு செய்துள்ள விபரம் என்பவற்றை இக் குழுவினருக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கேள்விபத்திரங்களைப் பெற்றுக் கொண்டதும் அவற்றை பரிசீலனைக்கு உட்படுத்தி மருந்துப் பொருள் விநியோகிக்கவென தகுதியான நிறுவனம் தெரிவு செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து விமானம் மூலமோ, கப்பல் மூலமோ குறித்த மருந்துப் பொருட்களை ஒரு வார காலத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அந்தவிநியோக நிறுவனம் கேட்டுக் கொள்ளப்படும் என்று அமைச்சு அதிகாரியொருவர் கூறினார். தரமான மருந்துப் பொருட்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதில் அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர் சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் 2,60,000 வீடுகள் சேதம்

house.jpgஇலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது 2 இலட்சத்து 60 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருப்பதாக அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

2 இலட்சத்து 60 ஆயிரம் வீடுகளை மீள நிர்மாணிக்க வேண்டிய தேவையிருப்பதாக அரசாங்க மற்றும் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர் என்றுசர்வதேச செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

தற்போது உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்வதற்கு விடுவிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 இலட்சத்து 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரிக் கிராமங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 80,246 பேர் தொடர்ந்து இருக்கின்றனர். புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த ஆறு மாதங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளோருக்கு பதிவுத்திருமணம்

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முறையான திருமணப் பதிவை மேற்கொள் ளாத தம்பதியினருக்கு சட்டபூர்வமான முறையில் திருமணத்தை நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன.

வடக்கில் யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதிகளில் கோயில் மற்றும் தேவாலயங்களில் திருணம் செய்துகொண்ட பல தம்பதியினர் தற்போது எமது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புனர் வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனரென ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இத்தம்பதியினர் சேர்ந்து வாழ விரும்பும் பட்சத்தில், அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களை அழைத்து முறையே பேச்சு நடத்தி, அனைவருக்கும் ஒரே தினத்தில் திருமணம் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி இத்திருமண வைபவத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்குதலால் இறப்போர் தொகை தொடர்ந்தும் அதிகரிப்பு

lightning.jpgஇடி, மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களதும் படுகாயமடைவோரதும் தொகை தினமும் அதிகரித்து வருகிறது.

தாக்குதலுக்கு இலக்காவோரில் பலர் படுகாயமடைவதாகவும் பலர் உயிரிழப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வயல்வெளிகள், கடற்கரைகள், மைதானங்களில் இடி, மின்னல் ஏற்படும்போது நடமாட வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களில் மட்டும்மின்னல் தாக்கி 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் வயல்களிலும் வெளிகளிலும் மின்னல் நேரம் நின்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இடி மின்னல் நேரத்தில் மின் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாமெனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். தற்போது நிலவும் காலநிலை இம்மாத இறுதிவரையும் நீடிக்கும் எனவும் அதனால் இடிமின்னல் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ் அல்வாயில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாள்வெட்டில் நால்வர் படுகாயம்!

யாழ்.வடமராட்சி அல்வாய் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையே கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வந்த குடும்பத்தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மோதல்கள் கடந்த சனிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இரு தரப்பம் எதிரெதிர் தரப்புகளின் விடுகளுக்குள் புகுந்து கண்டபடி வாள்வீச்சில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்ற இவ் வாள்வெட்டுச் சம்பவங்களில் நால்வர் படுகாயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காசிப்பிள்ளை இரட்ணசிங்கம், என்ற 8 பிள்ளைகளின் தந்தை, 20 வயதான முருகதாஸ் என்ற இளைஞன், இரட்ணசிங்கத்தின் 10 வயது மகளான ஜென்சி, அவரது மைத்துனியான 30 வயது ஜெயரஞ்சி, ஆகியோரே படுகாயமடைந்தவர்களாகும் இம்மோதல்களைத் தடுக்கும் முயற்சியில் பருத்தித்துறை பொலிசார் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.